under review

சகலகலாவல்லி மாலை

From Tamil Wiki
சகலகலாவல்லி மாலை
ஸ்ரீ குமரகுருபரர்

‘சகலகலாவல்லி மாலை’ என்பது பத்துபாடல்கள் கொண்ட பதிகம். கட்டளைக் கலித்துறையால் ஆன இப்பாடல்களைப் பாடியவர் குமரகுருபரர். `ஹிந்துஸ்தானி ‘ மொழியை அறிந்து கொள்வதற்காக கலைமகளை வேண்டி இப்பாடல்களைக் குமரகுருபரர் இயற்றினார். இந்தப் பத்துப்பாடல்களைப் பாடிமுடித்ததும், சரஸ்வதிதேவி அருளால் குமரகுருபரருக்கு கற்காமலே ஹிந்துஸ்தானி மொழிப் புலமை வாய்த்ததாக அவரது வாழ்க்கை வரலாறு கூறுகிறது.

பாடல் பிறந்த வரலாறு

சகலகலாவல்லி மாலை இயற்றப்பட்டதற்குக் காரணமாகச் சொல்லப்படும் தொன்மக்கதை:

ஊமையாகப் பிறந்து, முருகன் அருளால் பேச்சு வரப்பெற்றவரும், தெய்வீக ஞானியாகவும் திகழ்ந்தவர் குமரகுருபரர். துறவு பூண்ட இவர், தனது குரு மாசிலாமணி தேசிகரின் கட்டளைப்படி காசித் தலத்துக்குச் சென்றார். அங்குள்ள ஒரு சத்திரத்தில் தங்கினார். அவரது கனவில் காட்சி தந்த அப்பகுதி இறைவனான கேதாரீஸ்வரர், தாம் பல இடிபாடுகளுக்கிடையே புதைந்திருப்பதாய்த் தெரிவித்து, அந்த இடத்தையும் கனவில் காட்டினார்

உடன் உறக்கம் கலைந்து எழுந்த குமரகுருபரர், மறுநாள் காலை தனது அடியவர்களுடன் தேடிச் சென்று அந்த இடத்தைக் கண்டறிந்தார். பின் அதனைச் சீர் செய்தவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்.

அப்போது காசியில் ஹிந்துஸ்தானி மொழி ஆதிக்கம் செலுத்தியது. ஷாஜகானின் மகனான தாராஷூகோ காசித்தலத்தை ஆண்டு வந்தார். உருது மொழிக்கும் அங்கு நல்ல வரவேற்பு இருந்தது. தமிழ்மொழி மட்டுமே அறிந்திருந்த குமரகுருபரர், மன்னரின் உதவியைப் பெற்று கேதாரீஸ்வரர் கோயிலைச் சீரமைக்கவும், திருமடம் ஒன்றை அமைக்கவும் எண்ணினார். அதற்காக மன்னனைச் சந்திக்க அரண்மனைக்குச் சென்றார்.

ஆனால், குமரகுருபரரது பெருமை அறியாத மன்னன், அவரது எளிய தோற்றத்தைக் கண்டு உதாசீனம் செய்தான். அமர்வதற்கு ஆசனமும் கொடுக்கவில்லை. குமரகுருபரர் தனது வேண்டுகோளை முன் வைத்தபோதும் கூட மிக அலட்சியமாக, “நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை. என் மொழியில் பேசினால் தான் நான் உங்களுக்குப் பதில் கூற முடியும். அதுவும் நான் மதிக்கத் தக்க வகையில் நீங்கள் வந்தால் தான் உங்களுடன் உரையாட முடியும்” என்று ஆணவத்துடன் பதில் அளித்தான்.

தான் நாளை வருவதாகக் கூறி அங்கிருந்து விடைபெற்றார் குமரகுருபரர்.

சகலகலாவல்லி மாலை

மறு நாள் பொழுது புலர்ந்ததும் கங்கையில் நீராடி வந்தார் குமரகுருபரர். பின் கலைவாணியை வேண்டி தியானம் செய்தார். தொடர்ந்து, கலைமகளைத் துதித்துப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார்.

வெண்தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்கஎன் வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாதுகொலோ சகம் ஏழும் அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகலகலாவல்லியே!
நாடும் சொற் சுவை பொருட் சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்து அருள்வாய் பங்கய ஆசனத்தில்
கூடும் பசும்பொற்கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகலகலாவல்லியே
என்று தொடங்கி,
மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவிற் பணியச் செய்வாய் படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பலகோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ சகல கலா வல்லியே!”

- என்று ‘சகல கலா வல்லி மாலை'யைப் பாடி முடித்தார். கலைமகளின் அருளால் உடனடியாக அவருள் ஞானம் பொங்கியது. ஹிந்துஸ்தானி மொழியின் வார்த்தைகளும் இலக்கணங்களும் முழுமையாக அறியப் பெற்றார்.

சிங்க வாகனம்

‘உன் வாகனத்தைச் சிறிது நேரம் எனக்கு இரவலாகத் தர வேண்டும்’ என்று அம்பிகையை வேண்டித் துதித்தார். உடன் அங்கே ஓர் கர்ஜனை ஒலி கேட்டது. அம்பிகையின் வாகனமான சிங்கம் அங்கே தோன்றியது. உடன் துணையாகச் சில சிங்கங்களும் அங்கே வந்து சேர்ந்தன. சிங்கம் ஒன்றின் மீது தாவி அமர்ந்து மன்னனைக் காணப் புறப்பட்டார் குமரகுருபரர். அரண்மனைக்குள் சிங்கம் நுழைந்ததும் அங்குள்ளோர் அச்சத்தில் சிதறி ஓடினர். குமரகுருபரர் சிங்கத்தின் மீது அமர்ந்து வருவதைக் கண்ட மன்னன் தாராஷூகோ அயர்ந்தான். அவர் ஒரு மகா ஞானி என்பதைப் புரிந்து பணிந்து வரவேற்றான். மன்னனிடம் குமரகுருபரர் அவனுக்குத் தெரிந்த ஹிந்துஸ்தானி மொழியிலேயே உரையாடினார். காசியில் தான் தங்குவதற்கும் திருமடம் அமைப்பதற்கும் தேவையான நிலங்கள் வேண்டுமென்று கேட்டார். மன்னன் அதற்கு, “காசியில் கருடன் பறப்பதில்லை. கருடன் வட்டமிட்டால் அவன் வட்டமிடும் இடம் முழுவதையும் உங்களுக்குக் கொடுக்கிறேன்” என்று வாக்களித்தான். அவ்வாறே அடுத்த நாள் காசியில் சிவபெருமானின் அருளால் கருடனைப் பறக்கச் செய்தார் குமரகுருபரர். மன்னனும் தான் கூறியவாறே கருடன் வட்டமிட்ட அந்த நிலப்பகுதியை குமரகுருபரருக்கு அளித்தான். அந்த இடம் தான் ’கேதார் காட்’ பகுதியில் இருக்கும் காசி குமாரசுவாமி மடம். தனது திருமடத்தில் நாள்தோறும் ஹிந்துஸ்தானி மொழியிலும் தமிழிலும் சொற்பொழிவாற்றித் தமிழுக்கும் சமயத்திற்கும் சேவைகள் புரிந்து காசியிலேயே நிறைவெய்தினார் குமரகுருபரர் .

சகலகலாவல்லி மாலை பாராயணம்

கல்வியும் ஞானமும் பெருக சரஸ்வதிபூஜைக்கு மறுநாளான விஜயதசமி அன்றுகுமரகுருபரர் இயற்றிய சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்யும் வழக்கம் தமிழ் மக்கள் பலரால் பின்பற்றப்பட்டு வருகிறது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Mar-2023, 06:07:15 IST