first review completed

செய்குத்தம்பி பாவலர்

From Tamil Wiki
Revision as of 09:03, 23 August 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed single quotes)
Seykuthambi paavalar.jpg

சதாவதானி கா.ப. செய்குத்தம்பி பாவலர்(ஜூலை 31, 1874 - பிப்ரவரி 13, 1950) தமிழ்ப் புலவர். சீறாப்புராணத்திற்கு உரை எழுதியவர். கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ், நபிகள் நாயக மான்மிய மஞ்சரி போன்ற சிற்றிலக்கிய நூல்களையும், எட்டுக் கிரிமினல் கேஸ், வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ் போன்ற உரைநடை நூல்களையும் எழுதியுள்ளார். சென்னை விக்டோரியா ஹாலில் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்து சதாவதானி பட்டம் பெற்றார். சென்னையில் நடந்த அருட்பா - மருட்பா விவாதத்தில் பங்கேற்று வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என நிறுவினார் (பார்க்க: அருட்பா மருட்பா விவாதம்)

பிறப்பு, கல்வி

செய்குத்தம்பி பாவலர் தபால்

செய்குத்தம்பி பாவலர் ஜூலை 31,1874-ல் நாஞ்சில் நாட்டில் கோட்டாறு அருகில் (தற்போதைய நாகர்கோவில்) உள்ள இளங்கடை என்ற சிற்றூரில் பக்கீர்மீரான் - ஆமினா தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். செய்குத்தம்பி பாவலரின் அம்மா ஆமினா 'மெய்ஞானத் திருப்பாடல் திரட்டு’ என்ற ஞானப்பாடல்களை எழுதிய ஞானியார் சாகிபு வழியில் வந்தவர்.

பாவலர் வீட்டிலேயே திருக்குர்ஆன் கற்றுத் தேர்ந்தார். எட்டாவது வயதில் அரசுப் பள்ளிக்கூடத்தில் சிறுவர் வகுப்பில் சேர்க்கப்பட்டார். வகுப்பில் சேர்ந்த இருபதாவது நாளில் ஆசிரியர் பாவலரை முதல் வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். அவ்வகுப்பாசிரியர் இரண்டாம் வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். அந்த ஆண்டு இறுதியில் பள்ளி தலைமையாசிரியர் பாவலரை நான்காம் வகுப்பிற்கு அனுப்பி வைத்தார். பாவலர் பிறந்த போது கோட்டாறு பகுதியின் அரசு மொழியாக மலையாளம் விளங்கியது. பாவலர் இந்த ஓராண்டு மட்டுமே பள்ளியில் கல்வி பயின்றார்.

தனி வாழ்க்கை

Seykuthambi paavalar2.jpg

கல்வி பாதியிலே தடைப்பட்ட போது பாவலரின் குடும்பத் தொழிலான நெசவுத் தொழிலில் ஈடுபடத் தொடங்கினார். வீட்டில் நெய்த நூலை எடுத்துக் கொண்டு கடை வீதிக்குச் செல்வார். அப்போது தமிழ் கடைகளின் சொற்களை பெயர்ப் பலகைகளை உச்சரித்துத் தமிழ் கற்க தொடங்கினார். அக்கடைத்தெருவில் சிலர் வாங்கிக் கொடுத்த ஆத்திசூடி, கொன்றை வேந்தன், தேசிங்குராஜன் கதை, அல்லி அரசாணிமாலை ஆகியவற்றைக் கற்றார்.

பின் பாவலர் இருந்த அதே தெருவில் வாழ்ந்த சங்கரநாராயண அண்ணாவியாரிடம் (சங்கரநாராயண உபாத்தியாயர்) தமிழ் கற்றார். அவரிடம் தமிழ் இலக்கணம், இலக்கியம், நன்னூல், இலக்கண விளக்கம், வீரசோழியம், யாப்பருங்கலக்காரிகை, தண்டியலங்காரம், நம்பியகப் பொருள், புறப்பொருள் வெண்பா மாலை, இறையனார் களவியல் உரை, தொல்காப்பியம் போன்ற இலக்கண நூல்களையும், பத்துப்பாட்டு, எட்டுத் தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், தேவாரம், ஆழ்வார் பாடல்கள், கம்ப ராமாயணம், திருவிளையாடல் புராணம், பெரிய புராணம், சிற்றிலக்கியங்கள், தனிப்பாடற்றிரட்டு, பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், திருவருட்பா முதலிய இலக்கிய நூல்களையும் பாடம் கற்றார். இடையில் பதிப்பக வேலைக்காகச் சென்னை சென்றார். பின்னாளில் சென்னையிலிருந்து கோட்டாறு திரும்பி பாவலர் பெரும் வித்வான்களான நீலகண்ட ஆச்சாரி மகன் கணபதி ஆச்சாரியிடம் தமிழ்க் கல்வியைத் தொடர்ந்தார்.

செய்குத்தம்பி பாவலர் 1907-ஆம் ஆண்டு முகம்மது பாத்திமா பீவியை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு நான்கு மகன்கள், ஒரு மகள்.

இலக்கிய வாழ்க்கை

Seykuthambi paavalar3.jpg

செய்குத்தம்பி பாவலர் தன் இருபத்தோராம் வயதில் தாய் வழி முன்னோரான ஞானியார் சாகிப்பின் மெய்ஞானத்திரட்டு நூலை வள்ளல் ஷம்சுத் தாசீன் பொருளுதவியோடு பதிப்பிக்கும் பணிக்காக சென்னை சென்றார்.

சென்னையில் உள்ள சிறந்த அச்சுக் கூடமான ஸ்ரீபத்பநாப விலாச அச்சகத்தை இட்டா பார்த்தசாரதிநாயுடு நடத்தி வந்தார். சென்னை வந்த பாவலர் இட்டா பார்த்தசாரதியுடன் இணைந்து பதிப்பகப் பணியில் ஈடுபட்டார். பாவலரின் தமிழ்ப் புலமையைக் கண்ட இட்டா பார்த்தசாரதி அந்நூல் பணி முடிந்த பின்பும் சென்னையிலேயே தங்கும் படி கேட்டுக் கொண்டார். இட்டா பார்த்தசாரதி பாவலருக்கு அவர் பதிப்பகத்திலேயே வேலை கொடுத்து தங்கும் இடமும், ஊதியமும் வழங்கினார்.

இக்காலக்கட்டத்தில் சீறாப்புராணத்திற்கு முழுப் பொழிப்புரை இரண்டு பாகமாக எழுதி பாவலர் வெளியிட்டார். நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம், சீறா நாடகம் போன்ற இலக்கிய நூல்களை எழுதி வெளியிட்டார்.

இதழ்கள்

இட்டா பார்த்தசாரதியின் ஸ்ரீபத்பநாப விலாச அச்சகத்தில் வேலை செய்துக் கொண்டிருந்த போது யதார்த்தவாதி (சமூக பணிக்கு), இஸ்லாமியமித்திரன் (சமயப் பணிக்கு) என இரண்டு இதழ்களை நடத்தினார்.

பாவலர் எழுதிய நூல்கள்

Seykuthambi paavalar4.jpg
கோவை நூல்கள்

பாவலர் பின்னாளில் நான்கு கோவை நூலைகளைப் படைத்தார். அவற்றுள் அச்சிடப்பட்ட சம்சுத்தாசீன் கோவை இன்று கிடைக்கவில்லை. அழகப்பக் கோவை முழுதாகக் கிடைக்கவில்லை. (184 பாடல்கள் கைப்பிரதியாக உள்ளன. கட்டளைக் கலித்துறையில் அமைந்த காப்புச் செய்யுள் ஒன்றும் உள்ளது.) பாவலர் அழகப்பருக்கு எழுதிய ஐந்து பாடல்கள் கொண்ட சீட்டுக்கவியில் அந்நூல் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. அதிலிருந்து நூலின் பெயர் அழகப்பக் கோவை 425 பாடல்களை உள்ளடக்கியது என அறிய முடிகிறது.

சசிஉத்தமக் கோவை திருவிதாங்கூர் அரசின் திவானாக இருந்த சர்.சி.பி. இராமசாமி அய்யர் மீது பாடப்பட்ட நூல். உத்தமபாளையம் ஜனாப் கா.சீ. முகம்மது இஸ்மாயில் மீது பாடப்பட்டது முகம்மது இஸ்மாயில் கோவை. கம்பம் பீர்முகம்மதுப் பாவலருக்குச் செய்குத்தம்பி எழுதிய கடிதத்தில் இக்கோவை நூல் பற்றியும் அதில் 425 பாடல்கள் இடம்பெற்றியிருப்பது பற்றியும் உள்ள குறிப்புகள் மூலம் அறிய முடிகிறது.

சம்சுத்தாசீன் கோவை மட்டும் அச்சில் வெளிவந்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த பெருவள்ளல் சம்சுத்தாசீன். 420 பாடல்களைக் கொண்ட இந்நூல் 1919-ஆம் ஆண்டு சென்னை பத்மநாபவிலாச அச்சுக்கூடத்தில் உரையுடன் அச்சிடப்பட்டது. மேலப்பாளையம் வித்வான் மல்கான் அலிசாகிப்பின் பதவுரையும் உள்ளடக்கியது. களவியல், வரைவியல், கற்பியல் என மூன்று இயல்களைக் கொண்டது இந்நூல்.

அந்தாதி நூல்கள்
Seykuthambi paavalar pillaitamil.jpg

திருநாகூர்த்திரிபந்தாதி, திருக்கோட்டாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி என இரண்டு அந்தாதி நூல்களை இயற்றியுள்ளார். இரண்டு நூல்களும் ஒரே தொகுதியாக 1900-ஆம் ஆண்டு சென்னை பத்பநாப விலாச அச்சகத்தில் வெளியிடப்பட்டது. இந்நூலின் தொடக்கத்தில் பாவலரின் ஆசிரியரான சங்கரநாராயணர் செய்குத்தம்பி பாவலரின் அந்தாதி நூலைத் திறனாய்வு செய்யும் பாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நீதி வெண்பா

மக்கள் வாழ்வு தூய்மைபெற்று இம்மை, மறுமை பயனை அடைய வழி செய்யும் பொது நீதிகளை வெண்பாவில் பாடிய நூல் நீதி வெண்பா. இந்நூல் நூறு வெண்பாக்களைக் கொண்டது. இதில் எட்டு வெண்பாக்கள் மட்டும் கிடைத்துள்ளன.

தனிப்பாடல்கள்

அவதானப் பாடல்கள், பாராட்டுப் பாடல்கள், சாற்றுக் கவிகள், சீட்டுக் கவிகள், புகழ்ப்பாக்கள், வாழ்த்துப் பாக்கள், அறிவுரைப்பாக்கள், கையறுநிலைப் பாக்கள் என தனிப்பாடல்கள் பல எழுதியுள்ளார்.

அவதானப் பாடல்கள்

கோட்டாற்றில் 1906-ஆம் ஆண்டிலும், சென்னையில் 1907-ஆம் ஆண்டிலும் நிகழ்ந்த அவதான நிகழ்ச்சியின் போது பாடப்பட்ட பாடல்கள். இதில் குறள் வெண்பா ஒன்று, கலிவிருத்தம் ஒன்று, கட்டளைக் கலித்துறை இரண்டு, நேரிசை வெண்பா மூன்றுடன் கடவுள் வாழ்த்துப் பாடலும் அடங்கும்.

சீட்டுக்கவிகள்

தமிழில் கடிதங்களே சீட்டுக்கவிகள் எனப்படுகின்றன. பழந்தமிழ் புலவர்கள் தம் விருப்பங்களையும், தேவைகளையும் புரவலர்களுக்குத் தெரிவித்து எழுதுபவை. பாவலர் புதிய வீடு சென்ற போது தன் நண்பர் சிவதாணுப்பிள்ளைக்கு சீட்டுக் கவி விடுத்தார்.

எட்டுக் கிரிமினல் கேஸ்
நபிகள் நாயக மான்மிய மஞ்சரி

1976-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாவலரின் படைப்பு நபிகள் நாயக மான்மிய மஞ்சரி. நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வழிக்காட்டல்களின் தொகுப்பு இந்நூல். இந்நூல் ஒரோவழிமிக்கு வந்த சொச்சகக் கலிப்பாவில் 102 பாடல்களைக் கொண்டது. சென்னையில் இருந்து வெளிவந்த 'முஸ்லிம்’ நாளேட்டில் வெள்ளிக்கிழமை தோறும் இந்நூலின் பாடல்கள் வெளிவந்தன. வள்ளல் கா.சீ. முகம்மது இஸ்மாயில் (உத்தமபாளையம்) இந்நூலை வெளியிட்டார். நாஞ்சில் ஆ.ஆரிது பதிப்பித்தார்.

எட்டுக் கிரிமினல் கேஸ்

பாவலரின் எட்டுக் கிரிமினல் கேஸ் என்னும் உரைநடை நூல். இந்நூல் 1907-ஆம் ஆண்டு 'எல்லார்க்கும் பார்க்கத்தகுந்த எட்டுக் கிரிமினல் கேஸ்’ என்ற தலைப்பில் கோல்டன் அச்சு இயந்திர சாவை டி. கோபால் நாயக்கர் பதிப்பித்தார். பின் 2015-ல் விஜயா பதிப்பகம் வெளியீடாக வெளிவந்தது.

இந்நூலில் குற்றவியல் வழக்குகள் என அரிச்சந்திர சரித்திரம், சூர்ப்பநகை பங்கம், வாலி வதம், இலங்காதகனம், அரம்பைப் பலவந்தப் புணர்ச்சி, கோபிகா ஸ்தீரிகள் வஸ்திராபரணம், திரௌபதை வஸ்திராபரணம், கீசகன் பலவந்தம் இடம் பெற்றுள்ளது. இந்நூல் பாவலர் வாழ்ந்த தெந்திருவிதாங்கூர் கோர்ட் மொழியில் எழுதப்பட்டுள்ளது. வாதி, பிரதிவாதி, சாட்சிகள், வக்கீல், வியாச்சியம், விசாரணை, பிரதிவாதி வக்கீல் கிறாசு(cross) வாதி வக்கீல் றீக்கிறாசு(re cross), ஆர்டர், பிரசிடிங்ஸ், குற்றாப்பத்திரிக்கை, ஹியறிங், ஜட்ஜ்மெண்ட், அப்பீல், புணர் விசாரணை என அமையப் பெற்றது இந்நூல். ( பார்க்க: எட்டுக் கிரிமினல் கேஸ்)

அருட்பா மருட்பா விவாதம்

அருட்பா மருட்பா விவாதம்

இராமலிங்க வள்ளலார், ஆறுமுக நாவலர் இருவருக்கும் இடையேயான அருட்பா மருட்பா விவாதம் பிரபலமானது (பார்க்க: அருட்பா மருட்பா விவாதம்). இருவரின் மறைவிற்கு பிறகும் அவ்விவாதம் அவர்களின் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு தொடர்ந்தது. ஆறுமுக நாவலரின் மாணவர் கதிரைவேற் பிள்ளை தன் ஆசிரியரின் மறைவிற்கு பின் ஆசிரியர் கருத்தை நிலைநாட்ட நூல்கள், அறிக்கைகள், மேடைப் பேச்சுகள் மூலம் சொற்போரை நிகழ்த்தி வந்தார். அவருடைய மாணவராகிய திரு.வி.க கதிரைவேற் பிள்ளைக்கு உதவி செய்தார். சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரு அணிகளும் மாறி மாறி சொற்போர் நிகழ்த்தினர். பாவலர் இதனைக் கேட்டு இவ்விவாதத்தில் பங்கு கொள்ள விரும்பினார்.

வள்ளலார் பாடல்களை மருட்பா எனக் கூறிய கதிரைவேற்பிள்ளையை மறைமலையடிகள் விவாதத்திற்கு அழைத்தார். செப்டெம்பர் 3, 1903-ல் சென்னையில் நிகழ்ந்த விவாதத்தில் மறைமலையடிகளின் சிறந்த உரைக்கு கதிரைவேற்பிள்ளையால் பதில் சொல்லமுடியவில்லை. மீண்டும் செப்டெம்பர் 27, 1903-லும் அக்டோபர் 18, 1903-லும் மறைமலை அடிகள் கதிரைவேற்பிள்ளையை பொதுவிவாதத்திற்கு அழைத்தார். வருவதாக ஒப்புக்கொண்ட கதிரைவேற் பிள்ளை எங்கும் வரவில்லை. மறைமலை அடிகள் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என நீண்ட உரைகள் ஆற்றி அவையோரை நிறைவுறச் செய்தார்.

செய்குத்தம்பி பாவலர் இராமலிங்க வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என பொது விவாதங்களில் பேசி நிறுவினார். அவற்றுக்கு எதிர்ப்புரைகள் எழவில்லை. பாவலர் பொது மேடைகளில் கதிரைவேற் பிள்ளையின் 'இராமலிங்கம் பிள்ளை பாடல் ஆபாச தர்ப்பணம் அல்லது மருட்பா மறுப்பு’ நூலின் தலைப்பே பிழையானது என மறுத்தார். வள்ளலாரின் அருட்பா பாடல்களை பலவற்றை பொது விவாதங்களில் விளக்கம் தந்தது மறைமலையடிகள் முடித்து வைத்த விவாதத்தை பொது மேடைகளில் பேசி நிறுவினார்.

இதன் காரணமாக காஞ்சிபுரச் சான்றோர், அருட்பா மருட்பாப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போது பாவலருக்கு காஞ்சி வரதராசப் பெருமாள் கோவிலில் பூரண கும்ப மரியாதையோடு தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் என்னும் பட்டத்தை வழங்கியது.

இந்திய விடுதலை போராட்டம்

Seykuthambi paavalar5.jpg

மகாத்மா காந்தியின் மேல் ஈர்ப்பு கொண்டு இந்திய தேசியக் காங்கிரஸில் தன்னை இணைத்துக் கொண்டார். சுதேசிக் கொள்கையில் நாட்டங்கொண்டு கதராடை அணியத் தொடங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய இயக்கம் வளரக் காரணமாக அமைந்தார். 1937 ஆம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ் வெற்றிக்கு உதவினார். காங்கிரஸில் எம்.இ. நாயுடு அவர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

மதுவிலக்கு

சுதந்திர இந்தியாவில் நபிகள் நாயகமும், காந்தியும் முன்வைத்த மதுவிலக்குக்காக மேடைகளில் பேசினார். மதுவிலக்கு தொடர்பாக இசைப்பாடல்கள் இயற்றினார்.

சதாவதானம்

பாவலர் சென்னையில் வாழ்ந்த காலத்தில் முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் பாவலரைச் சந்தித்தார். அப்போது பாவலர் 'விறலி விடு தூது’ என்ற நூலில் இடம் பெறும் பாடலைக் கூறி அவதானம் (அவதானம் என்றால் நினைவாற்றலைக் குறிக்கும். சதாவதானம் என்றால் நூறு செயல்களை நினைவில் வைத்திருத்தல் எனப் பொருள்) ஒரு புரட்டுக்கலை என்றார். முதுகுளத்தூர் கல்யாண சுந்தரம் அவரிடம் அவதானக் கலையை நிகழ்த்திக் காட்டினார். மறுநாளும் அவர் பாவலரிடம் அவதானக் கலையை நிகழ்த்திக் காட்டினார். அது பாவலருக்கு அவதானக் கலையின் மேல் ஈடுபாட்டை ஏற்படுத்தியது.

சோடசதாவதானி

நாகர்கோவில் திரும்பிய பாவலர் அங்கே சான்றோரின் வேண்டுதலுக்கு இணங்க சோடசதாவதானம் (பதினாறு அவதானம்) நிகழ்த்தினார். அந்நிகழ்விற்கு ஆற்றாங்கோயாத்தங்கள் தலையமையேற்றார். இதில் பாவலர் இறைநாம உச்சரிப்பு, கைப்பணி, தலைவரோடு உரையாடல், இலக்கியம், இலக்கணம், இருமுறை கேட்டு வெண்பாவை ஒப்புவித்தல், கண்டப்பத்திரிக்கை, கவிபாடல், கண்டத் தொகை, கிழமை கூறுதல், நூறு நிரப்புதல், சுவைப்புலன் அறிதல், ஒலி வேறுபாடு உணர்தல், நெல் எறிதல், கல் எறிதல், சீட்டாடல் எனப் பதினாறு செயல்களை நினைவுக்கூர்ந்தார்.

சதாவதானி

நாகர்கோவிலிலிருந்து மீண்டும் சென்னை திரும்பிய பாவலரை அவரது நண்பரான இட்டா பார்த்தசாரதியும், பிற நண்பர்களும் சென்னையில் அவதானம் செய்யும் படி கேட்டனர். சென்னையில் அவர்கள் பாவலரை சதாவதானம் செய்யும்படி கூறினார். அதன்படி சுற்றரிககையும் சென்றது.

மார்ச் 10, 1907 அன்று சென்னை விக்டோரியா மண்டபத்தில் பாவலருடைய சதாவதானம் நிகழ்ந்தது. இந்த அவைக்கு கண்ணபிரான் முதலியார் தலைமையேற்றார். கம்பராமாயண உரையாசிரியர் மகாவித்வான் புலவர் கா. நமசிவாய முதலியார், திரு.வி.க, டி.கே.சி, பத்திரிக்கை நிருபர்கள், பொது மக்கள் எனப் பலர் கூடியிருந்தனர்.கோட்டாற்றில் நிகழ்ந்த பதினாறு கலைவகைகளோடு ஒலி எண்ணம், தொகை கூறல், உடுகூறல், நாள் கூறல், திங்கள் கூறல், ஆண்டு கூறல், வயது கூறல், நினைத்த எண் கூறல், பதினைந்து நாயும் புலியும் விளையாடல் என்ற ஒன்பதும் சேர்த்து அவதானத் தொகையில் இருபத்தைந்தும் வகையால் நூறுமாக சதாவதானம் செய்தார். இந்நிகழ்வின் முடிவில் சதாவதானி, மகாமதி என்ற பட்டங்களைப் பெற்றார்.

மறைவு

பிப்ரவரி 18 ,1950 அன்று தன் 76-ஆவது வயதில் இயற்கை எய்தினார். பாவலரின் இறுதிச் சடங்கில் 'மலரும் மாலையும்’ எனும் இரங்கற்பாவை கவிமணி தேசிக வினாயகம் பிள்ளை பாடினார். 'எந்த நாள் காண்பேன் இனி’ என முடியும் பாடல் அது.

பட்டங்கள்

  • சதாவதானி, மகாமதி - சதாவதான அரங்கச் சான்றோர், விக்டோரியா ஹால் சென்னை (1907). (தலைமை: மகாவித்வான் கண்ணப்ப முதலியார்)
  • தேவாமிர்தப் பிரசங்கக் களஞ்சியம் - காஞ்சிபுரச் சான்றோர் - அருட்பா மருட்பாப் போராட்டத்தில் வெற்றி பெற்ற போது காஞ்சி வரதராசப் பெருமாள் கோவில் பூரண கும்ப மரியாதையோடு வழங்கப்பட்டது.
  • கலைக்கடல் - தொண்டி நகரச் சான்றோர்.
  • அல்லாமா (டாக்டர்) - திண்டுக்கல் நகரச் சான்றோர்.
  • தமிழ்ப்பெரும் புலவர் - நாஞ்சில் நாட்டவர்
  • பாவலர் - சென்னை சான்றோர் வட்டம்

நூல்கள்

அச்சேறியவை
உரைநடை
  • எட்டுக் கிரிமினல் கேஸ்
  • தேவலோகப் பழிக்குற்ற வழக்கு
  • வேதாந்த விவகாரக் கிரிமினல் கேஸ்
  • சீறா நாடகம்
  • சீறாப்புராணப் பொழிப்புரை
செய்யுள்
  • நபிகள் நாயகத்தின் ஜீவிய சரித்திரம்
  • கோட்டாற்றுப் பிள்ளைத்தமிழ்
  • திருக்கோட்டாற்றுப் பதிற்றுப் பத்தந்தாதி
  • நபிகள் நாயக மான்மிய மஞ்சரி
  • கல்வத்து நாயக இன்னிசைப் பாமாலை
  • சம்சுத்தாசீன் கோவை
  • நாகூர்த் திரிபந்தாதி
அச்சேறாதவை
  • நாகைக் கோவை
  • அழகப்பக் கோவை
  • உத்தமபாளையம் முகம்மது இஸ்மாயில் கோவை
  • சசிவோத்தமன் கோவை
  • நீதி வெண்பா
  • தனிப்பாடல்கள்

உசாத்துணை

  • இந்திய இலக்கியச் சிற்பிகள் - சதாவதானி செய்குத்தம்பி பாவலர் (மு. அப்துல்கறீம்)
  • எட்டுக் கிரிமினல் கேஸ் - விஜயா பதிப்பகம் (நாஞ்சில் நாடன் முன்னுரை)

வெளி இணைப்புகள்

காணொளி


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.