under review

சு.வெங்கடேசன்

From Tamil Wiki
சு.வெங்கடேசன்

சு. வெங்கடேசன்(பிறப்பு:மார்ச் 16, 1960) தமிழ் நாவலாசிரியர், பேச்சாளர், அரசியல்வாதி. வரலாற்று நாவல்களை எழுதினார். இந்திய கம்யூனிஸ்டு (மார்க்ஸிஸ்ட்) கட்சி உறுப்பினராகவும் முழுநேர ஊழியராகவும் இருப்பவர். இந்திய பாராளுமன்ற உறுப்பினர். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பொறுப்பாளராகவும் பணியாற்றினார்.

thehindu.com

பிறப்பு,கல்வி

சு.வெங்கடேசன் மதுரை ஹார்விபட்டியில் மார்ச் 16,1960 அன்று நல்லம்மாள்-சுப்புராம் இணையருக்குப் பிறந்தார்.

மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் இளம் வணிகவியல் (B.com) பட்டம் பெற்றார்.

நன்றி:விகடன்.காம்

தனி வாழ்க்கை

சு.வெங்கடேசன் கமலாவை 1998-ல் மணந்துகொண்டார். யாழினி, கமலினி என்று இரு மகள்கள்.

சு.வெங்கடேசன் மார்க்ஸிய கம்யூனிஸ்டுக் கட்சியின் முழுநேர உறுப்பினராகப் பணியாற்றினார்.

அரசியல் பணி

சு. வெங்கடேசன் தன் கல்லூரி மாணவப் பருவத்திலிருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். படிப்பை முடித்தபின் கட்சியின் முழுநேர ஊழியராகப் பணியாற்றி வந்தார். உத்தப்புரம் சாதி தடுப்புச் சுவர் இடிப்பு உள்ளிட்ட தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பல்வேறு களப் போராட்டங்களில் பங்கு கொண்டார்.

சு.வெங்கடேசன் 2019-ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில், மதுரை தொகுதியிலிருந்து, மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

சு.வெங்கடேசன் 2024 ல் நடைபெற்ற இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் மதுரை தொகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் பொதுவுடமைக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.

இதழியல்

சு.வெங்கடேசன் கல்லூரிப்படிப்பை முடித்தபின் மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் இலக்கிய இதழான செம்மலர்'ரில் துணை ஆசிரியராகச் சேர்ந்து நான்காண்டுகள் பணியாற்றினார்

இலக்கிய அமைப்புப் பணிகள்

சு.வெங்கடேசன் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராக 18 செப்டம்பர் 2011 முதல் 24 ஜூன் 2018 வரை பணியாற்றினார்

இலக்கியப் பணி

சு.வெங்கடேசன் கல்லூரி முதலாண்டில் (1989) "ஓட்டை இல்லாத புல்லாங்குழல்' என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். கல்லூரியில் படிக்கும்போது தமிழ்க்கூத்தன் என்கிற தோழர் மூலமாக இடதுசாரி இயக்கத் தொடர்பு கிடைத்தது. செம்மலர் இதழில் தொடர்ந்து கவிதைகள் எழுதினார்.

படைப்பாளியாக மாறுவதற்கான பின்னணியாக தன் தமிழாசிரியர் இளங்குமரனாரையும் , பால்யத்தை கதைகள் மற்றும் வாழ்வனுபவங்களால் நிறைத்த இரு பாட்டிகளையும் குறிப்பிடுகிறார்.

காவல்கோட்டம்

சு.வெங்கடேசன் அரசியல்பணியாளராக பரவலாக அறிமுகமாகியிருந்தாலும் இலக்கியவாதியாக அறிமுகமானது அவருடைய முதல் நாவலான காவல்கோட்டம் என்னும் படைப்பின் வழியாகவே. மதுரையின் காவலுரிமை மரபுவழியாக அங்குவாழும் கள்ளர் மறவர் இன மக்களிடம் இருந்ததையும் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அது பறிபோனதையும் பின்னர் அது மீட்கப்பட்டதையும் சொல்லும் நாவல் இது.

வேள்பாரி

புறநாநூற்றில் குறிப்பிடப்படும் சிறு அரசர்களில் ஒருவரான வேள்பாரி பற்றியும் அவருடைய நண்பரும் சங்ககாலக் கவிஞருமான கபிலர் பற்றியும் எழுதப்பட்டுள்ள வரலாற்று நாவல். பொதுவாசிப்புக்குரிய இந்நாவல் தமிழில் மிகப்பெரிய வாசக வரவேற்பைப் பெற்ற ஒன்று. சங்ககாலத்தின் வாழ்க்கைமுறைகளை விரிவான தரவுகளுடன் சித்தரிப்பது."அலங்காரப்பிரியர்கள்" , பல்வேறு மனிதர்கள், சம்பவங்கள், தகவல்கள் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.

ஆய்வுகள்

சு.வெங்கடேசன் எழுதிய கதைகளின் கதை வாய்மொழி கதைகள் மற்றும் அன்றட நிகழ்வுகளில் பொதிந்திருக்கும் வரலாற்றை எடுத்துக் காட்டும் நூல்.

கீழடி குறித்து சு.வெங்கடேசன் ஆனந்த விகடனில்எழுதிய தொடர் கட்டுரை "வைகை நதி நாகரிகம்" என்ற பெயரில் நூலாக வெளிவந்தது.

விருதுகள்

2011 ஆம் ஆண்டுக்கான கேந்திர சாகித்ய அக்காதமி விருது

2019-ஆன் ஆண்டுக்கான கனடா இலக்கியத் தோட்ட இயல் விருதைப் பெற்றார்.

இலக்கிய இடம்

மார்க்ஸிய விமர்சகரான ஞானி, ஆ.இரா. வேங்கடாசலபதி ஆகியோர்

amazon.com

"காவல்கோட்டம்" தமிழின் தலைசிறந்த வரலாற்றுநாவல்களில் ஒன்று எனக் கருதுகின்றனர். மைய ஓட்டத்தை ஊடுருவும் எழுதப்படாத வரலாற்றின் . நுட்பமான, விரிவான மாற்று மொழிபினாலேயே (Alternate narration) இது ஒரு பெரும்படைப்பாக ஆகிறது. நுண் அவதானிப்புகளின் அழகும் கவித்துவமும் கைகூடும் பல பகுதிகள் காணக் கிடைக்கின்றன.

எழுதப்பட்ட வரலாற்றின் அழுத்தமான பின்னணியில் எழுதப்படாத வரலாற்றையும், எழுதப்படாத நாட்டார் வரலாற்றின் பின்னணியில் எழுதப்பட்ட வரலாற்றையும் மார்க்ஸியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கில் சித்தரிக்கிறார் சு.வெங்கடேசன். இதனூடே மிக விரிவாக மானுடக் கதையைச் சொல்வதாலும் காவல் கோட்டம் தமிழின் ஓர் முக்கியமான படைப்பாகிறது. "காவல்கோட்டம் தமிழில் இதுவரை எழுதப்பட்ட வரலாற்று நாவல்களில் முதன்மையானது என்று சொல்வேன். புனைவு மூலம் ஒரு மாற்று வரலாற்றை உருவாக்கி வரலாறேயாக வரலாற்றுக்குள் நிலைநாட்டுவதில் முழுமையான வெற்றியை பெற்றிருக்கிறது இந்த நாவல். வரலாற்று அனுபவம் என்பது சிடுக்கும் சிக்கலும் உத்வேகமுமாக வாழ்க்கை கட்டின்றிப் பெருக்கெடுப்பதைப் பார்க்கும் பிரமிப்பும் தத்தளிப்பும் கலந்த மனநிலைதான்" என்று ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.[1]

கள்ளர் சமூகத்தின் பண்பாட்டு வெளியை துல்லியமான தகவல்களுடன் சித்தரிக்கும் இந்நாவல் அந்த இனக்குழுவின் வரலாற்றுப் பாத்திரத்தை மிக விரிவாகக் காட்டியவகையிலும் முதலிடம் வகிக்கிறது.இனவரைவியல்(குறிப்பிட்ட இனக்குழுக்கள் சார்ந்த செய்திகள்) சார்ந்த படைப்பாக்கங்களில் குறிப்பிடத்தக்கதும் ஆகும்.

கொல்லவாருகள், பிரமலைக் கள்ளர்கள் என்ற இரண்டு இனக்குழுக்களைப் பற்றி இந்த நாவல்ல பேசியிருக்கேன்என்று ஒரு பேட்டியில் நாவலாசிரியர் குறிப்பிட்டிருப்பதைப் போல இந்த இரு இனக் குழுக்களின் வாழ்க்கை முறை,சடங்கு சம்பிரதாயங்கள்,பழக்க வழக்கங்கள்,உட்சாதிப் பிரிவுகள்,வழிபாட்டு முறைகள் என அனைத்தையும் கதைப் போக்கிலிருந்து மிகுதியும் தடம் பிறழ்ந்து செல்லாத சுவாரசியத்தோடு தொகுத்துத் தரும் சுவையான ஆவணத் தொகுப்பாக இந்நாவல் அமைந்திருக்கிறது." என்று எம்.ஏ. சுசீலா குறிப்பிடுகிறார்.[2]

நூல்கள்

  • ஓட்டை இல்லாத புல்லாங்குழல் (கவிதை) - 198
  • திசையெல்லாம் சூரியன் (கவிதை)
  • பாசி வெளிச்சத்தில் (கவிதை)
  • ஆதிப்புதிர் (கவிதை)
  • கலாசாரத்தின் அரசியல் (கட்டுரை)
  • மனிதர்கள், நாடுகள், உலகங்கள் (கட்டுரை)
  • கருப்பன் கேட்கிறான் கிடாய் எங்கே? (சிறு நாவல்)
  • சமயம் கடந்த தமிழ் (கட்டுரை)
  • காவல் கோட்டம் (புதினம்)
  • அலங்காரப்பிரியர்கள் (கட்டுரை)2014
  • சந்திரஹாசம் (வரைகலைப் புதினம்)2015
  • வைகை நதி நாகரிகம் 2015-ம் ஆண்டில் ஆனந்தவிகடனில் வெளிவந்த தொடர்
  • வீரயுக நாயகன் வேள்பாரி ஆனந்தவிகடனில் வெளிவந்த வரலாற்றுத் தொடர் (புதினம்) 2016

விருதுகள்

  • சாகித்ய அகாதெமி விருது
  • சிறந்த படைப்பாளி விருது(டான் ஸ்ரீ கே.ஆர் சோமோ மொழி இலக்கிய அறவாரியம் )
  • இயல் விருது(கனடா இலக்கியத் தோட்டம்)

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Jan-2023, 09:57:38 IST