under review

சோழன் நலங்கிள்ளி

From Tamil Wiki
Revision as of 00:55, 21 December 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added: Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

சோழன் நலங்கிள்ளி சங்க காலப் புலவர்களில் ஒருவர். சோழ மன்னர்களில் ஒருவர். இவர் பாடிய இரண்டு பாடல்கள் புறநானூறில் இடம்பெற்றுள்ளன.

வாழ்க்கை குறிப்பு

சோழன் நலங்கிள்ளி சங்க காலப் புலவர்களில் ஒருவர். சோழ மன்னர்களில் ஒருவன். சேட் சென்னி, புட்பகை, தேர்வண் கிள்ளி ஆகிய வேறு பெயர்களையும் கொண்டவன். பாண்டிய மன்னன் நெடுங்கிள்ளியை முதன்மை எதிரியாக கொண்டவன். இவனை பாடியோர் உறையூர் முதுகண்ணன் சாத்தனார், கோவூர் கிழார், ஆலத்தூர் கிழார் ஆகிய மூன்று புலவர்கள்.

கோவூர் கிழாரின் பாடல்கள் வழியாக இவனுக்கும் நெடுங்கிள்ளிக்கும் இடையே நடைபெற்ற போர் குறித்து அறிய முடிகிறது. அப்போரில் நெடுங்கிள்ளியின் ஏழரண்கள் கொண்ட கோட்டையை தகர்த்ததும், அவனை உறையூர் வரை துரத்தி சென்ற செய்தியும் கிடைக்கிறது. கோவூர் கிழாரின் அறிவுரையின் பேரில் நெடுங்கிள்ளி அடிபணியவும் இவன் போரை நிறுத்திக்கொண்டான் என்பதனை கோவூர் கிழாரின் பாடல்கள் வழி அறிய முடிகிறது.

இவனது தம்பி மாவளத்தான். அவனை தாமப்பல் கண்ணனார் என்னும் புலவர் பாடியுள்ளார்.

இலக்கிய வாழ்க்கை

சோழன் நலங்கிள்ளி பாடிய பாடல்கள் புறநானூறில் 73 மற்றும் 75-வது பாடல்களாக இடம்பெற்றுள்ளன. புறநானூறு 73 ம் பாடல் காஞ்சித் திணையில் வ எதிரி மன்னனுக்கு உரைக்கும் போர் எச்சரிக்கையாக வஞ்சினக் காஞ்சி துறையில் அமைந்தது.புறநானூறு 75 ம் பாடல் பொதுவியல் திணையில் அரச பொறுப்பு வலிமை மிக்க மன்னனுக்கே சிறப்பு சேர்க்கும் என்ற கருத்தை கூறும் முதுமொழிக் காஞ்சி என்னும் துறையில் அமைந்தது.

பாடல் வழி அறியவரும் செய்திகள்

புறநானூறு - 73
  • சோழன் நலங்கிள்ளி பிற நாட்டு மன்னர்கள் தன்னை எதிர்த்தால் அவர்கள் தப்பி செல்ல முடியாத மரணத்தை வழங்குவேன் என்று சூளுரைக்கிறான். அப்படி செய்யாவிட்டால் தான் விலைமாதரின் தழுவுதலுக்கு ஆட்படும் இழிவை அடைவேனாக என்று கூறுகிறான். இதன் மூலம் விலைமாதரை தழுவுதல் இழுக்கு என்ற கருத்து சமூகத்தில் நிலவியதை அறிய முடிகிறது.
  • மன்னர்கள் தன் காலை பணிந்து கொடு என்று இரங்கி கேட்டால் நாட்டையும் அதற்கு மேலாக தனது உயிரையும் கொடுப்பேன் என்று கூறி தனது கொடைத்தன்மையை சிறப்பித்து பேசுகிறான். இதன்மூலம் அடைக்கலம் புகுந்தோருக்கு பொருள் முதல் உயிர் வரை ஈவது உயர் விழுமியமாக நிலவியதை அறியமுடிகிறது.
  • உவமை: தன்னை தாக்கியோர் புலியை இடறிய குருடன் போலும், யானை காலடியில் நசுங்கிய மூங்கில் புல் போலும் மறுக்கமுடியாத மரணத்தை அடைவர் என்று கூறியுள்ளான்.
புறநானூறு - 75
  • முன்னோர்கள் வழியாக அரசுரிமையை அடைந்து, அதன் காரணமாக குடிமக்களிடம் அதிக வரி கேட்கும் மன்னன் சிறியோன் என்று கூறத்தக்கவன். அவனது செயல்களும் சிறப்பானதன்று.
  • தனது வலிமையினால் போரிட்டு நாட்டினை காத்து நல்லாட்சி செய்யும் மன்னனுக்கே அரசாட்சி எளிமையான ஒன்றாக விளங்கும்.
  • உவமை: வறட்சியினால் நீர்வற்றிய குளத்தில் காய்ந்து கிடக்கும் வெண்ணிற நெட்டி கொடி எடையற்றதாக இருக்கும். வலிமை மிக்க மன்னனின் கையில் இருக்கும் அரசாட்சி அத்தகு நெட்டி கொடிக்கு ஒப்பானது.

பாடல் நடை

புறநானூறு - 75

  • திணை: பொதுவியல்
  • துறை: முதுமொழிக் காஞ்சி

மூத்தோர் மூத்தோர்க் கூற்றம் உய்த்தெனப்
பால்தர வந்த பழவிறல் தாயம்
எய்தினம் ஆயின், எய்தினம் சிறப்புஎனக்
குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச்
சிறியோன் பெறின்அது சிறந்தன்று மன்னே!
மண்டுஅமர்ப் பரிக்கும் மதனுடை நோன்தாள்
விழுமியோன் பெறுகுவன் ஆயின், ஆழ்நீர்
அறுகய மருங்கின் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
நொய்தால் அம்ம தானே; மையற்று
விசும்புஉற ஓங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்தர் அரசுகெழு திருவே,

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Nov-2025, 10:06:50 IST