under review

திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை

From Tamil Wiki
Revision as of 14:44, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை (1892-அக்டோபர் 7, 1929) ஒரு நாதஸ்வரக் கலைஞர்.

இளமை, கல்வி

திருச்சேறையில் வாழ்ந்த நாதஸ்வரக் கலைஞர் ஸ்ரீநிவாஸ பிள்ளை - சீதாலட்சுமி அம்மாள் இணையரின் மூத்த மகனாக 1892-ஆம் ஆண்டு முத்துக்கிருஷ்ண பிள்ளை பிறந்தார். உடன்பிறந்தோர் சாமிநாதன், வரதய்யா. இரு சகோதரிகள் இளமையிலேயே இறந்துவிட்டனர். இளமையில் முத்துக்கிருஷ்ண பிள்ளைக்கு தவிலில் இருந்த ஆர்வத்தால் அவரது நண்பர் ராஜாமணி என்பவரிடம் நட்புமுறையில் கற்றுக்கொண்டார். விரைவாக சிறந்த தேர்ச்சியும் பெற்றார். ஒருமுறை நண்பர்களிடையே நடந்த விவாதம் ஒன்றில் நாதஸ்வரம் வாசிப்பதே கடினம் என்றும் தவிலிலேயே அனுபவம் இல்லாத முத்துக்கிருஷ்ண பிள்ளை ஏதும் பேசுவதற்கில்லை என்றும் ஒருவர் புண்படுத்திவிட்டார். அவமானம் தாங்க முடியாதவராக அன்றிலிருந்து தன் தந்தையின் நாதஸ்வரத்தை எடுத்து அதிகாலை முதல் இரவு பத்து மணி வரை இடைவிடாத பயிற்சியைத் தொடங்கிவிட்டார். அசுரசாதகத்தின் விளைவாக குறுகியகாலத்தியே சிறப்பான தேர்ச்சி பெற்றார்.

தனிவாழ்க்கை

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி விட்டிருந்த முத்துக்கிருஷ்ண பிள்ளை திருமணம் செய்து கொள்ளவில்லை. நிலையாக ஒரு ஊரில் வசிக்கவும் இல்லை. நிலையான பக்கவாத்தியக்காரர்கள் வைத்துகொள்ளவில்லை. தான் யாரிடமும் முறையாகக் கற்றுக்கொள்ளவில்லை என்பதால் யாருக்கும் கற்றுக்கொடுக்கவும் இல்லை.

இசைப்பணி

ராக ஆலாபனை, அழகு மிளிரக் கீர்த்தனைகள் வாசிப்பது, பல்லவி வாசிப்பதில் லயநுணுக்கம் என அனைத்துத் திறன்களும் கொண்டவராக முத்துக்கிருஷ்ண பிள்ளை இருந்தார். சககலைஞர்கள் அனைவரின் மதிப்புக்கு உரியவராக இருந்தார். ஆனால் மதுப்பழக்கத்தால் குறித்த நேரத்துக்கு கச்சேரிக்கு வருவார என்ற ஐயம் எப்போதும் இருந்தது. ஒருமுறை குழிக்கரை பெருமாள் என்ற நாதஸ்வரக் கலைஞர் வீட்டில் ஒரு விசேஷத்தில் பல கலைஞர்களும் வந்திருந்தனர். இவர் நினைவிழந்து புகைவண்டி நிலையத்தில் படுத்துறங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து அவரை இல்லத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு வந்திருந்தவர்கள் முத்துக்கிருஷ்ண பிள்ளையின் வாசிப்பைக் கேட்க ஆவலாக இருந்ததை அறிந்து ஒரு பழைய பல விரிசல்கள் விட்டிருந்த நாதஸ்வரத்தை எடுத்து, ஷண்முகப்ரியா ராக ஆலாபனையை காலை ஆறு மணிக்குத் தொடங்கி பதினொரு மணி வரை செய்தார். இலங்கைக்கு பலமுறை சென்று வாசித்துவிட்டு வரும் வழக்கம் இருந்தது. அங்கு பெரிதும் நினைவு கூறப்படும் கலைஞராக முத்துக்கிருஷ்ண பிள்ளை இருந்தார். தொழிலைப் பொறுத்தவரை தான் மிகவும் அஞ்சிய கலைஞர்கள் மூவரில் முத்துக்கிருஷ்ண பிள்ளை ஒருவர்(மன்னார்குடி சாரநாத பிள்ளை, மன்னார்குடி சின்னப்பக்கிரிப் பிள்ளை ஏனைய இருவர்) என திருவாவடுதுறை டி. என். ராஜரத்தினம் பிள்ளை கூறியிருக்கிறார்.

தவில் வாசித்த இசைக்கலைஞர்கள்

திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளையுடன் தவில் வாசித்த கலைஞர்கள்:

மறைவு

திருச்சேறை முத்துக்கிருஷ்ண பிள்ளை தனது முப்பத்தியாறாவது வயதில் அக்டோபர் 7, 1929 அன்று மறைந்தார்.

உசாத்துணை

  • மங்கல இசை மன்னர்கள் - பி.எம். சுந்தரம் - முதற் பதிப்பு, முத்துசுந்தரி பிரசுரம், சென்னை - டிசம்பர் 2013


✅Finalised Page