தி இந்தியன் ரிவ்யூ
தி இந்தியன் ரிவ்யூ (The Indian Review), (1900) தமிழரான ஜி.ஏ. நடேசனால் தொடங்கப்பட்ட ஆங்கில இதழ். கல்வி கற்ற இந்தியர்களிடையே தேச விடுதலை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதையும், பொது மக்களின் எண்ணங்களை, கருத்துக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதையும் தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது. காந்தி, அன்னிபெசன்ட் தொடங்கி வில்லியம் வெட்டர்பன் போன்ற ஐரோப்பியர்கள் வரை பலர் தி இந்தியன் ரிவ்யூ இதழில் எழுதினர்.
பிரசுரம், வெளியீடு
தி இந்தியன் ரிவ்யூ, சென்னையில், ஜனவரி மாதம், 1900-த்தில், பதிப்பாளர் ஜி.ஏ. நடேசனால் தொடங்கப்பட்ட மாத இதழ். ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றிருந்த நடேசன், தி மெட்ராஸ் டைம்ஸ் (The Madras Times) இதழில் பணியாற்றினார். தி இந்தியன் பாலிடிக்ஸ் (The Indian Politics) என்ற ஆங்கில இதழைத் தொடங்கி நடத்திய அனுபவம் கொண்டிருந்தார். தேச விடுதலை உணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்காக தி இந்தியன் ரிவ்யூ இதழைத் தொடங்கினார்.
தி இந்தியன் ரிவ்யூ இதழ், ஒவ்வொரு மாதமும் இரண்டாம் வாரத்தில் வெளியானது. தொடக்க காலத்தில் இதழ் 56 பக்கங்களுடன் வெளிவந்தது. இதழின் ஆண்டு சந்தா, தபால் செலவுடன் சேர்த்து இந்தியாவுக்கு: ரூபாய் ஐந்து. இங்கிலாந்துக்கு ரூபாய் பத்து. அமெரிக்காவுக்கு மூன்று டாலர். தனிப்பிரதியின் விலை: இந்தியாவுக்கு எட்டணா; வெளிநாடுகளுக்கு ரூபாய் ஒன்று. இந்த இதழை ஜி.ஏ. நடேசனின் சொந்தப் பதிப்பக நிறுவனமான ஜி.ஏ. நடேசன் & கோ வெளியிட்டது.
நோக்கம்
கல்வி கற்ற இந்தியர்களிடையே தேச விடுதலை பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதும், பொது மக்களின் எண்ணங்களை, கருத்துக்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் கொண்டுபோய்ச் சேர்ப்பதும் தி இந்தியன் ரிவ்யூ இதழின் நோக்கங்களாக இருந்தன.
உள்ளடக்கம்
ஆங்கிலத்தில் THE INDIAN REVIEW என்ற தலைப்பின் கீழ், ‘A MONTHLY PERIODICAL DEVOTED TO THE DISCUSSION OF ALL TOPICS OF INTREST’ என்ற குறிப்பு காணப்பட்டது. கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, இந்தியர்களின் முன்னேற்றத்துக்குச் செய்யக் கூடிய விஷயங்கள், கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களின் நிலை, மாணவர்களின் தரம், கல்லூரிக் கட்டணங்கள் பாடல் நூல்களில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் எனப் பல்வேறு செய்திகள் தி இந்தியன் ரிவ்யூ இதழ்களில் வெளியாகின.
'வில்லேஜ் அசோசியேஷன்', 'தருமனின் முடிசூட்டு விழா', 'ராமனின் பிரதிஷ்டை', 'கண்ணப்ப நாயனார் கதை', இ'ந்தியப் பல்கலைக்கழகங்களின் அறிக்கை', 'சங்கரின் வாழ்க்கைக் குறிப்பு' ஹேம்லெட் பற்றிய மில்லரின் கட்டுரை போன்றவை 1909-ம் ஆண்டு இதழ்களில் வெளிவந்தன.
சமூக முன்னேற்றத்தையும், கல்வி மேம்பாட்டையும் வலியுறுத்தி பேராசிரியர் சத்தியநாதன், வில்லியம் மில்லர், நீதிபதி வி. கிருஷ்ணசாமி ஐயர் உள்ளிட்ட பலர் பல கட்டுரைகளை எழுதினர். தேசம், விடுதலை, மாகாணப் பிரச்சனைகள், நாட்டின் இன்றைய தேவை, லட்சியவாதம் போன்ற தலைப்புகளில் பல கட்டுரைகள் வெளியாகின.
பங்களிப்பாளர்கள்
- கோபாலகிருஷ்ண கோகலே
- பாலகங்காதர திலகர்
- காந்தி
- சர் சி.பி. ராமசாமி ஐயர்
- சர் குமாரசாமி சாஸ்திரி
- ஃப்ரடரிக் க்ரப்
- யாகூப் ஹசன்
- எஹ்.எஸ்.எல். பொலாக்
- ஆர்.டி. தாந்தே
- பேராசிரியர் சத்தியநாதன்
- கமலா சத்தியநாதன்
- வில்லியம் மில்லர்
- அன்னிபெசன்ட்
- சேஷையர்
- நேரு
- ஜான் மாத்தாய்
- நாராயண் சந்தாவர்கர்
- சுரேந்திரநாத் பானர்ஜி
- சப்ரு
- ஆகா கான்
- வி. கிருஷ்ணசாமி ஐயர்
- மதன் மோகன் மாளவியா
- தாதாபாய் நௌரோஜி
- ஆர்.சி.தத்
- சி.எஃப்.ஆன்ட்ரோஸ்
- பி.எஸ். சிவசாமி ஐயர்
- வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி
- சி.ஏ. வைட்
- ஜே. காட்டன்
- ஆல்ஃபிரட் சாட்டர்டன்
மற்றும் பலர்
இதழ் நிறுத்தம்
1949-ல் ஜி.ஏ. நடேசன் காலமானார். தி இந்தியன் ரிவ்யூ இதழை நடத்தும் பொறுப்பை நடேசனின் மகனான மணியம் நடேசன் ஏற்றுக் கொண்டார். 1962-ல் இதழ் நின்று போனது. பின்னர் 1970-ல், டி.டி. கிருஷ்ணமாச்சாரி மற்றும் அவரது மகன் டி.டி. வாசுவால் மீண்டும் தி இந்தியன் ரிவ்யூ இதழ் தொடங்கி நடத்தப்பட்டது. மேற்கு மாம்பலத்தில் உள்ள பொது சுகாதார மையத்தின் நிறுவனரும் மூத்த பத்திரிகையாளருமான எம்.சி.சுப்ரமணியம் இதழ் நடத்த உறுதுணையாக இருந்தார். 1974-ல் டி.டி.கே.வின் மறைவுக்குப் பின் எம்.சி.சுப்ரமணியம் இதழின் பொறுப்பேற்று நடத்தினார். 1982-ல், அவர் காலமானார். அவரது மறைவோடு தி இந்தியன் ரிவ்யூ இதழும் நின்றுபோனது.
மதிப்பீடு
ஆங்கில மோகத்தில் ஆழ்ந்திருந்த கல்வி கற்ற இந்தியர்களிடையே இந்திய சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய இதழாகவும், இந்திய மக்களின் உண்மையான பிரச்சனைகள் பற்றியும், தேவைகள் பற்றியும் பிரிட்டிஷாரின் கவனத்துக்குக் கொண்டு சென்ற முன்னோடி ஆங்கில இதழாகவும், தி இந்தியன் ரிவ்யூ இதழ் மதிப்பிடப்படுகிறது.
உசாத்துணை
- Natesan and his Indian Review
- The Indian Review Magazine
- The Indian Review
- ஜி.ஏ.நடேசன், பெ.சு. மணி, பூங்கொடி பதிப்பகம், முதல் பதிப்பு: ஏப்ரல், 2012
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.