under review

பரலி சு. நெல்லையப்பர்

From Tamil Wiki
பரலி சு.நெல்லையப்பர்

பரலி சு.நெல்லையப்பர் (செப்டம்பர் 18, 1889 - மார்ச் 28, 1971) விடுதலைப் போராட்ட வீரர், கவிஞர், எழுத்தாளர், இதழாளர், பதிப்பாளர். வ.உ. சிதம்பரம் பிள்ளையின் நெருங்கிய நண்பராகவும், தொண்டராகவும், சுப்பிரமணிய பாரதியின் புரவலராகவும் இருந்தார். பாரதியின் பாடல்களை வெளியிட்டு அவை மக்களிடையே பிரபலமாவதற்கும் தேசிய எழுச்சிக்கும் காரணமாக இருந்தார். பாரதி வாழும் காலத்திலேயே அவரது பாடல்களின் தொகுப்புகளை வெளியிட்டது அவரது குறிப்பிடத்தக்க பணி.

பிறப்பு, கல்வி

பரலி சு.நெல்லையப்பர், தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பரலிக்கோட்டையில் செப்டெம்பர் 18, 1889 அன்று சுப்பிரமணிய பிள்ளை, முத்துலட்சுமி அம்மாள் இணையருக்கு மூன்று ஆண் மக்களுள் இரண்டாவது மகனாகப் பிறந்தார். சிறு வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தார். நெல்லையப்பர் மெட்ரிக்குலேஷன் வரை பள்ளியில் படித்தார். தமிழிலக்கிய, இலக்கணங்களைக் கற்று, கவிதை எழுதும் திறமை பெற்றிருந்தார்.

நெல்லையப்பரின் மூத்த சகோதரர் பரலி சு. சண்முகசுந்தரம் பிள்ளை. வ.உ. சிதம்பரனாரோடு சுதேசி இயக்கத்தில் பங்கு பெற்றார். சிதம்பரனாரின் சுதேசி கப்பல் கம்பெனியின் பங்குகளை விற்றுப் பல்லாயிரம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்தார். சுப்பிரமணிய சிவாவை வ.உ.சிதம்பரனாருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.சுப்பிரமணிய சிவாவால் 'வந்தே மாதரம் பிள்ளை' என அழைக்கப்பட்டார்.

நெல்லையப்பருக்கு இளையவரான பரலி சு. குழந்தைவேலன். சு. நெல்லையப்பரோடு இணைந்து வ.உ. சிதம்பரனாரின் கப்பல் கம்பெனியில் கணக்கராக வேலை பார்த்தவர். பின்னாளில் லோகோபகாரி என்னும் இதழை நடத்துவதில் நெல்லையப்பருக்குத் துணைநின்றவர்.

தனி வாழ்க்கை

சு. நெல்லையப்பர் 1907-ம் ஆண்டில் பள்ளிப் படிப்பை முடித்த சில நாள்களிலேயே தூத்துக்குடியில் வ.உ. சிதம்பரனார் நடந்திய சுதேசி கப்பல் கம்பெனியில் கணக்கராகப் பணியாற்றத் தொடங்கினார். மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள சூரத் நகரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு வ.உ. சிதம்பரனாரை அழைப்பதற்காக தூத்துக்குடிக்கு வந்த சி. சுப்பிரமணிய பாரதியை பரலி சு. நெல்லையப்பர் முதன்முறையாக, வ.உ. சிதம்பரனாரின் வீட்டில் கண்டார். அங்கிருந்த பாரதியின் கவிதைகள் அடங்கிய நான்கு பக்க வெளியீடு ஒன்றையும் இந்தியா இதழையும் படித்த நெல்லையப்பர் சி. சுப்பிரமணிய பாரதிமேல் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.

நெல்லையப்பர் திருமணம் செய்துகொள்ளவில்லை, தன்னுடைய இறுதிக் காலத்தில் பூங்கோதை என்னும் பெண்ணைத் தத்தெடுத்து வளர்த்தார்.

விடுதலைப் போராட்டம்

ஆரம்ப பள்ளி
  • வ.உ. சிதம்பரனார், பிரிட்டிஷாரின் வீடுகளில் பணிசெய்த பணியாளர்கள், சலவைத் தொழிலாளர்கள் சமையற்காரர்களைத் திரட்டி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியபோது பரலி சு. நெல்லையப்பர் அப்போராட்டத்தில் பெரிதும் உதவினார்.
  • விபின் சந்திரபால் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாட காவல்துறையினரின் தடையை மீறி வ.உ. சிதம்பரனார் தூத்துக்குடியில் சுப்பிரமணிய சிவாவோடு இணைந்து மார்ச் 9, 1908 அன்று நடத்திய ஊர்வலத்தில் பரலி சு. நெல்லையப்பரும் கலந்துகொண்டார். தடையை மீறியதற்காகவும், கப்பல் கம்பெனி நடத்தியதற்காகவும் வ.உ. சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா இருவரும் மார்ச் 12, 1908 அன்று கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டனர். இதனைக் கண்டித்துக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான துண்டறிக்கையை அச்சிட்டு விநியோகித்ததற்காக நெல்லையப்பரும் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1930-ல் வேதாரண்யத்தில் நடைபெற்ற உப்புச் சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டு ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை பெற்றார்.
  • 1932-ல் காந்தியடிகளின் ஆணையின்பேரில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணிக்கடை முன்பு ஆர்ப்பாட்டம் ஆகிய போராட்டங்களை தலைமையேற்று நடத்தினார்.
  • 1941-ல் தனிநபர் சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு ஆறு மாதம் சிறைத்தண்டனை பெற்றார்.

நாட்டு விடுதலைக்குப்பின் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு அரசு நிலம் வழங்கியது. தனக்குக் கிடைத்த நிலத்தை பள்ளி ஒன்று துவக்குவதற்காக அரசுக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார் நெல்லையப்பர். பரலி. சு. நெல்லையப்பர் நகராட்சிப் பள்ளி என்ற பெயரில் இயங்கிவந்த அந்தப்பள்ளி குறைவான மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 2010-ல் மூடப்பட்டது.

புதுவையிலும் கோவையிலும்

நெல்லையப்பர் 1909-சென்னையில் நீலகண்ட பிரமச்சாரியையும் சி. சுப்பிரமணிய பாரதியையும் சந்தித்தார். 1910-ன் தொடக்கம் முதல் ஜூன், 1911 வரை பாரதியாரின் வீட்டில் தங்கினார். பாரதியாரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த 'சூரியோதயம்' என்னும் பத்திரிக்கையின் துணையாசிரியராகப் பணியாற்றினார். ஏப்ரல் 1910- ல் மாதம் கடல் வழியாக புதுவைக்கு வந்த அரவிந்தரை துறைமுகத்திற்குச் சென்று அழைத்து வந்தார். ஜூன் 1911-ல் கோவை சிறையிலிருந்த வ.உ. சிதம்பரனார் அழைத்ததால் அங்கு சென்றார்.

வ.உ. சிதம்பரனாருக்கு பாரதியார் எழுதிய மூன்று விருத்தங்கள் கொண்ட சீட்டுக்கவியை எடுத்துக்கொண்டு பரலி சு. நெல்லையப்பர் கோயம்புத்தூர் சென்றார். அங்கு வழக்கறிஞர் சி. கே. சுப்பிரமணிய முதலியார் உதவியோடு கோவை, பேரூர் சாலையில் ஆசிரமம் ஒன்றை அமைத்துத் தங்கினார். முடிந்த போது சிறையில் இருந்த வ.உ. சிதம்பரனாரைச் சந்தித்து, அவரது கட்டளைகளை அந்த ஆசிரமத்தில் இருந்தவாறே நிறைவேற்றினார். வ.உ.சி.யை தன்வரலாறு எழுதும்படி வேண்டினார். 1912- ன் மத்தியில் சிதம்பரனார் கண்ணனூர் சிறைக்கு மாற்றப்பட்டதும் நெல்லையப்பர் நெல்லைக்குத் திரும்பினார். டிசம்பர் 1912-ல் சிதம்பரனார் விடுதலை பெற்று சென்னையில் குடியேறியபின் நெல்லையப்பர் அவரது வீட்டிலும் வேறு இடங்களிலுமாக வாழ்ந்தார்.

இதழியல்

  • சிதம்பரனார், சுப்ரமண்ய சிவா இருவரின் கைதையும் கண்டித்து நெல்லையப்பர் எழுதிய கட்டுரை பாரதியார் நடத்திய 'இந்தியா' இதழில் வெளிவந்தது.
  • புதுவையில் இருந்து பாரதியார் வெளியிட்ட 'சூரியோதயம்' இதழிலும்(1910) கர்மயோகி மாத இதழிலும் (1911)நெல்லையப்பர் துணையாசிரியராக இருந்தார்.
  • சென்னையிலிருந்து கோ. வடிவேலு செட்டியார் வெளியிட்ட லோகோபகாரி இதழில் 1913-1915 மற்றும் 1917-1918 ஆண்டுகளில் துணையாசிரியராக இருந்தார்.
  • தெ.பொ. கிருஷ்ணசாமிப் பாவலருடன் இணைந்து பாரதியின் பாடல்களையும், புகழையும் பரப்புவதற்காக 'பாரதி' என்ற இதழை நடத்தினார்( 1915-1916).
  • 'தேசபக்தன்' இதழில் திரு.வி.க., வ.வே.சு.ஐயர் ஆகியோர் ஆசிரியர்களாக இருந்தபொழுது நெல்லையப்பர் துணையாசிரியராகவும் பின்னர் ஆசிரியராகவும் பணியாற்றினார் (1917-செப்டெம்பர் 1921).
  • 1922-ல் 'லோகோபகாரி' இதழை விலைக்கு வாங்கி நடத்தத் தொடங்கி 1941 வரை அதன் ஆசிரியராக இருந்தார். ஐ. மாயாண்டி பாரதி இவ்விதழின் துணையாசிரியராக இருந்தார். மீண்டும் 1943- முதல் 1948 வரை 'லோகோபகாரி' இதழில் ஆசிரியராக இருந்தார். எழுத்தாளர் நாரண. துரைக்கண்ணனை லோகோபகாரி இதழுக்கு ஆசிரியராக்கினார்.

இலக்கிய வாழ்க்கை

வ.உ.சி. சரித்திரம்

நெல்லையப்பர் வ.உ. சிதம்பரனாரோடு தூத்துக்குடியில் இருந்தபொழுதே கவிதைகள் இயற்றினார். பாரதியோடு இருந்த பொழுது அவருடைய பாடல்களைப் படித்து கருத்தும், திருத்தமும் கூறும் அளவிற்குக் கவிதை நுட்பங்களை அறிந்திருந்தார். 'தேசபக்தன்' இதழில் பணியாற்றியபோது பாரதிதாசன், நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய பாடல்களில் திருத்தம் செய்து வெளியிட்டு வந்தார்.

ஏறத்தாழ 50 ஆண்டுகளாகத் தான் எழுதிய கவிதைகளைத் தொகுத்து 142 பக்கங்களில் 'நெல்லைத் தென்றல்' என்னும் நூலாக 1966- ஆம் ஆண்டு வெளியிட்டார். மேலும், ;பாரதி வாழ்த்து', 'உய்யும் வழி' ஆகிய கவிதை நூல்களையும் வெளியிட்டார்.

பரலி சி. நெல்லையப்பர் இதழ்களில் பணியாற்றிய பொழுது தலையங்கம், செய்திக் கட்டுரைகள், மதிப்புரைகள் எனப் பலவற்றை தன்னுடைய இயற்பெயரிலும் பாரி என்னும் புனைபெயரிலும் எழுதினார்.

அவற்றுள் 'கைக்குத்தல் அரிசியின் மகத்துவம்', 'பாரதியின் தமிழ்ப்புலமை', 'கங்கைகொண்ட சோழபுரம்', 'பாரம் சுமக்கும் பள்ளிப் பிள்ளைகள்', 'குழந்தைகள் அதிகம் பெற வேண்டா,' போன்றவற்றை ஓரிரு பக்க சிறு நூல்களாக அச்சிட்டு பலருக்கும் வழங்கினார்.

பாரதியார், வ.உ.சி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றை நாவலர் சோமசுந்தர பாரதியார், சக்கரைச் செட்டியார் ஆகியோருடன் இணைந்து, முறையே பாரதியார் சரித்திரம் (1928) – வ.உ.சிதம்பரம் பிள்ளை சரித்திரம் (1944 – சக்தி காரியாலய வெளியீடு) என்னும் பெயரில் நூல்களாக வெளியிட்டார். சிதம்பரம் பிள்ளை சரித்திரம் நூலுக்கு திரு. வி. க முன்னுரை எழுதினார்.

'தமிழ்த் திருமண முறை' என்னும் நூலையும் எழுதினார். இவர் வெவ்வேறு இதழ்களில் எழுதிய படைப்புகள் முறையாக இதுவரை தொகுக்கப்படவில்லை.

மொழியாக்கங்கள்

பரலி சு.நெல்லையப்பர் பங்கிம் சந்திரரின் ராதாராணி, காந்தியின் சுயராஜ்யம் போன்ற நூல்களை தமிழில் மொழியாக்கம் செய்தார்.

பாரதி

பரலி. சு. நெல்லையப்பர் பாரதியின்மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவர் நடத்திய பாரதி' என்ற இதழில்தான் 'பாரத தேசம் என்று..', 'பாருக்குள்ளே நல்ல நாடு', 'புதுமைப் பெண்', 'செந்தமிழ்நாடு' ஆகிய பாடல்கள் வெளியாகின.

1913-1919 ஆண்டுகளில் தான் பணியாற்றிய இதழ்களிலும் சுப்பிரமணிய சிவா நடத்திய 'ஞானபாநு' முதலிய இதழ்களிலும் பாரதியார் கவிதைகளை வெளிவரச் செய்தார். அவற்றிற்காக கிடைத்த பணத்தையும், பாரதிக்கு தேவைப்பட்ட பணத்தை வேறு வகைகளில் திரட்டியும், புதுவை நண்பர்கள் மூலம் பாரதிக்குக் கிடைக்கச் செய்து வந்தார். பாரதியாரால் "தம்பீ!" என அழைக்கப்பட்ட நெல்லையப்பர், செப்டம்பர் 11, 1921-அன்று பாரதியார் இறந்தபோது அவரது உடலை மறுநாள் இடுகாட்டிற்குத் தூக்கிச் சென்றவர்களுள் ஒருவராக இருந்தார்.

1950-ம் ஆண்டு முதல் குரோம்பேட்டையில் வசித்த நெல்லையப்பர் தான் வாழ்ந்த பகுதிக்கு 'பாரதிபுரம்' எனவும், அங்கிருந்த பிள்ளையாருக்கு 'பாரதி விநாயகர்' எனவும் பெயரிட்டார்

பாரதியாரின் புகழைப் பரப்பும் நோக்குடன் தனது 'லோகோபகாரி' இதழில் 'பாரதி போட்டி'களையும் செப்டம்பர் 11-ம் நாள் பாரதி விழாவையும் ஆண்டுதோறும் நடத்தினார்.

பாரதியின் படைப்புகளின் பதிப்பாளர்

நெல்லையப்பர் 'தேசபக்தன்' இதழின் துணையாசிரியராக இருந்தபோது தொடர்ந்து பாரதியின் உணர்ச்சி பொங்கும் கவிதைகளை அவ்விதழில் வெளியிட்டு வந்தார். தொடர்ந்து பாரதியின் தேசபக்திப் பாடல்கள், பாப்பாப் பாட்டு, முரசுப் பாட்டு போன்றவற்றை நிதி நெருக்கடியிலும் பரலி சு. நெல்லையப்பர் வெளியிட்டார். கண்ணன் பாட்டுக்கு எழுதிய முன்னுரையில் அவர், "ஸ்ரீமான் பாரதியார் ஒரு பெரிய மேதாவி; மகா பண்டிதர்; தெய்வீகப் புலவர்; ஜீவன் முக்தர்; இவர் எனது தமிழ்நாட்டின் தவப்பயன். அவருக்கு யான் கொடுக்கும் உச்சஸ்தானம் நிச்சயமானது. இதனைத் தற்காலத்தில் அறியாதவர்கள் பிற்காலத்தில் அறிவார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

1917- ஆம் ஆண்டு பாரதியாரின் கண்ணன் பாட்டு (ஆகஸ்ட்), பாப்பா பாட்டு, முரசுப் பாட்டு ஆகியவற்றைப் பதிப்பித்தார். கண்ணன் பாட்டுக்கு வ.வே. சு ஐயர் முன்னுரை எழுதினார். பாரதியாரின் தேச பக்திப் பாடல்களை தேசிய கீதங்கள் என்ற பெயரில் பதிப்பித்தால் பிரிட்டிஷ் அரசு தடை செய்யும் என்பதால் ' நாட்டுப்பாட்டு' என்ற பெயரில் அக்டோபர், 1917-ல் வெளியிட்டார்.

1923- ஆம் ஆண்டில் தன் நண்பர்கள் சிலரோடு இணைந்து 'பாரதி பிரசுராலயம்' என்னும் நிறுவனத்தைத் தொடங்கி அதன்வழியாக குயில்பாட்டு, கண்ணன் பாட்டு, பாரதி அறுபத்தாறு ஆகிய பாடல்கள் அடங்கிய தொகுதி ஒன்றை வெளியிட்டார்.

1953- ஆம் ஆண்டில் பாரதியார் படைப்புகளை தமிழக அரசு வெளியிடுவதற்காக அமைத்த குழுவில் நெல்லையப்பர் இடம்பெற்றார்.

சைதாப்பேட்டையில் பாரதி சுராஜ் தலைமையில் 'பாரதி கலைக்கழகம்' உருவாகக் காரணமாக இருந்தார்.

மறைவு

பரலி.சு. நெல்லையப்பருக்கு இறுதிக் காலத்தில் பார்வைக்குறைவு ஏற்பட்டது. மார்ச் 28, 1971 அன்று அவர் காலமானார்.

நூல் பட்டியல்

  • தமிழர் திருமணம்
  • உய்யும் வழி
  • பாரதி வாழ்த்து
  • பாரதியார் சரித்திரம்
  • வ.உ. சிதம்பரம்பிள்ளை சரித்திரம்
மொழியாக்கங்கள்
  • பக்கிம் சந்திர சட்டர்சியின் ராதாராணி
  • பக்கிம் சந்திர சட்டர்சியின் சோடி மோதிரம்
  • சுவர்ணலதா (டாக்டர் பா.நடராசனுடன் இணைந்து)
  • காந்தியடிகளின் சுயராஜ்யம்
  • காந்தியடிகளின் சுகவழி
  • சிவானந்தர் உபதேசமாலை
பதிப்பித்தவை
  • ஆத்மசிந்தனை, சி. இராஜகோபாலாச்சாரியார்
  • மாதர் கடமை, பி.பி.சுப்பையா
  • பகவான் அரவிந்தர் பத்தினியாருக்கு எழுதிய கடிதங்கள் (1948)
  • பூலோகத்தின் சப்த அதிசயங்கள்
  • திருவாசகம், மாணிக்கவாசகர்
  • நளன் தூது (நைடதம்), அதிவீரராம பாண்டியன்

உசாத்துணை


✅Finalised Page