under review

டி.கே.எஸ் சகோதரர்கள்

From Tamil Wiki
டி.கே.எஸ் சகோதரர்கள்

டி.கே.எஸ் சகோதரர்கள் தமிழ் நாடக முன்னோடிகளில் முதன்மையானவர்கள். 'ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை’ ஏற்படுத்தி நாடக அரங்கேற்றங்கள் செய்தனர்.

டி.கே.எஸ் சகோதரர்கள்

டி.எஸ்.கண்ணுசாமிப் பிள்ளை, சீதையம்மாள் இணையருக்கு நான்கு மகன்கள். சங்கரதாச சுவாமிகள் ஏற்படுத்திய 'மதுரை மீனலோசனி வித்துவ பாலசபை’ என்ற நாடகக் குழுவில் டி.கே.எஸ் சகோதரர்கள் பயிற்சி பெற்றனர்.

ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை

மார்ச் 31, 1925-ல் டி.கே.எஸ்.சகோதரர்களின் "ஸ்ரீ பால ஷண்முகானந்த சபை" நாடகக் குழு தொடங்கப்பட்டது. 1950 வரை தமிழ் நாட்டிலும், உலக நாடுகள் பலவற்றிலும் தொழில் முறை நாடகக்குழுவாக ஏராளமான நாடகங்களை நடத்தி நாடக உலகிற்கு மறுமலர்ச்சியை அளித்தனர்.

கலை வாழ்க்கை

தொடக்க காலம்

சங்கரதாஸ் சுவாமிகள் 1918-ல் மதுரையில் ’தத்துவ மீனலோசனி வித்துவ பால சபை’ என்னும் நாடக நிறுவனத்தை உருவாக்கினார். அந்நிறுவனத்தில் 1918-ம் ஆண்டில் டி.கே. சங்கரன், டி.கே. முத்துசாமி, டி.கே. சண்முகம் ஆகிய மூவரும் தந்தை கண்ணுசாமிபிள்ளையால் இளம் நடிகர்களாக இணைக்கப்பட்டனர். மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பல பகுதிகளுக்கும் சென்று நாடகம் நடித்தனர். ஆகஸ்ட் 3, 1922-ல் இரவு அக்குழுவிலிருந்து அவர்கள் மூவரும் அவர்தம் தந்தையாரால் அழைத்துச் செல்லப்பட்டனர். தந்தைக்கு மகன்கள் படிக்க வேண்டுமென்ற ஆசையிருந்தது. தந்தையால் அழைத்துச் செல்லப்பட்ட டி.கே. ஷண்முகம் அவர் உடன்பிறந்தவர்களும் தெ.பொ. கிருஷ்ணசாமி பாவலர் நடத்திய ’பால மனோகர சபை’ என்னும் நாடகக் குழுவில் ஆகஸ்ட் 4, 1922-ல் சேர்க்கப்பட்டனர். இவர்கள் விலகியதால் சங்கரதாஸ் சுவாமிகள் மனம்நொந்து இருப்பதாக அறிந்து, பால மனோகர சபையிலிருந்து டி.கே.எஸ் சகோதரர்கள் மூவரும் தந்தையால் அக்டோபர் 16, 1922-ல் பாண்டிச்சேரியில் முகாமிட்டிருந்த தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையில் மீண்டும் இணைக்கப்பட்டனர். 1924-ல் டி.கே.பகவதியும் அக்குழுவில் இளம் நடிகராக இணைக்கப்பட்டார். இதற்கிடையில் டி.கே.எஸ் சகோதரர்கள் தந்தை கண்ணுசாமி பிள்ளை இறந்ததால், தம் சிற்றப்பா, மாமா ஆகிய இருவரின் பாதுகாப்பில் வளர்ந்தனர். தத்துவ மீனலோசனி வித்துவ பால சபையின் முதலாளிகளில் ஒருவரான சுப்பிரமணியபிள்ளையிடம் ஏற்பட்ட கருத்து வேற்றுமையின் காரணமாக பிப்ரவரி 15, 1925-ல் அந்நாடகக்குழுவிலிருந்து டி.கே. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் அவர்தம் பாதுகாவலர்களால் விலக்கி அழைத்துச் செல்லப்பட்டனர்.

நாடகங்கள்

1937-ல் சமுதாயத்தில் உள்ள குறைபாடுகளைக் கலைக் கண்ணோடு எடுத்துக் காட்டி டி.கே.முத்துசாமி எழுதிய "குமாஸ்தாவின் பெண்"நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்நாடகம் 'அன்ன பூர்னிகா மந்திர்’ என்ற வங்காளி நாவலைத் தழுவி எழுதப்பட்டது. வடுவூர் துரைசாமி ஐயங்காரின் "வித்யா சாகரர்" என்ற நாவலும் டி.கே. முத்துசாமியால் நாடகமாக்கப்பட்டது. தமிழ் மொழிக்கும், தமிழ் இசைக்கும் சிறப்புச் செய்யும் வகையில் சூலமங்கலம் வைத்தியநாத பாகவதர் எழுதிய "சிவலீலா" நாடகத்தை நடத்தினர். இந்நாடகம் தொடர்ந்து 108 நாட்கள் நடந்தது. 108ஆவது நாள் மதுரை தமிழ்ச் சங்கப் புலவர்கள் வருகை புரிந்து "முத்தமிழ்க் கலா வித்துவ ரத்தினங்கள்" என்ற பட்டத்தை வழங்கினர்.

"மனுஷ்யன்" என்ற பா.ஆதிமூலம், நா.சோமசுந்தரம் ஆகியோர் மலையாள நாடகத்தைத் தழுவி எழுதிய "மனிதன்" நாடகம் சமுதாய நாடகங்களில் புரட்சியை ஏற்படுத்தியது. அகிலன் எழுதிய "புயல்" நாடகத்தை அரங்கேற்றினர். இது தமிழ் நாடகப் போட்டியில் பரிசு பெற்றது. ரா.வெங்கடாச்சலம் எழுதிய ’முதல் முழக்கம்’ நாடகத்தை நடத்தினர்.

1950ல் பேசும் படம் வந்த பிறகு நாடகம் அரங்கேற்றுவதில் சுனக்கம் ஏற்பட்டது. நாடகக் கழகம் தோற்றுவிக்கப்பட்ட பின்னர் அரங்குகள் இல்லாத குறையைத் தீர்க்க திறந்தவெளி அரங்குகள் தோன்றின.கலைவிழாக்கள் நடந்தன.ஐயாயிரம் நாற்காலிகள் போடப்பட்டு, முதல் வகுப்பு எட்டணா, இரண்டாம் வகுப்பு நாண்கனா என்று குறைந்த கட்டணத்தில் நாடகங்கள் நடந்தன. பம்மல் முதலியார், டி.கே.எஸ்., ஆகியவர்கள் முயற்சியால் நாடகங்களுக்கு கேளிக்கை வரியிலிருந்து விலக்குக் கிடத்தது. நாடகக்குழு தன்நிறைவு விழாவை நடத்தியது. மீண்டும் டி.கே.எஸ்., குழுவினர் நாடகம் நடத்த ஆரம்பித்தனர்.

நா.சோமசுந்தரம் எழுதிய, "இன்ஸ்பெக்டர்"; ரா.வெங்கடாசலம் எழுதிய "மனைவி"; கல்கியின் "கள்வனின் காதலி" (இதை எஸ்.டி.சுந்தரம் நாடகமாக்கினார்), டி.கே.கோவிந்தனின் "எது வாழ்வு", ஸ்ரீதரின் "ரத்தபாசம்" (எம்.எஸ்.திரௌபதி முக்கிய வேடம் ஏற்றார்)ஆகிய நாடகங்களை அரங்கேற்றம் செய்தனர். தமிழறிஞர் கி.ஆ.பெ.விஸ்வநாதம் "தமிழ்ச்செல்வம்" என்ற கல்வி பிரச்சார நாடகம் எழுதினார். இந்நேரத்தில்தான் அரு.ராமநாதன் எழுதிய "ராஜ ராஜ சோழன்" நாடகத்தையும் டி.கே.எஸ். நடத்தினர். பின்னர் அகிலன் எழுதிய "வாழ்வில் இன்பம்" நாடகமும் நடந்தது. குழந்தைகளுக்காக "அப்பாவின் ஆசை" என்ற நாடகத்தையும் சிறுவர்கள் நடிக்க அரங்கேற்றினார் சண்முகம். இந்நாடகத்தில் தான் கமல்ஹாசன் சிறுவனாக இருக்கையில் நடித்தார். பிப்ரவரி 2, 1942-ல் மதுரையில் பி.எத்திராஜுலு எழுதிய 'ஔவையார் நாடகம்’ அரங்கேறியது. இந்நாடகத்தில் ஔவையாராக நடித்தார் டி.கே.சண்முகம் அவர்கள் இதற்கு பின்னர் ’ஔவை சண்முகம்’ என்று அழைக்கப்பட்டார்.

முடிவு

1931-ம் ஆண்டில் பேசும் படங்கள் வெளிவரத் தொடங்கியதால், நாடகங்களுக்கான மதிப்புக் குறைந்தது. போதுமான வருவாய் கிடைக்கவில்லை. எனவே தி.க. சண்முகமும் அவர்தம் உடன்பிறந்தோரும் 1932-ம் ஆண்டில் தம் நாடகக்குழுவை ஆண்டுக்கு ஆறாயிரம் ரூபாய் குத்தகைக்கு கோல்டன் கோவிந்தசாமி நாயுடு என்பவரிடம் ஒப்படைத்தனர். ஆனால் அவ்வொப்பந்தம் பதினோராம் மாதத்திலேயே முறிந்தது. தி.க.ச. உடன்பிறப்புகள் அந்நாடகக் குழுவைத் தற்காலிகமாகச் சில காலத்திற்குக் கலைத்தனர்.

பின்னர்க் கொரடாச்சேரியைச் சேர்ந்த தர்மராஜபிள்ளை என்பவரின் தேவி பால சண்முகானந்த சபையில் தி. க. ச.வும் அவர் உடன்பிறந்தவர்களுடன் சென்று இணைந்தனர். சிறிது நாளில் தர்மராஜபிள்ளை சொல்லிக்கொள்ளாமல் ஓடிப்போனதால் அந்த நாடகக் குழுவை இவர்களே பொறுப்பேற்றுக் கலைத்தனர்.

சிறிதுகாலம் நாடக வாழ்விலிருந்து ஒதுங்கி இருக்கலாம் எனத் தி. க. ச. உடன்பிறந்தோர் நால்வரும் நாகர்கோவிலுக்குச் சென்று உறவினர்களுடன் வாழத் தொடங்கினர். அப்பொழுது அல்லி அர்ஜூனா, சதாரம் ஆகிய இரண்டு சிறப்பு நாடகங்களில் (Special Drama) தி.க. சண்முகம் நடித்தார். ஆனால் நாடக முறை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அதிலிருந்து விலகினார்.

நாடகத்தில் ஏற்படுத்திய மாற்றங்கள்

  • முகப்புத் திரைக்குப் பின்னுள்ள பின்னணித் திரைகளை வரிசைப்படுத்தி வைக்கும் முறையில் ஓர் ஒழுங்கினைப் புகுத்தினார்கள்.
  • ஒலிவாங்கி(mike)யிலிருந்து மூன்றடி தூரத்தில் தெருத்திரை இருக்கும். மேகத்திரை கடைசியில் இருக்கும். இடையில் காடு, அரண்மனை, தர்பார் எனப் பல திரைகள் இருக்கும். எல்லாத் திரைகளும் மேலிருந்து கீழிறங்கி வரும் வகையில் அமைக்கப்பட்டன. திரை இறங்கும் போது, ஓசை வராமலிருக்க மரக்கப்பிகள் பயன்படுத்தப்பட்டன.
  • இவர்கள் நாடக மேடையமைப்பில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறிப்பிடத்தக்கன. சிவலீலா நாடகத்தில் வானுலகக் காட்சிக்குப் பொருத்தமாகப் பக்கத்தட்டிகளும், மேல் தொங்கட்டான்களும் அமைக்கப்பட்டிருந்தன. தொங்கட்டான்களை, மேக மண்டலம் போல் ஓவியங்கள் தீட்டி அமைத்தார்கள். அத்துடன், வளைவாக நறுக்கியும் வைத்திருந்தார்கள்.
  • விளக்கு அமைப்பிலும், ஒப்பனையிலும், இவர்கள் கவனம் செலுத்தினார்கள்.
டி.கே.எஸ் அரங்கேற்றிய ராஜராஜசோழன்

அரங்கேற்றிய நாடகங்கள்

  • குமாஸ்தாவின் பெண்
  • வித்யா சாகரர்
  • சிவலீலா
  • மனிதன்
  • இன்ஸ்பெக்டர்
  • மனைவி
  • எது வாழ்வு
  • கள்வனின் காதலி
  • தமிழ்ச்செல்வம்
  • ராஜ ராஜ சோழன்
  • வாழ்வில் இன்பம்
  • அப்பாவின் ஆசை
  • ஔவையார் நாடகம்

வெளி இணைப்புகள்

உசாத்துணை


✅Finalised Page