செவியறிவுறூஉ
செவியறிவுறூஉ பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசனுக்குக் கூறப்படும் நீதி மற்றும் நல்லறிவு புகட்டுதல் குறித்துக் கூறும் புறத்துறை.
செவியறிவுறூஉ தமிழ்ச் சிற்றிலக்கிய வகைமைகளில் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம்.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் அறத்தினை அறிந்த செங்கோல் மன்னவனுக்கு வீரத்திற்கு வழுவில்லாத பெரும் கருத்தினை உணரும்படி கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
மறம்திரி(வு) இல்லா மன்பெரும் சூழ்ச்சி
அறம் தெரி கோலாற்(கு) அறிய உரைத்தன்று (கொளு.33)
வெண்பா
அந்தணர் சான்றோர் அரும்தவத்தோர் தம்முன்னோர்
தந்தை தாய் என்று இவர்க்குத் தார் வேந்தே - முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழி நின்று கேட்டான் முறை 221
"வேந்தே! சான்றோர், மூத்தோர், பெற்றோர் போன்றோர் கூறும் அறிவுறைகளை அடக்கத்துடன் கேடு ஒழுகுதலே மிக்க நலம் பயக்கும்' என்பது வெண்பா காட்டும் அறிவுரை.
தொல்காப்பியம்
தொல்காப்பியம் பெரியோர் நடுவே சினந்து கொள்ளுவதும், தன்னையே வியந்து கொள்ளும் செருக்கும் இன்றி தாழ்ந்து ஒழுகுதல் கடமை" என்று கேட்போன் உளம் கொள்ளுமாறு சொல்வதைச் செவியுறை எனக் கூறுகிறது.
செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல் கடன் எனச் செவியுறுத்தன்றே- செய்யுளியல் 1371
வாயுறை வாழ்த்து, செவியறுவுறூஉ
நச்சினார்க்கினியர் தாம் உதாரணமாக எடுத்துக்காட்டிய சில புறநானூற்றுப் பாடல்களுக்கு (புறநானூறு 5,184) அந்நூலின் உரைகாரர் கொடுத்துள்ள செவியறிவுறூஉ துறைக்கு மாறாக வாயுறை வாழ்த்து எனக் குறிப்பிட்டு, புறநானூற்றுக்கு உரையெழுதியவர் தொல்காப்பியத்தைப் பின்பற்றி உரைவகுத்திலர் எனக் கருதுகிறார்.
புறநானூறில் செவியறிவுறூஉ
இத்துறைப் பாடல்கள் புறநானூற்றில் 8 உள்ளன.
- புறநானூறு 3- உலகமே மாறினாலும் நீ சொல் தவறாதே! உன்னை நாடி இரவலர் வரும்போது அவர்களின் குறிப்பறிந்து கொடு! - பாண்டியன் ஒள்வாள் பெரும்பெயர் வழுதிக்கு இரும்பிடர்த் தலையார் கூறியது
- புறநானூறு 5 - அருளும் அன்பும் நீக்கியோர் நிரயம்(நரகம்) கொள்வர். அவர்களோடு நீ சேராதே! தாய் தன் குழந்தையைப் பேணுவது போல நாட்டு மக்களைக் காப்பாயாக! -சேரமான் கருவூர் ஏறிய ஒள்வாள் கோப்பெருஞ்சேரல் இரும்பொறைக்கு நரிவெரூஉத் தலையார் கூறியது
- புறநானூறு 6 - பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியின் செவியில் காரி கிழார் கூறியவை
- துலாக்கோல் போல் ('தெரிகோல் ஞமன்) நடுவுநிலைமையைக் கொள்க!
- வென்ற நன்கலம் பரிசிலர்க்கு வழங்குக!
- முனிவரும் முக்கண் செல்வரும் நகர் வலம் வரும்போது உன் வெண்கொற்றக் குடை பணியட்டும்!
- நான்மறை முனிவர் கையேந்தும்போது, உன் தலை வணங்கட்டும்!
- உன் தலைமாலை பகைநாட்டை எரிக்கும் புகையில் வாடட்டும்!
- உன் சினம் ஊடும் மகளிரை வெல்லட்டும்!
- புறநானூறு 35 - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு வெள்ளைக்குடி நாகனார் கூறியது
- உன் வெண்கொற்றக் குடை உனக்கு நிழல் தருவதற்கு அன்று. மக்களின் துன்பத்தைப் போக்கி அவர்களுக்கு நிழல் தருவததற்காக!
- உன் வெற்றி உன் வீரர் கையில் இல்லை. உழவர் உழும் ஏர்ப்படையிடம் உள்ளது.
- புறநானூறு 40 - இன்சொல் எண்பதத்தை ஆகுமதி - சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனுக்கு ஆவூர் மூலங்கிழார் கூறியது
- நீயே, பகைவர் முடிப் பொன்னால் செய்த வீரக்கழல் அணிந்தவன். யாமே, உன்னை இகழ்ந்தவரை இகழ்ந்து பாகழ்ந்தவரைப் போற்றும் புலவன். என்னிடம் இன்சொல் பேசி, எளிமையாகக் காட்சி தருக!
- புறநானூறு 55 - பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறன் செவியில் மதுரை மருதன் இளநாகனார் கூறியது
- அரசின் கொற்றம் (வெற்றி) நாற்படையால் என்றாலும், அதன் முதல் 'அறநெறி'யே.
- எனவே, நம்முடையவர்களிடமும் பிறரிடமும் ஞாயிறு போல் காய்க!
- எல்லாருக்கும் திங்கள் போல் குளுமை தருக!
- எல்லாருக்கும் மழை போல் வழங்குக!
- புறநானூறு 184 - பாண்டியன் அறிவுடை நம்பி செவியில் பிசிராந்தையார் கூறியது
- வரியை இரக்க உணர்வோடு வாங்குக! விளைந்த நெல்லை அறுத்துச் சமைத்துக் கவளமாக யானைக்கு நல்கினால் பல நாள் கொடுக்கலாம். விளைச்சலில் யானை புகுந்து உண்டால் அஃது உண்பதைக் காட்டிலும் அதன் காலில் மிதிபட்டு அழியும் நெல் அதிகமல்லவா? உணர்ந்து வரி வாங்குக!
புறநானூறு 2
- திணை: பாடாண் துறை : செவியறுவுறூஉ
- பாடப்பட்டவர் : சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன்
- பாடியவர் : முரஞ்சியூர் முடிநாகராயர்
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!
கறந்த பால் புளித்தாலும், பகல் இருட்டாக மாறினாலும், நால்வேத நெறி உலகில் நிகழாமல் போனாலும், நீயும் நின் சுற்றமும், நூற்றுவர் இறந்த பாரதப் போரில் இருபால் வீரர்களுக்கும் பெருஞ்சோறு வழங்கிய கொடை உள்ளம் மாறாமல் இருப்பீர்களாக
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
21-May-2023, 08:26:22 IST