under review

மஞ்சேரி எஸ். ஈச்வரன்

From Tamil Wiki
எழுத்தாளர் மஞ்சேரி எஸ். ஈச்வரன்

மஞ்சேரி எஸ். ஈச்வரன் (மஞ்சேரி சுந்தர்ராமன் ஈச்வரன்:, மஞ்சேரி ஈஸ்வரன்) (பிரகதீச்வரன்) (ஜூன் 16, 1910 - டிசம்பர் 12, 1966) கவிஞர், எழுத்தாளர், இதழாளர். மொழிபெயர்ப்பாளர், இலக்கிய விமர்சகர், வரலாற்றாசிரியர், திரைப்படக் கதை-வசன ஆசிரியர். தமிழிலும், ஆங்கிலத்திலும், மலையாளத்திலும், சம்ஸ்கிருதத்திலும் எழுதினார். தேசியப் புத்தக அறக்கட்டளையின் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) செயலாளராகவும் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். ஆங்கிலத்தில் எழுதிய இந்தோ-ஆங்கில எழுத்தாள முன்னோடிகளுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

மஞ்சேரி சுந்தர்ராமன் ஈச்வரன் என்னும் மஞ்சேரி எஸ். ஈஸ்வரன், ஜூன் 16, 1910-ல், தஞ்சாவூரில் பிறந்தார். தந்தை சுந்தர்ராமன், தஞ்சாவூர் பெருவுடையார் ஆலய இறைவன் பிரகதீஸ்வரரின் நினைவாக மகனுக்கு பிரகதீச்வரன் என்ற பெயரைச் சூட்டினார். மஞ்சேரி எஸ். ஈஸ்வரன், தந்தையின் பணி நிமித்தம் கேரள மாநிலம் மஞ்சேரியில் வளர்ந்தார். அங்கு பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று வரலாற்றில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.

தனி வாழ்க்கை

மஞ்சேரி எஸ். ஈச்வரன், தேசியப் புத்தக அறக்கட்டளையின் (நேஷனல் புக் ட்ரஸ்ட்) செயலாளராகவும் முதன்மை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றினார். 1964-ல், தனது பணியிலிருந்து விலகினார்.

மனைவி அன்னபூர்ணா ஈச்வரனும் ஓர் எழுத்தாளர். ‘விஷ்ணு சர்மாவின் பஞ்ச தந்திரக் கதைகள்' உள்ளிட்ட பல நூல்களை எழுதினார். மகன் பிரகாஷ் ஈச்வரன் பொறியாளர். தனியார் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றின் இயக்குநர். மகள் ரமா, விலங்கியல் துறைப் பேராசிரியர்.

Manjeri Isvaran Book in English
Manjeri S. Eswaran Short Story Book

இலக்கிய வாழ்க்கை

தொடக்கம்

மஞ்சேரி எஸ். ஈச்வரன், பணி எதற்கும் செல்லாமல் சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். பல மொழிகள் அறிந்திருந்தாலும், அவருக்கு மிகவும் இயல்பாகக் கைவந்த மொழியாக ஆங்கிலம் இருந்ததால், அம்மொழியிலேயே எழுதினார். மஞ்சேரி எஸ். ஈச்வரனின் படைப்புகள் அக்காலத்தின் புகழ்பெற்ற இதழான 'திரிவேணி'யில் தொடர்ந்து வெளியாகின. கி. சந்திரசேகரன், நா. ரகுநாதய்யர், வே. ராகவன் போன்றோரின் நண்பராக இருந்தார். அவர்களது ஊக்கத்தால் தொடர்ந்து பல்வேறு இதழ்களில் எழுதினார். காசா சுப்பாராவின் நட்புக் கிடைத்தது. சுப்பாராவ் நடத்தி வந்த 'ஸ்வதந்த்ரா' இதழில் தொடர்ந்து எழுதினார்.

சிறுகதைகள்

மஞ்சேரி எஸ். ஈச்வரனுக்கு, தமிழ் நாவலாசிரியரும், ஆங்கிலத்தில் நாவல்களும் கதை, கட்டுரைகளும் எழுதி வந்த கா.சி. வேங்கடரமணியின் நட்பு கிடைத்தது. கவிதைகளையே அதிகம் எழுதி வந்த ஈச்வரனை, கா.சி. வேங்கடரமணி, சிறுகதைகள் எழுதத் தூண்டினார். ஈச்வரனின் முதல் சிறுகதை, ‘ட்ராம்வண்டிக்காரன்’, டிசம்பர் 15, 1933 தேதியிட்ட சுதந்திரச்சங்கு இதழில் வெளியானது. கா.சி. வேங்கடரமணி, மஞ்சேரி எஸ். ஈச்வரன் எழுதிய சிறுகதைகளை வே. ராகவனைக் கொண்டுத் தமிழில் மொழிபெயர்த்துத் தான் நடத்தி வந்த ‘பாரதமணி’ இதழில் வெளியிட்டார். அக்கதைகளைக் கண்டு வியந்த தி. ஜ. ரங்கநாதன், ஈச்வரனின் நண்பரானார். சக்தி இதழில் ஆசிரியர் குழுவில் பணியாற்றிவந்த ரங்கநாதன், ஈச்வரனைத் தொடர்ந்து எழுதத் தூண்டினார். ஈசவரன் ஆங்கிலத்தில் எழுதிய சிறுகதைகளை, தி.ஜ. ரங்கநாதன், தானே தமிழில் மொழிபெயர்த்து, சக்தி இதழில் வெளியிட்டார்.

மஞ்சேரி எஸ். ஈச்வரன், தனுசு, மித்ரா, அனாமி, மனஸ் போன்ற புனை பெயர்களில் எழுதினார். இசை விமர்சகராகவும் செயல்பட்டார். பல முன்னணி நாளிதழ்களில் இசை விமர்சனங்களை எழுதினார். ஈச்வரனின் சிறுகதைகள் அக்காலத்தில் கல்வி கற்ற சான்றோர்களாலும், சக எழுத்தாளர்களாலும் வரவேற்கப்பட்டன. ஈச்வரன், ஆங்கிலச் சிறுகதை ஆசிரியர்களோடு ஒப்பிடப்பட்டுப் பாராட்டப்பட்டார். ஈச்வரனின் கவிதை நூல்கள் கேரளக் கல்லூரிகள் சிலவற்றில் பாட நூலாக இடம் பெற்றன.

நூல்கள்

'Saffron and Gold and Other Poems' என்பது மஞ்சேரி ஈச்வரனின் முதல் கவிதைத் தொகுப்பு. தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளிவந்தன. ‘Naked Shingles’ என்பது ஈச்வரனுடைய முதல் சிறுகதைத் தொகுப்பு. தொடர்ந்து பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகள் ஆங்கிலத்தில் வெளியாகின. தமிழில் வெளியான ஈச்வரனின் முதல் சிறுகதைத் தொகுப்பு ‘கொலு’. 1944-ல் வெளிவந்த இதனை சக்தி காரியாலயம் வெளியிட்டது. தொடர்ந்து ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறுகதைகள், கவிதை, கட்டுரைகள், நாடகங்களை ஈச்வரன் எழுதினார். புதுமைப்பித்தன் மறைவையொட்டி ஈச்வரன் எழுதியிருந்த அஞ்சலிக் குறிப்பு, புதுமைப்பித்தனை மிகச் சரியாக மதிப்பீடாகக் கருதப்படுகிறது.

மஞ்சேரி எஸ். ஈச்வரன், சாதி அமைப்பையும், பிராமண விதவைகளின் அவலத்தையும், நிலப்பிரபுத்துவத்தையும் தனது படைப்புகளில் மிகக் கடுமையாக விமர்சித்து எழுதினார்.

மொழிபெயர்ப்பு

மஞ்சேரி எஸ். ஈச்வரன், வள்ளத்தோல், குமாரன் ஆசான் உள்ளிட்ட பலரது படைப்புகளை மலையாளத்திலிருந்து ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தார். மஞ்சேரி எஸ். ஈச்வரனின் சிறுகதைகள் உள்ளிட்ட பல படைப்புகள் டாக்டர் வே. ராகவன், தி.ஜ. ரங்கநாதன், நா. ரகுநாதய்யர் போன்றோரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.

இதழியல்

மஞ்சேரி எஸ். ஈச்வரன், காசா சுப்பாராவ் நடத்தி வந்த ‘ஸ்வதந்த்ரா’ இதழின் ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றினார். 'Short Story' என்ற ஆங்கில இதழின் பதிப்பாளராகவும் ஆசிரியராகவும் பணிபுரிந்தார். லா.ச. ராமாமிர்தத்தின் முதல் சிறுகதை, ஆங்கிலத்தில் அவ்விதழில் தான் முதன்முதலில் வெளியானது.

Jalaja Movie by Manjeri S. Eswaran

திரைத்துறை

மஞ்சேரி எச். ஈச்வரன் திரைப்படங்களிலும் பங்களித்தார். 1938-ல் வெளியான, நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்ட ‘ஜலஜா’ என்ற திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை டாக்டர் வி.ராகவன் மற்றும் ஜி.கே.சேஷகிரியுடன் இணைந்து எழுதினார். படத்தை ஜி.கே.சேஷகிரி மற்றும் ஆர்.ஆர்.கௌதம் இணைந்து இயக்கியிருந்தனர். ஈச்வரன், இப்படத்தின் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார். என்.சி. வசந்தகோகிலம் நடித்த ‘வேணுகானம்’ என்ற படத்திற்கு மஞ்சேரி எஸ். ஈச்வரன் வசனம் எழுதினார்.

ஈச்வரனின் மகத்தான படைப்பாக 'Immersion' என்ற நீள் சிறுகதை போற்றப்பட்டது. அது சிறந்த வரவேற்பைப் பெற்றதுடன், ஈச்வரனின் மறைவுக்குப் பின், 1979-ல், ‘நிமஜ்ஜனம்' (Nimajjanam) என்ற தலைப்பில் தெலுங்கில் திரைப்படமாக வெளிவந்து, ஜனாதிபதி பரிசைப் பெற்றது.

மறைவு

சிறுநீரகம் மற்றும் இதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மஞ்சேரி எஸ். ஈச்வரன், டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவர்களின் வேலை நிறுத்தம் நடந்துகொண்டிருந்தால், தகுந்த சிகிச்சை அவருக்குக் கிடைக்கவில்லை. நண்பரும், அப்போதைய குடியரசுத் தலைவருமான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் முயற்சித்தும் பலனளிக்கவில்லை. டிசம்பர் 12, 1966-ல், தனது 56-ம் வயதில், மஞ்சேரி எஸ். ஈச்வரன் காலமானார்.

மதிப்பீடு

ஈச்வரனின் படைப்புகள் இந்திய இலக்கிய மறுமலர்ச்சிக்கும் பிந்தைய காலனித்துவ சகாப்தத்திற்கும் இடையே ஒரு பாலமாகச் செயல்பட்டன. மஞ்சேரி எஸ். ஈச்வரனின் ஆங்கிலச் சிறுகதைகளும், கவிதைகளும், கட்டுரைகளும் அவற்றின் கவித்துவமான நடைக்காகவும், செறிவான உள்ளடக்கத்திற்காகவும், தேர்ந்த மொழிக்காகவும் பாராட்டப்பெற்றன. ஈச்வரன் ஆங்கிலத்தில் எழுதியிருந்தாலும், அவரது பெரும்பாலான கதைகள் தமிழ்நாட்டைக் களமாகக் கொண்டவை. அன்றைய உயர் தர, மத்திய வர்க்க மக்களின் மனோநிலையைப் பிரதிபலிப்பவை. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களின் வேதனையை, உணர்ச்சிகளை வெளிப்படுதுவதாகவும் பல படைப்புகளை எழுதினார். ஆங்கிலத்தில் எழுதிய இந்தோ-ஆங்கில எழுத்தாள முன்னோடிகளுள் ஒருவராக ஈச்வரன் மதிக்கப்பட்டார்.

“தமிழனின் உணர்ச்சிகளைப் பிரதிபலித்து கவிதா சக்தியுடன் தமிழ்நாட்டுக் காட்சிகளை வர்ணிக்கும் அற்புதமான பல சிறுகதைகளை ஆங்கிலத்தில் எழுதியவர்” என்று மஞ்சேரி எஸ். ஈச்வரனை, தி.ஜ. ரங்கநாதன் மதிப்பிடுகிறார்.

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • கொலு (மொழியாக்கம் தி.ஜ.ரங்கநாதன் )
  • சிங்காரி (மொழியாக்கம் தி.ஜ.ரங்கநாதன் )
  • ராஜகுமாரியின் தீபாவளி
ஆங்கில நூல்கள்
Poetry
  • Saffron and Gold and Other Poems
  • Altar of Flowers
  • Brief Orisons
  • The Fourth Avatar
  • Oblivion
  • Yama and Yami
  • The Neem is a Lady and Other Poems
  • Sinning Heaven and Other Poems
  • Song of the Gipsy maiden
  • A Stillness at Sunset
  • Catguts
  • Brief Orisons
  • Penumbra
Short Stories
  • Naked Shingles
  • Siva Ratri
  • Angry Dust
  • Rickshawallah
  • Fancy Tales
  • No Ankletbells for Her
  • Immersion
  • Painted Tigers
  • A Madras Admiral
Biogrpahy Sketches
  • S. Venkataramani; Writer and Thinker-An Appreciation

and More

உசாத்துணை


✅Finalised Page