under review

உறையூர் முதுகண்ணன் சாத்தனார்

From Tamil Wiki

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவர் பாடிய ஆறு பாடல்களில் புறநானூறில் ஐந்தும் குறுந்தொகையில் ஒன்றும் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சாத்தனார் என்னும் இயற்பெயர் உடையவர். உறையூரில் வாழ்ந்தவர். உறையூர் முதுகண்ணன் என்பாரின் மகன்.

இலக்கிய வாழ்க்கை

உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடிய ஆறு பாடல்கள் புறநானூறில் 27,28,29,30 மற்றும் 325-ம் எண் கொண்ட பாடல்களாகவும் குறுந்தொகையில் 133-ம் பாடலாகவும் இடம்பெற்றுள்ளன. புறநானூறில் 27 முதல் 30 வரையிலான பாடல்களில் சோழன் நலங்கிள்ளிக்கு அறவுரைகள் கூறி வாழ்த்துகிறார். 27,28,29-ம் பாடல்கள் முதுமொழிக்காஞ்சி(பொதுவியல் திணையிலும்) 30 - பாடல் பாடாண் திணையில் இயன்மொழி துறையிலும் அமைந்துள்ளது. புறநானூறு 325 - ம் பாடல் வீரன் ஒருவனின் ஊர் குறித்தும் வீரம் குறித்து பாடுவதாக வாகைத் திணையில் வல்லாண் முல்லை துறையில் அமைந்துள்ளது. குறுந்தொகை 133 -ம் பாடல் திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தும் தலைவனின் செயலை நினைத்து வருந்தும் தலைவி தோழியிடம் உரைப்பதாக குறிஞ்சித் திணையில் அமைந்துள்ளது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு
  • சோழன் நலங்கிள்ளியின் அடக்கத்தின் தன்மையை வானத்தில் உள்ள சூரியனின் திசையையும் கோள்களின் நிலையையும் கணித்து கூறும் நுண்ணறிவு கொண்டவர்களாலும் விவரித்துக் கூற முடியாது.
  • யானை வாயில் சென்ற விளாம்பழத்தைப் போல எதிரிகளை அழிக்கும் வல்லமை கொண்டவன் நலங்கிள்ளி. ஆயினும் அதனை மறைத்துக் கொண்டிருப்பவன்.
  • சோழன் நலங்கிள்ளியின் சோழ நாட்டில் புகார் துறைமுகத்தில் வந்தணையும் கப்பலின் பாய்மரத்க்ச் சுருக்கி நங்கூரம் இட்டு நிலை நிறுத்த மாட்டார்கள். மாறாக நேரடியாக ஆற்று துறைமுகத்திற்குள் செலுத்தி நாட்டின் பல பகுதிகளுக்கும் கொண்டு சென்று சேர்ப்பர்[1].
  • சோழன் நலங்கிள்ளியின் படையினரின் வீரத்தை எதிர்த்துப் போரிட பகைவரே இல்லாமையால் வயலில் கதிர்களைக் கொய்ய வரும் பறவைகளை விரட்டும் வேலையை செய்வர். பனை மரங்கள் மிகுந்துள்ளதால் அவற்றில் இருந்து பழுந்து விழுந்த பனைமட்டைகளை நெருப்புக்கான விறகாக்குவர். அவ்வாறு தீ உண்டாக்கி குளத்தில் பிடித்த மீன்களை சுட்டு தின்னுவர். மிகுதியாக கள் அருந்துவர். கள் அருந்துவது சலிப்பு ஏற்படுத்தினால் இளநீர் அருந்தி இளைப்பாறுவர்.
  • நலங்கிள்ளி தமது அவையில் பாடும் பாணர்களுக்குப் பொன்னாலான தாமரையைப் பரிசிலாகத் தருவான். அதனை அவர்கள் தம் தலைமேல் வைத்து மகிழ்ந்து கொண்டாடுவர். அத்தகைய பாணர்களால் நலங்கிள்ளியின் அவை முற்றம் நிறைந்துள்ளது. நலங்கிள்ளியின் தோள்கள் அன்புமிக்க சந்தனம் பூசிய மார்பினை கொண்ட மகளிரால் தழுவப்படும் சிறப்பு கொண்டவை.
  • நலங்கிள்ளி நல்லவர்களை ஆதரித்தும் தீயவர்களை அழித்தும் வெற்றி, புகழுடன் இருந்தான். அவனது சுற்றத்தார் வெற்றி முரசை முழக்குவர். அது நீடிக்கட்டும் என்று வாழ்த்தி பாடுகிறார் புலவர்.
  • நல்லது செய்தால் நன்மையும் தீயது செய்தால் தீமையும் விளையாது என்பவர் பக்கம் சேருதல் கூடாது. கூவை கொடி படர்ந்த தம் வீட்டைவிட்டு உன்னை நாடி வருபவர்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று நலங்கிள்ளிக்கு அறமுரைத்துள்ளார்[2].
  • சோழன் நலங்கிள்ளியின் நாட்டில் தினை வயலை பாம்பு முதலான நச்சு உயிர்களிடமிருந்து காக்க காட்டு சேவலை வளர்ப்பர். அவை தினை வயலுக்கு காவலாக விளங்கும். அவனது கோட்டைக்குள் இருப்போர் போர் தொடுத்து வந்த பகைவரிடம் கரும்பாலான அம்பை எய்து போர் வேண்டாம் என்பர்.
  • மனவளம் குன்றுதல், உடலுறுப்பு குறைப்பாடு, முதுகு வளைந்த கூன் கொண்டவனாதல், குள்ள உருவம், வாய் பேசமுடியாமை, காது கேளாமை, அறிவிலா மூர்க்கத்தன்மை, பைத்தியம் பிடித்தல் ஆகிய எட்டு குறைபாடுகளும் இல்லாமல் இருத்தல் நற்பிறவி.
  • மன்னன் ஆளும் நாடு கூத்தனின் ஆடுகளத்தைப் போன்றது. தனது நாட்டின் செல்வத்தை பயன்படுத்தி அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்றையும் சேர்க்க வேண்டும்[3].
  • தாமரை பூ சேற்றில் மலர்கிறது. சிலர் பூவினை போல உலகுக்கு தெரியும் புகழ் கொள்கிறார்கள். சிலர் தாமரையின் இலை போல கண்டு கொள்ளப்படாமல் கிடக்கின்றனர். எல்லோரும் பிறப்பில் சமம். ஆயினும் ஒருவர் செயல்களே அவரை மேல்நிலை உயர்த்துகிறது. அத்தகையோர் புலவர் பாடும் புகழ் பெற்று வானத்து ஊர்த்தியில் செல்வர்.
  • தேய்தலும் வளர்தலும்,இறத்தலும் பிறத்தலும்இயற்கை என்னும் உண்மை தெரியாதவர்களுக்குத்தெரியும்படி நிலாத்தெய்வம் தேய்ந்து வளர்ந்தும், மறைந்து தோன்றியும்காட்டிக்கொண்டிருக்கிறது.எனவே,வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும்வருந்தி வந்தோரின் நிலைமையைப் பார்த்துஉதவுபவனாக மன்னன் இருக்க வேண்டும்[4]
  • .பன்றிகள் புழுதியாக்கும் அளவுக்கு வறண்ட நிலத்தில் மழை பெய்தது. பள்ளங்களில் தேங்கிய மழைநீரை பசுக்கூட்டங்கள் குடித்தன. நீர் வற்றிய சேற்று நிலத்தை தோண்டி கிடைக்கும் கிழங்குகளைப் பகிர்ந்து உண்பர் அந்நிலத்து மக்கள். அவ்வூர் ஆடவர் முள்ளம்பன்றியை வேட்டையாடுவர். உடும்புகளையும் பொறி வைத்து பிடித்து சுட்டு தின்னுவர். ஊர் சிறுவர்கள் வறட்சியால் இலையுதிர்த்து மொட்டையாக இருக்கும் மரத்தில் அம்பெய்தி விளையாடுவர். அந்நியர் உள் நுழைய முடியாத காடு சூழ்ந்த பகுதி. அதை ஆளும் தலைவன் ஈகை குணம் கொண்டவன்[5].
குறுந்தொகை
  • தினை பயிரின் முற்றிய கதிர்கள் பொன்னிறத்தில் காணப்படும். கிளிகள் அக்கதிர்களை கொய்து தின்னும். தினைப்பயிரானது மீண்டும் புதிதாகத் துளிர்க்க தொடங்கும்.
  • உவமை: தலைவியுடனான தலைவனின் நட்பு தினைப்பயிரைக் கொய்து தின்ன கிளியின் செயலுக்கு ஒப்புமை கூறப்பட்டுள்ளது[6].

பாடல் நடை

புறநானூறு - 30

  • திணை: பாடாண் திணை
  • துறை: இயன்மொழி

செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி,
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர்
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே!

குறுந்தொகை - 133

  • திணை: குறிஞ்சி
  • கூற்று: வரைவுநீட்டித்தவிடத்துத்தலைமகள்சொல்லியது.

புனவன் துடவைப் பொன்போற் சிறுதினை
கிளிகுறைத் துண்ட கூழை யிருவி
பெரும்பெய லுண்மையி னிலையொலித் தாங்கென்
உரஞ் செத்தும் உளெனே தோழியென்
நலம்புதி துண்ட புலம்பி னானே.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Feb-2026, 17:01:40 IST