பரிமேலழகர்
பரிமேலழகர், திருக்குறளுக்கு உரை எழுதியவர்களுள் முதன்மையானவர் ஆவார். இவர் பரிபாடல் மற்றும் திருமுருகாற்றுப்படை நூல்களுக்கும் உரை எழுதியுள்ளார்.
பிறந்த ஊர்
படிக்காசுப் புலவர் இயற்றிய தொண்டைமண்டல சதகத்தின் 16-ஆவது பாடல் இது:
"வள்ளற்சிலைப்பெரு மாணச்சர்சாத்தர் வழுதிமுதற்
றள்ளுவனார்க்குந்த் தலையான பேரையுந் தன்னுரையை
விள்ளுவனார்க்குத் திருக்காஞ்சி வாழ்பரி மேலழகன்
வள்ளுவனார்க்கு வழிகாட்டினான் றொண்டை மண்டலமே"
இந்தப் பாடல் மூலம் பரிமேலழகர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் என அறியவருகிறது.
காலம்
தொல்காப்பியத்தில் இல்லாத, நன்னூல் குறிப்பிடும் "ஒரு பொருட் பன்மொழி" என்பதை பரிமேலழகர் தனது உரையில் பயன்படுத்துவதால் 12-ஆம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர் எனக் கருதலாம்.
பரிமேலழகரது திருக்குறள் உரையில் இவருக்கு முன்னவர்களான காளிங்கர் மற்றும் இளம்பரிதியாரின் உரைகள் தொடர்பான குறிப்புகள் காணப்படுகின்றன. இவர்களது காலம் 13- ஆம் நூற்றாண்டு எனக் கருதப்படுவதால், பரிமேலழகரது காலம் 13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி என கருதப்படுகிறது. காஞ்சி அருளாளப் பெருமான் கோயில் கல்வெட்டு குறிப்பிடும் பரிமேலழகிய பெருமான் தாதரே திருக்குறளுக்கு உரைசெய்த பரிமேலழகர் என்பது அறிஞர் கருத்து. இதனால் பரிமேலழகர் காலம் 1271-ஆம் ஆண்டை ஒட்டியதாக இருக்கலாம்.
பதிப்பு வரலாறு
திருக்குறள்
திருக்குறளுக்கு உரையாக முதலில் அச்சில் ஏறியது திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர் பரிமேலழகர் உரையைத் தழுவி எழுதி 1838- ஆம் ஆண்டு வெளியிட்ட பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் என்னும் நூல் ஆகும். 1840-ஆம் ஆண்டு முதன்முதலில் பரிமேலழகர் உரையின் முதல் 24 அதிகாரங்கள் மட்டும் அச்சேறி வெளிவந்துள்ளது. அந்த உரையோடு இராமாநுசக் கவிராயர் எழுதிய வெள்ளுரையும், புத்துரையும், துறு ஐயர் (W.H. Drew) எழுதிய ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளது, பரிமேலழகரின் முழு உரையும் 1849-ஆம் ஆண்டு எம். வீராசாமி பிள்ளையால் சென்னையில் பதிப்பிக்கப்பட்டது.
பரிபாடல்
சுவடிகளில் எழுதப்பட்டுப் பயன்படுத்தப்பட்டு வந்த இந்நூல் பிற்காலத்தில் அழிந்து போகும் நிலை எய்தியபோது பல சுவடிகளை சோதித்து உ.வே.சாமிநாதையர் பரிமேலழகர் உரையுடன் 1918-ஆம் ஆண்டு முதன் முதலாகப் பதிப்பித்து வெளியிட்டார். இதன் பின்னர் வேறு பலரும்வெளியிட்டுள்ளனர்
திருமுருகாற்றுப்படை
"திருமுருகாற்றுப்படை பரிமேலழகர் உரை" என்னும் நூலை திருப்பனந்தாள் காசி மடம் வெளியிட்டுள்ளது.
"அரிமேல் அழகுறூஉம் அன்பு அமை நெஞ்சப் பரிமேலழகன் பகர்ந்தான்
விரிவுரை மூதக்கீரிஞ் ஞான்று தனி
முருகாற்றுப்படையாம் நக்கீரன் நல்ல கவிக்கு"
இது பரிமேலழகரது உரையில் காணப்படும் சிறப்புப் பாயிரம் ஆகும்.
சிறப்பு
பரிமேலழகர் தனது திருக்குறள் உரையில் ஒவ்வோர் அதிகாரத்திற்கும் முன்னதாக, அவ்வதிகாரத்தைப் பற்றி விளக்கியும், அவ்வதிகாரம் எவ்வாறு அதற்கு முன்னுள்ள அதிகாரத்துடன் தொடர்பு பெற்றுள்ளது என்பது பற்றியும் கூறியுள்ளார். மேலும் பல்வேறு இடங்களில் பல நூல்களில் இருந்து மேற்கோள்களும் காட்டியுள்ளார்.
தொண்டைமண்டல சதகத்தில்
"பாலெல்லாம் நல்லாவின் பாலாமோ பாரிலுள்ள
நூலெல்லாம் வள்ளுவர் செய் நூலாமோ - நூலிற் பரித்த
உரையெல்லாம் பரிமே லழகன் தெரித்தவுரை யாமோ தெளி"
என்ற பாடல் பரிமேலழகரின் பெருமையைக் கூறுகின்றது.
"குறளுக்கு நிகரான பொருட்செறிவு உடையது பரிமேலழகரின் உரை. பகவத் கீதையைப் போல், திருக்குறளும் எல்லாத் தலைகளுக்கும் பொருந்துகின்ற குல்லாய். அதனால்தான், அவரவர்கள் தங்கள் அரசியல் கொள்கைகளுக்கேற்ப, குறளுக்கு உரை கண்டு, இன்று, பரிமேலழகரைத் தூற்றுகிறார்கள். பரிமேலழகர் ஒருவர்தான் வள்ளுவரின் இதயத்தை நன்கு உணர்ந்தவர். அதனால்தான், வள்ளுவரின் சொற்சிக்கனத்தைக் கையாண்டு, ஆழமான உரையை அவரால் எழுத முடிந்திருக்கிறது. வாழ்க்கை நிலையாமையை உணர்ந்து, நம் நடைமுறைச் சிந்தனை எவ்வாறு வேண்டுமென்று, வள்ளுவக் கோட்பாட்டுக்கேற்ப உரை எழுதுகிறார் பரிமேலழகர். பரிமேலழகர் உரையில்லை என்றேல், வள்ளுவம் புரியாது" என சில திருக்குறள்களுக்கான பரிமேலழகரின் உரையை மேற்கோளிட்டு, எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கூறியுள்ளார்.
உரை எழுதிய நூல்கள்
உசாத்துணை
- பரிபாடல் மூலமும் பரிமேலழகர் இயற்றிய உரையும், உ.வே.சாமிநாதையர் பதிப்பு, 1918. ஆர்க்கைவ் தளம்
- தமிழ் இலக்கிய வரலாறு-பதிமூன்றாம் நூற்றாண்டு-தமிழ் மின்னூலகம்-
- தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, மு. அருணாசலம், (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005), சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம்.பக்கம் 42-68.
- திருக்குறள் - பரிமேலழகர் உரை, தமிழ் இணையக் கல்விக்கழகம்
- பரிமேலழகரின்றி வள்ளுவம் இல்லை, இந்திரா பார்த்தசாரதி, 2009
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.