under review

சங்கரர்

From Tamil Wiki
ஆதிசங்கரர்

ஆதிசங்கரர் (பொ.யு. 7-ம் நூற்றாண்டு) இந்தியச் சிந்தனையாளர், தத்துவவாதி, தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைத்த அத்வைதி. இந்தியச் சிந்தனையில் ஆழமான பாதிப்பை நிகழ்த்திய அத்வைத வேதாந்தத்தை முன்வைத்தவர். ‘பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம். அனைத்துமே ஒன்று’ என்ற கருத்தின் மூலம் இந்திய மதத்தின் ஆறு மதங்களையும் ஒன்றாக்கி ஷண்மத சங்கிரகத்தை முன்வைத்தார். சங்கரருக்குப்பின் வந்த இந்தியச் சிந்தனையின் எல்லாத் தளங்களிலும், மறுக்கும் தரப்புகள் உட்பட சங்கரரின் பங்களிப்பு உண்டு. சங்கரர் இந்துஞானமரபில் உள்ள தூய அறிவை மட்டும் முன்வைக்கும் நூல்களை விரிவான புதுவிளக்கங்கள் வழியாக பரவலாக எடுத்துச்சென்று பிரம்மம் என்னும் கருதுகோளை வலுவாக நிறுவினார்.

வாழ்க்கைக்குறிப்பு

காலடி ஸ்தம்பம்

கேரளத்திலுள்ள காலடியில் சிவகுரு, ஆர்யாம்பாள் இணையருக்கு மகனாய்ப் பிறந்தார். எட்டு வயதில் துறவறம் மேற்கொண்டார். இளமையில் கௌடபாதரின் சீடரான கோவிந்த பகவத்பாதரிடம் வேதாந்தம், கௌடபதிய காரிகா, பிரம்மசூத்திரம், வேதங்கள் மற்றும் உபநிடதங்கள், இதர தத்துவங்கள் பயின்றார். அவருடைய சீடர்களிடையே ‘சங்கராச்சாரியார்’ என்ற பட்டத்தைப் பெற்றார். பொயு. 4-ம் நூற்றாண்டு என்றும் பொ.யு. 7-ம் நூற்றாண்டு என்றும் இவர் வாழ்ந்துவந்த காலத்தினைப் பற்றி இரு வாதங்கள் நிலவுகின்றன.

தொன்மம்

இந்தியாவில் சங்கரர் பேரில் தொடர்ந்து புராணங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டே உள்ளன. சங்கரர் இந்தியாவின் சக்திபீடங்களை ஸ்தாபித்தார், பல கோயில்களில் யந்திரங்கள் சங்கரரால் நிறுவப்பட்டவை என்பர். உதாரணம் கொடுங்கல்லூர் கோயில். கேரள நம்பூதிரிகளின் சாதியநெறிகளை வகுத்துச்சொல்லும் சங்கரஸ்மிருதி சங்கரரால் எழுதப்பட்டது என்பர். சங்கரர் வைதிகர்களால் பழிவாங்கப்பட்டார் என்று தொன்மக் கதைகள் உள்ளன. அவரது அன்னையை சிதையேற்றக்கூட வைதிகர் வரவில்லை. அவரே தன்னந்தனியாக அதைச்செய்தார் என்கின்றன கதைகள். அவரை பலமுறை கொல்லமுயன்றதாகவும் அவர் தப்பியதாகவும் கதைகள் உள்ளன.

சண்டாளர்

சங்கரர் ஆற்றில் நீராடி விட்டு வரும்போது ஐந்து நாய்களுடன் சண்டாளர் ஒருவர் அவர் முன்னே வந்தார். சங்கரரின் சீடர்கள் சங்கரருக்கு வழிவிட்டு ஒதுங்குமாறு அவரைக் கேட்டனர். அச்சண்டாளர் சங்கரரிடம் "என் உடல் நகர வேண்டுமா அல்லது ஆத்மா நகர வேண்டுமா" எனக் கேட்க சங்கரர் அவர் காலில் விழுந்து வணங்கினார். அத்வைதத்தின் பரிபூர்ண உண்மையை உணர்த்தி அருளியதாக கூறி அச்சண்டாளரை தனது குருவாக ஏற்று சங்கரர் மனீஷா பஞ்சகம் பாடினார். இவ்வுண்மையை சங்கரருக்கு உணர்த்த சண்டாள உருவில் சிவனே வந்ததாக சங்கர விஜயம் முதலிய நூல்கள் கூறுகின்றன.

வாதங்கள்

இன்றைய சென்னைக்கு அருகில் இருக்கும் மாங்காடு எனும் ஊரில் காபாலிகர்களோடு சங்கரர் வாதம் செய்தார். கர்ம மீமாம்ஸா எனப்படும் கொள்கையினை பின்பற்றி மஹிஷ்மதி எனும் ஊரில் வசித்து வந்த மண்டன மிஸ்ரர் உடன் அவரது மனைவி சரஸவாணி முன்னிலையில் வாதம் செய்தார் சங்கரர். மண்டன மிஸ்ரரைத் தொடர்ந்து அவரது மனைவி சரஸவாணியுடனும் வாதிட்டார். சங்கரருடன் வாதத்தில் தோல்வி அடைந்த மண்டன மிஸ்ரர் துறவறம் ஏற்று சுரேஷ்வரர் என்ற பெயருடன் சங்கரரின் சீடரானார்.

அமைப்புப் பணிகள்

  • சங்கரர் தெற்கில் சாரதா பீடம், மேற்கில் துவாரகா பீடம், வடக்கில் ஜோஷி மடம் மற்றும் கிழக்கில் கோவர்தன பீடம் என நான்கு அத்வைத பீடங்கள் நிறுவி தன் சீடர்களான ஹஸ்தாமலகர், சுரேஷ்வரர், பத்மபாதர், தோடகர் என்பவர்களை ஒவ்வொரு பீடத்திற்கும் மடாதிபதிகளாக நியமித்தார் என்பர். ஆனால் நான்கு சங்கரமடங்களும் மிகப்பிற்காலத்தில் சைவமும் வைணவமும் பெருமதங்களாக வளர்ந்தபின்பு, பெருங்கோயில்கள் எழுப்பப்பட்டபோது, ஆலயநிர்வாகத்துக்கென மன்னர்களால் உருவாக்கப்பட்ட அமைப்புகள். சங்கரர் பெயருக்கிருந்த மதிப்பு காரணமாகவே அவை சங்கரரால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லிக்கொண்டன. அல்லது வேறு சங்கரர்கள் இருந்திருக்கலாம்.
  • காஞ்சிபுரத்தில் சர்வக்ஞான பீடம் எனும் வேதாந்த கல்வி நிலையத்தை நிறுவினார்.
  • ஏராளமான கோயில்களில் யந்திரங்கள் சங்கரரால் நிறுவப்பட்டவை என நம்பப்படுகிறது. உதாரணம் கொடுங்கல்லூர் கோயில்.
மடங்கள்
திசை பீடாதிபதி பீடம் இடம் மகாவாக்கியம் வேதம்
கிழக்கு பத்மபாதர் கோவர்தன மடம் பூரி பிரக்ஞானம் பிரம்மம் ரிக்
தெற்கு சுரேஷ்வரர் சாரதா மடம் சிருங்கேரி அஹம் பிரம்மாஸ்மி யஜுர்
மேற்கு ஹஸ்தாமலகர் காளிகா மடம் துவாரகை தத்துவமசி சாம
வடக்கு தோடகர் ஜோஷி மடம் சமேலி அயமாத்மா பிரம்மம் அதர்வணம்
ஆதிசங்கரர் சிலை (மத்தியப் பிரதேசம்)

வரலாறு

சங்கரரின் காலகட்டத்தில் பிராமண, ஷத்ரிய மேலாதிக்கத்துக்கு எதிராக வைசியர்களின் எழுச்சியாக நிகழ்ந்த பௌத்தமும் சமணமும் அரசர்களின் மதங்களாக மாறி வைசியர்களை ஆதிக்கத்துக்குக் கொண்டுவந்தன. செல்வச்செழிப்பும் ஊழலும் மிகுந்து மக்களிடமிருந்து அன்னியமாயின. வஜ்ராயனம் போன்ற ரகசியச்சடங்குகளும் காமக்கொண்டாட்டங்களும் மிகுந்த தாந்த்ரீக பௌத்தமதக்கிளைகள் செல்வாக்கு பெற்றன. அச்சூழலில் உருவான சங்கரர் பௌத்த-சமண மதங்களின் மேலாதிக்கத்தை எதிர்த்து ஒரு சமூகமாற்றத்துக்கு வித்திட்டார். அடுத்தகட்டத்தில் சூத்திரர்களின் எழுச்சி சங்கரரின் சிந்தனையில் இருந்தே தோன்றியது. சூத்திரர்களின் மேலாதிக்கம் சைவத்திலும் வைணவத்திலும் உருவான பக்திஇயக்கம் வழியாகவே உருவானது. அதற்கு அடித்தளமிட்டது சங்கரரின் சிந்தனைகளே.

சங்கரரின் காலகட்டத்தில் இந்துமதம் என்பது வேள்விச்சடங்குகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் உடைய வைதிகமதமாகவே இருந்தது. பிராமணர்கள் அதன் தலைமைப்பொறுப்பில் இருந்தனர். இந்தியாவெங்கும் இருந்த பல்லாயிரக்கணக்கான பழங்குடித்தெய்வங்களும் வழிபாட்டுமுறைகளும் இந்துமதத்தின் அடித்தட்டில் புழங்கின. மன்னர்கள் வைதிகமதத்தையே ஆதரித்தனர். சங்கரர் இந்துமதத்தை முழுமையாக மாற்றியமைத்தார். இந்துமதத்தில் இரு பெரும்பிரிவுகள் உண்டு. ஒன்று வேள்விகள் மற்றும் பூசைகள் ஆகியவற்றால் ஆன சடங்குகளின் அடுக்கு. இன்னொன்று உயர்தத்துவத்தால் ஆன அடுக்கு. வேதங்களிலேயே இந்த இரு அடுக்குகளும் உண்டு. முதல் அடுக்கு கர்மகாண்டம் என்றும் இரண்டாம் அடுக்கு ஞானகாண்டம் என்றும் அழைக்கப்பட்டது. மக்கள் மத்தியில் இருந்தது கர்மகாண்டம் மட்டுமே. ஞானம் குருகுலங்களிலும் துறவிகளிலும் மட்டுமே இருந்தது.

சாதாரணமான பார்வையில் சங்கரர் இறைமறுப்பாளர். அன்றைய எந்த இறைவனையும் ஏற்றுக்கொண்டவரல்ல. அவர் இறை என்று சொன்னது அறிதல்களாக நம்மை வந்தடையும் அனைத்துமாகி நிற்கக்கூடிய பிரபஞ்சம் தழுவிய ஒன்றை மட்டுமே. அதை வெளியே அறியவேண்டியதில்லை. என்னை நான் உணர்வதே இறையனுபவம் என்றார். இறை என்பது வழிபடப்படவேண்டிய சக்தி அல்ல. மண்டியிட்டு மன்றாடவேண்டிய அரசனும் அல்ல. ஒவ்வொருவரும் தன்னுள் தான் என உணரக்கூடிய முதல்முழுமை மட்டுமே அது. தன்னை இறையென உணர்வதே இறையனுபவத்தின் உச்சம். அதையே அவர் பிரம்மம் என்றார். மற்ற அனைத்து இறைவடிவங்களையும் மனமயக்கங்கள் என்றே சொன்னார். அந்த மனமயக்கங்களை முன்வைக்கக்கூடிய மதங்களை நிராகரித்தார்

மாற்றங்கள்
  • இந்துமதம் என்பது வேதங்களின் ஞானகாண்டத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது என்று அவர் வாதிட்டார்.
  • தூய அறிவே ஆன்மீகம் என்றும் நம்பிக்கையும் வழிபாடுகளும் சடங்குகளும் அல்ல என்றும் சொன்னார்.
  • சங்கரரின் பெரும்பங்களிப்பு என்பது பொதுத்தளத்திற்கு வந்து அங்கே கர்மகாண்டத்தை முழுமையாக நிராகரித்தது.
  • வேள்விச்சடங்குகளை அவர் முழுமையாகவே மறுத்தார்.
  • பூசைகள் பலிகள் போன்றவற்றை நிராகரித்தார்.

பிரம்மம்

ஏழாம் நூற்றாண்டில் ஆதிசங்கரர் சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்யம், சௌரம் ஆகிய ஆறு மதங்களையும் ஒன்றாக்கினார் என நூல்களில் உள்ளன. அதை ஷண்மத சம்கிரகம் என்பர். இவற்றை தத்துவத் தளத்தில் “பிரம்மம்” என்னும் மையக்கருத்தை வைத்து செய்தார். பிரம்மம் என்றால் ஒரு தத்துவ உருவகம் மட்டும்தான். இந்த பிரபஞ்சமாக நம்மைச்சூழ்ந்திருப்பது பிரம்மமே. ஆறுமதத்தின் தெய்வங்களும் நம்மால் அறியமுடியாததும், பிரபஞ்சத்தின் முதற்காரணமாக இருப்பதுமான பிரம்மத்தின் வடிவங்களே என விளக்கினார். 'ஏகதண்டி சம்பிரதாயம்' என்னும் துறவியர் மரபாக அது ஆனது. அவர்களின் வழியில்தான் ஆறுமதங்களுக்கும் பூசை செய்பவர்களான 'ஸ்மார்த்தர்' என்னும் பிராமணப் பிரிவினர் உருவாகினர்.

சங்கரர் வைதிக மரபை எதிர்த்து பிரம்மம் என்னும் தத்துவக்கடவுள் கோட்பாட்டை முன்வைத்ததன் வழியாக இந்துமதத்தின் பன்முகத்தன்மையை மீண்டும் நிறுவினார். இந்தியாவின் பலநூறு நாட்டார், பழங்குடித் தெய்வங்களை மையமரபுக்குள் கொண்டுவந்து அதன்மூலம் பக்தி இயக்கம் உருவாக வழிகோலினார். அதன் மூலம் இந்திய அரசியலில், பண்பாட்டில், சமூகவியலில் அடித்தள மக்களின் ஒரு பேரெழுச்சிக்கு வழிவகுத்தார்.அவர் தூய அறிவை மட்டுமே இறையாக முன்வைத்த அத்வைதி. அவரது நூல்கள் வேதாந்தம் என்னும் ஞானகாண்டத்தை மட்டுமே இந்துமரபின் சாராம்சமாக முன்வைப்பவை. அவர் சடங்குமதத்துக்கும் வேள்விமரபுக்கும் முழுமையான எதிரி.

முழுமுதல் தெய்வம்

பிரம்மம் என்னும் கருதுகோள் நடைமுறையில் வைதிகவேள்விகளுக்கு எதிரான பெரும் ஆற்றலாக மாறியது. அனைத்து பழங்குடித் தெய்வங்களையும் அது பிரம்மத்தின் வடிவங்களாகக் காணத்தொடங்கியது. சிவன் விஷ்ணு சக்தி போன்ற தெய்வங்களை பிரம்மத்தின் கணக்கூடிய தோற்றங்களாக விளக்கியது. அனைத்து சிறியதெய்வங்களும் அந்தப்பெரிய தெய்வங்களின் வடிவங்கள்தானே என்ற வாதம் உருவாகியது. விளைவாக சைவம் வைணவம் சாக்தம் ஆகிய மதங்கள் அனைத்து சிறுதெய்வங்களையும் உள்ளே இழுத்துக்கொண்டு பெரிய மதங்களாக வளர்ந்தன. இந்தியாவின் பலநூறு நாட்டார், பழங்குடித் தெய்வங்களை மையமரபுக்குள் கொண்டுவந்து அதன்மூலம் பக்தி இயக்கம் உருவாக வழிகோலினார். அதன் மூலம் இந்திய அரசியலில், பண்பாட்டில், சமூகவியலில் அடித்தள மக்களின் ஒரு பேரெழுச்சிக்கு வழிவகுத்தார்.

தமிழகத்தில் உருவாகி வட இந்தியா முழுக்க பரவிய பக்தி இயக்கம் என்பது முழுக்கமுழுக்க சூத்திர ஜாதிகளின் எழுச்சியினால் ஆனது. தங்கள் தெய்வங்கள் ஒருங்கிணைக்கப்பட்டபோது சிறிய சூத்திரஜாதிகள் ஒற்றைபெரும்சாதிகளாக ஒருங்கிணைந்தன. இது சூத்திரர்கள் நிலவுடைமை கொள்ளவும் பேரரசுகள் அமைக்கவும் வழிவகுத்தது. தென்னகத்தில் பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் உருவான பெரும் பேரரசுகள் அனைத்துமே பக்தி இயக்கத்தால் எழுச்சி பெற்ற சூத்திரர்களால் உருவாக்கப்பட்டவைதான். கடைசியாக உருவான நாயக்கர் பேரரசும், மராட்டியப் பேரரசும் உட்பட.

நவீன இந்தியச் சிந்தனை

இந்தியா நவீன யுகத்தை எதிர்கொண்டபோது இந்தியஞானமரபின் பின்னணியில் இருந்து சாதி பேதங்களுக்கு எதிராக, மூடப்பழக்கவழக்கங்களுக்கு எதிராக, மனிதாபிமானமற்ற சடங்குகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துவந்த ஆரம்பகட்ட புரட்சியாளர்கள் ஏறத்தாழ அனைவருமே சங்கரரை பின்பற்றிய அத்வைதிகள்தான். ராமகிருஷ்ண பரமஹம்ஸர், விவேகானந்தர், நாராயணகுரு போன்றவர்கள் உதாரணம். ஆரம்பகட்ட தலித் போராளி அமைப்புகள் பல அத்வைதசபைகள்தான். அத்வைதானந்த சபை என்னும் அமைப்பே அய்யன்காளியை உருவாக்கியது. அயோத்திதாச பண்டிதர் சென்னை அத்வைத சபையுடன் இணைந்து பணியாற்றினார்.

எழுத்து

ஆதிசங்கரர் சிவானந்த லஹரி, சௌந்தர்ய லஹரி, கோவிந்தாஷ்டகம், பஜ கோவிந்தம், சித்தாந்த சாங்கியம், விவேக சூடாமணி, ஆத்மபோதம், உபதேச சாஹஸ்ரி, கனகதாரா ஸ்தோத்திரம், சுப்ரஹ்மண்ய புஜங்கம் போன்ற நூல்களை இயற்றினார். விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்ற சமய நூல்களுக்கும் இவர் விளக்கவுரை எழுதினார். 'நிர்வாணாஷ்டகம்' என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பு. இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து இறுதியில் ”பிரம்மமே ஆனந்த மயமானவன்” என்றார். ஆறு பாடல்களும் ”சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம்” என முடியும். கேரள நம்பூதிரிகளின் சாதியநெறிகளை வகுத்துச்சொல்லும் சங்கரஸ்மிருதி சங்கரரால் எழுதப்பட்டது என்பர்.

சங்கரர் இந்துஞானமரபில் உள்ள தூய அறிவை மட்டும் முன்வைக்கும் நூல்களை விரிவான புதுவிளக்கங்கள் வழியாக பரவலாக எடுத்துச்சென்றார். விளைவாக பிரம்மம் என்னும் கருதுகோள் வலுவாக நிறுவப்பட்டது. அவரது நூல்கள் வேதாந்தம் என்னும் ஞானகாண்டத்தை மட்டுமே இந்துமரபின் சாராம்சமாக முன்வைப்பவை.

தத்துவம்

சங்கரரின் தத்துவம் 'அத்வைதம்' என்று அழைக்கப்பட்டது. இந்து சமயத்தின் மூன்று அடிப்படை நூல்களான பத்து உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதைக்கு விளக்கவுரை அளித்தார். இதன் மூலம் 'அத்வைத வேதாந்தம்' என்ற தத்துவத்தை முன்வைத்தார். அது 'பிரம்மம்' என்றும் அடிப்படையான எதார்த்தமென்றும் ஒரே சாராம்சமென்றும் அழைக்கப்பட்டது. இயற்கைப் பொருட்களின் உலகம் இந்த ஆன்மாவினால் உருவாக்கப்பட்ட ஒன்று.

பிரம்மத்தின் கனவாக நினைவுத்தடமாக இந்த உலகம் உள்ளது. இயற்கை நிகழ்வுகளின் உலகம் ஒரு பிரம்மை தான். நிலையான மனிதனிடமிருந்து மறைக்கக்கூடிய அலைகள், குமிழிகள், நுரையாக உலகம் உள்ளது.

நிரந்தர ஆன்மாவிற்கு மனித உடல் ஒரு புறவடிவம். ஆன்மா என்பது பிரம்மத்தின் அவதாரம் அல்லது துளியாக உள்ளது. நிரந்தரமான பிரம்மம் முன்னாலும், பின்னாலும், வலப்புறத்திலும், இடப்புறத்திலும் பரவியுள்ளது. இவை அனைத்திலும் பிரம்மம் ஒன்றுதான். அதுவே சிறந்தது. பிரம்மத்தை தவிர வேறெந்த பொருளும் கிடையாது. உலகின் தோற்றங்களனைத்தும் பிரம்மம் தான். வேறு எதுவுமில்லை. தெய்வீக ஆத்மாவான பிரம்மத்திடமிருந்து தான் எல்லா உயிர்களும் தோன்றின. ஆகவே அவை அனைத்தும் பிரம்மம் தான். சாதாரண மக்களின் உடனடி பிரச்னைகளுக்கு தத்துவம் வழிகாட்டாது. அது தொலைவில் உள்ளது.

சங்கரர் தத்துவவாதி வாழ்க்கைக்கு வெளியில் நின்று அதை காண வேண்டும் என்று எழுதினார். ஒரே உண்மையான எதார்த்தம் என்பது பிரம்மமே. நிகழ்ச்சிகள் நிரம்பிய தற்காலிக உலகம் உண்மையான அறிவாகாது. பிரம்மத்தை புரிதல் மட்டுமே உண்மையான அறிவாகும் என்பது சங்கரரின் அத்வைதம். அத்வைத தரிசனத்தின்படி பிரம்மம் ஒன்றே மெய், இவ்வுலகு மாயை. இதன் அழகுகளும் கடமைகளும் எல்லாமே உளமயக்குகள். அதனால் அத்வைதம் இந்த உலகின் அழகுகளையும் கடமைகளையும் நிராகரிப்பதில்லை. அவற்றை மேலும் திறம்படச்செய்யவே அது வழிகாட்டுகிறது.

விவாதம்

நடராஜ குரு சௌந்தர்ய லஹரி ஆதிசங்கரரால் இயற்றப்பட்டது என்றே நினைக்கிறார். அதற்கான விளக்கங்களையும் அளிக்கிறார். அவருடைய கோணத்தில் அத்வைதத்தின் கறாரான தத்துவநோக்கை சமன்செய்யும் அழகியல் சார்ந்த தளம் சௌந்தரிய லஹரி. ஆதிசங்கரர் எழுதிய விவேகசூடாமணி போன்ற வேதாந்த நூலின் மறுபக்கம்.

”புலனறிவு நிலையில் இருந்து காரண அறிவு நிலையினை எய்தி இருந்த ஆதிசங்கரர், காரண அறிவின் முழுவீச்சுடன் மீண்டும் புலனறிவினை வந்து அடைந்திடவில்லை என்பதுதான் அவரது சிந்தனையின் குறைபாடு என்று எனக்குத் தோன்றுகிறது.” என சோதிப்பிரகாசம் குறிப்பிட்டார்.

”இந்திய சிந்தனைமரபை மேலோட்டமாக எழுதுபவர்கள் சங்கரர் பௌத்தர்களிடம் வாதிட்டவர் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்திய ஞான்நூல்களை கொஞ்சமேனும் வாசிப்பவர்கள் சங்கரர் பிற இந்து மதப்பிரிவினரால்தான் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பதை காண்பார்கள். சங்கரர் மறைந்து ஆயிரம் வருடங்களாகியும் கூட வைதிகர்கள் சங்கரரை மிகமிகக் கடுமையாக மறுத்து வசைபாடுவது நீடித்தது. சங்கரர் இந்துமதத்தை பௌத்த தர்க்கங்களைக்கொண்டு அழிக்கவந்தவர் என்றும் ‘மாறுவேடமிட்ட பௌத்தர்’ {பிரச்சன்ன பௌத்தர்) என்று வசைபாடப்பட்டார்.’நீச சங்கரன்’ என்றே ஒவ்வொரு முறையும் குறிப்பிடும் மதமரபுகள் இன்றும் உள்ளன.

சங்கரர் மீதான திரிபுகளில் முக்கியமானது அவரை பக்தராகவும் சடங்குகளைச் செய்பவராகவும் திரித்ததுதான். தூய அறிவைக் கறாரான தர்க்கத்துடன் முன்வைக்கும் அவர் அழகின் உன்மத்தம் ததும்பும் ‘சௌந்தரிய லகரி’யை எழுதினார் என்று வரலாறு எழுதப்பட்டது. தன் நூல்களில் உலகியல் நோக்கங்களுக்காக செய்யப்படும் வேள்விகளை மிகமிகக் கடுமையாக நிராகரிக்கும் ஆதிசங்கரர் பொன்மழையை பெய்யவைக்க ‘கனகதாரா ஸ்தோத்திரம்’ எழுதினார் என்று சொல்லப்பட்டது. ஏன் அத்வைதத்தையே நிராகரிக்கும் ‘பஜகோவிந்தம்’ பாடலே அவர் எழுதியது என்கிறார்கள்.

இந்நூல்களின் மொழிநடையே அவை மிகப்பிற்காலத்தையவை என்று காட்டுகின்றன. அதாவது நம்மாழ்வார் பாரதியார் பாடல்களை பாடினார் என்பதுபோல. அவை வேறு சங்கரர்களால் எழுதப்பட்டவையாக இருக்கலாம். அதேபோல சங்கர மடங்களுக்கும் ஆதிசங்கரருக்கும் வரலாற்றுத்தொடர்பு ஏதும் இருந்திருக்க நியாயமில்லை. சங்கரரின் காலம் ஏழாம் நூற்றாண்டு அல்லது அதற்கும் முன் என்னும்போது அன்றிலிருந்தே இன்றுள்ள சங்கர மடங்கள் உள்ளன என்பதற்கு அவையே சொல்லும் ஆதாரமில்லாத வரலாறன்றி ஆதாரம் ஏதுமில்லை.” என எழுத்தாளர் ஜெயமோகன் மதிப்பிட்டார்.

”சங்கரரின் தத்துவ தரிசனத்தில் உள்ள தூயஞானம் என்ற கருத்து தர்க்கத்திற்கு பொருத்தமானதாக இருப்பினும் நடைமுறை அனுவத்தால் ஆதரிக்கப்படவில்லை என்றுதான் நான் அதை ஏற்க மறுக்கிறேன். செயலால் மனம் விளைந்து கனிந்தாலொழிய, செயல் யோகமாகி ஞானம் திரண்டாலொழிய, மெய்ஞானம் எவருக்கும் வாய்ப்பதில்லை என்றே நினைக்கிறேன். கற்றறிந்து ஞானம் கொண்ட எவரையும் நான் கண்டதில்லை. கற்றதனாலேயே அபத்தமான கர்விகளாகவோ சுயஏமாற்றுக்காரர்களாகவோ மாறியவர்களையே அதிகமும் கண்டிருக்கிறேன். கீதையில் கிருஷ்ணன் அழுத்தமாகக் கூறுவதும் இதையே.” என ஜெயமோகன் குறிப்பிட்டார்.

மதிப்பீடு

சங்கரரின் ஞானவாதம் என்பது மேற்கே இம்மானுவல் காண்ட் முன்வைத்த தூய கரணிய ஞானம் (Pure Reason) என்ற பிற்காலத்து தத்துவக் கோட்பாட்டுக்கு மிக நெருக்கமானது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். மார்க்ஸிய ஆய்வாளர்களான கெ.தாமோதரன் (இந்திய சிந்தனை) இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு போன்றவர்கள் சங்கரர் தூய அறிவின் பண்பாட்டு முக்கியத்துவத்தை நிறுவியவர், நம்பிக்கை சார்ந்த சடங்குகளுக்கு எதிராக தத்துவத்தின் வலிமையை நிலைநாட்டியவர் என்று மதிப்பிட்டனர்.

மரபு

"சங்கர அத்வைதம் இந்தியச் சிந்தனையில் ஆழமான பாதிப்பை நிகழ்த்திய ஒன்று. சங்கரருக்குப் பின் வந்த இந்திய சிந்தனையின் எல்லாத் தளங்களிலும் சங்கரரின் பங்களிப்பு உண்டு. சங்கரரை மறுக்கும் தரப்புகள் கூட தங்கள் உருவாக்கத்தில் அவருக்குக் கடன்பட்டுள்ளன. ‘பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே பிரம்மம். அனைத்துமே ஒன்று’ என்பது ஒர் அறிவார்ந்த கொந்தளிப்பை உருவாக்கும் கருத்து. நவீன யுகத்தில் ராமகிருஷ்ண பரமஹம்சரும், விவேகானந்தரும், சகஜானந்தரும், நாராயணகுருவும் சங்கர மெய்ஞானத்தால் தூண்டப்பட்டு அதை மேலெடுத்துச் சென்றவர்களே. இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு பார்க்கும் போதும் சங்கரரின் அணுகுமுறையே அறிவார்ந்தாக என்னுள் உள்ள நவீன வாசகனுக்குப் படுகிறது" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.

மாணவர்கள்
மாணவர் சிறப்பு
பத்மபாதர் ஆழ்ந்த பக்தி மற்றும் கவிதைக்கு பெயர் பெற்றவர்.
தோடகாச்சார்யர் சங்கராச்சாரியாரின் பணிக்காக அர்ப்பணித்தவர் மற்றும் அவரது 'தோடகாஷ்டகம்' கவிதைக்காக மதிக்கப்பட்டார்.
ஹஸ்தாமலகர் குழந்தையிலேயே அத்வைத தத்துவத்தைப் புரிந்து கொண்டு சங்கராச்சாரியாரை வியப்பில் ஆழ்த்தியவர்
சுரேஷ்வரர் இல்லறத்தில் இருந்த அவர் சங்கராச்சாரியாரிடம் ஒரு தத்துவ விவாதத்தில் தோல்வியடைந்த பிறகு அவரின் சீடரானார்.

மறைவு

ஆதிசங்கரர் தனது 32-ஆவது வயதில் கேதார்நாத்தில் சமாதி அடைந்தார்.

நினைவு

  • ஆதிசங்கரரின் 108 அடி உயர நினைவுச்சின்னம் 'ஏகாத்மாதா கி பிரதிமா' (இரண்டின்மையின் உருவம்) மத்தியப் பிரதேசத்தின் கந்த்வா மாவட்டத்தில் உள்ள ஓம்காரேஷ்வரில் திறக்கப்பட்டது

நூல் பட்டியல்

  • சௌந்தர்யலஹரி
  • சிவானந்தலஹரி
  • கோவிந்தாஷ்டகம்
  • பஜ கோவிந்தம்
  • சித்தாந்த சங்கிரகம்
  • விவேகசூடாமணி
  • ஆத்மபோதம்
  • உபதேச சாஹஸ்ரி
  • கனகதாரா ஸ்தோத்திரம்
  • சுப்ரஹ்மண்ய புஜங்கம்
  • நிர்வாணாஷ்டகம்

இணைப்புகள்


✅Finalised Page