first review completed

மும்மணிக்கோவை

From Tamil Wiki
Revision as of 14:13, 15 November 2022 by Tamilwiki Bot 1 (talk | contribs) (changed template text)

மும்மணிக்கோவை தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் என்னும் வகைகளுள் ஒன்று. சிற்றிலக்கியங்களுக்கு சம்ஸ்கிருதச் சொல் பிரபந்தம். இதில், ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் பாவகைகளில் அமைந்த பாடல்கள் மாறி மாறி வரும். மும்மணிக்கோவை 30 பாடல்களைக் கொண்டு அந்தாதி வடிவில் இருக்கும்.

எடுத்துக்காட்டு

பட்டினத்தார் இயற்றிய திருவிடைமருதூர் மும்மணிக்கோவையில் இருந்து முதற் பாடலின் ஒரு பகுதியும், இரண்டாம் மூன்றாம் பாடல்களும் நான்காம் பாடலின் ஒரு பகுதியும் எடுத்துக்காட்டாகத் தரப்பட்டுள்ளன.

முதற்பாடல் 74 வரிகளைக் கொண்டது. இது ஆசிரியப்பா வகைகளில் ஒன்றான இணைக்குறள் ஆசிரியப்பாவில் அமைந்திருக்கிறது. இரண்டாம் பாடல் நேரிசை வெண்பாவிலும், மூன்றாம் பாடல் கட்டளைக் கலித்துறையிலும் அமைந்திருக்கிறது. நான்காம் பாடல் மீண்டும் இன்னொரு ஆசிரியப்பா வகையான நேரிசை ஆசிரியப்பா.

முதல் பாடல் "பொருட்டே" என்று முடிவதையும், இரண்டாம் பாடல் "பொருளும்" என்று தொடங்குகிறது. இரண்டாம் பாடல் "வரும்" என்று முடிய மூன்றாம் பாடல் "வருந்தே" என்று தொடங்குகிறது. மூன்றாம்பாடலின் முடிவுச் சொல் "யாதொன்றுமே" என இருக்க நான்காம் பாடல் "ஒன்றினோ" என்று தொடங்குகிறது. இவ்வாறு இதன் முப்பது பாடல்களும் அந்தாதியாக அமைந்துள்ளன.


இணைக்குறளாசிரியப்பா

தெய்வத் தாமரைச் செவ்விதின் மலர்ந்து
வாடாப் புதுமலர்த் தோடெனச் சிவந்து
சிலம்புங் கழலு மலம்பப் புனைந்து
கூற்றி னாற்றன் மாற்றிப் போற்றாது
.................................................
.................................................
.................................................
றிருவடி பரவுதும் யாமே நெடுநா
ளிறந்தும் பிறந்து மிளைத்தன மறந்துஞ்
சிறைக் கருப் பாசயஞ் சேரா
மறித்தும் புகாஅ வாழ்வுபெறற் பொருட்டே.

நேரிசைவெண்பா

பொருளுங் குலனும் புகழுந் திறனு
மருளு மறிவு மனைத்து - மொருவர்
கருதாவென் பார்க்குங் கறைமிடற்றாய் தொல்லை
மருதாவென் பார்க்கு வரும்.

கட்டளைக்கலித்துறை

வருந்தே னிறந்தும் பிறந்து மயக்கும் புலன்வழிபோய்ப்
பொருந்தே னாகிற் புகுகின்றிலேன் புகழ் மாமருதிற்
பெருந்தேன் முகந்துகொண் டுண்டு பிறிதொன்றி லாசையின்றி
யிருந்தே னினிச்சென் றிரவே னொருவரை யாதொன்றுமே.

நேரிசையாசிரியப்பா

ஒன்றினோ டொன்று சென்றுமுகி றடவி
யாடுகொடி நுடங்கும் பீடுகெழு மாளிகை
தெய்வக் கம்மியர் கைம்முயன்று வகுத்த
வோவநூற் செம்மைப் பூவியல் வீதி
.................................................
.................................................

மும்மணிக்கோவைகள் சில

உசாத்துணைகள்

வெளி இணைப்புகள்


🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.