under review

குலச்சிறை நாயனார்

From Tamil Wiki
Revision as of 17:31, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
குலச்சிறை நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

குலச்சிறை நாயனார். சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

குலச்சிறை நாயனார் மதுரையில் வாழ்ந்தவர். மதுரையை ஆண்ட மன்னன் நின்றசீர் நெடுமாறனிடம் (கூன் பாண்டியன்) தலைமை அமைச்சராய்ப் பணியாற்றினார். சிறந்த சிவபக்தராகத் திகழ்ந்தார். சிவனடியார்களுக்குத் தேவையான அனைத்து நற்பணிகளையும் செய்தார். அதனால், சுந்தரமூர்த்தி நாயன்மாரால் 'பெருநம்பி' என்று போற்றப்பட்டார்.

சிவத்தொண்டு

நின்றசீர் நெடுமாறன் சமண சமயம் சார்ந்து இருந்தான். மக்கள் பலரும் சமண சமயத்தை ஆதரித்தனர். குலச்சிறை நாயனார் மன உறுதியுடன் சைவ சமயம் சார்ந்திருந்தார். மன்னனின் மனைவியும், சிறந்த சிவபக்தையுமான மங்கையர்க்கரசியார் செய்து வந்த திருத்தொண்டுக்கு உதவினார்.

மன்னனின் ஆதரவுடன் சமணர்கள், தங்கள் ஆதிக்கத்தைப் பரப்பப் பல வழிகளிலும் முயன்றனர். அதற்காக அவர்கள் பல சதிச் செயல்களைச் செய்தனர். குலச்சிறையார் துணிந்து அவற்றை எதிர் கொண்டார். அரசி மங்கையர்க்கரசரியாரின் சொற்படி குலச்சிறையார், திருமறைக்காட்டில் எழுந்தருளியிருந்த ஞானசம்பந்தப் பெருமானை நேரில் சென்று சந்தித்தார். மதுரையில் நிலவும் சூழல்களை எடுத்துச் சொல்லி, மதுரைக்கு வர விண்ணப்பித்தார்.

அவ்வாறே ஞானசம்பந்தர் மதுரைக்கு வந்து சமணர்களுடன் அனல்வாதம், புனல் வாதம் புரிந்து, சைவத்தை நிலைநாட்டியதாகவும் நெடுமாறனின் கூனை நீக்கி அவனை நின்ற சீர் நெடுமாறன் ஆக்கியதாகவுன் பெரிய புராணம் கூறுகிறது. இதற்கெல்லாம் காரணமாக இருந்த குலச்சிறையார், குலச்சிறை நாயனார் என்று போற்றப்பட்டார். வாழ்நாள் இறுதிவரை சிவத்தொண்டு புரிந்து சிவபதம் பெற்றார்.

பெரு நம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்

குலச்சிறையார் அரசி பாண்டிமாதேவிக்கு உதவியாக சிவத்தொண்டு புரிதல்

ஆய செய்கையர் ஆயவர் ஆறு அணி
நாயனார் திருப் பாதம் நவின்று உளார்
பாய சீர் புனை பாண்டி மா தேவியார்
மேய தொண்டுக்கு மெய்த் தொண்டர் ஆயினார்

ஞானசம்பந்தப் பெருமான் மூலம் சைவம் தழைக்கும் பணி செய்தமை

புன்நயத் தருகந்தர் பொய் நீக்கவும்
தென்னர் நாடு திருநீறு போற்றவும்
மன்னு காழியர் வள்ளலார் பொன் அடி
சென்னி சேர்த்தி மகிழ்ந்த சிறப்பினார்

குருபூஜை

குலச்சிறை நாயனாரின் குருபூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், ஆவணி மாதம், அனுஷ நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-May-2023, 18:32:45 IST