காப்பியங்கள்
வடமொழியில் ‘காவ்யா’ என்றால் ’பாடல்’ என்பது பொருள். தமிழில் தொல்காப்பியம், காப்பியக் குடி, வெள்ளூர்த் தொல்காப்பியர், காப்பியஞ் சேந்தனார், காப்பியாற்றுக் காப்பியனார் முதலான பெயர்கள் காணப்படுகின்றன. ஆனால், காப்பியத்திற்கான இலக்கணங்கள் எதுவும் சங்க நூலான தொல்காப்பியத்தில் குறிப்பிடப்படவில்லை. பொது சகாப்தம் 12-ம் நூற்றாண்டில் தோன்றிய தண்டியலங்காரமே காப்பியத்திற்குரிய இலக்கணத்தைக் கூறுகின்றது.
தண்டி கூறும் காப்பிய இலக்கணம்
பெருங்காப்பிய நிலை பேசுங்காலை
வாழ்த்து வணக்கம் வருபொருள் இவற்றில் ஒன்று
ஏற்புடைத்தாகி முன்வர இயன்று
நாற்பொருள் பயக்கும் நடைநெறித் தாகித்
தன்னிகர் இல்லாத் தலைவனை உடைத்தாய்...
- என்று குறிப்பிடுகிறது தண்டி.
பன்னிரு பாட்டியல், நவநீதப் பாட்டியல், வச்சணந்திமாலை, மாறனலங்காரம் முதலான பாட்டியல் நூல்களும் காப்பிய இலக்கணம் பற்றிக் கூறியுள்ளன.
நல்வினை, தீவினைப் பலன்களை உலக வாழ்க்கையில் அனுபவித்து, நல்வினையாற்றி, இறுதியில் இறவா இன்பமாகிய இறைநிலை எய்துதலைப் பற்றிக் கூறுகின்றவையே பொதுவாகக் காப்பியங்கள் எனப்படுகின்றன.
பெருங்காப்பியங்கள்
பெருங்காப்பியங்கள் என்பவை தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனைப் பற்றிய கதையாக அமைய வேண்டும் என்று தண்டியலங்காரம் கூறுகிறது.
சிறு காப்பியங்கள்
சிறு காப்பியங்களுக்கான தனி இலக்கணம் மேற்கூறிய இலக்கண நூல்களில் இடம் பெறவில்லை. பெருங்காப்பியம் தரும் நாற்பொருளில் சில குறைந்து வருவது சிறு காப்பியமாகக் கருதப்படுகிறது. பெருங்காப்பியச் சுருக்கமும் சிறுகாப்பியமாகவே கருதப்படுகிறது. பெருங்காப்பியங்களுக்கு உள்ள உயர்ந்த, பரந்துபட்ட, நாடு தழுவிய ஓர் உன்னதத் தன்மை சிறுகாப்பியங்களுக்கு இல்லை.
தமிழில் காப்பியங்கள்
தமிழில் காப்பியப் படைப்பு, இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து தொடங்கியது எனலாம். சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன பெருங்காப்பியங்கள் என்றும்; உதயண குமார காவியம், நாக குமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி ஆகியன சிறு காப்பியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும், சீத்தலைச் சாத்தனாரின் மணிமேகலையும் தமிழில் முதற் காப்பியங்களாகப் கருதப்படுகின்றன
காப்பியங்களின் பட்டியல்
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.