under review

செட்டிநாடு (இதழ்)

From Tamil Wiki
Revision as of 18:22, 27 September 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected the links to Disambiguation page)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
செட்டிநாடு என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: செட்டிநாடு (பெயர் பட்டியல்)

செட்டிநாடு (1931) நகரத்தார்கள் குறித்தும், அவர்கள் வாழ்வியல் குறித்தும் வெளியான வார இதழ். தஞ்சாவூரிலிருந்து வெளிவந்தது. வரகூர் அ. சேஷாத்திரி சர்மா இவ்விதழின் ஆசிரியராகச் செயல்பட்டார்.1955-க்குப் பின் இவ்விதழ் நின்று போனது.

வெளியீடு

செட்டிநாடு வார இதழ், 1931 முதல் தஞ்சாவூரிலிருந்து வெளிவந்தது. காரைக்குடியைச் சேர்ந்தவரும் தஞ்சாவூர் நகர்மன்றத் தலைவராக இருந்தவருமான தஞ்சாவூர் சு. இராம. இராமநாதன் செட்டியாரும் காரைக்குடி ஆவி.பழ. சிதம்பரம் செட்டியாரும் இணைந்து இவ்வார இதழைத் தொடங்கினர். வரகூர் அ. சேஷாத்திரி சர்மா செட்டிநாடு இதழின் ஆசிரியராக இருந்தார்.

நகரத்தார் நலன் கருதித் தொடங்கப்பெற்ற இவ்விதழ் ஏப்ரல் 1931 முதல் காரைக்குடியிலிருந்து வெளிவந்தது. டெம்மி 1 x 4 அளவில் 8 பக்கங்கள் கொண்ட செட்டிநாடு இதழின் விலை ஓரணா (6 காசுகள்); வருடச்சந்தா உள்நாட்டுக்கு ரூபாய் ஐந்து. வெளிநாட்டுக்கு ரூபாய் ஆறு.

சில ஆண்டுகளுக்குப் பின் செட்டிநாடு இதழ் காரைக்குடியிலிருந்து வெளிவந்தது. நகரத்தார்கள் பலரது உறுதுணையுடன் ஒரு பிரைவேட் லிமிடெட் கம்பனியாக உருவாக்கப்பெற்று அதன் மூலம் இதழ் வெளியீடு நடைபெற்றது.

உள்ளடக்கம்

நகரத்தார்கள் சார்பான பல செய்திகள் செட்டிநாடு இதழில் இடம் பெற்றன. பண்டிதமணி மு. கதிரேசன் செட்டியார், பேராசிரியர். லெ.ப.கரு. இராமநாதன் செட்டியார், நாவலர் சோமசுந்தர பாரதியார், நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை, கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை, பாவேந்தர் பாரதிதாசன், ரா.பி. சேதுப்பிள்ளை, கா. அப்பாத்துரை, மு.வரதராசன் போன்ற பலரது இலக்கியப் படைப்புக்கள் இவ்விதழில் வெளியாகின.

இதழ் நிறுத்தம்

1952-ல் சேஷாத்திரி சர்மா, செட்டிநாடு இதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். தொடர்ந்து பாலகவி இராமநாதன் செட்டியார் ஆசிரியர் பொறுப்பையும் வெளியிடும் பொறுப்பையும் ஏற்றுச் செயல்பட்டார். சில ஆண்டுகள் இவ்விதழை நடத்தினார். அதன்பின் இதழ் நின்றுபோய் விட்டது.

மதிப்பீடு

செட்டிநாடு மக்களின் விடுதலைக் காலச் செயல்பாடுகளை செட்டிநாடு இதழ் ஆவணப்படுத்தியது. கலை, இலக்கிய முயற்சிகளுக்கான நகரத்தார் மக்களின் பங்களிப்பைப் பதிவு செய்தது. நகரத்தார் மக்களின் சார்பில் வெளிவந்த தன வைசிய ஊழியன், தனவணிகன், குமரன் போன்ற இதழ்களின் வரிசையில் இடம்பெறத் தக்க இதழாக செட்டிநாடு இதழ் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை

  • நகரத்தார் கலைக்களஞ்சியம், பதிப்பாசிரியர் ச. மெய்யப்பன், இணை ஆசிரியர்கள், கரு. முத்தய்யா, சபா. அருணாசலம், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம், விரிவாக்கப் பதிப்பு, மே, 2002.



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 10-May-2024, 20:34:14 IST