வல்லாண் முல்லை
வல்லாண் முல்லை வாகைத் திணையின் துறைகளில் ஒன்று. வீரம், கொடை இரண்டும் கொண்ட தலைவனையும், அவன் குடும்பத்தையும் பற்றிக் கூறுவது வல்லாண்முல்லை
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் ஒரு மறவனது குடிச்சிறப்பையும், ஊரின் சிறப்பையும் வீர இயல்பையும் கூறி அவனது சிறந்த ஆண்மைத் தன்மையினை மிகுத்துப் பேசுவது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
இல்லும் பதியும் இயல்பும் கூறி
நல்ஆண் மையை நலம்மிகுத் தன்று - (கொளு-23)
வெண்பா
வில்முன் கணை தெரியும் வேட்டைச் சிறுசிறார்
முன்முன் முயல் உகளும் முன்றிற்றே - மன்முன்
வரைமார்பில் வேல் மூழ்க வாள் அழுவம் தாங்கி
உரைமாலை சூடினான் ஊர் (177)
பொருள்: போர்க்களத்தில் தன் அரசன் முன் அவனுக்குத் துணையாக நின்று மார்பில் வேல் மூழ்க விழுப்புண்பட்டுப் புகழ் மாலை சூடியவன் இவன்.
தொல்காப்பியம்
புல்லா வாழ்க்கை வல்லாண் பக்கமும்' (தொல்.புறத்.3:75.9) என்ற தொல்காப்பியத் தொடரில் சிறிய எளிய வளங்குன்றியச் சூழலிலும் கொடை செய்யும் வாய்ப்பு நேரின் வளம் தளராது எதிர்நோக்கும் வலிய ஆண்தன்மை என்று இளம்பூரணர் விளக்கமளிக்கிறார்.
புறநானூற்றில் வல்லாண் முல்லை
புறநானூற்றுப் பாடல்களில் பாண்டியன் கீரஞ்சாத்தனைத் தவிர பிற பாடல்கள் அனைத்தும் சீறூர், குறுநில மன்னர்களைச் சுட்டுவனவாக அமைகின்றன. இப்பாட்டுடைத்தலைவர்களிற் சிலர் பெருவேந்தர்களின் வலியுடையராய்த் திகழ்ந்துள்ளனர். வறுமையுற்ற போதும் பிறர் பசி தீர்க்கும் பண்புடையராய்த் திகழ்ந்தனர் என்பதை,
புறநானூற்றில் 25 பாடல்கள்(170, 178, 179, 180, 181, 313-322, 326-335) வல்லாண் முல்லை என்னும் துறையில் அமைந்துள்ளன.
- தமக்குள் நடக்கும் போரில் காடைகள் தாக்கிக்கொள்வது போல, போரில் தாக்குபவன் அந்த வல்லாளன். இந்த வல்லாளன் தின்னப் பழமும், வாழ்க்கைக்கு உதவும் பரிசில் பொருள்களும் இசைவாணர்களுக்குத் தருவான். 321
- புன்செய் நிலச் சிற்றரசன் தாக்குவானோ என்று நன்செய் நிலப் பேரரசன் தூங்காமல் எண்ணிக்கொண்டிருக்கிறான். 322
- அவன் தன் வாளை, போரில் பகையரசர் யானையின் கால்களை வெட்ட மட்டுமே பயன்படுத்துவான். 323
- வலார் சிம்பை வளைத்து வில்லும், நாணல் தட்டை நுனியில் சப்பாத்தி முள்ளைக் குத்திய அம்பும் செய்கொண்டு சிறுவர்கள் விளையாடும் ஊரின் அரசன் அந்த வல்லாளன். 324
- வேந்தன் தன் படையுடன் வந்தாலும் அனைவருக்கும் உணவளிக்கும் வல்லமை உள்ளவன் அந்த வல்லாளன். 325
- அந்த ஊரிலுள்ள பெண் விளக்கு வெளிச்சத்தில் பருத்திப் பஞ்சில் நூல் நூற்பாள். அந்த ஊர் மக்கள் உடும்புத் தசையைச் சமைத்து, தயிரில் ஊற வைத்து விருந்தினர்களுக்கு வழங்குவர். 326
- அந்த ஊரில் வரகு விளையும். தடியால் அடித்து வரகையும் தாளையும் மக்கள் பிரித்து எடுப்பர். கடன் கொடுத்தவர்களுக்குக் கொடுத்த வரகு போக மீதமுள்ள வரகில் ஒரு பகுதியைப் பாணர்க்கு வழங்குவர். மீதியைத்தான் தனக்கென வைத்துக்கொண்டு உண்பர். இந்த ஊரில் வாழும் வல்லாளன் அரசனுக்குத் துன்பம் வந்தால், அதனைத் தான் ஏற்றுத் தாங்கிக்கொள்ளும் வல்லமை படைத்தவன். 327
- பிறை மோர் பானையிலுள்ள பாலையெல்லாம் தயிராக்குவது போல அந்த வல்லாளன் போரில் பகைவர்களைக் கதிகலங்கச் செய்வான். அவனிடம் சென்றால், பிறரிடம் வாங்கிய அரிசியில் நெய் ஊற்றி, கறி போட்டு, பொங்கிய சோறு உண்ணத் தருவான். 328
- வீட்டில் காய்ச்சிய கள்ளை, ஊர் மக்கள் கூட்டமாகச் சென்று நடுகல்லுக்குப் படைப்பர். அந்த ஊர் மக்கள் தமக்கென இருப்பு வைத்துக்கொள்ளாமல் இரவலர்களுக்கு வழங்குவர். 329
- அவன் தனி ஒருவனாகப் பகைவர் படையை எதிர்த்து நின்றான். அவன் வாழும் ஊர் மக்கள் பாடிச் சென்றவர்களுக்கெல்லாம் வாரி வழங்கினர். 330
எடுத்துக்காட்டு
புறநானுறு 179
- திணை: வாகை துறை: வல்லாண் முல்லை
- பாடியவர்: வடநெடுந்தத்தனார்
- பாடப்பட்டவர்: நாலை கிழவன் நாகன்
ஞாலம் மீமிசை வள்ளியோர் மாய்ந்தென
ஏலாது கவிழ்ந்தஎன் இரவல் மண்டை
மலர்ப்போர் யார்என வினவலின் மலைந்தோர்
விசிபிணி முரசமொடு மண்பல தந்த
திருவீழ் நுண்பூண் பாண்டியன் மறவன்
படை வேண்டுவழி வாள்உதவியும்
வினை வேண்டுவழி அறிவுஉதவியும்
வேண்டுப வேண்டுப வேந்தன் தேஎத்து
அசைநுகம் படாஅ ஆண்தகை உள்ளத்துத்
தோலா நல்லிசை நாலை கிழவன்
பருந்துபசி தீர்க்கும் நற்போர்த்
திருந்துவேல் நாகற் கூறினர் பலரே.
பொருள்: உலகில் வாழ்ந்த வள்ளல்கள் எல்லாம் இறந்தனர்; பிறரிடம் எதுவும் பெற முடியாத காரணத்தால் கவிழ்த்து வைக்கப்பட்டிருக்கும் என் இரவல் கலத்தை நிரப்புபவர் யார்?", என்று கேட்டேன். "பாண்டியன், தனது பகைவர்களின் வலிமையாகக் கட்டப்பட்ட முரசோடு அவர்களது நாட்டையும் வென்று, திருமகள் விரும்பும், அழகிய அணிகலன்களை அணிந்தவன். அத்தகைய பாண்டியனின் வீரனாகிய நாலை கிழவன் நாகன், பாண்டியனுக்குப் படை வேண்டிய பொழுது வாட்படையையும், அவன் அறிவுரை கேட்ட பொழுது அறிவுரைகளையும் வழங்குபவன். அவன், பாண்டியன் வேண்டுவன எல்லாம் வேண்டியவாறு கொடுத்து உதவுபவன். நுகத்தடியில் பூட்டப்பட்ட வண்டியை நேராக இழுத்துச் செல்லும் தளராத காளை போன்ற ஆண்மையும், சளைக்காத உள்ளமும், நல்ல புகழும் உடைய நாலை கிழவன் நாகன் பருந்துகளின் பசியைத் தீர்க்கும் நல்ல வேலை உடையவன்" என்று பலரும் கூறினர்.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:40:03 IST