under review

சு.வெங்கடேசன்

From Tamil Wiki
Revision as of 17:32, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
வெங்கடேசன் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: வெங்கடேசன் (பெயர் பட்டியல்)
சு.வெங்கடேசன்

சு. வெங்கடேசன்(பிறப்பு:மார்ச் 16, 1970) தமிழ் நாவலாசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி. வரலாற்று நாவல்களை எழுதினார். இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்ட்) கட்சி உறுப்பினராகவும் முழுநேர ஊழியராகவும் இருப்பவர். இந்திய பாராளுமன்ற உறுப்பினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

thehindu.com

பிறப்பு,கல்வி

சு.வெங்கடேசன் மதுரை ஹார்விபட்டியில் மார்ச் 16,1970 அன்று நல்லம்மாள்-சுப்புராம் இணையருக்குப் பிறந்தார்.

முத்துத்தேவர் முக்குலத்தோர் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வியை முடித்தார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளம் வணிகவியல் (B.com) பட்டம் பெற்றார்.

நன்றி:விகடன்.காம்

தனி வாழ்க்கை

சு.வெங்கடேசன் கமலாவை 1998-ல் மணந்துகொண்டார். யாழினி, கமலினி என்று இரு மகள்கள்.

சு.வெங்கடேசன் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றினார்.

அரசியல் பணி

சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். படிப்பை முடித்தபின் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்தார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

சு. வெங்கடேசன் இந்திய கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்ஸிஸ்ட்)யின் மாநிலக்குழு உறுப்பினரா 2018 முதல் 2022 வரை பணியாற்றினார்

சு.வெங்கடேசன் 2019-ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

சு.வெங்கடேசன் 2024-ல் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை தொகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

இதழியல்

சு.வெங்கடேசன் கல்லூரிப்படிப்பை முடித்தபின் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய இதழான செம்மலர்'ரில் துணை ஆசிரியராகச் சேர்ந்து நான்காண்டுகள் பணியாற்றினார்

இலக்கிய அமைப்புப் பணிகள்

சு.வெங்கடேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளராக 2011 முதல் 2018 வரை பணியாற்றினார். அவ்வமைப்பின் மாநிலத்தலைவராக 18 செப்டம்பர் 2011 முதல் 24 ஜூன் 2018 வரை பணியாற்றினார்

இலக்கியப் பணி

சு.வெங்கடேசன் கல்லூரி முதலாண்டில் (1989) "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். கல்லூரியில் படிக்கும்போது தமிழ்க்கூத்தன் என்கிற தோழர் மூலமாக இடதுசாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. செம்மலர் இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார்.

படைப்பாளியாக மாறுவதற்கான பின்னணியாக தன் தமிழாசிரியர் இளங்குமரனாரையும் , பால்யத்தை கதைகள் மற்றும் வாழ்வனுபவங்களால் நிறைத்த இரு பாட்டிகளையும் குறிப்பிடுகிறார்.

காவல்கோட்டம்

சு.வெங்கடேசன் அரசியல்பணியாளராக பரவலாக அறிமுகமாகியிருந்தாலும் இலக்கியவாதியாக அறிமுகமானது 2008ல் வெளிவந்த அவருடைய முதல் நாவலான காவல்கோட்டம் என்னும் படைப்பின் வழியாகவே. மதுரையின் காவலுரிமை மரபுவழியாக அங்குவாழும் கள்ளர் மறவர் இன மக்களிடம் இருந்ததையும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அது பறிபோனதையும் பின்னர் அது மீட்கப்பட்டதையும் சொல்லும் நாவல் இது.

வீரயுகநாயகன் வேள்பாரி

புறநாநூற்றில் குறிப்பிடப்படும் சிறு அரசர்களில் ஒருவரான வீரயுகநாயகன் வேள்பாரி பற்றியும் அவருடைய நண்பரும் சங்ககாலக் கவிஞருமான கபிலர் பற்றியும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். 2018ல் வெளிவந்தது பொதுவாசிப்புக்குரிய இந்நாவல் தமிழில் மிகப்பெரிய வாசக வரவேற்பைப் பெற்ற ஒன்று. சங்ககாலத்தின் வாழ்க்கைமுறைகளை விரிவான தரவுகளுடன் சித்தரிப்பது."அலங்காரப்பிரியர்கள்" , பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள், தகவல்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.

ஆய்வுகள்

சு.வெங்கடேசன் எழுதிய கதைகளின் கதை வாய்மொழி கதைகள் மற்றும் அன்றட நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் வரலாற்றை எடுத்துக் காட்டும் நூல்.

கீழடி குறித்து சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில்எழுதிய தொடர் கட்டுரை "வைகை நதி நாகரிகம்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

அரசியல் நூல்கள்

சு.வெங்கடேசன் பண்பாட்டு அரசியல் பற்றி பத்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்

விருதுகள்

  • சி. கே. கே. அறக்கட்டளை இலக்கிய விருது 2023 - வீரயுக நாயகன் வேள்பாரி
  • கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் 2010 - சிறப்புப் பரிசு - காவல் கோட்டம்
  • 2011-ம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது
  • 2019-ஆன் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்ட இயல் விருது
  • 2020 மலேசியா டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் வீரயுக நாயகன் வேள்பாரி

இலக்கிய இடம்

சு.வெங்கடேசன் தமிழக முற்போக்கு அரசியல் அணியின் முதன்மைக் குரல்களில் ஒருவராக பண்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் கருத்துக்களை முன்வைத்து வருகிறார். மதவாத அரசியலுக்கு எதிராக தீவிரமான நிலைபாடுகொண்டவராக அறியப்படுகிறார். விரிவான வரலாற்றுத் தரவுகளுடன் அவர் எழுதிய காவல்கோட்டம் நாவல் தமிழின் முதன்மையான வரலாற்றுப்படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சங்ககாலத்தை நுண்ணிய தரவுகளுடன் மீட்டுருவாக்கம் செய்த வேள்பாரி தமிழ்வாசகர்களால் அதிகமாக விரும்பிப்படிக்கப்பட்ட படைப்புகளில் ஒன்று.

நூல்கள்

நாவல்கள்
  • காவல்கோட்டம்
  • சந்திரஹாசம் (வரைகலைநாவல்)
  • வீரயுகநாயகன் வேள்பாரி
கவிதை
  • ஓட்டை இல்லாத புல்லாங்குழல்
  • திசையெல்லாம் சூரியன்
  • பாசி வெளிச்சத்தில்
  • ஆதிப் புதிர்
அரசியல்
  • கலாசாரத்தின் அரசியல்
  • மதமாற்றத் தடைச் சட்டம் மறைந்திருக்கும் உண்மைகள்
  • கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே?
  • மனிதர்கள், நாடுகள், உலகங்கள்
  • ஆட்சித் தமிழ் ஒரு வரலாற்றுப் பார்வை
  • உ.வே.சா. சமயம் கடந்த தமிழ்
  • அலங்காரப் பிரியர்கள்
  • கீழடி
  • வைகை நதி நாகரிகம்
  • கதைகளின் கதை
  • இந்தியில் மட்டும் பதில் சட்ட விரோதம்
மொழியாக்கம்
  • இந்தி இந்துத்துவா இந்துராஜ்ஜியம் (சீத்தாராம் யெச்சூரி)
ஆங்கிலம்
  • Chandrahasam

உசாத்துணை

அடிக்குறிப்புகள்




✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 09:57:38 IST