under review

டி.என். சுகி சுப்பிரமணியன்

From Tamil Wiki
சுப்பிரமணியம் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: சுப்பிரமணியம் (பெயர் பட்டியல்)
சுகி சுப்பிரமணியம் : இள வயதுப் படம்
சுகி சுப்பிரமணியம் (நடுத்தர வயதில்)
எழுத்தாளர் சுகி சுப்பிரமணியன்
காதல் இதழில் ’சுகி’யின் நாவல். (படம் நன்றி: வள்ளியப்பன் ராமநாதன்)
சுதேசமித்திரனில் சுகி சுப்பிரமணியனின் படைப்பு
ஆயிரத்தில் ஒருவன் - சுகியின் சிறுகதை
ஸ்ரீ ராமானுஜர் - சுகி சுப்பிரமணியன்
சிறார் கதைத் தொகுப்பு - சுகி சுப்பிரமணியன்
சிந்தனையாளர் மாண்டெயின் - சுகி சுப்பிரமணியன்

சிறுகதை, நாவல், நாடகம், சிறார் எழுத்து, விமர்சனம், தொகுப்பு, மொழிபெயர்ப்பு என்று இலக்கிய உலகின் பல களங்களில் செயல்பட்டவர் டி.என். சுகி சுப்பிரமணியன். (சுகி, சுகி சுப்பிரமணியம்: மார்ச் 22,1917-பிப்ரவரி 18,1986) பொது வாசிப்புக்குரிய படைப்புகளையும், நகைச்சுவை அம்சமுள்ள கதை, கட்டுரைகளையும் தந்தவர். திருச்சி மற்றும் சென்னை வானொலி நிலையங்களில் நாடக அமைப்பாளராகப் பணியாற்றியவர். தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.

பிறப்பு, கல்வி

சுகி சுப்பிரமணியன். மார்ச் 22, 1917 அன்று, திருநெல்வேலி மானூர் அருகே உள்ள மதவக்குறிச்சி என்ற கிராமத்தில், நல்லபெருமாள் - முத்தம்மாள் இணையருக்கு பிறந்தார். திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளியில் இவருடன் பயின்றவர் மீ.ப. சோமு.

தனி வாழ்க்கை

1941-ல், கோமதியுடன் திருமணம் நிகழ்ந்தது. பெருமாள், நம்பிராஜன், சிவம் ஆகியோர் இவரது மகன்கள். ராஜலட்சுமி, சிவகாமி, காந்திமதி ஆகியோர் மகள்கள். இவர் மகன் புகழ்பெற்ற பேச்சாளரான சுகி சிவம். இவர் மகன் எழுத்தாளர் எம்.எஸ்.பெருமாள்.

இலக்கிய வாழ்க்கை

இலக்கியப்பின்னணி

சுகி. சுப்ரமணியம் டி.கே.சி.யின் ‘வட்டத்தொட்டி’யில் பங்கு கொண்டார். டி.கே.சி.யின் மகன் திலீபன் இவரது நெருங்கிய நண்பரானார். பெரும்பாலான நேரங்களை வட்டத்தொட்டியிலேயே கழித்தார். இலக்கிய ஆர்வம் மேலும் அதிகரித்தது. புகழ்பெற்ற எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளின் அறிமுகமும் கிடைத்தது. ‘கல்கி’ இவரது மனம் கவர்ந்த எழுத்தாளராக இருந்தார்.

தொடக்கம்

கல்கி மீது கொண்ட ஈர்ப்பால், கிருஷ்ணமூர்த்தியின் முதல் எழுத்தான ‘கி’ என்பதைத் தன் பெயரின் முதல் எழுத்துடன் இணைத்துக் கொண்டு ‘சுகி சுப்பிரமணியன்’ என்ற பெயரில் எழுதத் தொடங்கினார். 1936-ல், உண்மை நிகழ்வு ஒன்றை மையமாக வைத்து, ‘ஏழைகளின் தோணி' என்ற சிறுகதையை ஆனந்த விகடனுக்கு எழுதி அனுப்பினார். அது பிரசுரமானது. திருநெல்வேலியில் உள்ள சுலோசன முதலியார் பாலத்தின் அருகே இருக்கும் தைப்பூச மண்டபத்தில் தினந்தோறும் படுத்துறங்கும் ஏழை எளிய மக்கள், திடீரெனப் பெருகி வரும் தாமிரபரணியின் வெள்ளத்தால் ஏற்படும் அவலத்தை மையமாக வைத்து அந்தக் கதையை எழுதியிருந்தார். அதுதான் சுகி சுப்பிரமணியனின் முதல் எழுத்து முயற்சி. டி.கே.சிதம்பரநாத முதலியாரும், கல்கியும் அவரது இந்த முதல் கதையை வெகுவாகப் பாராட்டி ஊக்குவித்தனர்.

புதுமைப்பித்தனும் சுகியின் உளம்கவர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவர். டி.கே.சி.யை தனது ஆசானாகவும், கல்கியை தனது ஆதர்ச எழுத்தாளராகவும் வரித்துக் கொண்ட சுகி சுப்பிரமணியம், தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, நாடகங்கள் என்று எழுதத் தொடங்கினார்.சுதேசமித்திரன். காதல், சிவாஜி, தினமணி கதிர், தினமணி சுடர், தமிழரசு, கல்கி, விகடன், பாரிஜாதம், உமா, சக்தி, தமிழ்நாடு, தேனீ, வெள்ளிமணி போன்ற பல இதழ்களில் இவரது படைப்புகள் வெளியாகின.

நாவல்கள், கதைகள்

டி.என்.சுகி சுப்ரமணியம் துப்பறியும் நாவல்களும் சிறுகதைகளும் குழந்தைகளுக்கான கதைகளும் எழுதியுள்ளார். .

கட்டுரைகள்

'பூப்பொருத்தம்' என்பது டி.என்.சுகி சுப்ரமணியன் எழுதிய முதல் கட்டுரைத் தொகுப்பாகும். சுகி சுப்பிரமணியனின், “கற்பகக் கனிகள்” கட்டுரைத் தொகுப்பை, ஆங்கிலக் கட்டுரையாளர் லிண்டின் (Lynd) எழுத்தைப் போலவே நகைச்சுவையும், கருத்தும், சிறப்பும் செறிந்திருருப்பதாக வி.ஆர்.எம். செட்டியார் பாராட்டினார்.தேங்காய் மாங்காய் பட்டாணி சுண்டல்' என்னும் இவருடைய கட்டுரைத் தொடர் அரு. ராமநாதன் நடத்திய "காதல்' இதழில் தொடர்ந்து வெளிவந்து வாசக வரவேற்பைப் பெற்றது. வாழ்க்கை வரலாறுகளும் பல எழுதியுள்ளார். தொடர்ந்து நகைச்சுவையை மையப்படுத்தி பல கட்டுரைகளை எழுதினார் சுகி. இவர் எழுதிய “டாக்டர் மியாவ் மியாவ்”, “சுண்டெலி” போன்ற கட்டுரைகள் பலராலும் ரசிக்கப்பட்டன.

நாடகங்கள்

சுகி நேஷனல் புக் ட்ரஸ்ட்டிற்காக “ஓரங்க நாடகங்கள்” என்னும் நூலை எழுதினார். ஏராளமான வானொலி நாடகங்களை எழுதியிருக்கிறார்

ஏற்புகள்

இந்தி, மராத்தி, கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் இவரது சிறுகதைகள் சில மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டுப் பாடல் நூல் நிறுவனம் இவரது சிறுகதை ஒன்றை உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான துணைப்பாட நூலில் சேர்த்திருந்தது. சென்னைப் பல்கலையின் பாடத்திட்டத்திலும் இவரது சிறுகதை ஒன்று பாடமாக இடம் பெற்றிருந்தது. சாகித்ய அகாதெமி தொகுப்பில் இவரது சிறுகதை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது.

நடை

சுகி அக்காலத்தின் நகைச்சுவை எழுத்தாளராக அறியப்பட்டார். அவரது எழுத்தின் சான்றாகக் கீழ்காணும் கவிதைகளைக் கூறலாம்.

ஆரஞ்சைக் கண்டாலும் இனிதே பேரஞ்செய்து

ஆறஞ்சை வாங்குதலும் இனிதே - அதனிலும்

உரையை உரித்து சுளைகாண்டல் இனிதே

விரையைத் தெரித்து விழுங்கலும் இனிதே

*

பார்த்தாலும் நினைத்தாலும் பசிதீரக் குடிப்போர்

பக்கநின்று நோற்றாலும் பாழ்வயிற்றுள் பட்டாலும்

வேர்த்தாலும் குளிர்ந்தாலும் வேறொருவர் தந்தாலும்

இத்தனைக்கும் தித்திக்கும் இனித்த சுவைக் காப்பியே

அமைப்புப் பணிகள்

திருச்சியில் எழுத்தாளர் சங்கம் உருவாக உழைத்த குழுவினரில் சுகியும் ஒருவர். திருச்சி எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றினார். தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கத்தின் இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார். தனது மனைவி கோமதி சுப்ரமணியத்தை எழுத ஊக்கப்படுத்தி அவரையும் எழுத்தாளராக்கினார். மகன்கள் எம்.எஸ். பெருமாள், சுகி சிவம், நம்பிராஜன் மற்றும் மகள்களையும் எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக, இலக்கியவாதிகளாகச் செயல்படத் தூண்டினார்.

வானொலி வாழ்க்கை

சுகி சுப்பிரமணியனுக்கு, திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடக எழுத்தாளர் (script writer) வேலை கிடைத்தது. நிகழ்ச்சித் தயாரிப்பாளராக உயர்ந்தார். வானொலிக்காக பல நாடகங்களை எழுதி, இயக்கி அரங்கேற்றினார். திருச்சியிலிருந்து, சென்னை வானொலிக்கு இவருக்குப் பணிமாற்றம் நிகழ்ந்தது. சென்னை வானொலியில் பணியாற்றும் காலத்தில் புகழ்மிக்க பல நாடகாசிரியர்களை இவர் உருவாக்கினார்.

கவிஞர் ஏர்வாடி ராதாகிருஷ்ணன் உள்ளிட்டவர்களை நாடகங்கள் எழுதும்படி ஊக்குவித்தார். பதினைந்து நிமிடக் குறு நாடகங்கள், அரைமணி நேரச் சிறு நாடகங்கள், ஒரு மணி நேர முழு நீள நாடகங்கள் என வானொலியில் விதம் விதமான பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு வெற்றி பெற்றார். “புதிய படிக்கற்கள்”, “காப்புக் கட்டிச் சத்திரம்”, “துபாஷ் வீடு”,”ஸதி-பதி” போன்ற வானொலி நாடகங்கள் இவருக்கு மிகவும் புகழைச் சேர்த்தன.

1940 முதல் 1977 வரை முப்பத்தியேழு ஆண்டுகள் திருச்சி, சென்னை வானொலி நிலையங்களில் நாடகத் தயாரிப்பாளராகப் பணியாற்றி ஆயிரக்கணக்கான நாடகங்களை அரங்கேற்றினார் சுகி சுப்பிரமணியன். நாடக நடிகர்கள் பலரை உருவாக்கினார். “எனக்கு நாடக நுணுக்கங்களை, குரல் எப்படி ஒலிக்க வேண்டும் என்பதையெல்லாம் சொல்லிக் கொடுத்தவர். எனது குரு. எனக்கு துரோணாச்சாரியாராக இருந்தவர் சுகி சுப்பிரமணியம்” என்கிறார், நாடக, திரைப்பட நடிகரும், உதவி இயக்குநருமான நாயர் ராமன். நாகேஷ், மனோரமா போன்றவர்களுக்கும் இந்த நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்து ஊக்குவித்தவர் சுகி சுப்பிரமணியன்தான். ‘காப்புக்கட்டிச் சத்திரம்’ என்ற நாடகத்தில் தான், முதல் முறையாக ‘ஆச்சி’ என்ற பாத்திரமேற்று நடித்தார் மனோரமா.

சுகியின் நாடகங்கள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன. 1977-ல், வானொலியிலிருந்து பணி ஓய்வு பெற்றார் சுகி சுப்பிரமணியன்.

இதழியல் வாழ்க்கை

ஆரம்ப காலக்கட்டத்தில் சென்னையில் ‘ஹநுமான்’ இதழில் சிலகாலம் பணியாற்றினார் சுகி சுப்பிரமணியம். காலச்சக்கரம் என்ற இதழின் கௌரவ ஆசிரியராக ஆறு ஆண்டுகள் பணிபுரிந்தார். ‘அமுதம்’ என்ற இதழின் ஆசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார். பல சிறுகதை, நாவல் போட்டிகளுக்கு இவர் நடுவராக, தேர்ந்தெடுக்கும் குழுவில் ஒருவராகவும் செயல்பட்டிருக்கிறார்.

திரைப்படப் பங்களிப்பு

‘மேயர் மீனாட்சி’ என்ற திரைப்படத்தின் மூலக்கதை சுகி சுப்பிரமணியன் எழுதியது.

கலைமாமணி விருது

விருதுகள்

  • திருச்சி வானொலி நாடகப் போட்டியில் முதல் பரிசு
  • தமிழக அரசின் ஐந்தாண்டுத் திட்ட நாடகப் போட்டியில் முதல் பரிசு
  • கல்கி நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு
  • 'விதி வழியே’ நாவலுக்குத் தமிழ் வளர்ச்சித் துறை வழங்கிய சிறந்த நாவல் பரிசு
  • ’நெஞ்சே நீ எனை நினை’ என்ற படைப்புக்கு தமிழ் வளர்ச்சிக் கழக, ஆராய்ச்சிக் கழகப் பரிசு.
  • குன்றக்குடி மடாலயம் வழங்கிய எழுத்து வேந்தர் பட்டம்
  • தமிழக அரசின் கலைமாமணி விருது

மறைவு

பிப்ரவரி 18, 1986-ல், சுகி.சுப்பிரமணியம் காலமானார்.

நினைவேந்தல்

  • 2017-ல், சுகி சுப்பிரமணியனின் நூற்றாண்டை நினைவு கூரும் வகையில், இலக்கிய வீதி அமைப்பு “மறுவாசிப்பில் சுகி சுப்பிரமணியன்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை நிகழ்த்தியது.
  • சென்னை வானொலி நிலையமும் சுகி சுப்பிரமணியனின் நூற்றாண்டு நினைவை ஒட்டி அவரது நாடகங்களை ஒலிபரப்பி கௌரவம் செய்தது.

இலக்கிய இடம்

தமிழில் பொதுவாசகர்களின் இலக்கிய ரசனைக்குரிய ஊடகமாக வானொலி உருவாகி வந்த காலகட்டத்தில் இலக்கியத்தை அதில் நிகழ்த்திய முன்னோடிகளில் ஒருவர் டி.என். சுகி சுப்ரமணியன். மரபிலக்கிய ரசனையையும் வானொலி வழியாக உருவாக்கியவர். எளிய இதழியல் கட்டுரைகள் வழியாக இலக்கியம் சிந்தனைகள் ஆகியவற்றை அறிமுகம் செய்தவர். பொதுவாசிப்புக்குரிய நாவல்களையும் எழுதியுள்ளார்.

நூல்கள்

நாவல்கள்
  • பழகத் தெரிந்த உயிரே
  • சிப்பாய் ஹிருதயம்
  • ஆசை வலை
  • துணைப்பறவை
  • காதல் கண்கள்
  • வாழ்வின் விளிம்பு
  • கடற்கன்னி
  • விதி வழியே
  • நெஞ்சே நீ எனை நினை
  • இரு கண்கள்
  • சர்வர் அய்யாத்துரை
  • லட்சியம் வென்றது
  • புது நிழல்
  • தர்மத்தின் குரல்
  • சிதையாத சித்தங்கள்
  • கடல் மணக்கும் பூக்கள்
  • உழைக்கும் கரங்கள்
  • குடும்பக் கோயில்
  • ஆசை வெள்ளம்
  • இன்பவேலி
  • கனவுப்பெண்
  • வாழ்க்கைப் புயல்
  • மனக்கொழுந்துகள்
  • ஜன்னலே சாட்சி
  • பிள்ளைக்கனியமுது
  • கிரகப்பிரவேசம்
  • திலகா
  • ஒரே குடும்பம் (கோமதி சுப்பிரமணியத்துடன் இணைந்து எழுதியது)
சிறுகதைத் தொகுப்புகள்
  • இலக்கியத் தம்பதிகள் எழுதிய இனிக்கும் சிறுகதைகள் (மனைவி கோமதி சுப்பிரமணியத்துடன் இணைந்து எழுதியது)
  • பழிக்குப் பழி முதலிய கதைகள்
  • சுகி சுப்பிரமணியன் சிறுகதைகள்
கட்டுரை நூல்கள்
  • பூப்பொருத்தம்
  • நமஸ்காரம்
  • கற்பகக் கனிகள்
  • சாம்பார் சாதம்
  • யுத்தகால இலக்கியம்
  • ஸ்ரீ ராமானுஜர்
  • சிந்தனையாளர் மாண்டெயின்
  • உலகில் இரண்டு கிளிகள்
  • பெரிய மனிதர் பெரியார்
  • கங்கை கொண்ட சோழன்
  • கட்டபொம்மு
  • பன்னீர்ச் செம்பு (திருமணப் பரிசு நூல்)
  • மயூரன்
  • நமது நகரம்
  • பல்லவ மகேந்திரவர்மன்
  • பேச்சின் பெருமை
  • பண்டைத் தமிழ் எழுத்துக்கள்
  • ஓரங்க நாடகங்கள்
  • எழுத்து வேந்தர் சுகி சுப்பிரமணியன் கட்டுரைகள்
இலக்கிய விமர்சன நூல்கள்
  • புதுமைப் புலவன் பாரதி
  • பாரதியும் பாவேந்தரும்
  • ஆயிரம் கால் மண்டபம்
சிறார் நூல்கள்
  • சிந்தைக்கு விருந்தாகும் குட்டிக்கதைகள்
  • நெஞ்சம் கவர் நேருஜி
  • காக்கைக் குருவி எங்கள் ஜாதி
வானொலி நாடகங்கள்
  • துபாஷ் வீடு
  • காப்புக்கட்டிச் சத்திரம்
  • ஜனதா நகர்
  • விஐபி கோவில் தெரு
  • குயில் தோப்பு
  • வசந்தமே வா
  • செல்வமே வருக
  • குமுதா
  • மணமகள்
  • கல்கத்தாவிலிருந்து ஒரு கடிதம்
  • சத்தியக்கரங்கள்
  • மதுரை மீனாட்சி
  • காட்சி கண்காட்சியே
மொழிபெயர்ப்புகள்
  • நியூயார்க்கில் திருமணம் (ஆங்கில மூலம்: Thornton Niven Wilder எழுதிய ”The Happy Journey to Trenton and Camden”)
  • நமது நகரம் (ஆங்கில மூலம்: Thornton Niven Wilder எழுதிய ”Our Town”)
  • கண்ணாடிச் சிற்பங்கள் (ஆங்கில மூலம்: Tennessee Williams எழுதிய “The glass menagerie”)
  • சீரஞ்சீவி மனிதன் (Selected Short Stories Of Nathaniel Hawthorne by Nathaniel Hawthorne)
தொகுப்பு நூல்கள்
  • இரு துருவங்கள் (டி. என். சுகி சுப்பிரமணியனின் வானொலி நாடகத் தொகுப்பு)
  • புதிய ஒளி (டி. என். சுகி சுப்பிரமணியனின் வானொலி நாடகத் தொகுப்பு)
  • பாரதீயம் (தொகுப்பு நூல்)

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 22-Apr-2023, 07:58:54 IST