பி.எஸ். குமாரசாமி ராஜா
பி.எஸ்.குமாரசாமி ராஜா (ஜூலை 8, 1898 - மார்ச் 16, 1957) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், மதராஸ் மாகாணத்தின் கடைசி முதலமைச்சர், சென்னை மாநிலத்தின் முதல் முதல்வர். ராஜபாளையத்தில் கதர், கூட்டுறவு இயக்கங்களை முன்னெடுத்தவர். காந்தி கலை மன்றத்தை நிறுவினார்.
பிறப்பு, கல்வி
பி.எஸ். குமாரசாமி ராஜா ஜூலை 8, 1898-ல் ராஜபாளையத்தில் பூசப்பட்டி சஞ்சீவி ராஜா- முத்தம்மாள் இணையருக்குப் பிறந்தார். ராஜாக்கள் (க்ஷத்ரிய ராஜுஸ்) சமூகத்தைச் சேர்ந்த அவரது முன்னோர்கள் நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆந்திரப்பிரதேசத்தில் உள்ள வடக்கு சர்க்காஸில் இருந்து இடம்பெயர்ந்தனர்.
குமாரசாமி ராஜா பிறந்து எட்டு நாட்களில் தாயை இழந்தார். மூன்று வயதில் தந்தையை இழந்தார். தன் பாட்டியால் வளர்க்கப்பட்டார். ராஜபாளையம் ஆங்கிலோ-வெர்னாகுலர் பள்ளியிலும், ஶ்ரீவில்லிப்புத்தூர் ஹிந்து உயர்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கல்வி பயின்றார்.
தனி வாழ்க்கை
குமாரசாமி ராஜா தனது 14-ம் வயதில் ஶ்ரீரங்கம்மாளை மணம் செய்துகொண்டார்.
பி.ஏ.சி. ராம்கோ குரூப் நிறுவனர் ராமசாமி ராஜா மற்றும் டி.டி.கிருஷ்ணமாச்சாரி இருவருடனும் நெருங்கிய நட்பில் இருந்தார் .
அரசியல் வாழ்க்கை
இந்திய விடுதலைக்கு முன்
குமாரசாமி ராஜா மாணவப் பருவத்திலேயே அன்னி பெசண்ட் அம்மையாரின் ஹோம்ரூல் இயக்கத்தின் மேல் ஈடுபாடு கொண்டிருந்தார். ராஜபாளையத்தில் ஹோம்ரூல் இயக்க மாநாடு ஒன்றை நடத்தினார். பி.பி. வாடியா அதற்குத் தலைமை தாங்கினார். ராஜபாளையத்துக்கு வருகை தந்த எஸ். சத்தியமூர்த்தி, ராஜாஜி இருவராலும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டார். 1919-ல் காந்தியைச் சந்தித்தபின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1921-ல் ராஜபாளையத்தில் கதர் கைராட்டின நெசவுத் தொழிற்சாலையைத் தொடங்கினார். அதே ஆண்டு ராஜபாளையத்தில் விவசாயிகள் மற்றும் ஹரிஜன சங்கத்தைத் தோற்றுவித்தார்.
குமாரசாமி ராஜா 1920-ல் ஐ.பி. அரங்கசாமி ராஜாவுடன் இணைந்து ரௌலட் சட்டத்துக்கெதிரான இயக்கத்தில் பங்குகொண்டார். சென்னையில் நடந்த முதல் கிலாஃபத் மாநாட்டின் வரவேற்புக் கமிட்டியின் துணைத் தலைவராக இருந்தார். 1925-ல் காந்தியின் பிறந்த நாளையொட்டி அவர் நடத்திய கூட்டத்தில் எஸ். ஶ்ரீநிவாச ஐயங்கார் கலந்துகொண்டு உரையாற்றினார். 1927-ல் ராஜபாளையத்துக்கு காந்தி வந்தபோது 'காந்தி கதர் வஸ்திராலயம்' தொடங்கப்பட்டது. 1928-ல் கல்கத்தாவில் நடந்த அகில இந்திய கதர் கண்காட்சியில் காந்தி கதர் வஸ்திராலயத்தில் நெய்யப்பட்ட கதர்த்துணி முதல் பரிசு பெற்றது. 1929-ல் கதர் வஸ்திராலயம் அகில இந்திய சர்கா சங்கத்துடன் இணைந்தது.
1931-ல் ஒத்துழையாமை இயக்கத்திலும் கள்ளுக்கடை மறியலிலும் பங்கு கொண்டார். அதே வருடம் கராச்சியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்குகொண்டு வரியில்லாத் தீர்மானத்தை(No tax movement) ஆதரித்தார். 1932-ல் போராட்டங்களில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறைத்தண்டனை பெற்றார்.
1934-ல், ராஜா திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் தொகுதிகளிலிருந்து தேர்தலில் வென்று மதராஸ் மாகாண சட்டமன்ற உறுப்பினரானார். 1937-ல் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் ராஜாஜி அமைச்சவையில் அமைச்சராகவும் ஆனார்.
1938-ல் ராஜா நாற்பதாவது மதராஸ் மாகாண அரசியல் மாநாட்டின் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்து ராஜபாளையத்தில் மாநாட்டை நடத்தினார். காந்தி ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தபோது குமாரசாமி ராஜா சிறப்பான வரவேற்பு அளித்தார். இந்த மாநாட்டின் தலைவராக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இருந்தார்.
1941-ல் குமாரசாமி ராஜா தனிநபர் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதற்காக ஓராண்டு சிறைத்தண்டனை பெற்று திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.
1946-ல் ஶ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து மதராஸ் மாகாண சட்டப்பேரவைக்கு போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். டி. பிரகாசத்தின் அமைச்சரவையில் விவசாயம், பொது மட்டும் கூட்டுறவுத் துறை அமைச்சராகப் பதவியேற்றார். அமைச்சராக இருந்த போது ரூ 5000/-க்கும் மேல் விவசாயத்தில் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விதித்தார். பிரகாசத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியைத் துறந்தார்.
குமாரசாமி ராஜா பஞ்சாயத்து அமைப்புகள், லோக்கல் போர்டு நிர்வாகம், ராஜபாளையம் யூனியன், பஞ்சாயத்து நீதிமன்றம், ராமநாதபுரம் மாவட்டக் குழு, மாவட்டக் கல்விக் கவுன்சில் போன்றவற்றின் தலைவராக இருந்தார். ராஜபாளையம் விவசாயிகள் சங்கம் மற்றும் ஹரிஜன சங்கத்தைத் தோற்றுவித்தார். ராஜபாளையம் பூபதி ராஜா கூட்டுறவு வங்கி அவரது முயற்சியால் உருவானது.
விடுதலைக்குப்பின்
ஏப்ரல் 6, 1949-ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தன் பதவியைத் துறந்தபோது குமாரசாமி ராஜா மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றார். இந்தியக் குடியரசின் மதராஸ் மாநிலத்தின் முதல் முதலமைச்சராக இருந்தார்.
- ஓமந்தூரார் அரசு ஜமீந்தாரி ஒழிப்பு சட்டத்தை இயற்றி அமுல்படுத்தியபோதும், குமாரசாமி ராஜா முதலமைச்சரானபின் அது முழுமையாக செயல்படுவதில் இருந்த சிக்கல்கள் நீக்கப்பட்டு ஜமீந்தார்களிடம் இருந்த நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டு நிலமற்ற ஏழைகளுக்கு விநியோகிக்கப்பட்டன. ஓமந்தூராரின் ஆட்சியில் இயற்றப்பட்ட மதுவிலக்கு, நிலச் சீர்திருத்தம் மற்றும் ஆதி திராவிட நலச் சட்டங்கள் குமாரசாமி ராஜாவின் ஆட்சிக் காலத்தில் முழுமையாக செயல்படுத்தப்பட்டன.
- 1949-ல் மாவட்ட நீதிமன்றங்கள் உயர்நீதி மன்றத்தின் ஆளுகைக்கீழ் கொண்டுவரப்பட்டன.
- செப்டெம்பர் 6, 1949 அன்று பொதுவுடைமைக் கட்சி தடை செய்யப்பட்டது.
- செண்பகம் துரைராஜன் வழக்கில் ஆங்கிலேயர் ஆட்சியில் மதராஸ் மாகாணத்தில் அமுல் படுத்தப்பட்ட வகுப்புவாரி இட ஒதுக்கீட்டு சட்டம் செல்லாது என்று சென்னை உயர்நிதி மன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து சென்னை மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கலும் பேரணிகளும் நடந்தன. தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. 1951-ல் நடுவண் அரசு வகுப்புவாரி இட ஒதுக்கீட்டுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் கொண்டுவரக் காரணமாக இருந்தவர்களில் ஒருவர் குமாரசாமி ராஜா.
குமாரசாமி ராஜா 1952-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. 1954 முதல் 1956 வரை ஒரிசா மாநிலத்தின் ஆளுனராகப் பொறுப்பேற்றார். செப்டெம்பர் 12, 1956 அன்று உடல் நல்ச் சீர்கேடு காரணமாகத் தனது ஆளுநர் பொறுப்பை துறந்தார் .
ராஜாவின் செல்வத்தின் பெரும்பகுதி ஏழைகளுக்கான உதவிக்காகவும், பொது நலனுக்காகவும், குறிப்பாக காங்கிரஸ் இயக்கத்திற்காகவும் செலவிடப்பட்டது.ராஜபாளையத்தில் தனக்குச் சொந்தமாக இருந்த தன் வீடு மற்றும் நிலச் சொத்துக்களை காந்தி கலை மன்றத்திற்கு கொடையாக வழங்கினார்.
சென்னை அடையாரில் இருந்த ஹிந்துஸ்தான் சாரணர் சங்கத்தின் (Hindustan Scout Association) தலைவராக இருந்தார்.
மறைவு
மார்ச் 15, 1957 அன்று குமாரசாமி ராஜா உடல்நலக்குறைவால் காலமானார்.
நினைவேந்தல்
இந்திய அரசு குமாரசாமி ராஜாவை கௌரவிக்கும்பொருட்டு 1999-ல் தபால்தலை வெளியிட்டது.
ராஜபாளையம் பேருந்து நிலையத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும், அதைச் சுற்றி ஏற்படுத்தப்பட்ட நகருக்கும் குமாரசாமி ராஜாவின் பெயர் சூட்டப்பட்டது.
உசாத்துணை
- Shankar's IAS academy-Tamil Nadu leader's series
- P.S.Kumaraswamy Raja: The Biography of An Ardent Gandhian Apostle of Rajapalayam, 1898 - 1957
- பி.எஸ்.கே யின் தமிழ்த்தொண்டு, தினமணி 2019
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 30-May-2025, 09:13:21 IST

