under review

வ.சுப. மாணிக்கம்

From Tamil Wiki
வ.சுப. மாணிக்கம்

வ.சுப. மாணிக்கம் (வ.சுப. மா) (ஏப்ரல் 17, 1917 – ஏப்ரல் 25, 1989) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், ஆசிரியர், சிந்தனையாளர், உரையாசிரியர், கவிஞர் மற்றும் சொற்பொழிவாளர் . தமிழ்நாடு அரசு இவர் எழுதிய நூல்கள் அனைத்தையும் நாட்டுடமையாக்கியது.

பிறப்பு, கல்வி

வ.சுப. மாணிக்கம் புதுக்கோட்டை மாவட்டம், மேலைச்சிவபுரியில் நாட்டுக்கோட்டை நகரத்தார் இனத்தில், வ.சுப்பிரமணியன் செட்டியாருக்கும் தெய்வானை ஆச்சிக்கும் ஐந்தாவது மகனாக ஏப்ரல் 17, 1917-ல் பிறந்தார். இயற்பெயர் அண்ணாமலை. தன்னுடைய ஆறாம் வயதில் தாயை இழந்தார். தொடர்ந்து பத்து மாதம் கழித்து தந்தையும் இறந்தார். இவருடைய தாய்வழிப் பாட்டனார் அண்ணாமலை செட்டியார் பாட்டி மீனாட்சி ஆச்சி ஆகிய இருவரும் இவரை வளர்த்தனர்.

ஆரம்பக்காலப் படிபை உள்ளூரில் நடேச அய்யன் திண்ணைப் பள்ளிக்கூடத்திலும், சிதம்பரத்தில் காரைக்குடி சொக்கலிங்கம் என்பவர் நிறுவிய மெய்கண்ட வித்தியாசாலையிலும் பயின்றார். தொடக்கக் கல்வியினைத் தன் ஏழாம் வயது வரை புதுக்கோட்டையில் உள்ள பள்ளி ஒன்றில் பயின்றார். வ.சுப. மாணிக்கம் நகரத்தார் குல மரபுப்படி தனது பதினொன்றாம் வயதில் வட்டித் தொழில் கற்றுக்கொள்வதற்காகப் பர்மா சென்றார். பர்மாவில் ரங்கூன் நகரத்தில் உள்ள வட்டிக்கடையில் பெட்டியடிப் பையனாக வேலைக்குச் சேர்ந்தார்.

தனிவாழ்க்கை

வ.சுப. மாணிக்கம் 1945-ல் நெற்குப்பை என்னும் ஊரைச் சேர்ந்த ஏகம்மை ஆச்சியைத் திருமணம் செய்து கொண்டார். தொல்காப்பியன், பூங்குன்றன், பாரி என்று மூன்று ஆண் குழந்தைகளும், தென்றல், பொற்கொடி என்று இரண்டு பெண் குழந்தைகளும் பிறந்தனர்.

தமிழ்க் கல்வி

வ.சுப. மாணிக்கம் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் வழி நடத்துதலில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை புலவர் வகுப்பில் படித்தார். 1940-ல் புலவர் படிப்பு முடிந்த ஆண்டிலேயே அதே பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இலக்கண வரலாறு; என்ற தலைப்பில் ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். வித்துவான் படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து 1945-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பி.ஒ.எல் பட்டத்தையும் 1951-ல் எம்.ஏ முதுகலைப் பட்டத்தையும் பெற்றார். ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு மொழிகளில் புலமை பெற்றிருந்தார்.

இவருடைய தமிழ் ஆய்வுக்கான எம்.ஒ.எல் பட்டம் ’தமிழில் வினைச்சொற்கள்’ என்ற பொருளில் இவர் மேற்கொண்ட ஆய்வுக்காகவும், முனைவர் (பிஎச்.டி) பட்டம் ’சங்க இலக்கியங்களில் அகத்திணைக் கொள்கை’ என்னும் பொருளில் இவர் நடத்திய சங்க இலக்கிய ஆய்வுக்காகவும் அளிக்கப்பட்டன.

ஆசிரியர்கள்

கல்விப் பணிகள்

  • 1941-1948 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்
  • 1948-1964 பதினாறு ஆண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பதவி வகித்தார்.
  • 1964-1970 ஆறாண்டுகள் காரைக்குடி அழகப்பா கல்லூரி முதல்வராகப் பணியாற்றினார்.
  • 1970-1977 ஏழாண்டுகள் மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகவும் இந்திய மொழிப்புல முதன்மையராகவும் பணிபுரிந்தார்.
  • 1979-1982 மூன்றாண்டுகள் மதுரை காமராசர் பல்கலைக்கழக துணை வேந்தராகப் பணிபுரிந்தார்.
  • சிறிது காலம் திருவனந்தபுரத்தின் மொழி இயற் கழக ஆய்வு முதியராக வேலை பார்த்தபோது தமிழ் யாப்பு வரலாற்றை ஆங்கிலத்தில் எழுதினார்.
மாணவர்கள்
  • நாவலர் நெடுஞ்செழியன்
  • பேராசிரியர் அன்பழகன்
இந்திய இலக்கியச் சிற்பிகள்

இலக்கிய வாழ்க்கை

வ.சுப.மாணிக்கம் ஒரு சிந்தனையாளர். தமிழ்ச் சொல்லாக்கங்களை நடைமுறைப் படுத்துவதில் மிகவும் முனைப்புக் காட்டியவர். 'தமிழ் வழிக் கல்வி இயக்கம்' என்ற அமைப்பை நிறுவி இவ்வியக்கம் நன்கு பரவும் வழி காண தமிழ்ச் சுற்றுலா மேற்கொண்டார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியபோது கர்நாடக சங்கீதம் பயின்றார்.

வ.சுப. மாணிக்கனார் எழுதிய நூல்கள் இருபத்தி மூன்று. இவற்றில் நான்கு ஆங்கில நூல்கள், நான்கு நாடகங்கள், மூன்று கவிதைத் தொகுதிகள், எட்டு ஆராய்ச்சி நூல்கள், பிற வகைகளாக நான்கு உள்ளன. இவர் முதலில் எழுதியது 'மனைவியின் உரிமை' என்ற நாடகத் தொகுப்பு. இதில் ஐந்து நாடகங்கள் உள்ளன. இவை தவிர 'நெல்லிக்கனி', 'உப்பங்கழி' போன்ற நாடகங்களையும் எழுதினார்.இவரது கவிதைத் தொகுப்புகள் 'மாணிக்கக் குறள்', 'மாமலர்கள்', 'கொடைவிளக்கு' என்னும் தலைப்புகளில் வந்துள்ளன. வ.சுப. மாணிக்கனார் ஓய்வு பெற்ற பிறகு தொல்காப்பிய எழுத்ததிகாரத்தின் நூல்மரபு, மொழிமரபு இரண்டிற்கும் உரை எழுதினார். எஞ்சிய பகுதிகளுக்கு உரை எழுதுமுன்பே காலமாகி விட்டார்.

சொந்த நூலகத்தில் இவர் தொகுத்து வைத்த 4500 நூல்களைக் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலகத்திற்கு இலவசமாக வழங்க வேண்டும் என்றும் விரும்பினார்.

சொற்பொழிவுகள்

வ.சுப. மாணிக்கம் கல்வி வளர்ச்சி தொடர்பாக சிங்கப்பூர், மலேசியா, பர்மா இலங்கை இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா, போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். அங்குள்ள தமிழ்ச் சங்கங்களில் உரையாற்றியிருக்கிறார்.ரா.பி. சேதுப்பிள்ளையின் அம்மாவின் நினைவாக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்ட சொர்ணாம்மாள் நினைவுச் சொற்பொழிவில் 'கம்பனின் காப்பியப் பார்வை', 'காப்பியக் களம்', 'காப்பிய நேர்மை' என்னும் தலைப்புகளில் சுப. மாணிக்கம் பேசியிருக்கிறார் (1964). இவ்வுரைகளின் எல்லாப் பகுதிகளையும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்டிருக்கிறது (1965). இந்நூலுக்கு ஆறு பதிப்புகள் வந்துள்ளன.

கம்பர்

ஆய்வுகள்

1938-ல் சிலப்பதிகாரத்தையும் மணிமேகலையையும் ஒருசேர முறைப்படி ஆராய்ந்து முதலில் பதிப்பித்தவர் வ.சுப. மாணிக்கம். 'வள்ளுவம்', 'கம்பர்', 'தமிழ்க் காதல்' ஆகிய மூன்று நூல்களும் முக்கியமானவை. 1953-ல் வெளிவந்த 'வள்ளுவம்' திட்டமிட்டு எழுதப்பட்ட ஆய்வு நூல்.

இவர் 1957-ல் முனைவர் ஆய்வுக்காகத் தொகுத்த செய்திகளின் அடிப்படையில் 'தமிழ்க் காதல்' என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார் (1962). கைக்கிளை, பெருந்திணை இலக்கணங்களைப் பழைய உரைகளின் போக்கில் சொல்வது இதன் சிறப்பு. அவை அகத்திணையின் பால் பட்டன என்பதைச் சரியான விளக்கங்களுடன் இந்நூலில் காட்டுகிறார்.கம்பனின் காப்பியத்தை முழுமையாகத்தான் மதிப்பிட வேண்டும் என்ற ஆய்வுக் கருத்தை முன் மொழிந்தார்.

அவரது எம்.ஓ.எல். ஆய்வேடும் (A Study of Tamil Verb) பி.எச்டி ஆய்வேடும் (The Tamil Concept of Love) ஆங்கிலத்தில் வந்துள்ளன. இவர் ஆங்கிலத்தில் எழுதியுள்ள ஆய்வுக் கட்டுரைகள் தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட 'புலவர் வரலாற்றுக் களஞ்சியம்' தொகுப்பு வெளிவர இவரது முயற்சி முக்கிய காரணம். இவர் துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்ற பின்பு திருவனந்தபுரம் மொழியியல் கழகத்திற்காகத் 'தமிழ் யாப்பின் வரலாறும் வளர்ச்சியும்' என்னும் தலைப்பில் ஆய்வு செய்தார்.

வகித்த பதவிகள்

  • தமிழகப் புலவர் குழுத் தலைவர்
  • பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தலைவர்
  • தமிழ்வழிக் கல்வி இயக்கம்
  • தமிழ்ப்பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர்
  • தமிழ்ப்பல்கலைத் தொல்காப்பியத் தகைஞர்

விருதுகள், பட்டங்கள்

  • சன்மார்க்க சபை, மேலைச்சிவபுரி வழங்கிய செம்மல் என்ற பட்டம்
  • குன்றக்குடி ஆதீனம் அவர்கள் வழங்கிய முதுபெரும் புலவர் பட்டம்
  • அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தம் பொன்விழாவின் போது வழங்கிய டி.லிட் பட்டம்
  • தமிழ் நாடு அரசு வழங்கிய திருவள்ளுவர் விருது. (இறந்த பின்பு)
நாட்டுடைமை

வ.சுப. மாணிக்கனாரின் படைப்புகள் 2007-ல் தமிழக அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

மறைவு

வ.சுப.மாணிக்கம் மாரடைப்பின் காரணமாக ஏப்ரல் 25, 1989-ல் புதுச்சேரியில் காலமானார்.

நூல்கள் பட்டியல்

  • மனைவியின் உரிமை, 1947
  • கொடைவிளக்கு, 1957
  • இரட்டைக் காப்பியங்கள், 1958
  • நகரத்தார் அறப்பட்டயங்கள், 1961
  • தமிழ்க்காதல், 1962
  • நெல்லிக்கனி, 1962
  • தலைவர்களுக்கு, 1965
  • உப்பங்கழி, 1972
  • ஒருநொடியில், 1972
  • மாமலர்கள், 1978
  • வள்ளுவம், 1983
  • ஒப்பியல்நோக்கு, 1984
  • தொல்காப்பியக்கடல், 1987
  • சங்கநெறி, 1987
  • திருக்குறட்சுடர், 1987
  • காப்பியப் பார்வை, 1987
  • இலக்கியச்சாறு, 1987
  • கம்பர், 1987
  • தொல்காப்பியம் -எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை, 1989
  • திருக்குறள் தெளிவுரை, 1991
  • நீதிநூல்கள், 1991
  • எழுத்துச்சீர்திருத்தம், எங்கே போய்முடியும்? (ஏப்ரல் 1, 1989)
  • தமிழ்வழிக்கல்வியியக்கம்: மொழியறிக்கை (மே 15, 1989)
  • தமிழ்வழிக் கல்வியியக்கம்: மதுரை ஊர்வலம் நிகழ்ச்சி விளக்கம் (ஜூன் 12, 1988)

ஆங்கிலம்

  • The Tamil Concept of Love
  • A Study of Tamil Verbs
  • Collected Papers
  • Tamilology

உசாத்துணை


✅Finalised Page