under review

எஸ்.வி. சகஸ்ரநாமம்

From Tamil Wiki
எஸ்.வி. சகஸ்ரநாமம்

எஸ்.வி. சகஸ்ரநாமம் (நவம்பர் 29, 1913 - பிப்ரவரி 19, 1988) தமிழ் நாடகக் கலைஞர், திரைப்பட நடிகர். சேவா ஸ்டேஜ் என்ற நாடகக் குழுவை உருவாக்கி பல நாடகங்களை மேடையேற்றினார். இருநூற்று ஐம்பதிற்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சேவா ஸ்டேஜ் மூலம் பல முக்கியமான திரைப்பட நடிகர்களை உருவாக்கினார்.

எஸ்.வி. சகஸ்ரநாமம் மனைவி ஜெயலட்சுமியுடன்

வாழ்க்கைக் குறிப்பு

எஸ்.வி. சகஸ்ரநாமம் கோவையை அடுத்த சிங்காநல்லூரில் வெங்கடராமன், பார்வதி இணையருக்கு நவம்பர் 29, 1913-ல் ஐந்தாவது குழந்தையாகப் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் இரண்டு அண்ணன்கள் இரண்டு அக்காக்கள். சிறு வயதிலேயே தாயை இழந்தார். சித்தப்பாவின் பலகாரக் கடையில் வேலை செய்ய சென்றபோது தற்செயலாக உள்ளூரில் பாய்ஸ் கம்பெனி நாடகம் ஒன்றைப் பார்த்து நாடகத்தில் ஈடுபாடு கொண்டார். நாடகம் தவிர பளு தூக்கும் போட்டிகளிலும் பங்கேற்றார். வாலிபால், பேட்மின்டன் போன்றவற்றிலும் பங்கேற்றார். கார் மெக்கானிக் வேலை செய்தார். சிலகாலம் பேருந்து நடத்துனராகவும் பணியாற்றினார்.

தனிவாழ்க்கை

எஸ்.வி. சகஸ்ரநாமம் ஜெயலட்சுமியை மணந்தார். ஜெயலட்சுமியின் இயற்பெயர் பார்வதி (பாருக்குட்டி). திருமணமான புதிதில் எஸ்.வி. சகஸ்ரநாமத்தின் மூத்த அண்ணன் வீட்டில் வாழ்ந்த இருவரும் முதல் குழந்தை பிறந்த பின் சிங்காநல்லூரில் வசிக்க ஆரம்பித்தனர். ஜானகி, லலிதா, ஷாந்தி, எஸ்.வி.எஸ் குமார், கெளரி ஆகியோர் இவரின் குழந்தைகள்.

அரசியல்

கம்யூனிஸ்ட் கட்சித் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தைக் தொடங்கியபோது அதற்குத் துணைச் செயலாளராக சகஸ்ரநாமத்தை நியமித்தார் தோழர் ஜீவா. சகஸ்ரநாமம் இறுதிவரை கதராடையை மட்டுமே உடுத்திய லட்சியவாதி. சமூக சீர்திருத்தக் கருத்துக்களை கருப்பொருளாகக் கொண்ட நாடகங்களை மட்டுமே அரங்கேற்றினார்.

நாடக வாழ்க்கை

எஸ்.வி. சகஸ்ரநாமம் வீட்டை விட்டு ஓடிப் போய் அப்பாவின் பொய்க் கையெழுத்தைப் போட்டு மதுரை பாலசண்முகானந்த சபா மேலாளர் காமேஸ்வர அய்யரிடம் கொடுத்து நாடகக் கம்பெனியில் சேர்ந்தார். காமேஸ்வர அய்யர் இதைக் கண்டுபிடித்து அவரது தந்தையின் உடன்பாட்டுடன் அவரை நாடக கம்பனியில் சேர்த்துக் கொண்டார். எஸ்.வி. சகஸ்ரநாமம் டி.கே.எஸ் சகோதரர்களுடன் அணுக்கமானவராக இருந்தார். வீரபத்திரன் என்ற நடிகரிடம் பாடல் கற்றுக் கொண்டார். எம். கந்தசாமி முதலியாரைத் தன் குருவாக குறிப்பிட்டார். அவரிடம் கற்றுக்கொண்ட மூன்றே மாதத்தில் ’அபிமன்யு சுந்தரி’ நாடகத்தில் சூரியபகவானாக நடித்தார்.

பாய்ஸ் கம்பெனிகள் அரங்காற்றுகை செய்த சுதந்திரப் போராட்ட உணர்வுகளை வலியுறுத்தும் நாடகங்களில் சகஸ்ரநாமம் நடித்தார். 'தூக்குக் கயிறு' நாடகத்தில் 'வாலீசன்' என்ற பாத்திரத்தில் நடித்தார். 1945 வரை சகஸ்ரநாமம் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் வேறு சிறு தொழில்களிலும் செய்தார். உயிருள்ள பாம்பைக் கழுத்தில் போட்டுக்கொண்டு பயத்தில் உதறாமல் நடித்ததால் சிவன் வேடமே இவருக்கு திரைப்படங்களில் ஒதுக்கப்பட்டது.

என்.எஸ்.கே. நாடகமன்றம் தொடங்கியபோது அதற்கு சகஸ்ரநாமம் நிர்வாகியாகச் செயல்பட்டார். லட்சுமிகாந்தன் கொலைவழக்கில் என்.எஸ்.கே. வழக்கில் மேல் முறையீடு செய்வதற்கு டி. ஏ. மதுரம் முயற்சி செய்து உருவாக்கிய நாடகம் ‘பைத்தியக்காரன்’. விதவைத் திருமணத்தை வலியுறுத்தும் இந்த நாடகத்தை எழுதி நடித்து மதுரத்துக்கு உதவினார் . என்.எஸ்.கே இரண்டு ஆண்டுகள் சிறை சென்று மீண்டு வரும்வரை என்.எஸ்.கே. நாடக சபையின் நிர்வாகியாகவும் முக்கிய நடிகராகவும் சகஸ்ரநாமம் சென்னை ஒற்றை வாடை தியேட்டரில் வெற்றிகரமாக நாடகங்கள் நடத்தினார்.

எஸ்.வி. சகஸ்ரநாமம்
சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்

எஸ்.வி. சகஸ்ரநாமம் 1950-க்குப் பிறகு திரைப்படங்களில் வாய்ப்புகள் இருந்த போதும் 'சகஸ்ரநாமம் சேவா ஸ்டேஜ்"'என்ற குழுவை ஆரம்பித்துத் தமிழ் நாடகங்களை அரங்காற்றுகை செய்தார். மேடை அரங்க நிர்மாணம், ஒளி அமைப்புகள் இவற்றிலெல்லாம் கலாபூர்வமான நூதன மாற்றத்தைப் பொருட்செலவைப் பார்க்காமல் நிறுவினார். நாடகத்தில் பின்பாட்டு உத்தியை அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் பாடத் தெரிந்தவர்கள் மட்டுமே நாடகத்தில் நடிக்க முடியும் என்ற நிலையை மாற்றினார். ஆர். சேவா ஸ்டேஜ் நடிகர்களான முத்துராமன், தேவிகா, எஸ்.என். லட்சுமி, குலதெய்வம் ராஜகோபால், கே. விஜயன், ஏ. வீரப்பன், டி.எம். சாமிகண்ணு, ஏ.கே. வீராசாமி, தனபால், காந்திமதி, எஸ். பிரபாகர், எஸ்.என். லக்ஷ்மி போன்ற கலைஞர்கள் அனைவரும் திரையிலும் நடிக்க வழி அமைத்தார்.

மேடை அமைப்பு

இங்கிலாந்தில் இருப்பது போல் தமிழகத்திலும் தனித்தன்மையுடன் நாடக அரங்குகளை உருவாக்க வேண்டும் என்ற யோசனையை முன்வைத்த சகஸ்ரநாமம், ‘வானவில்’ என்ற ஒரு நாடகத்தை நிகழ்த்த அன்றைய காலகட்டங்களிலேயே ‘ரோலிங் ஸ்டேஜ்’ முறையைக் கையாண்டு வெற்றி கண்டார். எஸ்.வி. சகஸ்ரநாமம் மேடை அமைப்பில் மிகுந்த தேர்ச்சி பெற்றவராக இருந்தார். பின்னாளில் சென்னையில் கட்டப்பட்ட ‘ராஜா சர் அண்ணாமலை செட்டியார் மன்றம்’, ‘ராணி சீதை ஹால்’, ‘கலைவாணர் அரங்கம்’, சங்கரதாஸ் சுவாமிகள் அரங்கம்’ ஆகியவை அவரது ஆலோசனையோடு கட்டப்பட்டன. ஆடை அணிகலன் உருவாக்கத்தில் பரிச்சயம் கொண்டவராக இருந்தார்.

எழுத்தாளர்கள்

எஸ்.வி. சகஸ்ரநாமம் நாடக உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களைப் பயன்படுத்தினார். நல்ல வாசிப்பும், எழுத்தாளர்களுடனான பழக்கமும் இதற்கு உதவியது. தி. ஜானகிராமன், கு.அழகிரிசாமி இருவரும் சகஸ்ரநாமத்தின் நல்ல நண்பர்கள். சகஸ்ரநாமத்தின் தூண்டுதலால் தி. ஜானகிராமன் ‘வடிவேல் வாத்தியார்’, ‘நான்குவேலி நிலம்’, ’டாக்டருக்கு மருந்து’ ஆகிய நாடகங்களை எழுதினார். ‘நாலு வேலி நிலம், 1959-ல் சினிமாவாகவும் வந்தது. அதே வருடம் ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’ திரைப்படமும் வெளிவந்தது.

கு. அழகிரிசாமியும் சகஸ்ரநாமம் வேண்டுகோளை ஏற்று ‘கவிச்சக்கரவர்த்தி’, ‘வாழ்வில் வசந்தம்’ ஆகிய நாடகங்களை எழுதினார். 1959-ல் இயல் இசை நாடக மன்றத்தின் ஆதரவு மூலம் சேவா ஸ்டேஜ் தயாரித்த கவிதை நாடகங்கள் மகாகவி பாரதியாரின் பாஞ்சாலி சபதம் மற்றும் குயில் பாட்டு. பாரதியின் ‘பாஞ்சாலி சபதம்’ பெரும்புகழ்பெற்றது. பி.எஸ். ராமையாவின் கதை வசனத்தில் மேடை நாடகமாக வெற்றி கண்ட 'போலீஸ்காரன் மகள்' பின்னர் ஸ்ரீதர் இயக்கத்தில் திரைப்படமானது. பி.எஸ்.ராமையாவின் ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’ மேடையேறியது. பாரதியின் பாடல் வரிகளை நாடக மேடைகளிலும் திரைப்படங்களிலும் தொடர்ந்து ஒலிக்கச் செய்த இவரின் பங்களிப்புக்கு அங்கீகாரமாக ‘பாரதி கலைஞர்’ எனப் பட்டம் சூட்டப் பட்டார்.

எஸ்.வி. சகஸ்ரநாமம் 1961-ல் ரவீந்திரநாத் தாகூரின் நூற்றாண்டு விழா கொல்கத்தாவில் நடந்தபோது அதில் இசை நாடகத்தை மேடையேற்றினார். ரவீந்திரநாத் தாகூர் எழுதிய ‘தி விஷன்’எனும் நாவலை என்.வி. ராஜாமணி நாடகமாக்கம் செய்ய அதற்கு ‘கண்கள்’என்ற தலைப்பிட்டு அரங்கேற்றினார். அதில் சகஸ்ரநாமத்துடன் விரும்பி இணைந்து நடித்தவர் நடிகர் திலகம் சிவாஜி.

சிறப்புகள்
  • 1950-ல் கொல்கத்தாவில் நடைபெற்ற தாகூர் நூற்றாண்டு விழாவிற்கு தமிழகத்திலிருந்து ஜீவானந்தம், தொ.மு.சி. ரகுநாதன், கே. முத்தையா, சகஸ்ரநாமம், மாஜினி உள்ளிட்ட பதினைந்து நபர்கள் கொண்ட குழு சென்றது. இதில் நாடகம் குறித்த ஆய்வுக் கட்டுரை ஒன்றை இக்குழுவினர் கூட்டாக தாக்கல் செய்தனர்.
  • எஸ்.வி. சகஸ்ரநாமம் 1962-ல் நிகழ்ந்த சீனப் போர் சமயத்தில் தேச எல்லைப் பாதுகாப்பு நிதிக்காக நன்கொடை நாடகங்கள் நடத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் தனக்கு சினிமா நாடகத் துறையில் சன்மானங்களாக அளிக்கப்பட்ட கணிசமான தங்கம் வெள்ளிப் பதக்கங்கள், கோப்பைகள், சங்கிலிகள் ஆகியவற்றை காமராஜரிடம் சமர்ப்பித்தார்.

திரை வாழ்க்கை

எஸ்.வி. சகஸ்ரநாமம் 1935-ல் முதன்முதலாக ‘மேனகா’ திரைப்படத்தில் நடித்தார். ‘பராசக்தி’, ‘ஆனந்தஜோதி’, ‘நல்லதம்பி’, ‘மர்மயோகி’, ‘உரிமைக் குரல்’, ‘படித்தால் மட்டும் போதுமா’, ‘நவாப் நாற்காலி’ உள்ளிட்ட 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். ஸ்ரீதர் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை, உரிமைக்குரல் படங்களிலும் பாலசந்தர் இயக்கிய வெள்ளி விழா, இரு கோடுகள் ஆகிய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்தார். 'சோப்பு சீப்பு கண்ணாடி', 'நவாப் நாற்காலி' போன்ற படங்களில் நகைச்சுவைக் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

'மணமகள்', 'மருமகள்', 'மணிமகுடம்', 'நவாப் நாற்காலி', 'ராஜநாகம்,' 'வெள்ளி விழா', 'கண் திறந்தது', 'நானே ராஜா', 'நவீன விக்ரமாதித்தன்', 'மணமகள்', 'எதிர்பாராதது', 'சிங்காரி', 'ஜீவனாம்சம்', 'செல்வம்', 'நூற்றுக்கு நூறு', 'நீ', 'சக்திலீலை', 'ஆனந்த ஜோதி', 'படித்தால் மட்டும் போதுமா', 'சாது மிரண்டால்', 'தில்லானா மோகனாம்பாள்', 'கைராசி', 'தசாவதாரம்', 'நீதிபதி', 'நல்லதம்பி', 'சோப்பு சீப்பு கண்ணாடி', 'கியாஸ் லைட் மங்கம்மா', 'ஆதிபராசக்தி', 'குழந்தைக்காக', 'படித்தால் மட்டும் போதுமா', 'கண்ணா நலமா' ஆகிய படங்களில் நடித்தார்.

விருதுகள்

  • 1967-ல் சங்கீத நாடக அகாதெமி விருது
  • 1980-ல் தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி சங்கீத கலாசிகாமணி விருது வழங்கியது
  • நாடகங்கள் வாயிலான இவரது சமூக மறுமலச்சிப் பங்களிப்பைப் பாராட்டி, ‘பாரதி கலைஞர் சகஸ்ரநாமம்’ என்ற பட்டத்தை ப.ஜீவானந்தம் இவருக்கு வழங்கினார்.

மறைவு

எஸ்.வி. சகஸ்ரநாமம் தனது 74-வது வயதில் பிப்ரவரி 19, 1988-ல் காலமானார்.

நினைவு

எஸ்.வி.எஸ். நூற்றாண்டு விழாக் குழு 2012-ல் அமைந்தது. எஸ்.வி.எஸ். குமாரை முன்னிலைப்படுத்தி அதன் தலைவராகக் கவிஞர் சித்தார்த்தனும் செயலாளராக சேவா ஸ்டேஜ் நடிகரும் எழுத்தாளருமான பி.ஆர். துரையும் நியமிக்கப்பட்டனர். டி.வி. வரதராஜன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியம், எடிட்டர் பி. லெனின் போன்றவர்கள் ஆலோசகர்களாக இருந்தனர். சகஸ்ரநாமம் பெயரில் நாடகம் மற்றும் திரைத்துறைக்கு சிறப்பாகப் பங்களித்தவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவதென்று முடிவு செய்தது. நூறு மூத்த நாடகக் கலைஞர்களுக்கு எஸ்.வி.எஸ் நினைவு விருது வழங்கப்பட்டது. டி.எம். சாமிகண்ணு, எஸ்.என். லக்ஷ்மி ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.

திரைப்படங்கள்

  • பூம்பாவை (1944)
  • நல்ல தம்பி (1949)
  • சிங்காரி (1951)
  • மர்மயோகி (1951)
  • மணமகள் (1951)
  • பராசக்தி (1952)
  • கண்கள் (1953)
  • குலதெய்வம் (1956)
  • நாலுவேலி நிலம் (1959)
  • அல்லி பெற்ற பிள்ளை (1959)
  • போலீஸ்காரன் மகள் (1962)
  • படித்தால் மட்டும் போதுமா (1962)
  • ஆனந்த ஜோதி (1963)
  • உரிமைக்குரல் (1974)
  • மேனகா

உசாத்துணை

இணைப்புகள்


✅Finalised Page