under review

வ.சு. செங்கல்வராய பிள்ளை

From Tamil Wiki
செங்கல்வராய பிள்ளை
வ.சு.செங்கல்வராய பிள்ளை
செங்கல்வராய பிள்ளை

வ. சு. செங்கல்வராய பிள்ளை (ஆகஸ்ட் 15, 1883 - ஆகஸ்ட் 25, 1971) தமிழறிஞர், தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர், பதிப்பாளர். மரபு வழி புராணங்களைச் சேகரித்து பதிப்பித்தல், சைவ நூல்களுக்கான உரை, திருப்புகழ் பதிப்பு ஆகியவை தமிழ் இலக்கியத்திற்கு முக்கியமான பங்களிப்பு.

பிறப்பு, கல்வி

பிறப்பு

தென் ஆற்காடு பகுதியில் மஞ்சள் குப்பம் கிராமத்தில் வடக்கு பட்டு வ.த சுப்ரமணிய பிள்ளைக்கு ஆகஸ்ட் 15, 1883-ல் வ.சு.செங்கல்வராய பிள்ளை பிறந்தார். (சுபானு ஆண்டு ஆவணி மாதம் முதல் தேதி, புதன் கிழமை, பூராடம்) இவர் தந்தை வ.த. சுப்ரமணிய பிள்ளை மாவட்ட நீதிபதியாக இருந்த தமிழறிஞர். இவர் அன்னையின் பெயர் தாயாரம்மாள்.

பள்ளிக்கல்வி

செங்கல்வராய பிள்ளை 1888-1891 ஆண்டுகளில் நாமக்கல்லில், அங்குள்ள கழகப் பள்ளிக்கூடத்தில் மூன்றாம் வகுப்பு வரை பயின்றார். அதன் பிறகு கும்பகோணம் பாணாத்துறை பள்ளி, திருவாரூர், மதுரை ஆகிய ஊர்களில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்தார். தஞ்சை செயிண்ட் பீட்டர்ஸ் பள்ளியில் பத்தாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். பின்னர் தந்தை மதுரைக்கு இடமாற்றம் செய்யபட்டமையால் மதுரைக்குச் சென்று மதுரை நேட்டிவ் காலேஜ் என்னும் கல்விநிலையத்தில் பத்தாம் வகுப்பை தொடர்ந்தார்.

கல்லூரிக் கல்வி

1901-ம் ஆண்டில் சென்னை மில்லர் கல்லூரியில் மெய்யியல் பட்டமும், பின்னர் அதே கல்லூரியில் தமிழில் எம்.ஏ பட்டமும் பெற்றார். அதைத் தொடர்ந்து மலையாளமும், தமிழும் பாடமாக எடுத்து எம்.ஏ. முடித்தார். சென்னை மில்லர் கல்லூரியில் படிக்கும்போது செங்கல்வராய பிள்ளையின் பேராசிரியர்களாக பரிதிமாற்கலைஞரும், மறைமலையடிகளும் இருந்தனர்.

1902-ல் பி.ஏ படிக்கும் மாணவர்களுக்காக மதுரை தமிழ்ச்சங்கம் நடத்திய தேர்வில் முதல்பரிசு பெற்றார்.பி.ஏ. படிப்பில் பல்கலையில் முதலிடத்தில் வெற்றிபெற்றார்.

தமிழிலக்கியக் கல்வி

செங்கல்வராய பிள்ளையின் முதல் தமிழாசிரியர் அவருடைய தமையன் சண்முகம் பிள்ளை. மதுரை நேடிவ் கல்லூரியில் ராகவையா என்னும் ஆசிரியர் அவருக்கு தமிழாசிரியராக அமைந்தார். அவர் உ.வே.சாமிநாதையர் அவர்களுக்கும் தமிழ் கற்பித்தவர் எனப்படுகிறது.

தனிவாழ்க்கை

அலுவலக வாழ்வு

எம்.ஏ முடித்ததும் 24 மே 1905-ம் ஆண்டு செங்கல்வராய பிள்ளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் ஆவணப்பதிவு உதவியாளராகச் சேர்ந்தார். 1907-ல் அலுவலகக் கணக்குத் தேர்விலும் 1908-ல் ஆங்கில மொழித்தேர்விலும் வெற்றிபெற்றார். 1914-ல் தலைமை எழுத்தராகப் பணி உயர்வு பெற்றார். 1918-ல் அலுவலகத்திற்கான சட்டத்தேர்வில் வெற்றிபெற்றார். 1929-ல் மாவட்டப் பதிவாளராக பணி உயர்வு பெற்றார். 1931-ல் சென்னை மாநிலப் பதிவுத்துறை ஆய்வாளராகப் பணி உயர்வு பெற்றார். சென்னை மாநிலப் பத்திரப் பதிவுத் துறை துணைக் கண்காணிப்பாளராக இருந்து 1938-ல் ஓய்வு பெற்றார்.

குடும்ப வாழ்வு

1907-ல் திருத்தணி ஆலயத்தில் தனுக்கொடியைத் திருமணம் செய்தார். 1922 தொடக்கத்தில் தனுக்கொடி இறந்தபின் 1922 செப்டெம்பர் மாதம் ஆரணங்கு என்னும் பெண்மணியை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். அவரும் இறந்து போகவே தன் 47-ஆவது வயதில் 1930 பிப்ரவரி மாதம் சாரதா என்னும் பெண்மணியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு நான்கு பிள்ளைகள். ஞானசக்தி, ஞானபூரணி, சசிவல்லி ஆகிய மகள்கள். தணிகை நாயகன் என்னும் மகன்.

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

செங்கல்வராய பிள்ளை எம்.ஏ.வகுப்பில் மலையாளம் கற்றார். மலையாளத்தில் இருந்து. 1907ல் காசி மாகாத்மியம் என்னும் நூலை மொழியாக்கம் செய்து வெளியிட்டார். 1920முதல் விவேகபோதினி இதழில் தொடர்ச்சியாக கந்தரனுபூதி, கந்தரலங்காரம் போன்ற முருகபக்தி நூல்கள் மீதான ஆய்வுக்கட்டுரைகளை வெளியிட்டார். 1923ல் சேவல்பாட்டு என்னும் சிறு கவிதை நூலை வெளியிட்டார். கடோரசித்தன் கதை என்னும் மொழியாக்க நூல், வள்ளி-கிழவர் வாக்குவாதம் என்னும் உரைநடை நூல், History of Tamil Prose literature என்னும் ஆங்கில நூல், வேல்பாட்டு என்னும் பாடல்நூல் ஆகியவை 1931 க்குள் செங்கல்வராய பிள்ளை வெளியிட்டவை.

திருப்புகழ் பதிப்பு

செங்கல்வராய பிள்ளையின் முதன்மைப் பங்களிப்பு இவருடைய தந்தை தொடங்கிய திருப்புகழ் பதிப்புப் பணியை முழுமை செய்தது. 1871-ல் மாவட்ட நீதிபதியாக இருந்த வ.த. சுப்பிரமணிய பிள்ளை சிதம்பரம் செல்லும் பயணத்தின்போது பயணிகள் அருணகிரிநாதரின் பாடல்களை பாடக்கேட்டு அதன்மேல் ஆர்வம் கொண்டார். அவை அப்போது வெவ்வேறு ஓலைச்சுவடிகளிலாக சிதறி பெரும்பாலும் மறக்கப்பட்டிருந்தன.

1871-ல் வ.த. சுப்ரமணிய பிள்ளை தென்னிந்தியா முழுவதிலும் சுற்றுப்பயணம் செய்து எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளை சேகரித்து அருணகிரிநாதர் பாடல்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1894-ல் முதலாவது பதிப்பும், 1901-ல் இரண்டாவது பதிப்பும் வெளிவந்தது. அவரது மறைவுக்குப் பிறகு தந்தையின் பணியை முன்னெடுத்த செங்கல்வராய பிள்ளை திருப்புகழை முழுமையான உரை மற்றும் ஆராய்ச்சிக்குறிப்புடன் நூலாக வெளியிட்டார்.

1951-ல் செங்கல்வராய பிள்ளை திருப்புகழுக்கு உரை எழுதத் தொடங்கினார். 1954-ல் எழுதி முடித்து பல பகுதிகள் கொண்ட நூல்தொகையாக வெளியிட்டார். செங்கல்வராயபிள்ளையின் முதன்மைச் சாதனையாக இந்த பங்களிப்பு கருதப்படுகிறது.

தேவாரம்

1939-ம் ஆண்டு செங்கல்வராய பிள்ளை சம்பந்தர் தேவாரம் ஆய்வை தொடங்கி 1940-ல் முடித்தார்.1949-ல் அப்பர் தேவாரம் பற்றிய ஆய்வை முடித்தார். சுந்தரர் தேவாரம் பற்றிய ஆய்வை 1958-ல் தொடங்கி 1959-ம் ஆண்டு முடித்தார்.ஆறு தொகுதிகளாக வெளிவந்த தேவார ஆய்வுநூல்களை தேவாரக் கலைக்களஞ்சியம் என்று சொல்லப்படுவதுண்டு. இந்நூல்களில் தேவாரத்திலுள்ள சொற்கள், தலங்கள், அரிய சொல்லாட்சிகள், அடியவர்கள் முதலியவற்றுக்கு அகர வரிசையில் விளக்கம் தந்துள்ளார்.

ஆய்வுநூல்கள்

செங்கல்வராய பிள்ளை தமிழாய்வுகளாக நாற்பது நூல்களைப் படைத்துள்ளார். 'அருணகிரி நாதர் வரலாறும் நூலாராய்ச்சியும்' என்னும் நூலை 1946-ல் செங்கல்வராய பிள்ளை எழுதினார். 1963-ல் திருவாசக ஆராய்ச்சியை முடித்தார்.1970-ல் திருக்கோவையார் ஆய்வை நிறைவுசெய்தார். 'திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்', 'திருக்கோவையார் உரைநடை' ஆகிய நான்கு நூற்களும் செங்கல்வராய பிள்ளையின் குறிப்பிடத்தக்க திறனாய்வு நூல்கள்.

தோத்திர நூல்கள்

செங்கல்வராய பிள்ளை 1941ல் தன் குலகுருவாக கருதிய வள்ளிமலை சுவாமிகள் மீது சச்சிதானந்த கலிவெண்பா என்னும் துதிநூலை இயற்றினார். வள்ளி கல்யாணக்கும்மி, அறுபத்து மூவர் துதிப்பா ஆகிய சிற்றிலக்கியங்களை 1946ல் வள்ளிமலை சுவாமிகளின் பொருட்டு இயற்றினார்.

1943-ல் செங்கல்வராயபிள்ளை இயற்றிய 'திருத்தணிகை பிள்ளைத் தமிழ்', 'தணிகை முப்பூ' இரண்டும் திருத்தணிகை முருகனைப் பற்றியவை.

1946-ல் சம்பந்தர் பிள்ளைத்தமிழ் என்னும் நூலை இயற்றினார்.

சொற்பொழிவுகள்

வ.சு.செங்கல்வராய பிள்ளை 1910 முதல் முருகன் திருநாமம், அருணகிரிநாதரும் திருமூலநாயனாரும் முருகரும் தமிழும் போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். 1910ல் அவர் சிதம்பரத்தில் ஆற்றிய அருணகிரிநாதர் வரலாறு உரை உ.வே.சாமிநாதையர் அவர்களைக் கவர்ந்து அவர்களுக்கிடையே உரையாடல் உருவானது. அவருடைய உரைகளில் முருகரும் தமிழும் நூலாக வெளிவந்தது. 1943ல் பழனி திருப்புகழ் மாநாட்டில் 'திருப்புகழில் சில குறிப்புகள்' என்னும் தலைப்பில் ஆற்றிய உரை புகழ்பெற்றது.

பதிப்புப்பணி

செங்கல்வராய பிள்ளை 1,325 பாடல்களைக் கொண்ட அருணகிரி நாதரின் திருப்புகழுக்கு உரை எழுதி பதிப்பித்தார். திருப்புகழ் பாராயணத் தொகுதி, துணைமாலையம்மை பிள்ளைத் தமிழ் ஆகியவற்றைப் பதிப்பித்தார்.

கரீணக குல திலக அந்திய பூபான் என்பவர் எழுதிய அந்தர விலாசம் என்கிற நாடகத்தை ஓலைச்சுவடியில் இருந்து பதிப்பித்து விரிவான ஆராய்ச்சிக் கட்டுரையும் எழுதினார்.

இறுதிக்காலம்

90 வயது வரை வாழ்ந்த செங்கல்வராய பிள்ளை கடைசி வரை தமிழுக்காகப் பணியாற்றினார். இறப்பதற்கு சில நாள்களுக்கு முன் திருவிசைப்பா பற்றி ஆராய்ச்சி நூலை வெளியிடார். ஆகஸ்ட் 25, 1971-ல் காலமானார்.

விருதுகள்

  • பி.ஏ. படிப்பில் மாநிலத்தில் முதல் நிலை பெற்றதற்காக Frankilin Gell Gold Medal வாங்கினார்.
  • இவரது பணியைப் பாராட்டி ஆங்கிலேய அரசு ராவ் சாகிப், ராவ் பகதூர் பட்டங்களை வழங்கியது.
  • சித்தாந்த கலாநிதி, செந்தமிழ்மாமதி, தணிகை மணி போன்ற பட்டங்களைப் பெற்றார்.
  • தெ.பொ.மீ-யின் பரிந்துரையின் பேரில் 1969-ம் ஆண்டு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அவருக்கு டி.லிட் (இலக்கியத்தில் டாக்டர்) பட்டம் அளித்து கௌரவித்தது.
  • செங்கல்வராய பிள்ளையின் படைப்புகளை தமிழக அரசு 2010-11 அறிக்கையில் நாட்டுடைமை ஆக்கும் அறிவிப்பை வெளியிட்டது.

மதிப்பீடு

மரபாக ஆசிரியர்களிடமிருந்து நேரடியாக கற்கும் முறை வழியாகவே சைவ இலக்கிய நூல்கள் கற்கப்பட்டன. பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவ இலக்கிய நூல்கள் அச்சில் வெளியாகத் தொடங்கி அறிஞர்களின் சிறு உலகுக்கு வெளியே அனைவரும் படிக்கும்படி அவை பரவத் தொடங்கியபோது அவற்றுக்கு விளக்கங்கள் தேவையாயின. மேலும் முந்தைய மரபில் சைவநூல்கள் சைவத்தின் ஏதேனும் ஒரு பிரிவை மட்டுமே கருத்தில்கொண்டு மட்டுமே பயிலப்பட்டன. நவீனச் சூழலில் அனைத்து மரபுகளையும் ஒருங்கிணைத்த உரைகள் தேவையாயின. இவ்விரு பணிகளையும் செய்த முன்னோடியான சைவ உரையாசிரியர்களுள் ஒருவர் என்று செங்கல்வராய பிள்ளையை மதிப்பிடலாம்.

சைவப்பெருநூல்களான தேவாரம், திருமந்திரம், திருப்புகழ் போன்ற நூல்களுக்கு செங்கல்வராய பிள்ளை எழுதிய உரைகள் முதன்மையான இலக்கிய பணிகள்,சைவப்பணிகள் என மதிப்பிடப்படுகின்றன. இந்நூல்கள் வெவ்வேறு காலகட்டம் சார்ந்தவை. தத்துவநோக்கில் இந்நூல்கள் வேறுபடுபவையும்கூட. அவற்றை ஒரே சைவப்பொதுப்பார்வையில் விளக்கியதே செங்கல்வராயபிள்ளை போன்றவர்களின் தத்துவப் பங்களிப்பு. அவ்வகையில் இன்றுள்ள நவீன சைவமதத்தை இந்த விரிவான விளக்கவுரைகள் வழியாக அவர்களே உருவாக்கினார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டில் சைவத்திற்குள் இருந்த துணைப்பிரிவுகளும், வேறுபட்ட பார்வைகளும் மறைந்து சைவம் என்னும் ஒற்றைநோக்கு தொகுப்பு கொண்டது. அதை நிகழ்த்தியவர்களில் செங்கல்வராய பிள்ளையும் ஒருவர்.

செங்கல்வராய பிள்ளையின் உரைகள், ஆய்வுகள் ஆகியவை சைவநூல்களில் உள்ள சொற்களுக்கு தமிழ்ப் பண்பாட்டிலும், சைவநூல்களிலும் உள்ள பொருள்விரிவை முழுமையாக கருத்தில்கொண்டு அப்பாடல்களை விளக்குபவை. பாடல்களுக்கு சைவநூல்களின் பிறபகுதிகளை இணைத்துக்கொண்டும், சைவ வழிபாட்டு முறைகள் மற்றும் நம்பிக்கைகளை கருத்தில்கொண்டும், சைவசித்தாந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டும் அவர் விளக்கம் அளிக்கிறார்.

நூல்கள் பட்டியல்

  • திருத்தணிகை பிள்ளைத்தமிழ்
  • தணிகை முப்பூ
  • தணிகைநாதர் பல்லாண்டு
  • தணிகைப் பதிகம்
  • வடகதிர்காம முருகன் அந்தாதி
  • தணிகை நவரத்தின மாலை
  • திருத்தணிகேசர் எம்பாவை
  • திருத்தணிகேசர் திருப்பள்ளி எழுச்சி
  • தணிகைநாயகன் மாலை
  • சிவபராக்ரம போற்றி அகவல்
  • வள்ளிகல்யாணம் கும்மி பாட்டு
  • வள்ளி கல்யாணம் கும்மி பாட்டு
  • மஞ்ஞை பாட்டு
  • வேல்பாட்டு
  • சேவல்பாட்டு
  • தணிகை கலிவெண்பா
  • அன்னைப்பத்து
  • கோழிக்கொடி
  • வள்ளிதிருமண தத்துவம்
  • தேவி அனுபூதி
  • வைஷ்ணவி ஆலய வரலாறு
  • வைஷ்ணவி சன்னிதி முறை
  • ஶ்ரீவைணவி எம்பாவை
  • பராசக்தி திருப்பள்ளிஎழுச்சி
  • ஶ்ரீவைணவி திருப்பள்ளி எழுச்சி
  • வைணவி திருப்பல்லாண்டு
  • அருணகிரிநாதர் வரலாற்றுத் துதி'
  • அறுபத்துமூவர் துதிப்பா
  • சுந்தரமூர்த்தி சுவாமிகள் சரித்திரச் சுருக்கம்
  • மதுரை சொக்கநாதர் அறுபத்துமூன்று திருவிளையாடல்
  • சுந்தரவிலாசம் (நாடகம்)
  • காலனைக் கட்டி அடக்கிய கடோரசித்தன் கதை
  • திருப்புகழ் பதிப்பாசிரியர் வரலாறு
  • அருணகிரிநாதர் வரலாறும் நூல் ஆராய்ச்சியும்
  • திருக்கோவையார் உரைநடை
  • திருமந்திர ஆராய்ச்சியும் ஒப்புமைப் பகுதியும்
  • தேவார ஒளிநெறிக் கட்டுரைகள்
  • திருக்கோவையாயார் ஒளிநெறி
  • திருவிசைப்பா ஒளிநெறி
  • முருகவேள் பன்னிரு திருமுறை
  • அந்தர விலாசம்
  • திருப்புகழ் உரை தொகுதிகள்
ஆய்வுக்கட்டுரை
  • History of Tamil Prose Literature

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:37:25 IST