being created

ஸ்வாமிநாத ஆத்ரேயன்

From Tamil Wiki
Revision as of 23:34, 3 September 2022 by ASN (talk | contribs) (Para Added)
ஸ்வாமிநாத ஆத்ரேயன்
ஸ்வாமிநாத ஆத்ரேயன்

எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், உபன்யாசகர், இசைவல்லுநர் எனப் பன்முக அடையாளத்துடன் இலக்கிய உலகில் செயல்பட்டவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன் (ஸ்வாமிநாத ஆத்ரேயர்; ஸ்வாமிநாத ஆத்ரேயா; சுவாமிநாத ஆத்ரேயன்) (1919-2013). தஞ்சை எழுத்தாளர்கள் பலருக்கு முன்னோடியாகவும், உற்ற நண்பராகவும் திகழ்ந்தவர். ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் வரிசையில் குறிப்பிடத் தகுந்தவர். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் அறிந்தவர். தனது இலக்கியப் பணிகளுக்காக ‘ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான்’ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். காஞ்சிப் பெரியவர் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் நெருக்கமான சீடர்களுள் ஒருவர்.

பிறப்பு, கல்வி

ஸ்வாமிநாத ஆத்ரேயன், அன்றைய திருவாரூர் அருகே உள்ள ‘சிமிழி’ என்ற சிற்றூரில், வேத பண்டிதர், சம்ஸ்கிருத அறிஞர் ‘சிமிழி’ வெங்கட்ராம சாஸ்திரிகள்-சங்கரி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். தந்தையிடமிருந்து வேதக் கல்வியைக் கற்றார். தமிழை முறைப்படிக் கற்ற ஸ்வாமிநாத ஆத்ரேயன், அண்ணாமலைப் பல்கலையில் சம்ஸ்கிருதம் பயின்று, ‘வ்யாகரண சிரோமணி’ பட்டம் பெற்றார். மொழியியலிலும் பட்டம் பெற்றார். படிக்கும் காலத்திலேயே தனது திறமை காரணமாக துணைவேந்தர், ‘ரைட் ஹானரபிள்’ சீனிவாச சாஸ்திரியின் அன்பையும் பாராட்டுதலையும் பெற்றார்.

தனி வாழ்க்கை

படிப்பை முடித்ததும் சில காலம் ஹரிகதை உபன்யாசம் செய்து வந்தார். பின் மன்னார்குடியில் ஒரு கடையைத் தொடங்கி நடத்தினார். ஜயலக்ஷ்மியுடன் திருமணம் நிகழ்ந்தது. தொடர்ந்து தஞ்சாவூரில் ‘ஸ்ரீ லலிதா மஹால் ஸ்டோர்ஸ்’ என்ற ஆடைகள் விற்பனையகக்  கடையைத் தொடங்கி வணிகம் செய்து வந்தார். சிறிதுகாலம் சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றினார்.

ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை - சுலபா
ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதை
ஸ்வாமிநாத ஆத்ரேயன் சிறுகதை - பூக்காரி

இலக்கிய வாழ்க்கை

கு.ப. ராஜகோபாலன், ஸ்வாமிநாத ஆத்ரேயனின் மனம் கவர்ந்தவராக இருந்தார். அவரது எழுத்துக்களால் கவரப்பட்ட ஸ்வாமிநாத ஆத்ரேயன், தானும் சிறுகதைகளை எழுத ஆரம்பித்தார். ’மணிக்கொடி’யில் இவரது முதல் சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து மணிக்கொடிக்குச் சிறுகதைகள் எழுதி, ‘மணிக்கொடி’ எழுத்தாளர்கள் வரிசையில் இடம் பெற்றார். ‘சுதேசமித்திரன்’, ‘சிவாஜி’, ‘சரஸ்வதி’, ‘சந்திரோதயம்’, ‘யாத்ரா’ ‘பாரிஜாதம்’, ‘எழுத்து’, ‘கணையாழி’, ‘கலாமோகினி’ போன்ற இதழ்களிலும் இவரது சிறுகதைகள் வெளியாகின. தீபம் இதழிலும் “ராமா நீயெட’ என்ற சிறுகதை உள்ளிட்ட இவரது பல படைப்புகள் பிரசுரமாகியுள்ளன. அக்காலத்து முன்னணி இதழ்கள் பலவற்றிலும் இயற்பெயரிலும், புனை பெயரிலும் சிறுகதைகள், இசைக் கட்டுரைகள், வேதம் பற்றிய கட்டுரைகள், தத்துவ விளக்கங்கள் பலவற்றை எழுதியுள்ளார். கு.ப.ராஜகோபாலனைத் தனது முன்னோடியாகக் கொண்டு மாறுபட்ட கருப்பொருளில் பல்வேறு சிறுகதைகளைப் படைத்தார்.

தஞ்சை எழுத்தாளர்களான ந. பிச்சமூர்த்தி, தி. ஜானகிராமன், கரிச்சான் குஞ்சு, திருலோக சீதாராம், தி.ஜ. ரங்கநாதன், சாலிவாகனன், எம்.வி.வெங்கட்ராம் போன்றோர் ஸ்வாமிநாத ஆத்ரேயனின் நண்பர்களாக இருந்தனர். தி. ஜானகிராமன், இவரது நெருங்கிய நண்பராக இருந்தார். இருவரும் இணைந்து உமையாள்புரம் சுவாமிநாத ஐயரிடம் சங்கீதம் கற்றுக் கொண்டனர் என்றாலும், இருவருமே இசைத் துறையில் ஈடுபடவில்லை.

ஸ்வாமிநாத ஆத்ரேயன், சென்னை குப்புசுவாமி ஆய்வு நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தில் சி.சு.செல்லப்பா, சிட்டி, கி.வா.ஜ., பகீரதன், அ. சீனிவாச ராகவன், ச.து.சு. யோகி, டாக்டர் வே. ராகவன், ஆர்வி, அ.வெ. கிருஷ்ணசாமி ரெட்டியார், வல்லிக்கண்ணன், ரா. கணபதி   போன்றோரின் நட்புக் கிடைத்தது. அது மேலும் பல படைப்புகள் வெளிவரக் காரணமானது. தமிழில் இசை சார்ந்த சிறுகதைகளை அதிகம் எழுதியவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன்தான். ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சிறுகதைகளில் சில தொகுக்கப்பட்டு ‘மாணிக்க வீணை’ என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது

ஆன்மிக இலக்கியம்

காஞ்சி மஹா பெரியவர், சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் அன்பைப் பெற்றவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன். பெரியவரால் அன்போடு ‘சிமிழி’ என்று அழைக்கப்பட்டவர். காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்வானாக இருந்தார். மஹா பெரியவரின் ஆலோசனையின் படி சில நூல்களை இவர் எழுதினார். ‘சமர்த்த ராமதாஸர் சரிதம்' என்பது அவற்றுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று. 730 பக்கங்களை உடைய இந்நூல், சமர்த்த ராமதாஸரின் வாழ்க்கை பற்றியும்,  மன்னர் சிவாஜியுடன் அவருக்கு இருந்த தொடர்பு பற்றியும் விரிவாக விளக்குகிறது. இந்த நூல் பால காண்டம், யாத்ரா காண்டம், மாருதி காண்டம், சாஜி காண்டம், சிவாஜி காண்டம், தசபோத காண்டம், மனச்சேஸ்லோககாண்டம் என ஏழு காண்டங்களைக் கொண்டுள்ளது.

’ஜயஜயஹனுமான்’ எண்ணூறு பக்கங்களைக் கொண்ட நூல். இது ஹனுமனின் வாழ்க்கை வரலாற்றையும், இந்தியாவில் எங்கெங்கு எல்லாம் ஹனுமன் வழிபாடு நிலவுகிறது, அவற்றின் சிறப்புகள் என்ன, உலக அளவில் ஹனுமன் வழிபாடு என்பது பற்றியெல்லாம் விரிவாக விளக்கும் ஆய்வு நூல்.

நாராயண தீர்த்தரின் வாழ்க்கை வரலாற்றை ‘நாராயண தீர்த்தர் சரித்திரம்' என்ற தலைப்பில் தந்துள்ளார் ஸ்வாமிநாத ஆத்ரேயன். தஞ்சை சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பல அரிய சம்ஸ்க்ருத நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்த பெருமை இவருக்கு உண்டு. கோரக்பூர் கீதா பிரஸ்ஸின் பகவத் கீதை (பகவத்கீதை - தத்வவிவேசனீ) தமிழ் மொழிபெயர்ப்பைச் செய்தவர் ஸ்வாமிநாத ஆத்ரேயன் தான். இவரது ‘தேவப் பிரயாகையில் மாலை' என்ற தலைப்புள்ள கவிதை, ஞானபீடத் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. சாகித்ய அகாதமி, ஸ்வாமிநாத ஆத்ரேயனின் சம்ஸ்க்ருத நூல்கள் பலவற்றை வெளியிட்டு அவரைச் சிறப்பித்தது.

ஸ்ரீ தியாகராஜ அனுபவங்கள்

ஸ்வாமிநாத ஆத்ரேயனின் மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த சிறுகதை நூல், 'ஸ்ரீ தியாகராஜ அனுபவங்கள்' என்பது. பல ஆண்டுகளாக எழுதப்பட்ட 12 சிறுகதைகளின் தொகுப்பு இந்த நூல். இது, ஸ்ரீ தியாகராஜரின் பாடல்களையும், அந்தப் பாடல்கள் உருவான பின்னணியையும் அது தொடர்பான சம்பவங்களையும் சிறுகதை வடிவில் விவரிக்கிறது இந்நூல்.  தியாகராஜரின் நேரடி சிஷ்யர்கள் வழிவந்த உமையாள்புரம் ஸ்வாமிநாத பாகவதர், ஸ்ரீரங்காச்சாரியார் போன்றோர் சொன்ன தகவல்களைத் திரட்டி இந்நூலை ஸ்வாமிநாத ஆத்ரேயன் உருவாக்கியிருந்தார்.

இந்த நூலில், தியாகராஜ சுவாமிகளின் பக்தி உள்ளம், ராமர் மீது அவர் கொண்டிருந்த அன்பு, கீர்த்தனைகள் உருவான விதம், அவற்றின் சிறப்பு என எல்லாவற்றைப் பற்றியும் மிக விரிவாக எழுதியிருக்கிறார். இந்நூலுக்காக ஸ்வாமிநாத ஆத்ரேயனுக்கு ‘ராஷ்ட்ரிய சம்ஸ்கிருத சம்ஸ்தான்’ விருது வழங்கப்பட்டது.

தியாகராஜர் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை இவர் சிறுகதைகளாக எழுதியிருக்கிறார். அவற்றில் சில சுதேசமித்திரன் இதழில் வெளிவந்தன. இசையையும் தியாகராஜரின் வாழ்க்கையையும் மையமாக வைத்து அவற்றை எழுதியிருந்தார். ‘தெரதீயகராத...’, ‘மனசுலோனி மர்மமு...’, ‘இதர தைவமுலவல்ல...’, ‘ஸரிவாரிலோன...’, ‘அடிகிஸுகமுலு...’, ‘நின்னுவினா...’ போன்ற கீர்த்தனைகளை எந்தச் சூழ்நிலையில் ஸ்ரீ தியாகய்யர் பாட நேர்ந்தது என்பதைக் கதைகள் வடிவில் எழுதியிருக்கிறார், ஸ்வாமிநாத ஆத்ரேயன்.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.