under review

பாரதி மணிமண்டபம்

From Tamil Wiki
Revision as of 03:44, 24 August 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (; Added info on Finalised date)
பாரதி மணிமண்டபம்
பாரதி மணிமண்டபம்

பாரதி மணிமண்டபம் தமிழ் மக்களின் நிதி உதவியைக் கொண்டு கல்கியின் தலைமையில் சி. சுப்ரமண்ய பாரதியாருக்காக எட்டயபுரத்தில் கட்டப்பட்டது.

தொடக்கம்

செப்டம்பர் 1944-ல் டி.கே.சி தலைமையில் நெல்லை பாரதி இலக்கிய மன்றம் தமிழிசை விழா எடுத்தது. இதில் கலந்து கொண்டு பேசிய கல்கி அக்டோபர் 8 அன்று கல்கியில் “பாரதி பிறந்தார்” என்ற கட்டுரையை எழுதினார். எட்டயபுரத்தில் சிறு புத்தக நிலையமாவது ஏற்படுத்த வேண்டும் என்று அங்குள்ள இளைஞர்கள் கேட்டுக் கொண்டதாகவும், அதை செய்ய வேண்டிய தமிழ் மக்களின் கடமை என்றும் அதற்கான உதவி கோரியும் அக்கட்டுரை எழுதப்பட்டது. மக்கள் பணம் அனுப்ப ஆரம்பித்து ரூ.32000/- சேர்ந்தபோது போதும் என்று கல்கி கேட்டுக் கொண்ட பின்னும் ரூ.42000/- வரை சேர்ந்தது. நூலகத்திற்கு பதிலாக பாரதிக்கு மணிமண்டபம் கட்ட கல்கி முடிவு செய்தார். டி.கே.சி இடத்தைத் தேர்ந்தெடுத்தார். மணிமண்டபப் பணி தொடங்கியது.

மணிமண்டபம்

பாரதி மணிமண்டபத்திற்கு ஜூன் 3, 1945-ம் ஆண்டு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதை கல்கி ஒருங்கிணைத்தார். சி. ராஜகோபாலச்சாரியைத் தலைமை தாங்க ஏற்பாடு செய்தார் கல்கி. டி.கே.சி., நாமக்கல் கவிஞர், டாக்டர் சுப்பராயன் ஆகியோர் கலந்து கொண்டனர். டி.கே. பட்டம்மாள் பாரதி பாடல்களைப் பாடினார். ஜூன் 10 தேதியிட்ட கல்கி இதழில் விழா பற்றி முழுமையான விவரம் பிரசுரிக்கப்பட்டது. மணிமண்டபம் கட்டத்தொடங்கிய போது ரூ.42000/- போதாத நிலை ஏற்பட்டது. மீண்டும் நிதி திரட்டப்பட்டது. இப்போது ஒரு லட்சத்திற்கு மேல் சேர்ந்தது.

திறப்பு விழா

அக்டோபர் 11, 1947-ல் மணிமண்டபத் திறப்பு விழா தொடங்கியது. முகப்பில் பாரதியார் உருவம் பொருத்தப்பட்ட ”பாரதி ஸ்பெஷல்” ரயில் ஒன்று சென்னையிலிருந்து அக்டோபர் 10 அன்ற்ய் புறப்பட்டு அக்டோபர் 11 அன்று கோவில்பட்டி வந்தடைந்தது. ஒரு லட்சம் மக்கள் விழாவில் கலந்து கொண்டனர். ஊர் முழுவதும் வளைவுகளாலும் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டது. அக்டோபர் 13 காலை அப்போதைய வங்காளத்தின் ஆளுனராக இருந்த ராஜகோபாலச்சாரியார், ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் எட்டையபுரம் அரண்மனையிலிருந்து புறப்பட்டு மூன்று யானைகள், மேள தாளாங்கள் புடை சூழ விழா மேடைக்கு வந்தனர். பாரதியாரின் புதல்வியர், எம்.எஸ்.சுப்புலட்சுமி ஆகியோர் பாரதி பாடல்களைப் பாடினர். சோமயாஜுலு, நாமக்கல் கவிஞர், ம.பொ.சி, டி.எஸ்.எஸ்.ராஜன் ஆகியோர் உரையாற்றினர். ஓமந்தூரர் பாரதியின் சிலையை திறந்து வைத்தார். சுருக்கமான உரை நிகழ்த்திவிட்டு அமர்ந்த காமராஜரை கல்கி மேடையில் அமரச் செய்தார். விழா பற்றி தி.இந்து நான்கு பத்திகளும், தினமணி இரண்டு முழு பக்கங்களும் செய்தி வெளியிட்டன.

விவாதம்

பாரதியின் மணிமண்டபத் திறப்புவிழா மக்களின் பேராதரவுடன் சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் ராஜகோபாலாச்சாரியார், கல்கி குழுவினரின் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. பாரதியின் புகழ் பரப்புவதை லட்சியமாகக் கொண்ட வ.ரா, பாரதி புத்தகங்கள் பதிப்பிப்பதை லட்சியமாகக் கொண்ட பரலி. சு. நெல்லையப்பர், பாரதி மீது பெரும்பற்று கொண்ட பாரதிதாசன், பாரதியின் புகழ் பரப்பிய ஜீவா ஆகியோர் அழைக்கப்படவில்லை. உள்ளூர்க்காரர்களின் வற்புறுத்தலுக்கு இணங்க வந்த ஜீவாவை மக்கள் ஆரவாரித்து பேச அழைத்தனர். ராஜாஜி தடுக்க முற்பட்டாலும் மக்களின் ஆர்வத்தைக் கண்டு வேறு வழியின்றி அவருக்கு பேச நேரம் அளிக்கப்பட்டது. அவரின் பேச்சை மக்கள் வியந்து கேட்டதாக வரலாற்றுப் பதிவுகள் உள்ளன.

நன்கொடையாளர்கள்

எல்லா தரப்பினரும் மணிமண்டபம் கட்டுவதில் முனைப்பாக செயல்பட்டதற்கான சான்றுகள்:

  • எட்டயபுரம் அரசர் - நிலதானம், அன்னதானம் (15000 மதிப்பு)
  • வி.எல். நரசு (வர்த்தகப் பிரமுகர்) (2000 செக்)
  • ஏ.வி. மெய்யப்பன் (3000)
  • டி.கே.எஸ். சகோதரர்கள்
  • நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை
  • சென்னை சிவில் சப்ளை இலாகா நாடக குழுவினர்
  • உதவி நாடகங்கள் வழி (10000)
  • ராணிப்பேட்டை தேசபக்தர் கே.ஆர்.கல்யாணமய்யர், முகமத் சுலைமான் (2400)

(இது முழுமையான பட்டியல் இல்லை)

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Aug-2025, 17:05:10 IST