நேரிசை ஆசிரியப்பா
From Tamil Wiki
ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்று, ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டதாக வருவது நேரிசை ஆசிரியப்பா. இயல்பான (நேரான) ஓசையுடையது என்னும் பொருளில் இப்பாவுக்கு இப்பெயர் அமைந்தது. சங்க இலக்கியத்தில் பல பாக்கள் நேரிசை ஆசிரியப்பாக்களே.
நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம்
- நேரிசை ஆசிரியப்பா, ஆசிரியப்பாவின் பொது இலக்கணங்களைப் பெற்றுவரும்.
- ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்டதாக வரும்.
- ஈறுகளில் அதிகம் ஏகாரச் சீர் இடம் பெற்றிருக்கும்.
நேரிசை ஆசிரியப்பா உதாரணப் பாடல்
நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
- மேற்கண்ட பாடல் ஆசிரியப்பாவிற்குரிய இலக்கணங்களுடன் ஈற்றயலடியில் மூன்று சீர்களைக் கொண்டு, இறுதிச் சீரில் ஏகாரத்துடன் அமைந்துள்ளதால் இது நேரிசை ஆசிரியப்பா.
உசாத்துணை
- யாப்பருங்கலக்காரிகை: சென்னை நூலகம்
- யாப்பருங்கலக்காரிகை மூலமும் உரையும்: பதிப்பாசிரியர்: முனைவர் சோ. கண்ணதாசன் தமிழ் இணைய மின்னூலகம்
- இலக்கண விளக்கம்: வைத்தியநாத தேசிகர்: பதிப்பாசிரியர்: தி.வே. கோபாலையர்: தமிழ் இணைய மின்னூலகம் யாப்பிலக்கணம்: விசாகப்பெருமாளையர்: தமிழ் இணையக் கல்விக்கழக நூலகம்
- தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடம்
✅Finalised Page