first review completed

போகன் சங்கர்

From Tamil Wiki
Revision as of 19:26, 8 July 2022 by Logamadevi (talk | contribs)
போகன் சங்கர்

போகன் சங்கர் (பிறப்பு: மே 19, 1972) தமிழில் எழுதி வரும் கவிஞர், எழுத்தாளர். சுய எள்ளலும், கட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும், சமகாலச் சூழலின் நெருக்கடிகள், அபத்தங்களை எதிர்கொள்ளும் விதம், அமானுஷ்யத்தின் மீதுள்ள ஈர்ப்பு, சதா அலைந்து கொண்டிருக்கும் ஆண்கள், துன்பப்படும் பெண்கள் என அவரின் புனைவுலகம் காணப்படுகிறது. தொடர்ந்து சிறுகதைகள், கவிதைகள் எழுதி வருகிறார்.

வாழ்க்கைக் குறிப்பு

போகன் சங்கர் திருநெல்வேலி சொ. ராஜரத்தினவேலு, முத்து லட்சுமி இணையருக்கு மே 19, 1972-ல் பிறந்தார். இயற்பெயர் கோமதி சங்கர். புனித சவேரியார் மேல் நிலைப்பள்ளி பாளையங்கோட்டையில் பள்ளிக்கல்வி பயின்றார். புனித சவேரியார் கல்லூரியில் பட்டம் பெற்றார். சுகாதாரத்துறையில் வேலை. நவம்பர் 7, 2003-ல் கனகாவை மணந்து கொண்டார். பிள்ளைகள் சிவகீர்த்தி, ஹரிணி.

இலக்கிய வாழ்க்கை

போகன் சங்கரின் முதல் படைப்பு ’எரிவதும் அணைவதும் ஒன்றே’ என்ற கவிதை. தன் ஆதர்ச எழுத்தாளர்களாக பஷீர், வி.கே.என்.(மலையாளம்), புதுமைப்பித்தன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயமோகன், தி. ஜானகிராமன், எம்‌.வி. வெங்கட்ராம், டால்ஸ்டாய், எமிலி டிக்கின்சன், டி.எச். லாரன்ஸ், கிரகாம் கிரீன், சாமர்செட் மாம், பால்க்னர் ஆகியோரைக் குறிப்பிடுகிறார். 'எரிவதும் அணைவதும் ஒன்றே', 'தடித்த கண்ணாடி போட்ட பூனை', 'நெடுஞ்சாலையை மேயும் புள்', 'சிறிய எண்கள் உறங்கும் அறை', 'வெறுங்கால் பாதை', 'திரிபுகால ஞானி' என்ற தொகுப்புகளில் கவிதைத்தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். 'கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்', 'போக புத்தகம்', 'திகிரி', 'மர்ம காரியம்' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.

திகிரி

இலக்கிய இடம்

"உரைநடையில் வண்ணநிலவனிடம் காணப்படும் கிறிஸ்துவ உலகம், தூய அன்புக்கான ஏக்கம், தன்னிருப்பு தொடர்பான இடையுறாத கேள்விகள் போகனின் கவிதை உலகிலும் வெளிப்படுகின்றன. போகனின் கவிதைகள் தனித்துவமான கவிமொழியைக் கொண்டவை. உள்ளார்ந்த வகையில் எமிலி டிக்கின்சனிடம் காணப்படும் தத்தளிப்பு மற்றும் தனிமை சார்ந்த உலகம் போகனிடமும் காணப்படுகிறது." என எஸ். ராமகிருஷ்ணன் போகன் சங்கரின் கவிதைகளை மதிப்பிடுகிறார். "சுய எள்ளலும், கட்டுக்குள் வைத்து உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதமும், சமகாலச் சூழலின் நெருக்கடிகள், அபத்தங்களை எதிர்கொள்ளும் விதமும் அவரது புனைவின் சிறப்புகள். விளையாட்டுப்பொருளை போல அமானுஷ்யத்தையும் கைக்கொள்ளமுடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்" என எஸ். ராமகிருஷ்ணன் போகன் சங்கரின் புனைவுலகத்தை மதிப்பிடுகிறார்.

விருதுகள்

  • கவிஞர் ராஜமார்த்தாண்டன் விருது
  • சுஜாதா விருது
  • ஆத்மா நாம் விருது (2018)
  • நெய்வேலி இலக்கியச் சிந்தனை விருது
  • கனடா இலக்கியத் தோட்ட விருது
  • கண்ணதாசன் விருது

நூல்கள்

கவிதைத்தொகுப்புகள்
  • எரிவதும் அணைவதும் ஒன்றே
  • தடித்த கண்ணாடி போட்ட பூனை
  • நெடுஞ்சாலையை மேயும் புள்
  • சிறிய எண்கள் உறங்கும் அறை
  • வெறுங்கால் பாதை
  • திரிபுகால ஞானி
சிறுகதைத் தொகுப்புகள்
  • கிருஷ்ணனின் ஆயிரம் நாமங்கள்
  • போக புத்தகம்
  • திகிரி
  • மர்ம காரியம்

வெளி இணைப்புகள்

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.