under review

சோ.ந. கந்தசாமி

From Tamil Wiki
நன்றி:தமிழ்ஹிந்து

சோ. ந. கந்தசாமி (SNK; பிறப்பு: டிசம்பர் 15, 1936) தமிழறிஞர், மொழியியல், தத்துவ அறிஞர், இலக்கிய விமரிசகர். மொழியியல், தத்துவம், இலக்கணம், இலக்கியம் ஆகிய துறைகளில் ஆய்வு செய்து நூல்கள் எழுதினார். தமிழ் ஆய்வில் பங்களிப்புக்காக செம்மொழித் தமிழாய்வு மையம் வழங்கும் தொல்காப்பியர் விருதைப் பெற்றவர்.

பிறப்பு, கல்வி

சோ.ந. கந்தசாமி டிசம்பர் 15, 1936 அன்று அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் வட்டம் ஜெயங்கொண்டசோழபுரம் அருகில் உள்ள இலையூரில் வை.சோ.நடராச முதலியார், மீனாம்பாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். தொடக்கக் கல்வியை இலையூரிலும், உயர்நிலைக் கல்வியை உடையார்பாளையம் பள்ளியிலும் பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டமும், தமிழ் இலக்கியத்தில் முதுகலைப் பட்டமும் (1958), எம்.லிட்(1963) பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். எம். லிட். ஆய்வை Paripadal Lingiustic Study என்ற தலைப்பிலும் பிஎச்.டி. ஆய்வை Buddism as expounded in Manimehalai எனும் தலைப்பிலும் செய்தார். அ. சிதம்பரநாதன் செட்டியார், தெ.பொ. மீனாட்சிசுந்தரம் இருவரிடமும் தமிழ் பயின்றார அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மொழியியலிலும் வடமொழியியலிலும் பட்டயம் பெற்றார். பாலிமொழியும் கற்றார். அம்மொழியில் பல பாடல்களை மனப்பாடமாகப் பாடும் ஆற்றல் பெற்றிருந்தார்.

தனி வாழ்க்கை

சோ.ந. கந்தசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். நாற்பதாண்டுகள் கல்விப்பணியாற்றினார். மலேசியாப் பல்கலைக்கழகத்திலும்(1979-85) தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும்1985-1997), சில காலம் சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றினார். மைசூரில் உள்ள செம்மொழித் தமிழ் உயராய்வு நிறுவனத்தின் முதுநிலை ஆய்வறிஞராகப் பணியாற்றுகிறார்.

மருதூரைச் சேர்ந்த விடுதலைப் போராட்டவீரர் முத்துக்குமாரசாமியின் மகள் ஜமுனாதேவியை மணந்தார். ஒரு ஆண், நான்கு பெண் குழந்தைகள்.

இலக்கிய வாழ்க்கை

சோ.ந. கந்தசாமி பழந்தமிழ் இலக்கியங்களை மொழியியல், சமூகவியல் சார்ந்து ஆய்வுகள் செய்து நூல்கள் எழுதினார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்காக உலகத் தமிழ் இலக்கியம் வரிசையில் பொ.யு. ஆறாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையான உலகத் தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதினார்.

இந்தியாவின் பலபகுதிகளில் பயின்று வந்த ஆத்திக, நாத்திகத் தத்துவங்கள் பண்டைய தமிழ்க் கல்விச் சாலைகளில் விவாதப்பொருளாக இருந்ததைச் சுட்டி மணிமேகலை, நீலகேசி, சிவஞான சித்தியார், தத்துவப்பிரகாசம் ஆகியவற்றிலிருந்து சான்றுகள் காட்டி சாங்கியம், யோகம் போன்ற வைதீக தத்துவங்களிலும், ஆசிவகம், சமணம் போன்ற அவைதீக தத்துவங்களிலும் தமிழ்க்கூறுகளை ஆய்வு செய்து எழுதிய நூல் 'தமிழும் தத்துவமும்'.

முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஹிந்து பத்திரிகையில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதி வருகிறார். தொல்காப்பியத் தெளிவு, தமிழிலக்கணச் செல்வம், தெய்வச்சிலையார் உரைத்திறம், செவ்வியல் இலக்கிய ஆய்வுகள், குறுந்தொகை ஆய்வுகள் உள்ளிட்ட செவ்வியல் இலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்.

சோ.ந.கந்தசாமி தமிழ் இலக்கியத்தில் பௌத்தம் என்ற தலைப்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையில் சொற்பொழிவுகள் ஆற்றினார். அவர் எழுதிய 'பௌத்தம்' தமிழ் நிலத்தில், தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பௌத்தம் சார்ந்து எழுதப்பட்டது. பௌத்த நெறியில் பரம்பொருள் கொள்கை இடம் பெற்ற திறம், பௌத்த தெய்வங்களின் நிலை, பத்தி மார்க்கம், போதிசத்துவக் கொள்கை, துறவு நெறி ,பௌத்தப் பிரபஞ்சக் கொள்கை, அறங்கள், பௌத்த தருக்கம், தத்துவம் பற்றிய கோட்பாடுகள் ஆகியவை ஆராயப்படுகின்றன.

தமிழ் உயராய்வுத்துறையில் பங்களிப்புக்காக 2013-2014 ஆண்டிற்கான குடியரசுத் தலைவர் வழங்கும் செம்மொழித் தமிழ் உயராய்வு மையத்தின் தொல்காப்பியர் விருது பெற்றார்.

சோ.ந. கந்தசாமி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் நிதியத்தில் ஏற்படுத்தப் பட்ட திருக்குறள் இருக்கையின் தகைசால் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.

வகித்த பொறுப்புகள்

  • சாகித்ய அகாதெமியின் உறுப்பினர்
  • பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்,
  • பல்கலைக்கழக ஆய்வுக்குழு உறுப்பினர்,
  • தேர்வுக்குழுத் தலைவர்,
  • பாடத்திட்டக் குழுத்தலைவர்,
  • இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத்தின் துணைத்தலைவர்
  • இந்திய நடுவண் தேர்வாணையத்தின்(U.P.S.C.) முதன்மைத் தேர்வாளர்

இலக்கிய இடம்

சோ. ந. கந்தசாமி தனது தத்துவம் மற்றும் மொழியியல் ஆய்வுகளுக்காக அறியப்படுகிறார். தமிழ் இலக்கியத்தில் வைதீக அவைதீகத் தத்துவங்களின் கூறுகளையும் தமிழ் நிலத்தில் பௌத்தத்தின் கூறுகளையும் ஆய்ந்தும் அவர் எழுதிய நூல்கள் முக்கியமானவை. இந்திய அறிவாய்வியலை (epistemology) தமிழ் இலக்கியங்களின் அடிப்படையில் ஆய்வு செய்தார். அவரது 'பௌத்தம்' தமிழ் நிலம் சார்ந்து பௌத்தத்தை ஆய்வினால் முக்கியமான நூல்.

விருதுகள், பரிசுகள்

  • அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கவிதைக்கு தங்கப் பதக்கம்
  • தமிழக அரசுசிறந்த நூலுக்கான பரிசு (திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்கள், இந்தியத் தத்துவக்களஞ்சியம் நூல்களுக்காக)
  • அண்ணாமலை செட்டியார் தமிழிலக்கிய விருது
  • தருமபுர ஆதீனத்தின் 'சித்தாந்தக் கலாநிதி' பட்டம்
  • குன்றக்குடி ஆதீனத்தின் 'தமிழாகரர்' பட்டம்
  • திருவாவடுதுறை ஆதீனத்தின் 'சித்தாந்தச் செம்மணி' பட்டம்
  • மெய்யப்பன் அறக்கட்டளையின் சிறந்த தமிழறிஞர் விருது
  • SRM பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் சாதனையாளருக்கான பாரிவேந்தர் பைந்தமிழ் விருது

படைப்புகள்

இலக்கியம்
  • சங்க இலக்கியத்தில் மதுரை
  • திருக்குறள் கூறும் உறுதிப்பொருள்
  • இலக்கியமும் இலக்கிய வகையும்
  • தமிழிலக்கியச் செல்வம்(ஐந்து தொகுதிகள்)
  • திருமுறை இலக்கியம்
  • திருமுறையில் இலக்கிய வகை
  • உலகத் தமிழிலக்கிய வரலாறு(கி.பி.501-கி.பி.900)
  • மணிமேகலையின் காலம்
  • பரிபாடலின் காலம்
  • இலக்கியச்சோலையிலே
திறனாய்வு
  • Bharathidasan As a Romantic Poet
  • Anthology of Book Reviews
  • தொல்காப்பியரின் இலக்கியக் கொள்கைகள்
மொழியாக்கம்
  • English Translation of Sundarar Devaram Volume I (patikam 1-50)Volume II(patikam 51-100) (Tota 1026 verses).
  • English Translation of Tirumantiram(Total 527 verses)
இலக்கணம்
  • தமிழிலக்கணச் செல்வம்(இரு தொகுதிகள்)
  • தொல்காப்பியம் - எழுத்ததிகாரத் தெளிவு
  • புறத்திணை வாழ்வியல்
  • தமிழ் யாப்பியலின் தோற்றமும் வளர்ச்சியும்(மூன்று தொகுதிகள்)
  • கலித்தொகை யாப்பியல்
மொழியியல்
  • A Linguistics Study of Paripatal(M.Lit.Thesis)
  • A Linguistis of Manimekalai
தத்துவம்
  • தமிழும் தத்துவமும்
  • தமிழிலக்கியத்தில் பௌத்தம்
  • தமிழிலக்கியத்தில் அறிவாராய்ச்சியியல்
  • இந்தியத் தத்துவக் களஞ்சியம்(மூன்று தொகுதிகள்)
  • Budhism As Expounded in Manimekalai(Ph.D. Dissertation)
  • Indian Epistemology as Expounded in the Tamil Classics
  • Tamil Literature and Indian Philosophy
  • The Yoga of Siddha Avvai(Published in Canada)
  • Advaitic Works and Thought in Tamil
  • The Encounter Between saiva sidhanta and Advaita vedanta

உசாத்துணை


✅Finalised Page