under review

ஜி.எஸ். பாலகிருஷ்ணன்

From Tamil Wiki
Revision as of 23:57, 27 February 2024 by ASN (talk | contribs) (Page created: Para added: Images Added: Proof Checked)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஜி.எஸ். பாலகிருஷ்ணன்

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் (குருவாயூர் சுப்ரமண்யன் பாலகிருஷ்ணன்) (மே 15, 1928 - பிப்ரவரி 9, 2018) கவிஞர், எழுத்தாளர், இதழாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர். ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார். கல்கி – பெர்க்லி சிறுகதைப் போட்டிப் பரிசு உள்பட பல்வேறு பரிசுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

குருவாயூர். சுப்ரமண்யன் பாலகிருஷ்ணன் எனும் ஜி.எஸ். பாலகிருஷ்ணன், கேராளா மலப்புரத்தில் உள்ள அங்காடிபுரத்தில், மே 15, 1928-ல், சுப்ரமண்ய ஐயர் - சீதாலக்ஷ்மி தம்பதியருக்குப் பிறந்தார். பள்ளிப் படிப்பைக் கேரளாவில் கற்றார். கல்லூரிப் படிப்பைத் தமிழ்நாட்டின் பல கல்லூரிகளில் பயின்றார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். தமிழ், மலையாளம், ஹிந்தி, சம்ஸ்கிருதம், ஆங்கிலம் என ஐந்து மொழிகள் அறிந்தவர்.

தனி வாழ்க்கை

ஜி.எஸ். பாலகிருஷ்ணன், தொடக்க காலத்தில் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரிகள் சிலவற்றில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். ரூர்க்கி மத்திய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் தகவல் துறையில் எட்டாண்டுகள் பணிபுரிந்தார். கோவை பி.எஸ்.ஜி. பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகவும், ஆங்கிலத் துறைத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர். மனைவி: விஜயா. மகன்கள்: ஜி.பி. பிரபாத்; ஜி.பி. வசந்த்.

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் நூல்கள்

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் கவிதைகள் மூலம் இலக்கிய உலகிற்கு அறிமுகமானார். கலைமகளில் இவரது படைப்புகள் வெளியாகின. ஆனந்த விகடனில் பல நகைச்சுவைக் கட்டுரைகளை, சிறுகதைகளை எழுதினார். தொடர்ந்து கல்கி, கணையாழி, அமுதசுரபி, குமுதம், கலைக்கதிர், தினமணி கதிர் எனப் பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின. துமிலன், விக்கிரமன் ஆகியோர் ஜி.எஸ். பாலகிருஷ்ணனைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தனர். விஜயா பாலகிருஷ்ணன், ஜிப்பி, ஊமை போன்ற புனை பெயர்களில் எழுதினார்.

கணினி பற்றித் தமிழில் எழுதிய முன்னோடிகளுள் ஒருவராக பாலகிருஷ்ணன்அறியப்படுகிறார். 1966-ல், ‘கண்மூடித் திறப்பதற்குள்’ என்ற தலைப்பில் கணிப்பொறி பற்றிக் கட்டுரை எழுதினார். ஜி.எஸ். பாலகிருஷ்ணன் ஐநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதினார். இவரது சிறுகதைகளில் சில ஆங்கிலத்திலும், பிற மாநில மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன.

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் ஆங்கிலத்திலும் எழுதினார். Indian Express, Business Line, Shanker's Weekly போன்ற ஆங்கில இதழ்களில் ஜி.எஸ். பாலகிருஷ்ணனின் கட்டுரைகள், விமர்சனக் குறிப்புகள் வெளியாகின.

ஜி.எஸ். பாலகிருஷ்ணனின் ஆங்கில நூல்களில் சில...
73 ஆண்டுகளுக்குப் பின் வெளியான சிறுகதை

அல்லயன்ஸ் நிறுவனத்தின் கதைக்கோவை- 5 தொகுப்பிற்காக ஜி.எஸ். பாலகிருஷ்ணன், 1945-ல் எழுதி அனுப்பிய ’நாடோடி’ என்னும் சிறுகதை, அல்லயன்ஸ் குப்புசாமி ஐயரின் மறைவால் வெளியாகவில்லை. அது 73 ஆண்டுகளுக்குப் பின் அல்லயன்ஸ் நிறுவனம் வெளியிட்ட கதைக்கோவை ஐந்தாம் தொகுதியில் வெளியானது. அதன் வெளியீட்டு விழா நடக்கும் முன்பே ஜி.எஸ். பாலகிருஷ்ணன் மறைந்தார். அல்லயன்ஸ் நிறுவனம் ஜி.எஸ். பாலகிருஷ்ணனின் நூல்கள் சிலவற்றை வெளியிட்டது.

மொழிபெயர்ப்பு

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் மொழிபெயர்ப்பிலும் தேர்ந்தவர். ஆசியவியல் நிறுவனத்திற்காக ஐந்து ஓலைச்சுவடி நூல்களைத் தமிழிலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். சந்தனத்தேவனை பண்டிட் பிரதர்ஸ் (The Pandit Brothers) என்ற தலைப்பில் மொழியாக்கம் செய்தார். யட்ச கானம் பற்றிய நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இதழியல்

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் கலைக்கதிர் இதழில் கௌரவ ஆசிரியராகப் பணிபுரிந்தார்.

நாடகம்

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் கல்லூரியில் படிக்கும்போதும், பணியாற்றும்போதும் பல நாடகங்களை எழுதி அரங்கேற்றினார்.

விருதுகள்

  • 'என் அருமை நைட்டிங்கேல்' என்ற சிறுகதைக்கு கல்கி - பெர்க்லி பரிசு
  • தினமணி கதிர் சிறுகதைப் போட்டிப் பரிசு
  • குமுதம் நடத்திய 'சாண்டில்யன் நினைவு' சரித்திரக்கதைப் போட்டிப் பரிசு அமுதசுரபி குறுநாவல் போட்டிப் பரிசு
  • இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைப் பரிசு - வெளிச்சம், கலைமகள், ஜூலை 1990

மறைவு

ஜி.எஸ். பாலகிருஷ்ணன், பிப்ரவரி 9, 2018 அன்று, தனது 90-ம் வயதில் காலமானார்.

மதிப்பீடு

ஜி.எஸ். பாலகிருஷ்ணன் பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளை எழுதினார். நகைச்சுவைப் படைப்புகளை அதிகம் எழுதினார். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை, விமர்சனம் எனப் பல வகைமைகளில் எழுதினார். ஜி.எஸ். பாலகிருஷ்ணனின் சிறுகதைகள் பலவும் நடுத்தர மக்களின் வாழ்வைப் பிரதிபலிப்பதாக அமைந்தன.

ஜி.எஸ். பாலகிருஷ்ணனின் எழுத்து பற்றிச் சுஜாதா, “நகைச்சுவை எழுத்தில் கல்கி, தேவன், எஸ். வி. வி., நாடோடி, சாவி வரிசையில் வைக்கப்பட வேண்டியவர் ஜி. எஸ். பாலகிருஷ்ணன்” என்று குறிப்பிட்டார்.

ஜி.எஸ். பாலகிருஷ்ணன், தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய முன்னோடி எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்பு மற்றும் கட்டுரைகள்

  • சிரிங்க சார்
  • வசந்த சொப்பனங்கள்
  • பல்சுவைக் கதைகள்
  • சபாஷ்! சந்துரு!
  • சிரிப்பு ஏன்? எதற்கு? எப்படி?
  • புடலங்காய் புரொபஸர்
  • நான்காவது ஹனுமான்
  • கார்ட்டூனிஸ்ட்
  • நகைச்சுவைப் பேருந்து
நாவல்
  • நியூஸ் நாவல்
நாடகம்
  • நகைச்சுவை நாடகங்கள்
ஆங்கில நூல்கள்
  • The Pandit Brothers
  • Fleeting Clouds
  • Where Justice Chimes
  • The Vows Fulfilled
  • A Tale of Betrayal

உசாத்துணை

இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.