கண. இராமநாதன்

From Tamil Wiki
Revision as of 13:25, 15 November 2023 by ASN (talk | contribs) (Page Created; Para Added: Link Created: Proof Checked.)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
கண. இராமநாதன் (படம் நன்றி: தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, மணிவாசகர் பதிப்பகம்)

கண. இராமநாதன் (கண்ணப்பச் செட்டியார் இராமநாதன்) (பிறப்பு: மே 12, 1924) எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர். சென்னையில் ‘ஸ்டார் பிரசுரம்’ என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கி நடத்தினார். ‘அமைச்சன்’ என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். புதுமைப்பித்தன், ரா.ஸ்ரீ. தேசிகன், விந்தன், ரகுநாதன் போன்றோரது நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

பிறப்பு, கல்வி

கண்ணப்பச் செட்டியார் இராமநாதன் என்னும் கண. இராமநாதன், சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டியில், மே 12, 1924 அன்று, நா. கண்ணப்பச் செட்டியார் - உண்ணாமுலை ஆச்சி இணையருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பள்ளி இறுதி வகுப்பு வரை படித்தார். இவரது மூத்த சகோதரர் கண. முத்தையா, தமிழ்ப் புத்தகாலயம் பதிப்பக நிறுவனர்.

தனி வாழ்க்கை

கண. இராமநாதன் பதிப்பகத் தொழிலை மேற்கொண்டார். மணமானவர். மனைவி: கோமதி.

பதிப்புலகம்

கண. இராமநாதன், 1944-ல், சென்னையில் ஸ்டார் பிரசுரம் என்ற பதிப்பக நிறுவனத்தைத் தொடங்கினார். ரா.ஸ்ரீ. தேசிகன், விந்தன், புதுமைப்பித்தன். க.நா. சுப்ரமணியம், ரகுநாதன், பாலூர் கண்ணப்ப முதலியார், ரா.பி. சேதுப்பிள்ளை, டி.எஸ். ஜனககுமாரி, முல்லை முத்தையா, நாக முத்தையா, சாமி சிதம்பரனார், எஸ். எஸ். ராமசாமி உள்ளிட்ட பலரது நூல்களை வெளியிட்டார். மாக்ஸிம் கார்க்கி போன்றோரின் நூல்களை மொழிபெயர்க்கச் செய்து வெளியிட்டார். பல நூறு நூல்களை அச்சிட்டு வெளியிட்டார்.

(‘ஸ்டார் பிரசுரம்’ என்ற இதே பெயரில் ஒரு பதிப்பக நிறுவனத்தை வி.ஆர்.எம். செட்டியார் மதுரையில் தொடங்கி நடத்தினார்.)

இதழியல்

கண. இராமநாதன், 1964-ல் அமைச்சன் என்ற இதழைத் தொடங்கி நடத்தினார். அவ்விதழில் பல கட்டுரைகளை எழுதினார். கண. ராமநாதனின் மனைவி கோமதி ராமநாதன் அமைச்சன் இதழில் செட்டிநாட்டுச் சமையல் குறித்துப் பல தொடர்களை எழுதினார். 1966 ஆம் ஆண்டு வரை அமைச்சன் இதழ் வெளிவந்தது.   

மறைவு

கண. இராமநாதன் மறைவு குறித்த விவரங்களை அறிய இயலவில்லை.

மதிப்பீடு

கண. இராமநாதன் படைப்பாளர், பதிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்ற வகையில் கண. முத்தையா, வானதி திருநாவுக்கரசு போன்றோரின் வரிசையில் முன்னோடிப் பதிப்பாளர்களுள் ஒருவராக இடம்பெறுகிறார்.  

உசாத்துணை

  • தமிழ் வளர்த்த நகரத்தார்கள், முனைவர் கரு. முத்தய்யா, மணிவாசகர் பதிப்பக வெளியீடு, முதல் பதிப்பு:ஜூலை 2018.