under review

வினையன்

From Tamil Wiki
Revision as of 00:34, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:கவிஞர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வினையன்

வினையன் (பிறப்பு: 1990) தமிழில் எழுதிவரும் கவிஞர், எழுத்தாளர். கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். இலக்கிய நிகழ்வுகளில் உரை நிகழ்த்துகிறார். வழக்காற்று மொழியில் கவிதைகளையும் கதைகளையும் படைத்து வரும் இவர், தலித் வழக்காற்றுப் பாடல்களைத் தொகுத்து வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

வினையன் தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் அ.விஸ்வநாதன், த.ராஜகாந்தம் இணையருக்கு டிசம்பர் 24, 1990-ல் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு மூத்த சகோதரி. ஆரம்பக்கல்வியை கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள ஆதிதிராவிடர் நலத் தொடக்கப்பள்ளியில் பயின்றார். உயர்கல்வியை கங்கைகொண்ட சோழபுரத்திலுள்ள அரசினர் உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மேல்நிலைக் கல்வியை மீன்சுருட்டி அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்றார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தத்தனூர் மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் பட்டயப் படிப்பு பயின்றார். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில் வேளாண் பட்டயப் படிப்பு பயின்றார். சென்னை தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் தமிழில் இளங்கலைப்பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

வினையன் ஜூன் 8, 2014-ல் ராஜலெட்சுமியை மணந்தார். மகள் மதிவதனி, மகன் ஆதித்தன்.

வினையன் பணி நிமித்தமாகச் சென்னையில் இருக்கிறார். 2010-லிருந்து 2015 வரை லாண்டரி கடை ஒன்றில் பணிபுரிந்தார். 2016-லிருந்து 2019 வரை தொழில் முனைவோராக இருந்தார். 2020-லிருந்து தற்போது வரை பத்திரிகை சார்ந்த பணியில் இருக்கிறார்.

அரசியல் வாழ்க்கை

வினையன் தொடக்கத்தில் தமிழ்த்தேசியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இன அழிப்புக்கு எதிராக பல்வேறு அமைப்புகளோடு இணைந்து ஆதரவுக் குரல் எழுப்பி களத்தில் போராடினார். ஒத்த கருத்துள்ள இளைஞர்களுடன் இணைந்து சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராகச் செயல்பட 'காற்புள்ளி' எனும் அமைப்பைத் தொடங்கினார். பின்பு மார்க்சிய, அம்பேத்கரிய, பெரியாரிய கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மானுட விடுதலைக்கான களங்களில் செயல்படுகிறார். மாணவர் கல்வி உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டார்.

பிற செயல்பாடுகள்

  • 'மருதம்' கலைக்குழுவின் நிறுவனர்.
  • வழக்காற்றுப் பாடல்களைக் குரல் ஆவணங்களாக்கும் முயற்சியில் உள்ளார்.
  • தொன்மையான இசைக்கருவிகளை சேகரிக்கிறார்.

இலக்கிய வாழ்க்கை

வினையனின் முதல் கவிதைத் தொகுப்பு 'எறவானம்' 2016-ல் மணல்வீடு வெளியீடாக வந்துள்ளது. வினையனின் படைப்புகள் கணையாழி, ஆனந்த விகடன், மணல்வீடு, தளம், படிகம், கீற்று.காம், நடுகல், நீலம், வாசகசாலை, விகடன் தடம், காமதேனு, நுட்பம் ஆகிய இதழ்களில் வெளிவந்துள்ளன. இலக்கிய நிகழ்வுகளில் உரையாற்றி வருகிறார்.

வினையன் தன் ஆதர்ச எழுத்தாளர்களாக புதுமைப்பித்தன், மகாஸ்வேதா தேவி, கு. அழகிரிசாமி, பூமணி, பிரபஞ்சன், சுதாகர் கத்தக், பொதிய வெற்பன், தொ. பரமசிவன், கறுத்தடையான், தவசி கருப்பசாமி, என்.டி. ராஜ்குமார், வெய்யில் ஆகியோரைக் குறிப்பிடுகிறார்.

விருதுகள்

  • தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் வழங்கிய 'பின்னையூர் மா. சண்முகம்' நினைவு விருது.
  • தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை வழங்கிய 'அசோகமித்திரன்' நினைவு விருது

நூல் பட்டியல்

கவிதைத் தொகுப்பு
  • எறவானம்
  • எச்சிக்கொள்ளி

இணைப்புகள்


✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 13-Jul-2024, 19:40:24 IST