first review completed

மேலாண்மை பொன்னுச்சாமி

From Tamil Wiki
Revision as of 07:09, 31 December 2022 by Madhusaml (talk | contribs)
மேலாண்மை பொன்னுச்சாமி: படம் நன்றி - விகடன்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி

மேலாண்மை பொன்னுச்சாமி (செ. பொன்னுச்சாமி; கலைக்கண்ணன்; அன்னபாக்கியன்; அன்னபாக்கியச் செல்வன்; ஆமர்நாட்டான்) (1951- அக்டோபர் 30, 2017) எழுத்தாளர்.  வட்டார வழக்கில் பல சிறுகதைகளையும், புதினங்களையும் படைத்தார். மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்து செயல்பட்டார். தனது படைப்புகளுக்காகப் பல்வேறு விருதுகள் பெற்றார்.

பிறப்பு, கல்வி

செ. பொன்னுச்சாமி என்னும் மேலாண்மை பொன்னுச்சாமி, 1951-ல், விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மேலாண்மறைநாடு எனும் கிராமத்தில் சு.செல்லச்சாமி-அன்னபாக்கியம் இணையருக்குப் பிறந்தார். இளம் வயதிலேயே பெற்றோரை இழந்தார். ஐந்தாம் வகுப்போடு கல்வி முற்றுப்பெற்றது.

மேலாண்மை பொன்னுச்சாமி இளம் வயதுப் படம் (படம் நன்றி : https://ruralindiaonline.org/)

தனி வாழ்க்கை

விவசாயக் கூலி, பெட்டிக்கடைப் பணியாள், புளி வியாபாரி எனப் பல பணிகளை மேற்கொண்டார். சகோதரருடன் இணைந்து மேலாண்மறைநாட்டில் மளிகைக் கடை ஒன்றை நடத்தினார். விவசாயத் தொழிலை மேற்கொண்டார். மனைவி: பொன்னுத்தாய். பிள்ளைகள்: வைகறைச் செல்வி, தென்றல், வெண்மணிச் செல்வன்.

எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி (படம் நன்றி : இந்து தமிழ் திசை)

இலக்கிய வாழ்க்கை

மேலாண்மை பொன்னுச்சாமி படிக்க வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தார். கல்வி தடைப்பட்டதால் நாளிதழ்கள், நூல்கள் வாசித்து தனது வாசிப்பார்வத்தை வளர்த்துக் கொண்டார். வாசித்த ஜெயகாந்தனின் நூல்கள் இவருள் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதல் சிறுகதை ’பரிசு’, 1972-ல், ‘செம்மலர்’ இதழில் வெளியானது. ஆசிரியராக இருந்த கே.முத்தையா பொன்னுச்சாமியைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். ‘தீக்கதிர்’, ‘குங்குமம்’, ’குமுதம்’, ‘வாசுகி’, 'கல்கி’, ’தாமரை’, ’இதயம் பேசுகிறது’ ‘சுபமங்களா’, ’அமுதசுரபி’, ‘இந்தியா டுடே’, ’தமிழரசி’, ’தினமணி கதிர்’, ‘மகுடம்’, ‘ஜனரஞ்சனி’, ‘தேவி’, ‘ராணி’, ‘ஓம்சக்தி’, ’விழிப்பு’, ‘புதிய பார்வை’, ‘தமிழன் எக்ஸ்பிரஸ்’ எனப் பல முன்னணி இதழ்களிலும், இலக்கியச் சிற்றேடுகளிலும் சிறுகதை, தொடர்கள் எழுதினார். ’ஆனந்தவிகடன்’ இதழின் ஆசிரியர் எஸ். பாலசுப்ரமணியன், மேலாண்மை பொன்னுச்சாமியை ஊக்குவித்தார். சிறுகதை, தொடர்கதை என்று பல படைப்புகளை விகடன் இதழில் வெளியிட்டார்.

மேலாண்மை பொன்னுச்சாமியின் முதல் சிறுகதைத் தொகுப்பு ’மானுடம் வெல்லும்’ 1981-ல் வெளியானது. பதிப்பகங்கள் எதுவும் அத்தொகுப்பை வெளியிட முன் வராததால் தானே தன் வீட்டில் வளர்த்த ஆட்டுக்குட்டிகளை விற்று வந்த தொகையில் அந்த நூலைப் பதிப்பித்தார். தொடர்ந்து பல நூல்கள் வெளிவந்தன.

300-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், பத்துக்கும் மேற்பட்ட நாவல், குறுநாவல்களைத் தந்துள்ளார் மேலாண்மை பொன்னுச்சாமி. இவரது படைப்புகள் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக அளவில் மாணவர்களுக்குப் பாட நூல்களாக வைக்கப்பட்டன. இவரது படைப்புகளை ஆராய்ந்து பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இள முனைவர், முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளனர். இவரது ‘மின்சாரப் பூவே' என்ற சிறுகதை தொகுப்பிற்கு 2008-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

பொறுப்புகள்

’செம்மலர்’ இலக்கிய இதழில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவர்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார்.

மேலாண்மை பொன்னுச்சாமி

பரிசுகள்/விருதுகள்

பரிசுகள்
  • ‘கல்கி’ சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (சிபிகள்)
  • 'கல்கி' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (அரும்பு)
  • 'கல்கி' பொன்விழா நாவல் போட்டியில் முதல் பரிசு (முற்றுகை)
  • ‘வாசுகி' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (பூச் சுமை)
  • ‘தமிழ் அரசி' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (தாய்மதி)
  • 'இதயம் பேசுகிறது' சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (விரல்)
  • ‘ஆனந்தவிகடன்' பவளவிழா ஆண்டில் முத்திரைப் பரிசுகள் (ஆறு சிறுகதைகளுக்கு)
  • ‘ஆனந்த விகடன்' பவள விழா ஆண்டில் ஓவியத்திற்கான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (அன்பூ வாசம்)
  • ‘ஆனந்தவிகடன்' இதழின், 'தண்ணீரைத்தேடி' என்னும் பொதுத் தலைப்பிலான சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு (பூமனச் சுனை)
  • இலக்கியச் சிந்தனை மாதாந்திரப் பரிசு - பல சிறுகதைகளுக்காக.
  • இலக்கியச் சிந்தனை வருடாந்திரப் பரிசு - ரோஷாக்னி-1998
விருதுகள்
  • பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது - ’உயிர்க் காற்று’ சிறுகதைத் தொகுப்புக்காக.
  • பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது - ‘அன்பூ வாசம்’ சிறுகதைத் தொகுப்புக்காக.
  • பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது - 'ஊர்மண்' நாவலுக்காக.
  • திருப்பூர் தமிழ்ச்சங்க விருது - ‘அன்பூ வாசம்' சிறுகதைத் தொகுப்புக்காக.
  • அமரர் தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருது. ‘மானாவாரிப்பூ’ சிறுகதைத் தொகுப்புக்காக.
  • கோவை லில்லி தேவிசகாமணி நினைவு இலக்கிய விருது - ‘பூச்சுமை’ சிறுகதைத் தொகுப்புக்காக.
  • சென்னை அனந்தாச்சாரியார் அறக்கட்டளை இலக்கிய விருது - ‘பூக்காத மாலை’ சிறுகதைத் தொகுப்புக்காக.
  • தமிழக அரசின் இலக்கிய விருது 'ஒரு மாலை பூத்து வரும்’ - சிறுகதைத் தொகுப்புக்காக.
  • தமிழக அரசின் இலக்கிய விருது - ’மனப் பூ’ சிறுகதைத் தொகுப்புக்காக.
  • சாகித்திய அகாடமி விருது - 'மின்சார பூவே' சிறுகதைத் தொகுப்புக்காக.
  • சிறந்த இலக்கியப் படைப்பாளி விருது - கோவை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில மாநாட்டில் வழங்கப்பட்டது.
  • அருட்திரு அமுதன் அடிகளார் இலக்கிய விருது
  • வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் ‘மாட்சிமைப் பரிசு’.

மறைவு

மேலாண்மை பொன்னுச்சாமி, அக்டோபர் 30, 2017 அன்று, தனது 66 ஆம் வயதில் உடல்நலக்குறைவால் காலமானார்.

நாட்டுடைமை

தமிழக அரசால் மேலாண்மை பொன்னுச்சாமியின் நூல்கள், அவரது மறைவுக்குப் பின், 2018-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டன.

இலக்கிய இடம்

கரிசல் மண் மக்களின் வாழ்க்கையைத் தனது படைப்புகளை முன் வைத்தவர் மேலாண்மை பொன்னுச்சாமி. பொதுவுடைமைச் சித்தாந்த நோக்கத்தில், இயல்பான பேச்சு நடையில், வட்டார வழக்கில் எழுதினார். பெண் சார்ந்த சிக்கல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார். வட்டாரச் சொலவடைகள் மிக அதிக அளவில் இவரது படைப்புகளில் இடம் பெற்றன. மரபின் பெருமைகளையும், மரபின் சிதைவுகளையும் தனது படைப்புகளில் முன்னிலைப் படுத்தினார். முற்போக்கு இயக்கம் சார்ந்த எழுத்தாளரான மேலாண்மை பொன்னுச்சாமி, அவ்வியக்கத்தின் முதன்மைப் படைப்பாளிகளுள் ஒருவராக மதிப்பிடப்படுகிறார்.

மேலாண்மை பொன்னுச்சாமி பற்றி ஜெயமோகன், “அடித்தள மக்களின் வறுமை, அவ்வறுமையிலும் வெளிப்படும் அவர்களின் பண்பாட்டுச் செழுமை , அரசியல் படுத்தப்பட்ட அவர்கள் அடையும் சமூகப்பார்வை ஆகியவற்றை திரும்ப திரும்ப மேலாண்மை பொன்னுச்சாமி எழுதினார்.” என்று குறிப்பிடுகிறார் [1].

மேலாண்மை பொன்னுச்சாமி நூல்கள்

நூல்கள்

சிறுகதைத் தொகுப்புகள்
  • மானுடம் வெல்லும்
  • சிபிகள்
  • பூக்காத மாலை
  • மானுடப் பிரவாகம்
  • காகிதம்
  • கணக்கு
  • தழும்பு
  • தாய்மதி
  • விரல்
  • உயிர்க்காற்று
  • என்கனா
  • ஒரு மாலை பூத்து வரும்
  • அன்பூ வாசம்
  • மனப் பூ
  • பூச் சுமை
  • வெண்பூ மனம்
  • மானாவாரிப் பூ
  • மின்சாரப் பூ
  • பூ மனச் சுனை
  • ராசாத்தி
நாவல்கள்
  • உயிர் நிலம்
  • முற்றுகை
  • இனி...
  • அச்சமே நரகம்
  • ஆகாய சிறகுகள்
  • ஊர் மண்
  • முழுநிலா
குறு நாவல்கள்
  • ஈஸ்வர...
  • பாசத்தீ
  • தழும்பு
  • கோடுகள்
  • மரம்
கட்டுரை
  • சிறுகதைப் படைப்பின் உள்விவகாரம்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.