under review

களவியற் காரிகை

From Tamil Wiki
Revision as of 17:30, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

களவியற் காரிகை ஒரு அகப்பொருள் இலக்கண நூல். இறையனார் களவியலைத் தழுவி கட்டளைக் கலித்துறைச் செய்யுள்களால் ஆக்கப்பட்ட நூல். களவியற் காரிகை அகப்பொருள் உணர்த்தும் இலக்கண நூல். நூலுடன் உரையும் இணைந்து காணப்படுகிறது. இந்த நூலின் பெயரோ, இயற்றியவர் பெயரோ, உரையாசிரியர் பெயரோ தெரியவில்லை. முன்னும் பின்னும் சிதைந்து அரைகுறையாகக் கிடைத்த இந்நூலின் சில பகுதிகளை ஒன்று சேர்ந்து செப்பனிட்டு உரையுடன் வெளியிட்ட எஸ். வையாபுரிப் பிள்ளை, இந் நூலுக்குக் 'களவியற் காரிகை' என்று பெயரிட்டார்[1]. அவர் 1931-ல் இந்நூலையும் உரையையும் செப்பனிட்டு வெளியிட்டார்.

பெயர்ப்பொருத்தம்

களவியற் காரிகை' இறையனார் களவியலைத் தழுவி எழுதப்பட்ட நூல். இறையனார் களவியலில் நூற்பாவால் ஆகிய அறுபது சூத்திரங்கள் இருக்கின்றன. அந் நூலைத் தழுவி எழுதப்பட்ட களவியற் காரிகையில் கட்டளைக் கலித்துறையால் ஆன அறுபது செய்யுள்கள் உள்ளன. நூற்பாவால் அமைந்த யாப்பருங்கலம் என்னும் நூலை ஒட்டி, கட்டளைக்கலித்துறையால் எழுதப்பட்ட யாப்பிலக்கண நூல் யாப்பருங்கலக்காரிகை என்று பெயர் பெற்றதுபோல, நூற்பாவால் ஆகிய களவியலைத் தழுவிக் கட்டளைக் கலித்துறையால் ஆன நூல் களவியற்காரிகை என்று பெயர் பெற்றது.

நூல் அமைப்பு

tamildigital library

முன்னும் பின்னும் சிதைந்து அரைகுறையாகக் கிடைத்த தமிழ் நூல்களுள் களவியல் காரிகையும் ஒன்று. களவியற் காரிகையின் தொடக்கத்தில் பத்துச் செய்யுள்களும் இறுதியில் ஆறு செய்யுள்களும் மறைந்துபோயின. இப்போது 11 முதல் 54 வரையில் உள்ளன. கட்டளைக்கலித்துறைகள் அந்தாதியாக அமைந்துள்ளன. தமிழ்நெறி விளக்கம் பொருளியல் பகுதியிலிருந்து 91 பாடல்களும், பாண்டிக்கோவை என்னும் நூலிலிருந்து 154 பாடல்களும், ஆக 416 பாடல்கள் இந்நூலின் உரையில் மேற்கோள் பாடல்களாக வருகின்றன. இந்த உரையில் மேற்கோள் நூல்களாக 35 நூல்கள் காட்டப்பட்டுள்ளன. அவற்றில் வழக்கத்தில் இருக்கும், அறிந்த நூல்கள்

உரையாசிரியர்

களவியல் காரிகையின் உரையாசிரியர் எவர் என அறியவரவில்லை. உரையில் மிகுதியான விளக்கங்கள் இல்லாததால் உரையாசிரியரைப்பற்றி அறிய வாய்ப்பு இல்லை. உரையின் தொடக்கத்தில் உள்ள ஆசிரிய விருத்தம் நெல்வேலி வேய்முத்தரை (நெல்லையப்பர்) வணங்குவதாய் அமைந்துள்ளது. ஆதலின் இவர் திருநெல்வேலியில் வாழ்ந்த சைவர் எனக் கருதப்படுகிறது. காட்சி என்ற துறையை விளக்கும்போது இறையனார் களவியல் உரையிலிருந்து பல வரிகளை அப்படியே இடம் பெறுகின்றன. எனவே, இவர் அவ்வுரையை விரும்பிப்பயின்றவராக இருக்கலாம். கோயிலந்தாதியிலிருந்து சில பாடல்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. இவ்வுரையாசிரியர் கண்டனலங்காரம் என்னும் நூலிலிருந்து மேற்கோள் தருகின்றார். கண்டன் அலங்காரம் சோழ மன்னனை, "பொன்னி நாட்டுமன்னன் கண்டன் பூபால தீபன்" என்று புகழ்கின்றது. பொ.யு. 1146 முதல் 1163 வரை அரசாண்ட இரண்டாம் இராசராசனுக்குக் கண்டன் என்ற பெயர் உண்டு. உரையாசிரியர் பல்சந்தமாலை என்ற நூலிலிருந்து மேற்கோள் தருகின்றார். இந் நூலில் வின்னன் என்ற முகம்மதிய சிற்றரசனைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன. இவனது காலம் 1325-க்குப் பின்னர் ஆகும். எனவே, உரையாசிரியர் பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் எனக் கருதப்படுகிறது.

உசாத்துணை

தமிழ் இணைய நூற்கழகம்

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 08:36:56 IST