திருவாதவூரர் புராணம்
திருவாதவூரர் புராணம்(பொ.யு. 15-ம் நூற்றாண்டு) மாணிக்கவாசகரைப் பற்றி கடவுள் மாமுனிவர் இயற்றிய புராண நூல்.
பதிப்பு, வெளியீடு
திருவாதவூரர் புராணம் நூல் யாழ்ப்பாணம் சுன்னகம் குமாரசாமிப்புலவரால் திருத்தப்பட்ட உரையுடன் இ. சிவராமலிங்கையரால் இலங்கை கொக்குவிலில் உள்ள சோதிடப்பிரகாசயந்திரசாலையில் பதிப்பிக்கப்பட்டது.
ஆசிரியர்
திருவாதவூரர் புராணத்தை இயற்றியவர் கடவுள் மாமுனிவர்.
தோற்றம், காலம்
திருவாதவூரார் புராணத்தில் மாணிக்கவாசகரின் வரலாறு பற்றிய செய்திகள் மட்டும் தொகுக்கப்பட்டுள்ளன. நம்பியாண்டார் நம்பி தொகுத்த 63 நாயன்மார்கள் பட்டியல், சேக்கிழாரின் பெரிய புராணம் இரண்டிலும் மாணிக்க வாசகரின் வரலாறு இடம்பெறாததால் மாணிக்கவாசகரின் வரலாறு எழுதப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் திருவாதவூரார் புராணம் இயற்றப்பட்டது.
பொ.யு. 11-ம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட கல்லாடம் மதுரைச் சொக்கநாதரின் 30 திருவிளையாடல்களைக் கூறுகிறது. பொ.யு. 13-ம் நூற்றாண்டு நூல் பெரும்பற்றப்புலியூர் நம்பி பாடிய பழைய திருவிளையாடல் புராணம் நரி குதிரையானது, குதிரை நரியானது பற்றிய கதைகளைக் கூறுகிறது. எனவே நரி பரியான கதையைக் கூறும் ஆசிரியர் 13-ம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவர். உமாபதி சிவாசாரியார் 1300-1325 காலப்பகுதியில் வாழ்ந்தவர். இவரைக் குறிப்பிடும் பாடல் திருவாதவூர் புராணத்தில் உள்ளது. எனவே கடவுள் மாமுனிவர் காலம் 14-ம் நூற்றாண்டுக்குப் பிந்தியது. இன்னும் இவை போன்ற பல சான்றுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இவர் காலம் 15-ம் நூற்றாண்டு என ஆகிறது." என மு. அருணாசலம் குறிப்பிடுகிறார்
நூல் அமைப்பு
திருவாதவூரர் புராணம் 544 பாடல்களைக் கொண்டது. விநாயகர் வணக்க்ம, கடவுள் வாழ்த்து, வரலாறு, அவையடக்கம் ஆகியவற்ரைத் தொடர்ந்து மாணிக்கவாசகரின் வரலாறு பின்வரும் 7 சருக்கங்களில் பாடப்பட்டுள்ளது.
- மந்திரிச் சருக்கம்
- திருப்பெருந்துறைச் சருக்கம்
- குதிரையிட்ட சருக்கம்
- மண்சுமந்த சருக்கம்
- திருவம்பலச் சருக்கம்
- புத்தரைவாதில் வென்ற சருக்கம்
- திருவடிபெற்ற சருக்கம்
இதன் ஆறாவது சருக்கத்தைச் சைமன் காசிச் செட்டி பொ.யு. 1861-ம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். இப்புராணத்திற்குக் குமாரதேவர் என்பவர் உரை எழுதினார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.