under review

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

From Tamil Wiki
ரெட்டியார் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரெட்டியார் (பெயர் பட்டியல்)
ராமசாமிப் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ராமசாமிப் (பெயர் பட்டியல்)
Omanthurar.jpeg

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (ஓமந்தூர் பெரியவளவு ராமசாமி ரெட்டியார், ஓமந்தூரார், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், Omandur Ramasamy Reddiyar)) (பிப்ரவரி 1, 1895 - ஆகஸ்ட் 25, 1970) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சுதந்திர இந்தியாவின் மதராஸ் மாகாணத்தின் முதல் முதல்வர்.

பிறப்பு, கல்வி

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், தமிழ்நாட்டின் தென் ஆற்காடு மாவட்டம் திண்டிவனம் அருகில் உள்ள ஓமந்தூர் ஏன்னும் கிராமத்தில் பிப்ரவரி 1, 1895 அன்று முத்துராம ரெட்டி, ரங்கநாயகி இணையருக்குப் பிறந்தார். அவர் வால்டர் சுடர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

தனி வாழ்க்கை

ராமசாமி ரெட்டியாரின் மனைவி சிங்காரத்தம்மாள். மகன் சுந்தரம். ஒரு பெண் குழந்தை பிறந்த சில மாதங்களில் இறந்தது.. அவரது மகன் சுந்தரம் மாணவராக இருந்தபோது பெங்களூருக்கு அருகில் சுற்றுலா சென்றபோது காலமானார். சில வருடங்களில் சிங்காரத்தம்மாளும் இறந்தார்.

அரசியல் வாழ்க்கை

இந்திய விடுதலைப் போராட்டம்

டிசம்பர் 1920-ல் நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கெடுப்பதற்காக தமிழகத்திலிருந்து சென்ற குழுவில் ஓமந்தூராரும் ஒருவர். நாக்பூரிலிருந்து திரும்பியதுமே மாநாட்டில் விவாதிக்கப்பட்ட கருத்துகளை மக்கள் அறிய வேண்டி தென்னார்க்காடு மாவட்ட அளவில் ஓர் அரசியல் மாநாட்டை ஓமந்தூராரும் மற்ற காங்கிரஸ் தொண்டர்களும் பொறுப்பேற்று நடத்தினர். அசலாம்பிகை அம்மாள், கிருஷ்ணசாமி சர்மா, இந்து நாளிதழின் ஆசிரியராக இருந்த ரெங்கசாமி ஐயங்கார் போன்றோர் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

1927-ல் தென்னார்க்காடு மாவட்டம் சிறுவந்தாடு என்னும் கிராமத்தில் ஓமந்தூரார் ஓர் ஆசிரமத்தை உருவாக்கி காந்தியின் நிர்மாணத்திட்டப் பணிகளிலும் விழிப்புணர்வு குறித்த பரப்புரைகளிலும் இளைஞர்களை ஈடுபடுத்தினார்.

1930-ல் தண்டியில் காந்தியின் தலைமையில் நடந்த உப்பு சத்தியாக்கிரகத்தைத் தொடர்ந்து ராஜாஜியின் தலைமையில் வேதாரண்யத்தில் ஏப்ரல் 12, 1930 அன்று நடைபெற்ற உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். திருச்சியிலிருந்து நடைப்பயணமாகச் சென்ற சத்தியாகிரகிகள் 150 மைல்கள் நடந்துசென்று வேதாரண்யம் கடற்கரையை அடைந்து உப்பு காய்ச்சினர். அதில் அவருக்கு ஆறு மாத காலம் சிறைத்தண்டனை கிடைத்தது.

ஓமந்தூரார்அயல்நாட்டுத் துணிவணிகத்தை எதிர்த்தும் கதருக்கு ஆதரவான குரலை முன்வைத்தும் விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் ஊர்வலங்கள் நடத்துவதிலும் பரப்புரை செய்வதிலும் ஈடுபட்டார். ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்சிபார் என்னும் தீவிலிருந்து இந்தியாவுக்கு கிராம்பு பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. 1936-ல் ஜான்சிபார் அரசு அங்கு வாழ்ந்த இந்தியர்களுக்கு தொல்லைகள் அளித்ததையொட்டி ஜான்சிபாரிலிருந்து கிராம்பு மூட்டைகளை ஏற்றி வந்த கப்பலிலிருந்து மூட்டைகளை இறக்க விடாமல் பம்பாய் துறைமுகத்தில் படேல் தலைமையில் மறியல் நடந்தது. கப்பல் புதுச்சேரிக்குத் திருப்பி விடப்பட்டபோது எஸ்.ஆர்.சுப்பிரமணியம், வி.சுப்பையா போன்ற தொண்டர்களுடன் இணைந்து புதுச்சேரி துறைமுகத்தில் தொடர்ந்து பல நாட்கள் மறியலில் ஈடுபட்டார். இதன் விளைவாக கப்பல் இந்தியாவைவிட்டே புறப்பட்டுச் சென்றது.

ஓமந்தூரார் அக்டோபர் 1940-ல் காந்தி தொடங்கிய தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டு ஓராண்டுக்காலம் சிறைத்தண்டனை பெற்றார். 1942-ல் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு பதினைந்து மாத காலம் சிறைத்தண்டனை பெற்றார். கடலூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் என நான்கு சிறைகளில் மாறிமாறி தண்டனைக்காலத்தைக் கழிக்க நேர்ந்தது.

முதல் அமைச்சர்

ராமசாமி ரெட்டியார் மார்ச் 23, 1947 அன்று சென்னையின் மாகாணத்தின் முதல்வராகப் பதவியேற்றார். ஏப்ரல் 6, 1949 வரை ஆட்சியில் இருந்தார். அவர் மதராஸின் முதலமைச்சராக இருந்தபோது இந்தியா சுதந்திரம் அடைந்தது. சென்னை கோட்டையில் 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ந்தேதி முதல் சுதந்திர தினக் கொடியை ஏற்றினார்.

1948-ல் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தேர்தல்கள் நடைபெற்றபோது, ராமசாமி ரெட்டியார் போட்டியிடுவதை தங்குதுரி பிரகாசம் எதிர்த்தபோதும், காமராஜரின் ஆதரவுடன் ரெட்டியார் வெற்றி பெற்றார். காங்கிரஸ் தலைவர்களுக்கு ரெட்டியார் மீது அதிருப்தி இருந்ததால் , 1949 காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தேர்தல்களின் போது, ராமசாமி ரெட்டியருக்கு எதிராக காமராஜர் பி.எஸ். குமாரசாமி ராஜாவை ஆதரித்தார். ராஜாஜி, பி. சுப்பராயன் மற்றும் டி. பிரகாசம் ஆகியோர் ராமசாமி ரெட்டியாரை ஆதரித்த போதிலும், அவர் வாக்குகளை இழந்து முதல்வர் பதவியில் இருந்து விலகினார்.

ஓமந்தூரார் முதல்வர் பதவியிலிருந்து விலகியதும் அரசியல் அமைப்புச் சட்டடக்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

ஓமந்தூராரின் பதவிக்காலத்தின் முக்கியமான நிகழ்வுகள்:

  • ஊராட்சித்துறையும் வேளாண்மைத்துறையும் கால்நடை மருத்துவத்துறையும் கிராம அளவில் ஒன்றிணைந்து இயங்கும் வகையில் முதன்முதலாக ஒருங்கிணைக்கப்பட்டன.
  • சென்னை கோயில் நுழைவு அங்கீகாரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டம் தலித்துகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட இந்துக்களுக்கு இந்து கோயில்களுக்குள் நுழைய முழுமையான உரிமைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. மே 11, 1947 அன்று ஆளுநரால் அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
  • 1947-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் பல இந்துக் கோவில்களில் நடைமுறையில் இருந்த தேவதாசி முறையை முடிவுக்குக் கொண்டு வந்தது.
  • 1948-ல், மெட்ராஸ் அரசாங்கத்திற்குச் சொந்தமான முதல் விமானமான டி ஹேவிலேண்ட் டவ்வை வாங்கப்பட்டது.
    அனைத்து மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டத்தை அமல்படுத்தினார். .
  • வீடூர் அணைக்கட்டுத் திட்டத்துக்கும் கீழ்பவானி அணைக்கட்டுத் திட்டத்துக்கும் ஒப்புதல் வழங்கினார்.
  • தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்டோர் நலன்களைப் பாதுகாக்க ஆதிதிராவிடர் நலத்துறை என தனித்துறையை உருவாகி, ஆணையரை நியமித்தார். அரசாங்க நிலங்களைப் பொதுமக்களுக்கு வழங்கும்போது, ஆதிதிராவிடர்களுக்கே முன்னுரிமை வழங்க வேண்டும்' என்ற நடைமுறையை அரசாணையாகப் பிறப்பித்தார்.
  • ஓமந்தூரார் தான் முதல்வர் பதவியேற்றிருந்த காலத்தில் ஆலயப் பிரவேசத்தை எல்லாக் கோயில்களிலும் முறைப்படுத்த ஒரு தனிச் சட்டத்தையும் தோற்றுவித்தார். அப்போதைய சென்னை மாகாணத்தில் இருந்த திருப்பதி ஏழுமலையானைத் தரிசிக்க, 1947-ம் ஆண்டுவரை ஆதிதிராவிடர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலை ஆலயப் பிரவேசச் சட்டத்தின் பின் மாறியது. திண்டிவனம் ஆதிதிராவிடர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான குலசேகரதாஸ் என்பவரை, திருமலை-திருப்பதி கோயிலின் அறங்காவலராக நியமித்தார்.
  • ஜமீந்தாரி முறை ஒழிப்புச் சட்டம், இந்து சமய அறநிலையச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் போன்ற சட்டங்கள் அவரது ஆட்சிக்ககாலத்தில் அமல்படுத்தப்பட்டன.
  • ஓமந்தூரார் முதலமைச்சரானதும் அனைத்து மாவட்டங்களிலும் மதுவிலக்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது
  • தமிழ்வளர்ச்சிக்கழகம் என்னும் துறை முதன்முதலாக உருவாக்கப்பட்டது.
  • தமிழ்க்கலைக்களஞ்சியம் உருவாக்குவதற்கான திட்டம் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
  • பாரதியின் பாடல்களின் உரிமையை வைத்திருந்த ஏ.வி. மெய்யப்ப செட்டியாரின் ஒத்துழைப்பைப் பெற்று மார்ச் 12, 1949 அன்று பாரதியாருடைய படைப்புகளை நாட்டுடைமையாக்கினார்.
  • சென்னை மாகாணத்தின் அரசுச்சின்னமாக ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் கோபுரத்தை ஓமந்தூரார் அறிவித்தார். சமயச்சின்னமாக இருப்பதால் அதற்கு ஒப்புதல் அளிக்க மத்திய அரசு யோசித்தபோது, சமயச்சின்னம் என்னும் குறியீட்டுக்கும் அப்பால் அது தமிழ்ப்பண்பாட்டின் சின்னமாகவும் கட்டடக்கலையின் அடையாளமாகவும் விளங்குவதைக் குறிப்பிட்டு அரசு ஏற்றுக்கொள்ளும்படி செய்தார். கோபுரத்துக்குக் கீழே 'சத்யமேவ ஜயதே' என்ற வாசகம் பொறிக்கப்பட்டது.
Omandur stamp.jpg

இறுதிக் காலம்

முதலமைச்சர் பதவியைத் துறந்த பின் கிராமத்தில் அவருடைய சகோதரர்களுடைய குடும்பங்களும், சொந்தமான சொத்துகள் இருந்தபோதும், தமக்கு விருப்பமான வடலூரில் ஓர் ஆசிரமத்தை அமைத்துக்கொண்டு ஏறத்தாழ இருபது ஆண்டுகளுக்கும் மேல் தன் இறுதிக்காலம் வரையில் அங்கேயே தங்கி மக்களுக்குத் தொண்டாற்றிவந்தார். வடலூரில் அவர் உருவாக்கிய வள்ளலார் குருகுல உயர்நிலைப்பள்ளி, அப்பர் அனாதை ஏழை மாணவர் இல்லம், இராமலிங்கர் தொண்டர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், ஆயுர்வேத வைத்திய சாலை, தியான மண்டபம், திலகவதியார் உணவுவிடுதி ஆகிய நிறுவனங்களை உருவாக்கினார்.

மறைவு

ஓமந்தூரார் ஆகஸ்ட் 25, 1970 அன்று காலமானார்.

இந்திய அரசு 2010-ல் ஓமந்தூரார் நினைவாக தபால் தலை வெளியிட்டது. தமிழக அரசு ஓமந்தூரில் அவருக்கு மணிமண்டபம் அமைத்துள்ளது.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 01-Apr-2025, 11:27:43 IST