under review

மங்கலங்கிழார்

From Tamil Wiki
Mangkalangkizar.jpg

மங்கலங்கிழார் (இயற்பெயர்:குப்பன், குப்புசாமி) (1895 - ஆகஸ்ட் 31, 1953) தமிழறிஞர், கலாநிலையம் இதழை டி.என். சேஷாசலத்துடன் இணைந்து நடத்தினார். மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது திருத்தணி உள்ளிட்ட பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்கப் போராடினார்.

பிறப்பு, கல்வி

குப்பன் தமிழ்நாடு வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் என்ற சிற்றூரில் ஜயாசாமி - பொன்னுரங்கம்மாள் இணையருக்கு 1895-ல் பிறந்தார். இயற்பெயர் குப்பன். குப்புசாமி என்று அழைக்கப்பட்டார். புளியமங்கலத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் தனது சகோதரியுடன் சென்னை பெரம்பூரில் தங்கி, பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். தமக்கையின் கணவர் மரணமடைந்ததால் பள்ளிக் கல்வி இடை நின்றது.

தமக்கையார் குடும்பத்தைக் காப்பாற்ற தச்சுத்தொழில் செய்தார். ஓய்வு நேரங்களில் தமிழறிஞர் டி.என்.சேஷாசலம் நடத்தி வந்த இரவுப் பள்ளியில் சேர்ந்து பயின்றார். மே.வீ. வேணுகோபாலப்பிள்ளையிடமும், கா.ர.கோவிந்தராச முதலியாரிடமும் தமிழ் இலக்கண இலக்கியங்களைத் கற்றார். வ.உ. சிதம்பரனாருடன் நட்பு கொண்டு அவருடன் இணைந்து திருக்குறள் பயின்றார்.

தனி வாழ்க்கை

கா.ர.கோவிந்தராச முதலியாரின் முயற்சியால் மங்கலங்கிழாருக்கு பெரம்பூர் கலவல கண்ணன் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியர் பணி கிடைத்தது. அப்பள்ளியில் பதினைந்து ஆண்டுகள் பணியாற்றினார். பிறகு உடல்நிலை காரணமாக ஆசிரியர் பணியைத் துறந்தார்.

மங்கலங்கிழார் வ.உ. சிதம்பரனாருடன் நட்பு கொண்டு அவருடன் இணைந்து திருக்குறள் பயின்றார்.சைவ, வைணவ நூல்களையும் கற்றார். கோ. வடிவேலு செட்டியாரிடம் வேதாந்தம் கற்றார். புளியமங்கலத்தில் ஓர் இரவு பள்ளியைத் துவக்கி, இளைஞர்களுக்கு தமிழ்ப் பாடமும், முதியவர்களுக்கு வேதாந்த பாடமும் நடத்தி வந்தார்.

1934 முதல் புளியமங்கலம் கிராமத்தில் தனது குடும்பத்தார் வழிவழியாகச் செய்து வந்த மணியக்காரர் பணியை ஏற்று நடத்தினார் ஊர்த்தலைவருக்கான 'மங்கலங்கிழார்' என்ற சிறப்புப் பெயரேநாளடைவில் எல்லோரும் அழைக்கும் பொதுப் பெயராக நிலைத்தது.

வேதாந்தம் கற்றதால் உலகின் நிலையாமையை எண்ணி துறவுக் கோலம் பூண்டு பல ஊர்களில் சுற்றித்திரிந்து கொண்டிருந்த காலத்தில் மங்கலங்கிழாருக்கு சுவாமி சின்மயானந்தரின் நட்பு கிடைத்தது. சின்மயானந்தரின் அறிவுரையால் மீண்டும் புளியமங்கலத்திற்கு வந்தார்.

1922-ல், திருவள்ளூரைச் சேர்ந்த கமலம்மாளை மணந்தார்.

இலக்கிய வாழ்க்கை

மங்கலங்கிழார், ‘வடவெல்லை’ ‘தமிழ்ப்பொழில்’ ‘தமிழ்நாடும் வடவெல்லையும்’, முதலிய ஆய்வு நூல்களையும், ‘தவமலைச் சுரங்கம்’, என்னும் சிறுவர் சிறுகதை நூலையும், சகலகலாவல்லி மாலைக்கு உரை விளக்கமும் நளவெண்பாவுக்கு விளக்கவுரையும், மாணவர்களுக்கான ‘இலக்கண வினாவிடை‘, ‘நன்னூல் உரை’ போன்ற நூல்களையும் எழுதினார்.

இதழியல்

டி.என். சேஷாசலம் 'கலாநிலயம்’ (கலாநிலையம்) என்ற பெயரில் ஜனவரி 5,1928-ல் முதல் வாரஇதழ் ஒன்றை தொடங்கினார். கலாநிலையம் மங்கலங்கிழாரின் மேற்பார்வையில் வெளிவந்தது. இதழை நடத்துவதற்காக கலா நிலையம் நாடகக் குழுவினர் சென்னை, மதுரை, திருச்சி, சிதம்பரம் முதலிய நகரங்களில் நாடகங்கள் நடத்திப் பொருளீட்டினர். அந்நாடகங்களில் மங்கலங்கிழார் பெண் வேடமிட்டு நடித்தார்.

1935-க்குப் பிறகு கலாநிலையம் இதழை வெளியிட முடியாத சூழ்நிலை உருவானது.

அமைப்புப் பணிகள்

மங்கலங்கிழார் 1941-ல் குருவராயப்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு 'அறநெறித் தமிழ்க் கழகம்' என்ற ஓர் அமைப்பை ஏற்படுத்தினார். பின்னர் அவ்வமைப்பு 16 ஊர்களில் தனது கிளைகளைக் கொண்டு மங்கலங்கிலாரின் தலைமையில் செயல்பட்டது. இவ்வமைப்பில் மாணவர்கள் இலவசமாக சேர்கப்பட்டனர். இவ்வமைப்பு நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஆரம்ப வகுப்பு, ஒளவை வகுப்பு, சிற்றிலக்கிய வகுப்பு, பேரிலக்கிய வகுப்பு என வகுப்புகள் நடத்தப்பட்டன. தமது சொந்த நிதியில் இருந்து ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கினார் மங்கலங்கிழார். அறநெறிக் கழகம் மூலம் கல்வி பெற்ற மாணவர்கள் தமது ஊர்களில் மாணவர் மாநாடு நடத்தித் தமிழ்க்கல்வியின் பெருமையை மக்களுக்குக் கொண்டு சேர்க்கச் செய்தார்.

இக்கழகத்தின் முதல் மாநாடு 1946-ம் ஆண்டு குருவராயப்பேட்டையில் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் தலைமையிலும், அடுத்த மாநாடு மு.வரதராசன் தலைமையிலும் நிகழ்த்தப்பட்டது. மாணவர்களைப் பயிற்றுவித்து புலவர் தேர்வுக்கு அனுப்பி வைத்தார் மங்கலங்கிழார். அதன் பயனாய் இருபத்தைந்து பேர் புலவர் பட்டம் பெற்று அரசு வேலையில் சேர்ந்தனர்.

ஏ.ச. சுப்பிரமணியம், ஏ.ச. தியாகராசன் இருவரின் உதவியுடன் தனியார் ஆசிரியப் பயிற்சிப்பள்ளியைத் துவக்கினார்ர். அதன் பயனாய் ஆசிரியர்கள் பலர் உருவாயினர். இவரின் விடாமுயற்சியால் நூற்றுக் கணக்கானோருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது.

அவர் காலத்தில் அமைச்சராக இருந்த எம்.பக்தவத்சலம் தலைமையில் தமிழர் மாநாடு ஒன்றை திருத்தணியிலும், அதன் பின்னர் ம.பொ.சி. தலைமையில் ஒரு மாநாடும் நிகழ்த்தினார்.

"வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர் மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்" என்று சிலம்புச் செல்வர் ம.பொ.சி. புகழ்ந்துள்ளார்.

அரசியல்

மொழிவாரியாக மாநிலங்கள் அமைக்கப்பட்டபோது திருத்தணிகையில் ‘தமிழ் வளர்ச்சிக் கழகம்’ என்ற அமைப்பை ஏற்படுத்தி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளைத் தமிழகத்தோடு சேர்க்கப் போராடினார் மங்கலங்கிழார். அப்போராட்டத்தில் சிறையிலடைக்கப்பட்டார்.

திரைத்துறை

மங்கலங்கிழார் சந்திரகுப்த சாணக்கியர்’ என்ற திரைப்படத்தில் சாணக்கியராக நடித்தார். திரைப்படத்தின் மூலம் கிடைத்த வருமானத்தைப் பள்ளிக் கட்டிடங்கள் கட்ட நன்கொடையாக வழங்கினார்.

விருதுகள், பரிசுகள்

திரு.வி. க மங்கலங்கிழாருக்கு 'வித்யானந்தர்' என்ற பட்டத்தை அளித்தார்

மதிப்பீடு

"வடக்கெல்லைப் படையெடுப்பில் எனது மெய்க்காவலராக இருந்தார் ஆசிரியர் மங்கலங்கிழார். அவரைப் போன்று தாய்மொழிப் பற்றும், தமிழின உணர்ச்சியும் உடையவர்கள் தமிழினத்தாரில் வெகு சிலரே இருக்க முடியும்" என்று ம.பொ.சி. புகழ்ந்துள்ளார்.

“வித்துவான்களின் தமிழ்த் தொண்டு கிராமங்களில் நடைபெறுதல் வேண்டுமென்று அறைகூவுவோருள் யானும் ஒருவன். அதைச் செயலில் நிகழ்த்திக் காட்டுவோர் சிலர்; அவருள் சிறந்து விளங்குவோர், அன்பர் ‘வித்தியானந்தர்’, அப்பெரியோர் தொண்டு நிகழும் எந்தக் கிராமத்தினின்றும் அழைப்பு வந்தால், யான் உடனே ஓடுவதை ஒரு வழக்கமான தமிழ்த் தொண்டாகக் கொண்டுள்ளேன்”- எனப் பாராட்டினார் திரு.வி.க.

நூல்கள்

  • தவமலைச் சுரங்கம்
  • தமிழ்ப் பொழில்
  • சிறுவர் சிறுகதைகள்
  • வடவெல்லை
  • தமிழ்நாடும் வடவெல்லையும்
  • சகலகலாவல்லிமாலை - விளக்க உரை
  • நளவெண்பா - விளக்க உரை
  • இலக்கண விளக்கம்
  • இலக்கண வினா - விடை
  • நன்னூல் உரை மற்றும்
  • தனிக் கட்டுரைகள்

உசாத்துணை


✅Finalised Page