அழிசி நச்சாத்தனார்
அழிசி நச்சாத்தனார், சங்க காலப் புலவர்களில் ஒருவர். இவரது ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் இடம் பெற்றுள்ளது.
வாழ்க்கைக் குறிப்பு
அழிசி நச்சாத்தனார் என்னும் பெயரிலுள்ள அழிசி என்னும் சொல் ஊரின் பெயரையும், நபரின் பெயரையும் குறிக்கும் வகையில் சங்கநூல்களில் குறிப்புகள் வருகின்றன.
அழிசி அம் பெருங்காடு என்னும் நிலப்பகுதி சோழர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது (நற்றிணை 87). சேந்தன் என்பவனின் தந்தையாகிய அழிசி என்பவன் ஆர்க்காட்டை ஆண்டுவந்தான் (குறுந்தொகை 258).
அழிசி நச்சாத்தனார், அழிசி என்னும் ஊரினராகவோ, அழிசி என்பவரின் மகனாகவோ இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நச்செள்ளையார், நப்பாலத்தனார், நக்கீரனார் என்னும் பெயர்களில் 'ந' என்பது நன்மை என்னும் பொருளைத் தருவது போல அழிசி நச்சாத்தனார் பெயரிலுள்ள ந எழுத்தும் நல்ல சாத்தனார் என்னும் பொருளைத் தரும்.
இலக்கிய வாழ்க்கை
அழிசி நச்சாத்தனார் இயற்றிய ஒரு பாடல் சங்கத் தொகை நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 271- வது பாடலாக இடம் பெற்றுள்ளது. இப்பாடலை, ஒருநாள் தலைவனோடு பழகியது நோய்போலத் தொடர்கிறது என தலைவி கூறுவதாக இயற்றியுள்ளார்.
பாடலால் அறியவரும் செய்திகள்
குறுந்தொகை 271
- மருதத் திணை
- பரத்தையிற் பிரிந்து வந்த தலைவனுக்கு உடம்பட்டுத் தூதாக வந்த தோழியை நோக்கி தலைவி உரைத்தது
- தோழி! அருவியை ஒத்த பரிய துளிகளைச் சிதறி ஆற்று வெள்ளம் ஒலிக்கும் நாட்டை உடைய தலைவனைத் தெளிந்து அவனோடு பொருந்திய காலம் ஒரு நாளே ஆகும்
- அங்ஙனம் பொருந்தியது மிகப் பல நாட்கள் தோளோடு கலந்து அழகைக் கொள்ளை கொள்ளும் தன்மையினை உடைய நோயாக ஆகின்றது.
பாடல் நடை
குறுந்தொகை 271
அருவி யன்ன பருவறை சிதறி
யாறுநிறை பகரு நாடனைத் தேறி
உற்றது மன்னு மொருநாள் மற்றது
தவப்பன் னாள்தோள் மயங்கி
வௌவும் பண்பின் நோயா கின்றே.
உசாத்துணை
குறுந்தொகை 271, தமிழ் சுரங்கம் இணையதளம்
{Standardised}}