being created

கண. முத்தையா

From Tamil Wiki
கண. முத்தையா

கண. முத்தையா (K.N.Muthaia - 1913-1997) எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர், மொழிபெயர்ப்பாளர் என்று செயல்பட்டவர். பர்மாவில் தனவணிகன், ஜோதி இதழ்களில் பொறுப்பு வகித்தவர். நேதாஜியின் ஐ.என்.ஏ.வில் அதிகாரியாகப் பணியாற்றியவர். தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பகத்தைத் தோற்றுவித்தவர்.

பிறப்பு, கல்வி

கண. முத்தையா, சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில், மே 24, 1913-ல் பிறந்தார். தந்தை கண்ணப்பர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பம். கல்விக்காக யாழ்ப்பாணம் சென்றார் கண. முத்தையா. 13 வயதில் இந்தியா திரும்பினார். சுதந்திரப் போராட்டங்களினா ல் ஈர்க்கப்பட்டார். அதனால் பர்மாவில் உள்ள தங்கள் கடைகளை மேற்பார்வை செய்ய குடும்பத்தாரால் அனுப்பி வைக்கப்பட்டார். தமிழ், ஆங்கிலம், இந்தி மொழிகளில் புலமை பெற்றார்.

தனது மெட்ரிக் தேர்வுக்குத் தயாராகிக் கொண்டே, கடைகளை நிர்வகித்து வந்தார் கண.முத்தையா. தந்தை திடீரெனக் காலமானதால் இந்தியா திரும்பினார். குடும்பப் பொறுப்பை ஏற்றார். தந்தை நிர்வகித்து வந்த தொழில்களில் ஈடுபட்டு அதனை வளர்த்தெடுத்தார். தம்பி, தங்ககளுக்கு மண முடித்தார்.

பர்மாவில் கண. முத்தையா

விடுதலைப் போராட்டங்களில் ஈடுபட்டார். பின் 1936-ல் வியாபாரத்துக்காக பர்மா சென்றார். அங்கு ‘தன வணிகன்’ இதழின் உதவி ஆசிரியராகப் பணி யாற்றினார். 1937-ல் ‘ஜோதி’ மாத இதழில் நிர்வாகப் பொறுப்பேற்றார். கூடவே ரங்கூனை அடுத்த கம்பையில் காந்தியால் திறந்து வைக்கப்பட்ட செட்டியார்கள் உயர்நிலைப் பள்ளியின் செயலராகப் பொறுப்பேற்றார். வெ.சாமிநாத சர்மாவின் எழுத்தால் ஈர்க்கப்பட்டு, அவர் நூல்களை வெளியிடும் நோக்கத்தில், ‘புதுமலர்ச்சி நூற்பதிப்புக் கழகம்’ என்ற புத்தக வெளியீட்டு நிறுவனத்தை பர்மாவில் ஏற்படுத்தினார். அதன் மூலம் முதல் நூலாக ‘மகாத்மா காந்தி’ என்ற நூலை வெளியிட்டார். டாக்டர் ராதாகிருஷ்ணன், மகாத்மா காந்தியின் 70வது ஆண்டு நினைவாகத் தொகுத்த நூல் அது. அதனை அனுமதி பெற்று வெ.சாமிநாத சர்மாவைக் கொண்டு மொழியாக்கம் செய்து தமிழில் வெளியிட்டார். அதன் பிறகு பிளேட்டோவின் அரசியல், ரூசோவின் நூல்கள், சென்யாட்சின் எழுதிய சுதந்திரத்தின் தேவைகள் எனப் பலநூல்களைக் கொண்டு வந்தார்.

கண. முத்தையா (நடுத்தர வயதுப் படம்)

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் கண. முத்தையா

இரண்டாம் உலகப் போர் சமயம் பர்மாவில் இருந்த கண. முத்தையா, நேதாஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்டு, அவரது இந்திய தேசிய ராணுவத்தில் (I.N.A.) சேர்ந்தார். INA-வின் லயசன் ஆபீசராகப் பணிபுரிந்தார். நேதாஜியின் பேச்சுக்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணிகளைச் செய்து வந்தார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸைக் கடைசி முறையாகச் சந்தித்த நால்வரில் கண.முத்தையாவும் ஒருவர்.

நேதாஜி உடனான தனது அனுபவங்கள் பற்றி, கண. முத்தையா, “1945 மே மாத ஆரம்பத்தில் ரங்கூனிலிருந்து சுமார் 14 மைலில் உள்ள இன்சீன் பெரு சாலை ஜங்க்ஷனில் செடி மறைவில் அமர்ந்திருந்து ஜெனரல் போன்ஸலே ஒரு காரில் அருகில் வந்து நிற்கிறார் . சற்று நேரத்தில் நேதாஜி மற்றொரு காரில் வந்து இறங்கினார் . வாய் நிறைய வெற்றிலை , சிகரெட் புகைத்தபடி , சிரித்த முகத்துடன் , எங்களிடம் " நீங்கள் யுத்தகளத்தில் ' பொசிஷன் ' மாற்றுவதில்லையா , அதுதான் இதுவும். இந்தியா நிச்சயம் விடுதலை அடையும் ; என் வாழ்த்துக்கள்! ” - இந்தக் கடைசிச் சந்திப்பு என் மனதை விட்டு அகல இன்னும் மறுக்கிறது” என்று, தனது ’முடிவுகளே தொடக்கமாய்’ நூலில் குறிப்பிட்டுள்ளதாக அகிலன் கண்ணன் தெரிவித்துள்ளார் [1].

சிறையும் விடுதலையும்

கண. முத்தையா, பர்மாவில் நேதாஜியின் இந்திய தேசியப் படையில் பணியாற்றிய காரணத்தால், 1945, மே மாதம் கைது செய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்டார். போர்க் கைதியாக ஒரு வருடம் இருந்தார். மே மாதம் 1946-ல் இந்தியா அழைத்துவரப்பட்டு, பின் விடுதலையானார். கல்கத்தாவில் இருந்து சென்னைக்குப் புறப்பட்டு வந்தார்.

தமிழ்ப் புத்தகாலயம்

தமிழகம் வந்த கண. முத்தையாவிடம், பதிப்பகம் ஒன்றை ஆரம்பித்து நடத்துமாறு ‘சக்தி’ வை.கோவிந்தன், ஏ.கே.செட்டியார் மற்றும் முல்லை முத்தையா ஆகியோர். கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே அத்துறையில் நல்ல அனுபவம் பெற்றிருந்ததால் கண. முத்தையாவும் அதற்கு உடன்பட்டார். ஜூன் 1946-ல், ’தமிழ்ப் புத்தகாலயம்’ ஆரம்பிக்கப்பட்டது. முதல் நூலாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ எழுதிய ‘புரட்சி’ நூலை வெளியிட்டார் கண. முத்தையா.

ஏற்கனவே முத்தையா சிறையில் இருந்தபோது ராகுல் சாங்கிருத்தியாயனின் ‘சாம்ய வாத்ஹி ஹயும்’ , ‘வோல்கா ஸே கங்கே’ என்ற இரண்டு நூல்களையும் வாசித்திருந்தார். அவற்றைத் தமிழில் மொழிபெயர்த்தும் வைத்திருந்தார். பின் தராகுலின் அனுமதி பெற்று, அவற்றை, ‘பொதுவுடைமைதான் என்ன?’ , ’வால்காவிலிருந்து கங்கை வரை’ என இரண்டு நூல்களாக வெளியிட்டார். அந்த நூல்களுக்கு மிக நல்ல வரவேற்புக் கிடைத்தது. தமிழ் நன்கு அறிந்திருந்த ராகுல், கண. முத்தையாவின் மொழிபெயர்ப்பைப் பாராட்டினார். அது மேலும் பல மொழிபெயர்ப்பு நூல்களைத் தரும் உத்வேகத்தை முத்தையாவுக்கு அளித்தது.

ஜூலிஸ் பூசிக் , மா சேதுங் , மாக்ஸிம் கார்கி , ஸ்டாலின், ஜார்ஜ் குலியா, துர்கனேவ் , பிரேம்சந்த் , எம் .டி .வாசுதேவன் நாயர் ந்னப் பலரது படைப்புகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை, பி.ஜி.கருத்திருமன், பேராசிரியர் கா.சிவத்தம்பி, கா.அப்பாத்துரை, புதுமைப்பித்தன், கு.அழகிரிசாமி, நா.பார்த்தசாரதி, அகிலன், தொ.மு.சி.ரகுநாதன், சாமி. சிதம்பரனார், ராஜம் கிருஷ்ணன், சாலை இளந்திரையன், துரை அரங்கனார், ஹெப்சிபா ஜேசுதாசன் , இந்திரா பார்த்தசாரதி , மகரிஷி, கு.அழகிரிசாமி , தொ.மு.சி. ரகுநாதன் , க.நா .சுப்ரமணியம் எனப் பலரது படைப்புகளைத் தமிழ்ப் புத்தகாலயம் மூலம் வெளியிட்டார். இலங்கை எழுத்தாளர்களான க. கைலாசபதி, செ.கணேசலிங்கன், டொமினிக் ஜீவா. டேனியல், கா. சிவத்தம்பி, திருநாதன், வேலுப்பிள்ளை எனப் பலரது நூல்களை தனது ‘தமிழ்ப் புத்தகாலயம்’ மூலம் வெளியிட்டு ஊக்குவித்தார் கண. முத்தையா. தமிழ்ப் புத்தகாலயம் வெளியிட்ட பல நூல்களுக்கு பாரதீய ஞானபீடப்பரிசு, சாகித்ய அகாடமிப் பரிசு, தமிழ்நாடு அரசுப் பரிசு, டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார் பரிசு, கலைமகள் நாராயணசாமி ஐயர் பரிசு, இலக்கியச் சிந்தனைப் பரிசு, பாரதீய பாஷா பரிஷத் பரிசு, ரங்கம்மாள் நினைவுப் பரிசு, அனந்தாச்சாரி அறக்கட்டளைப் பரிசு எனப் பல்வேறு பரிசுகள், விருதுகள் கிடைத்துள்ளன.

எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் உரை

தமிழ்ப் பணிகள், பொறுப்புகள்

நூல்களின் விற்பனையை அதிகரிக்க கல்கியின் தலைமையில் 1951-ல் ஓர் இயக்கம் தொடங்கினார் கண. முத்தையா. அந்த அமைப்பு சென்னையில் முதன் முதலாக தமிழ்ப் புத்தகக் காட்சியை நடத்தியது. 1962-ல் நடத்தப்பட்ட பாரதி விழாவில் முத்தையாவின் பங்களிப்பு குறிப்பிடத்தகுந்தது. தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலர், தமிழ் எழுத்தாளர் கூட்டுறவுச் சங்கச் செயலர், பதிப்பாளர் சங்கத் தலைவர் எனப் பல பொறுப்புகளை வகித்திருக்கிறார். பல கூட்டங்களை, கருத்தரங்குகளை, இலக்கிய மாநாடுகளைச் சிறப்பாக ஒருங்கிணைத்திருக்கிறார்.

ஈ.வெ.ராமசாமி, காமராஜர். அண்ணா, பக்தவத்சலம் எனப் பலருடன் இவருக்கு நல்ல நட்பு இருந்தது. ஆனால், அவை எதையுமே இவர் அரசியல் ஆதாயங்களுக்காகப் பயன்படுத்தியதில்லை. சுதந்திரப் போரில் ஈடுபட்டவர்களுக்காக அரசு வழங்க முற்பட்ட ஐந்து ஏக்கர் நிலத்தையும் இவர் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்.

பிரபல நாவலாசிரியரான அகிலனுடைய மகன் அகிலன் கண்ணன், கண. முத்தையாவின் மகளை மணந்து கொண்டார். அந்த வகையில் அகிலனும், கண. முத்தையாவும் ஒருவருக்கொருவர் சம்ம்மந்தி ஆகினர். தான் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை முறையாகக் கணக்கு வைத்து , அந்தந்த எழுத்தாளர்களிடம் கையளிப்பதை இவர் வழக்கமாக வைத்திருந்தார்.

மறைவு

வயது மூப்பால் உடல் நலிவுற்று நவம்பர் 12, 1997 அன்று காலமானார் கண. முத்தையா.

வரலாற்று இடம்

தமிழ் இலக்கியப் பரப்பில் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாகச் செயல்பட்டவர் கண. முத்தையா. கவனித்த்ககுந்த நூல்கள் பலவற்றைப் பதிப்பித்தவர். தமிழுக்கும் தமிழகத்துக்கும் எதிரான எந்த படைப்பையும் பிரசுரிப்பதில்லை என்பதைத் தனது கொள்கையாக வைத்திருந்து செயல்பட்டார். தான் பதிப்பித்த நூல்களுக்கான ராயல்டியை முறையாகக் கணக்கு வைத்து , அந்தந்த எழுத்தாளர்களிடம் கையளிப்பதை கண. முத்தையா வழக்கமாக வைத்திருந்தார்.

உசாத்துணை

இணைப்புகள்


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.