under review

பரத வம்ச விளக்கம்

From Tamil Wiki

பரத வம்ச விளக்கம் (1887) சோ.சு. இராமநாதபிள்ளை எழுதிய நூல். பரதவர்களின் வரலாற்றை சான்றுகளுடன் கூறும் நூல்.

பரதவர்

கடலும் கடல் சார்ந்த பகுதியில் வாழும் நெய்தல் நில மக்கள் பரதவர் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் சில இடங்களில் பரவர் எனவும், பல இடங்களில் பரதவர் எனவும் குறிக்கப்படுகின்றனர். "தென்தமிழ் நாட்டின் கிழக்குக் கரையில் அமைந்த காவிரி நதிப்படுக்கைக்கும் தாமிரபரணி ஆற்றிற்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சமூகம் வாழ்ந்ததை அடையாளம் காண முடிகிறது. இவை தற்கால திருநெல்வேலி இராமநாதபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி எனக் கூறலாம். தொலமி (Ptolemy), சோழ நாட்டிற்கும், பாண்டி நாட்டிற்கும் இடைப்பட்ட கடல் சார்ந்த பகுதியில் வாழ்ந்த மக்களை பதை எனக் கூறுகிறார். இது பரதவரைக் குறிக்கலாம். பரதவரின் முக்கிய தொழிலாக சங்க இலக்கியத்தில் சங்கு, முத்துக்குளித்தல், மீன்பிடித்தல், வர்த்தகம் என்பனவும் குறிக்கப்படுகின்றன. பாண்டி நாட்டு செல்வமாக இருந்த முத்து பற்றி சங்க இலக்கியத்திலும், வடமொழி இலக்கியத்திலும் பல குறிப்புக்கள் உள்ளன." என பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார்.

நூல் பற்றி

“கால வேறுபாட்டால் மாறுபட்டுக் கிடக்கும் ஸ்ரீ பரதரது பூர்வேந்திர வரலாற்றை விளக்கமாக எழுதுங்கள். அது பலரது அறியாமையை போக்கும்” என்று தூத்துக்குடி சவேரியார் பள்ளித் தமிழ்ப் பண்டிதரான வடக்கன்குளம் டி. சவரிராயப் பிள்ளை கேட்டுக் கொண்டதற்காக வித்வான் சோ.சு. இராமநாதபிள்ளை 1887-ல் எழுதிய நூல் பரத வம்ச விளக்கம்.

இந்த நூலை, இலங்கைச் சுமங்கல சுவாமிகள், காசி செட்டித்துரை ஆகியவர்கள் எழுதிய பல நூல்கள், பழைய இலக்கியத்திலும் புராணங்களிலும் அமைந்த பல கருத்துக்கள், பரத மக்களிடையே வழங்கி வரும் பரம்பரை வழக்கங்கள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கினார். பாடல் வடிவிலும், அன்றைய தமிழ் உரைநடை வடிவிலும் எழுதப்பட்டது.

பரத குல வரலாறு

நூல் சான்றுகள்
  • வின்சலன்துரை அகராதியில் “பரதவர் நெய்த நில மக்களாகிய மீன்பிடி குலத்தவர், பரதன் என்ற அரசனால் இந்தப் பெயர் வழங்கலாயிற்று” என்று காணப்படுகிறது.
  • வீரமாமுனிவர் தொகுத்த சதுரகராதி “பரதவர் நெய்தல் நில மக்கள்” என்று கூறுகிறது. இலங்கை சுமங்கல சுவாமிகள் இயற்றிய 'ஹித்தியாச வருணநாவ' என்ற நூலில் பரதர் வம்சத்தினருக்குப் 'பரவர்' என்னும் மற்றொரு பெயர் உண்டு என்றும், புதன் மகன் புரூருவனால் 'பெளரவர்' என்றப் பெயர் பெற்று, வடமொழிச் சொல்லான 'பெளரவ' என்பதின் தமிழ் வடிவமே 'பரவர்' என்றும் கூறப்பட்டுள்ளது.
  • சந்திர வம்சத்தினரான பரதரும், மதுராபுரியை ஆண்டு வந்த பாண்டியரும் ஒரே வம்சத்தினர் என்று வில்லிபாரதம் கன்னபருவம் 17-ம் நாள் போர்புரிச் சுருக்கம் 106-ம் செய்யுளில் கூறப்பட்டுள்ளது.
  • பொ.யு. 1735-ம் ஆண்டு தரங்கம்பாடியில் அச்சிடப்பட்ட வேத அகராதியில், பூரு என்னும் அரசன் முதல் கூன் பாண்டியன் வரை மொத்தம் 364 பாண்டியர்கள் இருந்தார்கள் என்று கூறப்படுகிறது.
  • அருணாசலப் புராணம் வச்சிராங்கத பாண்டியன் சருக்கம் 411-ம் செய்யுளில் கூறப்பட்டது போல, பரத வம்சமும் பாண்டிய வம்சமும் ஒன்று என புலப்படும்.
  • காசி செட்டித்துரை எழுதிய கெஜற்றியர் என்ற ஆங்கில நூலிலும் இதுதான் கூறப்பட்டுள்ளது.
  • பரத குலத்தவர்க்கு உரிய கொடிகள் 211-ல் மீன் கொடியும் ஒன்று. பாண்டியனுக்கு உரிய கொடியும் மீன் கொடியாகையால், பரதவரே பாண்டியர் என்று அவர்களது துவஜம் (கொடி) சாட்சி பகருகின்றது.
  • நெய்தல் நிலத் தலைவனே கடற்சேர்ப்பன் என்றும், அவனே பாண்டியன் என்றும், அவனது குலத்தவரே பரதவர் என்றும் சூடாமணி நிகண்டு மக்கட் பெயர்த் தொகுதியிலும் , நாலடியார், பழமொழி முதலிய நூல்களிலும் கூறப்படுகின்றது.
  • வீரமாமுனிவர், வின்ஸ்லோ துரை இவர்களின் அகராதிகள், நெய்தல் நில மக்களைப் 'பரதர்' என்று குறிப்பிடுகின்றனர்.
மகாபாரதம்

அஸ்தினாபுரியை ஆண்ட சந்திரவம்ச அரசர்களில் புரூருவன் என்பவரை முதல் தலைமுறையாகக் கொண்டு இருபதாவது தலைமுறையில் தோன்றிய துஷ்யந்தனின் மகனாக பரதன் என்ற அரசன் தோன்றினான். பாகவத புராணம் முதற்பகுதி அத்தியாயம் 21-ம் செய்யுளில், பரதனுக்கு இணையாக இறந்தகாலம், எதிர்காலம், நிகழ்காலம் என்ற முக்காலத்திலும் மனுநூல் ஆட்சிசெய்த மன்னர் எவருமில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஆகவே பரதனின் ஆட்சி காலத்திலிருந்து சந்திர வம்சமானது 'பரதவம்சம்' என்றும், பரதனின் குலத்தவர் 'பரதவர்' என்றும் அழைக்கப்பட்டனர்.

முதலில் சந்திரன் என்பவன் புதனைப் பெற்றான். புதன் புரூருவனைப் பெற்றான். புரூருவன் ஊர்வசியுடன் கூடி ஆயு என்பவனைப் பெற்றான். ஆயுவுக்கு நகுடன் பிறந்தான். இந்த நகுடன் அரசாண்ட போது பெற்ற மூன்று ஆண் மக்களில் மூத்த புதல்வன் யயாதி ஆட்சி உரிமை பெற்றான். இந்த யயாதி முதல் துஷ்யந்தன் வரையுள்ள 11 தலைமுறை முறையே: யயாதி – புரூருவன் – ஜனனேஜயன் – பிரசாவன் – சாயதி – சார்வபெளமன் – அரிசிகன் – மதிவான் – திடன் – நீலன் – துஷ்யந்தன். துஷ்யந்தன் மகாராஜனுக்குச் சகுந்தலையிடம் பரதன் பிறந்தான். பரதனின் மகன் பெளமன், இவன் மகன் சுகோத்திரன், இவன் மகன் அஸ்தன். இந்த அரசனால் ஏற்பட்ட நகரத்துக்கு அஸ்தினாபுரம் என்று பெயர்.

பரதரின் தலைநகரான அஸ்தினாபுரியிலிருந்து பாண்டுவின் புதல்வர்களில் அர்ச்சுனன் தீர்த்தயாத்திரை செய்தபோது, மதுக்கரை (மதுரை)க்கு அடுத்த பூழி என்ற மணலிபுரத்தை அடைந்து, அங்கு ஆட்சி செய்த சித்திரவாகு பாண்டியனின் ஏக புதல்வியை கண்டு அவளை மணங்கொள்ள விரும்பினான். மன்னன் பாண்டியன் தன் மகள் வயிற்றில் பிறக்கும் குழந்தையை மதுரை அரசாட்சிக்கு உரியதாக்கும் பட்சத்தில் அர்ச்சுனன் விருப்பத்திற்கு உடன்பாடு தெரிவித்தான். அருச்சுனன் சித்திரவாகு பாண்டியன் மகள் சித்திராங்கதையை மணந்து பப்புருவாகனன் என்ற மகனை பெற்றுப் பாண்டியனிடம் ஒப்படைத்து மனைவி சித்திராங்கதையுடன் சென்றான்.

பிரம்மபுராணம்

பரத வம்சத்தைப் பற்றிய மற்றொரு வரலாறு, பதினெட்டுப் புராணங்களில் ஒன்றான பிரம்மபுராணத்தின் மூன்றாவது காண்டத்தில் கூறப்பட்டுள்ளது. சக்கரபுரிப் பட்டணத்தில் அரசாண்டு வந்த சுரா பாண்டியனின் புதல்வன் அமிர்தபாண்டியன். இவனுக்குப் பிறந்த ஏழு பிள்ளைகளில் மூத்தவன் காந்தவீரிய பாண்டியன். இந்த அரசன் தனது சகோதரர்களுடன் வேட்டையாட காட்டிற்குச் சென்றபோது களைப்புற்றதால் தனது தம்பியான குலசேகர பாண்டியனை தாகத்திற்கு தண்ணீர் கொண்டுவரப் பணித்தான். தண்ணீர் கொணர்வதில் கால தாமதம் செய்த தம்பிமீது சினங்கொண்டு, அவனை தங்களை விட்டு நீங்குமாறு கட்டளையிட்டான். அக்கட்டளையின்படி, குலசேகர பாண்டியன் தென் பகுதியில் மணவூர் என்னும் இடத்தில் உள்ள சமணராஜன் நகரில் மீன் பிடித்து விற்று ஜீவனம் செய்து வந்தான். இதையறிந்த சமணராஜன் தனது புதல்வி சுலோதையம்மாளை குலசேகர பாண்டியனுக்கு மணமுடித்து, ஆண் சந்ததியில்லாத தனது ராச்சியத்தையும் அவனுக்கே அளித்து ராஜபட்டம் சூட்டுவித்தான். குலசேகர பாண்டியன் மீன்பிடி தொழில் புரிந்தமையால் மீன்கொடி கட்டிச் சந்திர குலத்திற்கு அரசனாய் இருந்து தனது வம்சத்திற்குரிய பாண்டியன் என்ற பெயர் பெற்றான்.

உசாத்துணை


✅Finalised Page