தி. பரமேசுவரி
தி. பரமேசுவரி (பிறப்பு: செப்டம்பர் 11, 1970) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர், தமிழ் ஆசிரியர்.
வாழ்க்கைக் குறிப்பு
தி.பரமேசுவரி சென்னையில் ஜெகதீசுவரி, திருநாவுக்கரசு இணையருக்கு செப்டம்பர் 11, 1970-ல் பிறந்தார். ம.பொ. சிவஞானம் அவர்களின் மகன் வயிற்றுப் பேத்தி. பதினைந்து வயதில் தந்தை இறந்து விட தன் தாத்தா ம.பொ.சிவஞானத்திடம் வளர்ந்தார். தமிழ் இலக்கியத்தில் ”ம.பொ.சி பார்வையில் பாரதி” எனும் தலைப்பில் முனைவர் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
திருவண்ணாமலை தானிப்பாடியில் முதுகலைத் தமிழாசிரியராக 2002-ல் பணியில் சேர்ந்தார். காஞ்சிபுரம் மானாம்பதியிலும் பண்ருட்டியிலும் பணியாற்றினார். 2018 முதல் இராணிப்பேட்டையில் மேலபுலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். மகள் கிருத்திகா.
இலக்கிய வாழ்க்கை
தி. பரமேசுவரி பள்ளி காலத்திலிருந்து கட்டுரைகள், கவிதைகள் எழுதினார். பூங்குழலி, திலீபா எனும் புனைப் பெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார். இவரின் ஆய்வேடு 'ம.பொ.சி பார்வையில் பாரதி' என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. இவரது கவிதைகள் உயிர்மை, அவள் விகடன், ஆனந்த விகடன், பூங்குயில், புதிய பார்வை, யாதும் ஊரே, இளந்தமிழன், அணி, நொச்சி போன்ற இதழ்களில் வெளிவந்தன. கட்டுரைகள், நூல் மதிப்புரைகள் எழுதி வருகிறார்.
இளந்தமிழன் என்ற பத்திரிகையில் தி. பரமேசுவயின் முதல் கவிதை வந்தது. முதல் தொகுப்பு ‘எனக்கான வெளிச்சம்’ வம்சி பதிப்பக வெளியீடாக வந்தது. பதிப்பாசிரியராக இருந்து ‘ம.பொ.சி.யின் சிலப்பதிகார ஆய்வுரை, ஆன்மீகமும் அரசியலும், ம.பொ.சி. சிறுகதைகள் ஆகியவற்றை பதிப்பித்தார். ம.பொ.சி.யின் கடிதங்கள், ஏடுகள், புத்தகங்கள் ஆகியவற்றை மறுபதிப்பு செய்தார். புதுமைப்பித்தன், அசோகமித்திரன், தி.ஜானகிராமன், இராசேந்திர சோழன், பஷீர், தாஸ்தாவெஸ்கி, தல்ஸ்தோய், பாரதி, கலாப்ரியா, இளங்கோ கிருஷ்ணன், யூமா வாசுகி, பிரான்சிஸ் கிருபா, பெருந்தேவி ஆகியோரை ஆதர்ச எழுத்தாளர்களாகக் குறிப்பிடுகிறார்.
இலக்கிய இடம்
"தி. பரமேசுவரியின் கட்டுரைகளை அரசியல், சங்க இலக்கியம், பெண்ணியம், நூல் மதிப்பீடுகள் என்ற வகைமைகளில் பிரிக்கலாம். அவற்றுள் அரசியல் கட்டுரைகளில் அவர் அளிக்கும் தரவுகள், வரலாறு, வாதங்கள் கூர்மையானவை. தமிழகம் அனைவருக்குமான சத்திரமா? அல்லது தமிழருக்கான வாழ்விடமா? என்று ஒரு கட்டுரையில் பரமேசுவரி கேட்பது ம.பொ.சியின் குரலின் நீட்சி என்றே கருதுகிறேன்” என நாஞ்சில் நாடன் மதிப்பிடுகிறார்
விருது
- 'எனக்கான வெளிச்சம்' கவிதைத் தொகுப்பிற்காக திருப்பூர் கலை இலக்கியப் பேரவை பரிசு” பெற்றார்.
நூல்கள் பட்டியல்
கவிதைத் தொகுப்பு
- எனக்கான வெளிச்சம் (2005)
- ஓசை புதையும் வெளி (2010)
- தனியள் (2018)
கட்டுரை
- கலிகெழு கொற்கை
- சமூகம் வலைத்தளம் பெண்
ஆய்வு நூல்
- ம.பொ.சி. பார்வையில் பாரதி (2003)
பதிப்பித்த நூல்கள்
- ம.பொ.சி.யின் சிறுகதைகள் (2006)
- ம.பொ.சி.யின் சிலப்பதிகார விளக்கத் தெளிவுரை (2008)
- ம.பொ.சி.யின் தமிழன் குரல் இதழ் தொகுப்பு (2010)
உசாத்துணை
- தி. பரமேசுவரி: eluthu
- வாழ்வென்பது பெருங்கனவு: குங்குமம்: தி. பரமேசுவரி நேர்காணல்
- மௌனன் யாத்ரிகா – கேள்விகள்… தி.பரமேசுவரி- பதில்கள்: உயிர்ப்பு
- தி. பரமேசுவரி நேர்காணல்: பா. சரவணன்
இணைப்புகள்
✅Finalised Page