ரா.அ. பத்மநாபன்
- பத்மநாபன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: பத்மநாபன் (பெயர் பட்டியல்)
ரா.அ. பத்மநாபன் (வங்கிபுரம் புளியஞ்சேரி ராமஸ்வாமி அனந்த பத்மநாபன், ரா.அ. ப)(R.A. Padmanabhan) (1917-ஜனவரி 27, 2014) ஊடகவியலாளர், முன்னோடி பாரதியியல் ஆய்வாளர், எழுத்தாளர். பாரதியாரின் பல படைப்புகளையும், ஆவணங்களையும், அவர் வாழ்வு குறித்த செய்திகளையும், கடிதங்களையும் தேடித் தொகுத்தவர். உரிய காலத்தில் செயல்பட்டு, பாரதியாரின் இன்றுள்ள ஐந்து மூலப் புகைப்படங்களில் இரண்டைக் கண்டுபிடித்தவர், பாரதி பற்றிய ஆவணங்களை அழியாமல் காப்பாற்றியவர். சந்திரிகையின் கதை, ஓலைத் தூக்கு போன்ற பாரதியின் ஆக்கங்களை வெளிக்கொணர்ந்தவர். விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்க்கை வரலாறுகளை எழுதியவர்.
பிறப்பு, கல்வி
ரா.அ. பத்மநாபன் 1917-ல் பிறந்தார். தந்தை பி.எஸ். ராமஸ்வாமி அய்யங்கார். வங்கிபுரம் குடும்பப் பெயர். தந்தை கேரளத்தில் உள்ள சாலக்குடியில் தென்னாட்டின் முதல் 'வின்ச்' அமைந்தபோது ஓவர்சீயராகப் பணியாற்றியவர். 'குண்டூசி' கோபால் என்று அறியப்படும் பி.ஆர். சீனிவாச கோபாலன் இவரது சகோதரர்.
பத்மநாபன் அவிநாசியிலும் கோவையிலும் பள்ளிக்கல்வியை முடித்தார். பள்ளிக்காலத்தில் அவர் எழுதிய துணுக்குகளும் சிறுசித்திரங்களும் ஆனந்த விகடனில் வெளியாயின.
தனி வாழ்க்கை
ரா.அ. பத்பநாபன் மணமானவர். மூன்று மகன்கள், மூன்று மகள்கள்.
ஊடகத்துறை
ரா.அ. பத்மநாபன் இந்திய வானொலியின் திருச்சி நிலையத்தில் பணியில் சேர்ந்து பின்னர் டெல்லியில் அதன் அயல் சேவைப் பிரிவில் பணியாற்றினார். அலகாபாதில் காந்தியின் அஸ்தி கரைப்பின்போது வானொலியின் தமிழ் வர்ணனையாளராகப் பத்மநாபன் இருந்தார். 1951-லிருந்து அமெரிக்கத் தூதரகத்தின் செய்திப் பிரிவில் பத்தாண்டுகள் பணியாற்றினார். தமிழ்ப் பிரிவின் தலைவராகவும், வெளியீட்டுப் பிரிவின் இயக்குநராகவும் இருந்தார். 1954-ல் அமெரிக்காவுக்கு பணி நிமித்தம் செல்லும் வாய்ப்பும் பெற்றார்.
இதழியல்
ரா.அ. பத்மநாபன் கல்கியின் அழைப்பின்பேரில் பதினாறு வயதிலேயே ஆனந்த விகடன் இதழில் உதவி ஆசிரியராகப் பணியேற்றார். டைபாய்டு காய்ச்சலால் பணிக்குச் செல்ல முடியாததால் விகடனில் வேலையை இழந்தார். ஜெயபாரதி (1936-37), ஹநுமான் (1937), ஹிந்துஸ்தான் (1938-39) போன்ற தேசிய இயக்க இதழ்களில் பணியாற்றினார். வ.ரா., பி.எஸ். ராமையா முதலானோருடன் அவருக்கு நட்பு இருந்தது.
ரா.அ.ப 1962-ல் இந்து ஆங்கில நாளிதழின் ஆரம்பகால ஆசிரியர்களின் வரலாற்றை எழுதுவதற்காக சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டார். அந்த நூல்கள் பின்னர் வேறொருவர் பெயரில் வெளிவந்தன.
தமிழ் எழுத்தாளர் சங்கம் வெளியிட்ட 'பாரதி' என்ற மாத இதழுக்கு 1955-ல் ரா.அ.ப. பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார். இப்பணி முடிந்ததும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் சேர்ந்தார். தினமணி கதிரின் ஆசிரியராக பணியாற்றிய(1965-66) பிறகு ஒன்றரை ஆண்டுகள் ராம்நாத் கோயங்காவின் தனிச் செயலராக இருந்தார். கோயங்காவின் வாழ்க்கை வரலாற்றின் சில பகுதிகளை இவர் ஆங்கிலத்தில் எழுதினார். அது முடிக்கப்பெறவில்லை. 1969-ல் ஓய்வு பெற்றார்.
பாரதியியல் ஆய்வு
பத்திரிகையுலகில் ரா.அ.ப. நுழைந்த காலத்தில் பாரதி 'மகாகவி' என அறியப்பட்டிருக்கவில்லை. 1928-ல் பாரதி பாடல் நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டு தடை விதிக்கப்பட்டபோது அவர் கவிதைகள் பிரபலமாயின.
பாரதியின் இந்தியா இதழில் மாற்று ஆசிரியராகப் பணியாற்றிய வேங்கட ஆர்யா (பாஷ்யம் என்கிற ஓவியர் ஆர்யா அல்லர்) ஜெயபாரதி நாளிதழில் ரா.அ.ப.வோடு சில காலம் பணியாற்றினார். அவரிடமிருந்து இந்தியா இதழின் புதுவைப் பதிப்பு ஏறத்தாழ முழுமையாக ரா.அ.ப.வுக்குக் கிடைத்தது. அவருக்குக் கிடைத்த முதல் பாரதி ஆவணம் இது.
ஹிந்துஸ்தான் இதழில் பணியாற்றும்போது பாரதி பிறந்த நாளில் சிறப்பு மலர் வெளியிடும் எண்ணத்துடன் மலருக்காக செய்திகள், ஆவணங்கள் சேகரிக்க புதுச்சேரிக்குச் யூ.என். சிங் என்ற புகைப்படக்காரருடன் சென்றார். அப்போது தொடங்கிய ரா.அ. ப-வின் பாரதி தேட்டம் அதன்பின் ஏறத்தாழ 50 ஆண்டுகள் தொடர்ந்தது.
ரா.அ.ப.வின் பாரதி பற்றிய தேடல் இரு வழிகளில் அமைந்தது. ஒருபுறம் பாரதி வாழ்ந்த இடங்கள், பழகிய நண்பர்கள், அவர்களுடைய நினைவுரைகள் என்று தேடிசென்று தகவல்களையும் ஆவணங்களையும் தொகுத்தார். மறுபுறம் சிதறியும், கண்ணிற்படாமலும், காணாமலும் போயிருந்த பாரதியின் எழுத்துகள், கையெழுத்துப்படிகள், அச்சு நறுக்குகள், பத்திரிகைகள் ஆகியற்றைத் தொகுக்கும் பணியில் ஈடுபட்டார்.
திலகருக்குப் பாரதி எழுதிய கடிதம், 'சந்திரிகையின் கதை'யின் முற்றுப்பெறாத கடைசி அத்தியாயங்களின் மேற்பாதி, ஸ்ரீநிவாசவரதனுக்கு எழுதிய கடிதங்கள், 'The Political Evolution in the Madras Presidency' முதலான கையெழுத்துப்பிரதிகள், 'புதிய கட்சியின் கோட்பாடுகள்', 'எங்கள் காங்கிரஸ் யாத்திரை', 'The Fox with the Golden Tail' முதலான அச்சு நூல்கள், இந்தியாவின் புதுவைப் பதிப்பு தவிர 1908-ல் சென்னையிலிருந்து வெளியான 'இந்தியா'வின் இன்று கிடைக்கப்பெறும் ஐந்தே ஐந்து இதழ்கள்; நீலகண்ட பிரம்மச்சாரி, குவளைக் கண்ணன், மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரி, வயி.சு. சண்முகம், பாரதிதாசன் முதலானோரின் நினைவுரைகள்; பாரதியோடு பழகிய எட்டயபுர மன்னர்கள், அம்மாக்கண்ணு, வேணுகோபால் நாயக்கர், பேராசிரியர் என். சுப்பிரமணிய ஐயர் என்ற பிரம்மராய ஐயர் முதலானோரின் படங்கள்; பாரதி வாழ்ந்த காலத்தையொட்டிய புதுவை, கடயம், நெல்லை, எட்டயபுரப் படங்கள்; இன்று கிடைக்கும் பாரதி படங்களில் நான்கை இனங்கண்டது - இவை அவரது குறிப்பிடத்தக்க பணிகள்.
ரா.அ. பத்மநாபன் இன்று கிடைக்கும் பாரதியின் ஐந்து படங்களில் மூன்றினை எடுத்தவர்களின் பெயரையும் கண்டறிந்து பதிவு செய்தார். பாரதி நாமம் போட்டிருக்கும் இரு படங்களை 1917-ல் தம் புதுவை ஸ்டூடியோவில் எடுத்தவர் விழுப்புரம் சி. கிருஷ்ண ராஜூ; முறுக்கிய மீசையும் முண்டாசுமான இருக்கும் புகைப்படத்தை எடுத்தவர் சென்னை பிராட்வே ரத்னா கம்பெனியின் வி.எஸ். சர்மா.
ஹிந்துஸ்தான் இதழின் பாரதி ஆண்டு மலர்கள் (1938, 1939) பதமநாபனின் மேற்பார்வையில் வெளிவந்தன.
ரா.அ. ப தான் தேடித்தொகுத்த ஆவணங்களை 'பாரதி புதையல்' என்ற பெயரில் மூன்று தொகுப்புகளாக (1958, 1959, 1976) அமுத நிலையம் மூலம் வெளியிட்டார்
சித்திர பாரதி
ரா.அ. ப பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ஆவண அடிப்படையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட படங்களுடன் எழுதித் தயாரித்து 1957-ல் 'சித்திர பாரதி' என்ற நூலாக வெளியிட்டார். 1950-களில் ரா.அ.ப. நடத்திய பாரதி கண்காட்சிகளே இந்நூலுக்கு அடிப்படையாக அமைந்தன. அச்செழுத்துகளைக் கோத்து அச்சான சாதாரண தாளில் அமைந்த பக்கங்களும், ஆஃப்டோன் பட அச்சுக்கட்டைகளைக் கொண்டு அச்சான ஆர்ட் தாள் பக்கங்களுமாக மாறிமாறி அமைந்திருந்த பெரிய அளவு நூல் இது.
சித்திர பாரதியின் இரண்டாம் பதிப்பு பாரதி நூற்றாண்டு விழா ஆண்டில்(1882) வெளிவந்தது.
சித்திர பாரதியின் மூன்றாம் பதிப்பு காலச்சுவடு-கடவு வெளியீடாக டிசம்பர் 2006-ல் நிகழ்ந்த 'பாரதி 125, புதுமைப்பித்தன் 100; சுந்தர ராமசாமி 75' விழாவில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தலைமையில் வெளியிடப்பட்டது.
பாரதியின் கடிதங்கள்
ரா.அ. பத்மநாபன் பாரதி எழுதிய இருபத்துமூன்று கடிதங்களைத் திரட்டி 'பாரதியின் கடிதங்கள்' என்ற நூலாக வெளியிட்டார். காசியிலிருந்து செல்லம்மாளுக்கு எழுதிய கடிதம் , பரலி சு. நெல்லையப்பருக்கு எழுதிய தீவிர ஆவேசமான கடிதங்கள், தமிழறிஞர் மு. ராகவையங்கார், தனது அரசியல் குரு பாலகங்காதர திலகர், பிரிட்டிஷ் தொழிற்கட்சித் தலைவர் ராம்ஸே மக்டானல்ட், இளைய சகோதரன் சி.விசுவநாதன், சுதேசமித்திரன் ஆசிரியர் ஏ.ரங்கஸ்வாமி ஐயங்கார், எட்டயபுரம் மன்னர், கானாடுகாத்தான் வயி.சு.சண்முகம் செட்டியார், ஈரோடு தங்கப்பெருமாள் பிள்ளை, ஸ்ரீநிவாச வரதன் உள்ளிட்டோருக்கு பாரதி எழுதிய கடிதங்களில், அவரைப் பற்றிய உணர்ச்சிகரமான சித்திரம் ஒன்று கிடைக்கிறது.[1]
பாரதி ஆங்கிலத்தில் எழுதிய கடிதங்களும் தமிழாக்கம் செய்யப்பட்டு பதிப்பிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ராம்ஸே மக்டான்ல்டுக்கு பாரதி எழுதியிருக்கும் கடிதம், உலக அரசியல் ஞானத்தையும், விவேகமுள்ள தர்க்கத் திறனையும் காட்டுகிறது. பாரதியின் சில கடிதங்கள் மூல வடிவில் ஒளிப்பட நகல்களாக இந்நூலில் ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும் அக்கடிதம் எழுதப்பட்ட வரலாற்றுப்பின்னணியையும் பத்மநாபன் எழுதி இணைத்திருப்பது இந்நூலின் சிறப்பம்சம்.
பாரதி நூற்றாண்டு விழா
பாரதி நூற்றாண்டையொட்டி 'பாரதி புதையல்' தொகுப்புகளிலிருந்து பாரதியின் எழுத்துகளைப் பிரித்தெடுத்துப் 'பாரதி புதையல் பெருந்திரட்டு[2]' என்ற பெருந்தொகுதியாக்கினார் ரா.அ.ப. பாரதி பற்றிய நினைவுரைகள் 'பாரதி பற்றி நண்பர்கள்' என்ற தனி நூலாயின. பாரதியின் காலத்தையொட்டி வெளியான திறனாய்வுக் கட்டுரைகள் 'பாரதி கவிநயம்' என்ற பெயரில் வெளிவந்தன.
தேசியப் புத்தக நிறுவனத்திற்காக (என்.பி.டி.) பாரதி பற்றிய ஒரு தொடக்க நிலை நூலையும் கோபுலுவின் ஓவியங்களோடும் படங்களோடும் வெளியிட்டார்.
ரா.அ. பத்மநாபன் பாரதி நூற்றாண்டையொட்டித் தம்மிடமிருந்த பாரதி ஆவணங்களை (இந்தியா இதழ்கள் உள்பட) புதுச்சேரி அரசின் பாரதி அருங்காட்சியகத்திற்கு கொடுத்துவிட்டார். இதற்கு முன்பே இந்தியா இதழ்களின் மிகைப்படிகளை ஏ.கே. செட்டியார் மூலமாக மறைமலையடிகள் நூலகத்திற்கு பத்மநாபன் கொடுத்திருந்தார். ஒரு பழம்பொருள் ஆர்வலர் எந்த விலைக்கும் அவற்றை வாங்கத் தயாராக இருந்தபொழுதும் பத்மநாபன் அதற்குச் சம்மதிக்கவில்லை.
எழுத்து
1960-களில் ஏ.கே. செட்டியாரின் குமரி மலரில் ரா.அ. பத்மநாபனின் படைப்புகள் வெளிவந்தன. குமரிமலரில் ரா.அ.ப. எழுதிய இதழியல் வரலாறு பற்றிய கட்டுரைகள் 2003-ல் ஆ.இரா. வேங்கடாசலபதி மூலமாக நூல் வடிவம் பெற்று காலச்சுவடு வெளியீடாக வந்தது.
ரா.அ.ப. தமிழ்ப் பத்திரிகையுலகில் ஒரு செய்தியாளராக மட்டுமல்லாமல் அதன் வரலாற்றாளராகவும் செயல்பட்டிருக்கிறார். சுதேசமித்திரன், குமரி மலர், தினமணி, 'தி இந்தியன் ரெவ்யு' போன்ற இதழ்களில் அவர் எழுதிய கட்டுரைகள் முக்கிய வரலாற்றுப் பதிவுகளாகக் கொள்ளத்தக்கவை.
பாரதி தேடலினூடாக வ.உ.சி., வ.வே.சு. ஐயர், சுப்பிரமணிய சிவா, நீலகண்ட பிரம்மச்சாரி முதலான தேசிய இயக்க ஆளுமைகள் பற்றியும் ஆங்கிலத்திலும் தமிழிலுமாகப் பல நூல்களை ரா.அ.ப. எழுதினார். ஆஷ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற நீலகண்ட பிரம்மச்சாரி சுவாமி ஓங்கார் என்ற பெயரில் துறவுபூண்டு மைசூர் அருகே வாழ்ந்துவந்தபோது ரா.அ.ப. அவருடன் நெருங்கிப் பழகினார். வி.கே. நரசிம்மன் பெயரில் வெளியான 'இந்து' கஸ்தூரிரங்க ஐயங்காரின் வரலாற்றையும் இப்பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
மறைவு
ரா.அ. பத்மநாபன் ஜனவரி 27, 2014 அன்று அவரது 97-ம் வயதில் காலமானார்.
விருதுகள்
பாரதியார் விருது (2003)
மதிப்பீடு
ரா.அ.பத்மநாபன் தலைசிறந்த பாரதி ஆய்வாளர்களுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார். பாரதியின் சில படைப்புகளும் அவரைப் பற்றிய உறுதிப்படுத்தப்படாத செய்திகளும் நிறைந்திருந்த காலகட்டத்தில் ரா.அ. பத்மநாபனின் பேருழைப்பு பாரதியை அறிய உதவியது. காலத்தால் செய்த பணி என்ற நிலையிலும் ரா.அ.ப.வின் தேடல் முக்கியத்துவம் பெறுகிறது.
பாரதியின் கடிதங்கள் ஒரு மனிதனாக அவரை அறியவும், அக்காலச் சமூகச் சூழலையும், தன்னுடைய நூல்களைப் பதிப்பிக்கவும், இதழ்களை நடத்தவும் பொருளுதவி வேண்டிப் பலரை பாரதியார் அணுகியதையும் புலப்படுத்துகின்றன. கடிதங்களின் வரலாற்றுப் பின்னணியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அவருக்குப்பின் நிகழ்ந்த பாரதியியல் ஆராய்ச்சிகள் பெரிதும் அவருடைய உழைப்பை அடித்தளமாகக் கொண்டவை. அவரிடமிருந்த அரிய ஆவணங்களைப் பெரும்பொருள் தந்து பலர் வாங்கிக்கொள்ள முன்வந்தும், அவற்றை பொது அமைப்புக்குக் கொடுப்பதில் உறுதியாக இருந்தார்.
"'பாஞ்சாலி சபதம்', 'குயில்', 'கண்ணன் பாட்டு' ஆகியவற்றைப் பாரதியின் முப்பெரும் பாடல்கள் என்று சுட்டுவதுண்டு. பாரதியின் வாழ்நாளில் இவற்றுள் ஒன்று மட்டும்தான் முழுமையாக நூலாக்கம் பெற்றது என்ற செய்தி பாரதியின் அகால மரணத்தின்பொழுது பாரதி கருவூலம் எவ்வளவு அபூரணமாக இருந்தது என்பதற்குச் சான்றாகும். பாரதியின் வாழ்நாளில் அவனுடைய ஒரு புகைப்படமும் வெளிவந்ததில்லை. இன்று ஐந்து படங்கள் தமிழுலகில் உலவுகின்றன. பாரதி என்ற பேராளுமையின் சித்திரம் பெருமளவு பொலிந்துள்ளதென்றால் ரா.அ. பத்மநாபன் என்ற தனிமனிதரின் பேருழைப்பு அதன் அடித்தளத்தில் அமைந்துள்ளது" என்று ஆய்வாளர் ஆ.இரா. வேங்கடாசபதி தனது 'ஆஷ் அடிச்சுவட்டில் அறிஞர்கள்' நூலில் குறிப்பிடுகிறார்.
விவாதங்கள்
பாரதி ஆவணங்களை அழிவிலிருந்து காப்பதில் முனைந்திருந்ததால் முதல் தலைமுறை பாரதி ஆய்வாளரான பத்மநாபனுக்கு பாரதியின் படைப்புகளில் திருத்தமான பாடம், பாட வேறுபாடு, யாப்பமைதி முதலான கூறுகளில் கவனம் செலுத்த முடியவில்லை. 1980-ல் வானவில் பிரசுரமாக வெளிவந்த பாரதி கவிதைகள் பதிப்பு முதன்முறையாகப் பாடவேறுபாடுகளில் கவனம் செலுத்தியது . மூல ஆவணங்கள் சார்ந்த பாரதி ஆய்வின் அடுத்த தலைமுறையைச் சேர்ந்த சீனி. விஸ்வநாதனுக்கும் ரா.அ.ப -வுக்கும் சர்ச்சைகள் ஏற்பட்டன. இருவருக்கும் இடையில் இதுகுறித்த பலத்த விவாதம் 'தாய்' இதழில் நடந்தது.
நூல் பட்டியல்
- தமிழ் இதழ்கள்(1915-1966)
- சித்திர பாரதி
- பாரதியார்
- பாரதியின் கடிதங்கள்
- பாரதி புதையல்
- பாரதி புதையல் பெருந்திரட்டு
- பாரதி பற்றி நண்பர்கள்
- பாரதி கவிநயம்
- பாரதியைப் பற்றி நண்பர்கள்
- ஈழத்து இலக்கியமும் வரலாறும்
- ஆரண்ய காண்ட ஆய்வு
- நீலகண்ட பிரம்மச்சாரி
ஆங்கிலத்தில்
- V.O.Chidambaram Pillai - Biography in English 1977
- V.V.S.AIYAR - 1980
- SUBRAMANIA SIVAM -1984
- NEELA KANDA BRAHMACHARI -
- RUKMINI LAKSHMIPATHI(A BIOGRAPHY)
உசாத்துணை
- ஆஷ் அடிச்சுவட்டில்: அறிஞர்கள், ஆளுமைகள் - ஆ. இரா. வேங்கடாசலபதி (கிண்டில் பதிப்பு)
- Chitira Bharathi - a visual documentation on Subramania Bharathi, Madras Musings
- ரா.அ. பத்மநாபனின் பாரதி புத்தகங்கள், சிலிகான் ஷெல்ஃப்
- பாரதி கருவூலத்தின் அரிய வைரம், சேக்கிழான்
- மரணமில்லாத மனிதர் : பாரதியின் கடிதங்கள்-(தொகுப்பு: ரா.அ.பத்மநாபன்)-பாவண்ணன், திண்ணை, மே 2009
- ரா.அ. பத்மநாபன், பசுபதிவுகள்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 31-Jul-2024, 17:14:00 IST

