மங்கையர்க்கரசியார்
மங்கையர்க்கரசியார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.
வாழ்க்கைக் குறிப்பு
மங்கையர்க்கரசியார், சோழ நாட்டில் சோழ மன்னனின் மகளாகப் பிறந்தார். பாண்டிய மன்னனை மணம் செய்து கொண்டார். இயற் பெயர் மானி. கணவர் கூன் பாண்டியன் சமண சமயத்தைப் போற்றி வந்தாலும், மங்கையர்க்கரசியார், சிவனைச் சார்ந்து, சிவத்தைப் போற்றி வந்தார்.
தொன்மம்/சிவனின் ஆடல்
மங்கையர்க்கரசியார், ஞானசம்பந்தப் பெருமானின் திருவருளினால் கூன் பாண்டியன் என்னும் நின்ற சீர் நெடுமாறனை சைவ சமயத்தை ஏற்கும்படிச் செய்தார். சமண மதத்தைப் பின்பற்றியதால் பாண்டியர் குலத்துக்கு நேர்ந்திருந்த பழியினைத் தீர்த்தார். சோழநாட்டைப் போலவே பாண்டியநாட்டையும் வளமுடையதாக்கினார். ஞானசம்பந்தப் பெருமானால் திருப்பதிகத்திலே சிறப்பித்துப் பாடப்பட்டார்.
சைவத்தின் சிறப்பை எங்கும் பரப்பி, சிவபெருமானின் திருவடியை அடைந்தார்.
வரிவளையாள் மானிக்கும், நேசனுக்கும் அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)
பாடல்கள்
பெரிய புராணத்தில் மங்கையர்க்கரசியாரின் பெருமையைக் கூறும் பாடல்கள்:
மங்கையர்க்குத் தனியரசி எங்கள் தெய்வம்
வளவர்திருக் குலக்கொழுந்து வளைக்கை மானி
செங்கமலத் திருமடந்தை கன்னி நாடாள்
தென்னர்குலப் பழிதீர்த்த தெய்வப் பாவை
எங்கள்பிரான் சண்பையர்கோ னருளி னாலே
யிருந்தமிழ்நா டுற்றவிடர் நீக்கித் தங்கள்
பொங்கொளிவெண் டிருநீறு பரப்பி னாரைப்
போற்றுவார் கழலெம்மாற் போற்ற லாமே.
குரு பூஜை
மங்கையர்க்கரசியாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், சித்திரை மாதம், ரோகிணி நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.
உசாத்துணை
- சேக்கிழார் பெருமான் அருளிய திருத்தொண்டர் புராணம்: தமிழ் இணையக் கல்விக் கழகம்
- மங்கையர்க்கரசியார் : தினமலர் இதழ் கட்டுரை
- சேக்கிழாரின் பெரிய புராணம்: பா.சு. ரமணன். தாமரை பிரதர்ஸ் மீடியா வெளியீடு
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.