first review completed

நரசிங்க முனையரைய நாயனார்

From Tamil Wiki
Revision as of 20:15, 12 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected error in line feed character)
நரசிங்க முனையரைய நாயனார் (ஓவியம்: அமரர் எஸ். மாலையப்பன்)

நரசிங்க முனையரைய நாயனார், சைவ சமய அடியார்களாகிய 63 நாயன்மார்களில் ஒருவர்.

வாழ்க்கைக் குறிப்பு

நரசிங்க முனையரையர், சோழநாட்டின் திருமுனைப்பாடி நாட்டின் சிற்றரசராக இருந்தார். சிவபக்தராக இருந்த இவர், சிவனடியார்களுக்குத் தேவையான பொன்னும் பொருளும் அளித்து அவர்களை ஆராதித்தார்.

சிவத்தொண்டு

நரசிங்க முனையரையர், ஒரு நாள் சிவனடியார்களுக்குப் பொன்னும், பொருளும், பட்டாடைகளும் வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது அளவில்லாத காமம் துய்த்ததால் பெற்ற நோய்களுக்கு அடையாளமான பல குறிகளைப் பெற்றவரும், அக்குறிகளோடு கூடவே உடலில் திருநீற்றைப் பூசியவருமான ஒரு சிவனடியார் அங்கு வந்தார். அவரைக் கண்டு அருகிலிருந்த சிவனடியார்கள் இகழ்ந்து அருவருத்து அங்கிருந்து ஒதுங்கிச் சென்றனர்.

ஒழுக்கம் இல்லாதவர்களாக இருந்தாலும், திருநீறணிந்த அடியார்களை இகழ்வது கொடிய பாவத்தில் சென்று சேர்க்குமே என்று மனம் வருந்தினார், நரசிங்க முனையரையர். சிவனடியாரை வணங்கி, ஆரத்தழுவி அன்புடன் வரவேற்றார். இனிய வார்த்தைகள் கூறினார். அவருக்கு இரட்டிப்புப் பொன் கொடுத்து, பல அன்புமொழிகள் பேசி, அவர் பாதம் பணிந்து வணங்கினார். பின் அவரை அவரது இருப்பிடத்திற்கு அனுப்பி வைத்தார். இவ்வாறு சிவனடியவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் அவர்களிடம் பேதம் பாராட்டாத தன்மை மிக்கவராக நரசிங்க முனையரையர் இருந்தார் .

ஒருநாள், நரசிங்க முனையரையர் வீதிவலம் வந்து கொண்டிருந்தார். வழியில் வீதியில் தேர் உருட்டி விளையாடிக் கொண்டிருந்த நம்பியாரூரர் என்னும் சுந்தரமூர்த்தி நாயனாரைக் கண்டார். அவருடைய அழகையும், பொலிவையும், அறிவுச் சுடர்விடும் கண்களையும் கண்டு மயங்கினார். சுந்தரரின் தந்தையான சடையனாரிடம் சென்று, அவரிடம் தாம் கொண்ட நட்புரிமையின் காரணமாக நம்பியாரூரைத் தான் வளர்ப்பதற்குத் தருமாறு வேண்டினார். அவரும் அதற்கு இணங்கினார். அதுமுதல் நம்பியாரூரைத் தனது வளர்ப்பு மகனாகக் கொண்டு, அவர் திருமணப் பருவம் எய்தும் வரை அன்போடு வளர்த்தார்.

நரசிங்க முனையரையர், பல வகைகளில் சிவத்தொண்டுகளும் அறப்பணிகளும் புரிந்தார். நரசிங்க முனையரைய நாயனார் என்று போற்றப்பட்டார். இறுதியில் சிவபதமடைந்தார் என்று பெரிய புராணம் குறிப்பிடுகிறது.

மெய் அடியான் நரசிங்க முனையரையற்கு அடியேன் - சுந்தரர் (திருத்தொண்டத் தொகை)

பாடல்கள்

பெரிய புராணத்தில் இப்புராணக் கதையை விளக்கும் பாடல்கள்:

நரசிங்க முனையரையரின் சிவத் தொண்டு

சின விடையார் கோயில் தொறும் திருச் செல்வம் பெருக்குநெறி
அன இடை ஆர் உயிர் துறக்க வரும் எனினும் அவை காத்து,
மன விடை ஆமைத் தொடையல் அணிமார்பர் வழித்தொண்டு
கன விடை ஆகிலும் வழுவாக் கடன் ஆற்றிச் செல்கின்றார்

பிறர் ஒதுக்கிய சிவனடியாரைப் போற்றியது

ஆன செயல் முறை புரிவார் ஒரு திருவாதிரை நாளில்
மேன்மை நெறித் தொண்டர்க்கு விளங்கிய பொன் இடும் பொழுதில்
மான நிலை அழிதன்மை வரும் காமக்குறி மலர்ந்த
ஊனம் நிகழ் மேனியராய் ஒருவர் நீறு அணிந்து அணைந்தார்.
மற்று அவர் தம் வடிவு இருந்த படி கண்டு மருங்கு உள்ளார்
உற்ற இகழ்ச்சியர் ஆகி ஒதுங்குவார் தமைக் கண்டு
கொற்றவனார் எதிர் சென்று கைகுவித்துக் கொடு போந்துஅப்
பெற்றியினார் தமை மிகவும் கொண்டாடிப் பேணுவார்

நரசிங்க முனையரையர் சிவபதம் பெற்றது

இவ்வகையே திருத் தொண்டின் அருமை நெறி எந்நாளும்
செவ்விய அன்பினில் ஆற்றித் திருந்திய சிந்தையர் ஆகிப்
பை வளர் வாள் அரவு அணிந்தார் பாதமலர் நிழல் சேர்ந்து
மெய் வகைய வழி அன்பின் மீளாத நிலை பெற்றார்

குரு பூஜை

நரசிங்க முனையரைய நாயனாரின் குரு பூஜை, சிவாலயங்களில், ஒவ்வோராண்டும், புரட்டாசி மாதம், சதய நட்சத்திரத்தில் நடைபெறுகிறது.

உசாத்துணை


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.