கூலிம் நவீன இலக்கியக் களம்
கூலிம் நவீன இலக்கியக் களம் கெடா மாநிலத்திலுள்ள கூலிம் என்ற ஊரில் செயல்படும் இலக்கிய அமைப்பு. பதிவு செய்யப்படாத இவ்வமைப்பு வடக்கு மாநிலங்களான கெடா, பினாங்கு நவீன இலக்கியவாசகர்களை மையப்படுத்தி இயங்குகிறது.
தோற்றம்
இந்த அமைப்பு எழுத்தாளர் கே.பாலமுருகனால் முன்மொழியப்பட்டு 2008-ல் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களால் ஒருங்கிணைக்கப்பட்டது. கூலிம் நகரில் லுனாஸ் என்ற சிற்றூரில் அமைந்தள்ள தியான ஆசிரமத்தில் இந்த அமைப்பு இயங்குகிறது. இந்த அமைப்புக்குச் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி காப்பாளராகவும், ஆலோசகராகவும் செயல்படுகிறார் இவ்வமைப்பில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, எழுத்தாளர் கோ. புண்ணியவான், எழுத்தாளர் கே. பாலமுருகன், எழுத்தாளர் அ. பாண்டியன், எழுத்தாளர் சு.யுவராஜன், ப. தமிழ்மாறன், த. குமாரசாமி, ப. மணிமாறன், ஹரிராஸ்குமார் ஆகியோர் செயல்படுகின்றனர்.
நோக்கம்
இந்த நவீன இலக்கியக் களம் தீவிர இலக்கியத்தைப் பரப்பவும், இலக்கிய ரசனையை மலேசியர்களிடையே வாசிப்பின் வழி விரிவாக்கவும் நோக்கமாகக் கொண்டது. நல்ல எழுத்தாளர்களையும், தேர்ந்த படைப்புகளையும் கவனப்படுத்துவதும், அதன் தொடர்பான வாசிப்பு சார்ந்த உரையாடல்களையும் நடத்துகிறது.
மாதாந்திர இலக்கியச் சந்திப்புகளோடு இலக்கிய முகாம்கள், இலக்கியச் சொற்பொழிவுகள், தத்துவம் சார்ந்த உரையாடல்கள் என இவ்வமைப்பு செயல்படுகிறது.
செயல்முறை
கூலிம் நவீன இலக்கியக் களம் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படாத இயக்கம் என்பதால் திட்டமிடப்பட்ட செயற்குழுவின் அடிப்படையில் இயங்கவில்லை. மாதத்தில் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமை தியான ஆசிரமத்தில் சந்திப்புகள் நடைபெறுகின்றன. கவிதை, சிறுகதை, நாவல் தொடர்பான தீவிர உரையாடல்கள் நடைபெறுகின்றன.
இலக்கிய முகாம்கள்
- மார்ச் 22 - 24, 2014-ஆம் ஆண்டு பினாங்கு கொடிமலையில், எழுத்தாளர் ஜெயமோகனுடன் மலேசிய இலக்கியப் போக்கு, தற்கால நவீன இலக்கியத்தின் வளர்ச்சி ஆகியவை குறித்து உரையாடல் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டது. நாவல், சிறுகதைகள், நவீன கவிதை அமைப்புமுறைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.
- ஜூன் 2 - 4, 2017-ல் ஒழுங்கு செய்யப்பட்ட இலக்கிய முகாமில் எழுத்தாளர் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் ஆகியோர் வழி நடத்தினர். பிரம்மவித்யாரண்யத்தில் இந்த முகாம் நடைபெற்றது. எழுத்தாளர் பவா செல்லதுரையும் இந்த இலக்கிய முகாமில் உரையாற்றினார் சீ. முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது இந்த முகாமின் இறுதி நாளில் அறிவிக்கப்பட்டது.
- நவம்பர் 24 - 25, 2018ல் எழுத்தாளர் சு. வேணுகோபால், எழுத்தாளர் பவா செல்லதுரை ஆகியோரால் பிரம்மவித்யாரண்யத்தில் இலக்கிய முகாம் வழிநடத்தப்பட்டது.
- டிசம்பர் 21 - 22, 2019ல் நவீன இலக்கியக் களம் மற்றும் வல்லினம் இணைவில் இலக்கிய முகாம் நடைபெற்றது. எழுத்தாளர் ஜெயமோகன், சு. வேணுகோபால், சாம்ராஜ் ஆகியோர் இரண்டு நாள் இலக்கியப் பயிலரங்கை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் நவீன இலக்கியம் தொடர்பான ஆழமான உரையாடல்கள் நடந்தன. ம.நவீனின் 'பேய்ச்சி', சை. பீர்முகம்மதுவின் ‘அக்கினி வளையங்கள்’ இந்த முகாம் நடந்த காலகட்டத்திலேயே வெளியிடப்பட்டன.
எழுத்தாளர்களின் வருகை
நவீன இலக்கியக் களத்தில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். நாடக ஆசிரியர் பிரளயன், கவிஞர் யவனிகா ஶ்ரீராம், எழுத்தாளர் கோணங்கி, எழுத்தாளர் சாரு நிவேதிதா, அ. மார்க்ஸ், எழுத்தாளர் இமையம், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், கலாப்ரியா, எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா என பலரும் நவீன இலக்கியக் கள கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.
நூல் வெளியீடுகள்
- 2014ஆம் ஆண்டு பேராசிரியர் அ. ராமசாமியின் வருகையின் போது, களம் சிற்றிதழ் வெளியீடு கண்டது. கே. பாலமுருகன், அ. பாண்டியன் மற்றும் தினகரன் ஆகியோர் இவ்விதழின் ஆசிரியராக இருந்தனர். சில இதழ்களுக்குப் பின் இவ்விதழ் நின்று போனது.
- 2019-ல் மா. ஜானகிராமனின் The Malaysian Indian Forgotten History என்ற படத்தொகுப்பு நூல் மறுவெளியீடு கண்டது.
- 2021- கோ. புண்ணியவானின் கையறு நாவல் மறு வெளியீடு நடைபெற்றது.
உசாத்துணை
- கூலிம் இலக்கிய விழா - ஜெயமோகன்
- நவீன இலக்கிய முகாம் - வல்லினம்
- கூலிம் நவீன இலக்கியக் களம் அகப்பக்கம்
- கூலிம் நவீன இலக்கியக் களம்: தோற்றமும் வளர்ச்சியும் - அ. பாண்டியன்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.