under review

வி.கிருஷ்ணசாமி ஐயர்

From Tamil Wiki
வி.கிருஷ்ணசாமி ஐயர்

கிருஷ்ணசாமி ஐயர் (வெங்கடராம கிருஷ்ணசுவாமி ஐயர்) (ஜூன் 15, 1863 - டிசம்பர் 28, 1911) காங்கிரஸ் மிதவாத பிரிவின் தலைவர். வழக்கறிஞர், நீதிபதி. சுவாமி விவேகானந்தருடன் நெருக்கமான தொடர்புள்ளவர். சென்னை சம்ஸ்கிருத கல்லூரி, சென்னை விவேகானந்தர் நினைவில்லம் போன்ற அமைப்புகள் உருவாகக் காரணமாக அமைந்தவர்.

பிறப்பு, கல்வி

மாவட்ட நீதிபதி (முன்சீப்) பதவியில் இருந்த அரிவிழிமங்கலம் வெங்கட்ராம ஐயருக்கு அவருடைய முதல் மனைவி சுந்தரிக்கும் இரண்டாவது மகனாக ஜூன் 15, 1863-ல் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூரில் கிருஷ்ணசாமி ஐயர் பிறந்தார். சுவாமிநாதன், கிருஷ்ணசாமி, மகாலிங்கம் கோபாலன் என சுந்தரிக்கு நான்கு மகன்கள். வெங்கட்ராமையர் மறுமணம் செய்துகொண்டார். அதில் ராமையா, சந்திரசேகரன், ராமச்சந்திரன் என்னும் மகன்களும் மீனாட்சி என்னும் மகளும் பிறந்தனர்.

கிருஷ்ணசாமி ஐயரின் இளவயதிலேயே அவரது அன்னை காலமானார். தனது பள்ளிப்படிப்பைத் திருவிடைமருதூர் மற்றும் தஞ்சாவூர் எஸ். பி. ஜி. உயர்நிலைப்பள்ளிகளிலும் முடித்தார் மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை ராஜதானியிலேயே முதல் மாணவராக வெற்றி பெற்றார். 1877-ல் கும்பகோணம் சென்று கல்லூரிப் படிப்பை கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பயின்றார் .சென்னை பிரசிடென்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தார். இந்துப் பத்திரிக்கையின் நிறுவனரின் தமையனார் சீனிவாச ராகவ அய்யங்காரின் அறிவுரைப்படி சட்டம் படித்தார். சட்டக் கல்வியை சென்னை சட்டக் கல்லூரியில் பயின்றார். இவர் தமையன் சுவாமிநாதையரும் நண்பர் சிவசாமி ஐயரும் இவருடன் சட்டம் பயின்றனர். 1882-ல் சட்டத்தில் பட்டம் பெற்றார்

கிருஷ்ணசாமி ஐயர் ஓவியம்

தனிவாழ்க்கை

திருவாலங்காட்டு ராமஸ்வாமி சாஸ்திரிகளின் மகள் பாலாம்பாள் (வாலாம்பாள்)-ஐ 1878- ல் கிருஷ்ணசாமி ஐயர் மணம் புரிந்துகொண்டார். தமையன் சுவாமிநாதையர் தஞ்சாவூருக்குச் சட்டத்தொழில் செய்ய சென்றபோது அவருடன் சென்று தானும் உடனிருந்து தொழில் பயின்றார். 1884-ல் புகழ்பெற்ற வழக்கறிஞரான ஆர்.பாலாஜி ராயரிடம் இளையவழக்கறிஞர்களாகச் சேர்ந்தார். 1885-ல் வழக்கறிஞர் சன்னத்து பெற்றுக்கொண்டார். தொடக்க காலத்தில் போதிய வழக்குகள் வரவில்லை. சிறிது வறுமையும் இருந்தது.

1888 -ல் பிரபலமான வழக்கறிஞரான எஸ். இராமசாமி அய்யங்கார் மாவட்ட முன்சீப்பாக நியமனமானதால் அவர் கிருஷ்ணசுவாமி அய்யரிடம் தனது பணிகளை ஒப்படைத்தார். அதன்பின் கிருஷ்ணசாமி ஐயர் தனது வழக்கறிஞர் தொழிலில் சிறக்கத் தொடங்கினார். தஞ்சை,கடலூர், சென்னை ஆகிய ஊர்களில் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டார். பின்னாளில் உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய சர்.எஸ்.சுப்ரமணிய ஐயருடன் அவருக்கு ஏற்பட்ட தொடர்பும் அவருடைய உதவிவழக்கறிஞராக இருந்த பி.ஆர்.சுந்தரம் ஐயருடன் இணைந்து தொழில் செய்ததும் வி.கிருஷ்ணசாமி ஐயரின் வெற்றிக்கு காரணமாகியது.

1888-ல் சென்னைக்கு நிரந்தரமாகக் குடியேறிய வி.கிருஷ்ணசாமி ஐயர் மைலாப்பூரில் தெற்கு மாடவீதியில் ஒரு வீட்டில் வசிக்கலானார். பின்னர் லஸ் சாலையில் இருந்த ஆஸ்ரமம் என்னும் பெரிய பங்களாவை விலைக்கு வாங்கி அங்கே குடியேறினார். அவருடைய வாரிசுகளும் அங்குதான் வாழ்ந்தனர். 1891- ல் வக்கீல்கள் சங்கத்தின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கிருஷ்ணசாமி ஐயர் 1909-ல் தன் 46-ஆவது வயதில் மனைவியை இழந்தார். அவர்களுக்கு பாலசுந்தரி, பாலசுப்ரமணியன், சாவித்ரி, சரஸ்வதி,சந்திரசேகரன் என ஐந்து குழந்தைகள். இவர்களில் கி.சந்திரசேகரன் கி.சாவித்ரி அம்மாள் கி.சரஸ்வதி அம்மாள் ஆகிய மூவருமே பின்னாளில் எழுத்தாளர்களாக அறியப்பட்டவர்கள்.

கிருஷ்ணசாமி ஐயர் காங்கிரஸ் மாநாட்டில்

அரசியல்

இந்திய தேசிய காங்கிரஸ் டிசம்பர் 1885-ல் உருவானதுமே சென்னையில் அதில் இணைந்தவர்களில் வி.கிருஷ்ணசாமி ஐயரும் ஒருவர். ஏற்கனவே மைலாப்பூரில் சில இளைஞர்கள் சேர்ந்து அதீனியம் என்னும் பேச்சரங்கு ஒன்றை நடத்திவந்தனர். அதில் வி.கிருஷ்ணசாமி ஐயர் பங்கேற்றிருந்தார். 1896-ல் பக்கிங்ஹாம் கால்வாயை மைலாப்பூர் வழியாக வெட்ட பொறியாளர்கள் திட்டமிட்டபோது இந்த அமைப்பு ஒரு போராட்டக்குழுவாக மாறியது. அதில் வி.கிருஷ்ணசாமி ஐயர் தலைமைப் பங்கெடுத்தார். ஆனால் அப்போராட்டம் வெல்லவில்லை.

1890-களில் தென்னிந்திய ரயில்வே, மயிலாப்பூரையும் கிண்டியையும் மெரினா வழியாக இணைத்து ஒரு ரயில் தடம் அமைக்கத் தீர்மானம் நிறைவேற்றி 1903- ல் வேலை தொடங்கும் சமயம் அதை எதிர்த்து மாபெரும் கூட்டம் கூட்டினார். சென்னை கடற்கரை அழகும் காற்று வசதியும் அழியும் என எண்ணினர். அப்போராட்டத்தை தலைமை தாங்கியவர் ஜார்ஜ் அர்பத்நாட். அன்று வங்கியாளராக இருந்த அவர் செல்வாக்குள்ள பொதுக்குடிமகனாக அறியப்பட்டிருந்தார்.அரசாங்கம் அத்திட்டத்தினைக் கைவிட்டது.

இப்போராட்டங்கள் வழியாக வி.கிருஷ்ணசாமி ஐயருக்கு அரசியலார்வம் உருவானது. கோகலேயைத் தலைமையாக ஏற்றுக்கொண்டு சென்னையில் காங்கிரஸ் கூட்டங்கள் கூட்டினார். அரசுக்கு நகர் விரிவாக்கம், இந்தியர்களின் உரிமை சார்ந்து மனுக்கள் அளிப்பது அவர்களின் பணியாக இருந்தது. 1898-ல் நடந்த முதல் சென்னை காங்கிரஸ் மாநாட்டில் வி.கிருஷ்ணசாமி ஐயர் பேசினார். கவர்னரின் ஆலோசனைக் குழுவில் இந்தியர் ஒருவருக்கும் இடமளிக்கவேண்டும் என்னும் அவருடைய தீர்மானம் வென்றது. அது மனுவாக கவர்னருக்கு சமர்ப்பிக்கப்பட்டது, அதை கவர்னர் தள்ளுபடி செய்தார்.

சென்னை, கிருஷ்ணசாமி ஐயர் சிலை

1903-ல் இரண்டாம் காங்கிரஸ் மாநாடும் கூடவே ஒரு இந்தியப் பண்பாட்டுப் பொருட்காட்சியும் ஒருங்கிணைக்கப்பட்டது. அதில் கிருஷ்ணசாமி ஐயர் தன் நண்பர் பி.ஆர்.சுந்தரம் ஐயருடன் இணைந்து செயல்பட்டார். இக்காலகட்டத்தில் காங்கிரஸின் முக்கியத்தலைவர்களாக இருந்த திவான்பகதூர் ரகுநாத ராவ், ஹிந்து இதழின் நிறுவனர்களில் ஒருவரான ஜி.சுப்ரமணிய ஐயர் போன்றவர்களுடன் இணைந்து செயல்பட்டார். 1904-ல் கோபாலகிருஷ்ண கோகலேயைச் சந்தித்தார். அவருடைய தென்னிந்திய தளபதிகளில் ஒருவராகவே அறியப்படலானார். 1905-ல் கோபாலகிருஷ்ண கோகலே காங்கிரஸ் தலைவராக தேர்வுசெய்யப்பட்ட காசி காங்கிரஸ் மாநாட்டில் கிருஷ்ணசாமி ஐயரும் கலந்துகொண்டார். 1906-ல் திருநெல்வேலியில் நடந்த சென்னை மாகாணக் காங்கிரஸ் மாநாட்டில் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டார். கோகலேயின் இந்திய ஊழியர் சங்கத்தைச் சென்னையில் தொடங்க நிதியளித்தார்.

1905-ல் வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டதை ஒட்டி வங்காளம் முழுக்க காங்கிரஸுக்குள் தீவிரவாதிகள் உருவாகி வலுப்பெற்றனர். 1906-ல் சூரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் காங்கிரஸ் மிதவாதிகள் தீவிரவாதிகள் என இரு கோஷ்டியாகப் பிரிந்தது. சூரத் மாநாட்டில் தீவிரவாத குழுவின் தலைவர் பாலகங்காதர திலகர். அரவிந்த கோஷ் முதலியோர் மிண்டோ மார்லி சீர்திருத்தத்தை ஏற்றுக்கொண்டமைக்காக கோபாலகிருஷ்ண கோகலேயின் தலைமையை கண்டித்தனர். அம்மாநாட்டில் கோபாலகிருஷ்ண கோகலேவுக்காக வி.கிருஷ்ணசாமி ஐயர் போராடினார். மிதவாதிகளின் தீர்மானங்களை வெவ்வேறு துணைக்கூட்டங்களில் நிறைவேற்றி அரசுக்கு அனுப்பி அந்த மாநாட்டில் அவர்கள் வென்றதாகக் காட்டிக்கொள்ளும் உத்தியை வி.கிருஷ்ணசாமி ஐயரே முன்னெடுத்தார்.

1907-ல் தீவிரவாதக் குழுவைச் சேர்ந்த விபின் சந்திர பால் திருநெல்வேலிக்கு வந்து தீவிரவாத அரசியல் கருத்துக்களை பேசினார். அது அரசின் அடக்குமுறைக்கே வழிவகுக்கும் என்றும், அது பொறுப்பற்ற பேச்சு என்றும் கொடைக்கானலில் கோடைவிடுமுறைக்குச் சென்றிருந்த வி.கிருஷ்ணசாமி ஐயர் அங்கிருந்து விடுத்த பகிரங்கக் கடிதம் ஒன்று அவருக்கு தமிழகம் முழுக்க தீவிரவாதக் குழுவிடமிருந்து கடும் எதிர்ப்பை உருவாக்கித்தந்தது. தீவிரவாதக் குழுவின் குரலாக ஒலித்த சி. சுப்ரமணிய பாரதியார், வ.வே.சுப்ரமணிய ஐயர் ஆகியோர் கிருஷ்ணசாமி ஐயரை கடுமையாகக் கண்டித்து எழுதினார்கள்.

கல்விப்பணி

சென்னை பல்கலை

வி.கிருஷ்ணசாமி ஐயருக்கு தொடக்கம் முதலே கல்விப்பணிகளில் நாட்டமிருந்தது. இந்தியர்களுக்கு ஆங்கிலக் கல்வி மிக அவசியம் என்னும் கருத்து கொண்டிருந்தார். 1900 முதல் சென்னையில் நடைபெற்ற கல்வி அபிவிருத்தி சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்தார். 1904 முதல் சென்னை பல்கலைக்கழக ஆலோசனைக் குழுவில் இருந்தார். 1907-ல் விசாகப்பட்டினம் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவில் ஆங்கிலக்கல்வியும் அறிவியல்கல்வியும் பரவவேண்டும் என வலியுறுத்தி வி.கிருஷ்ணசாமி ஐயர் முன்வைத்த தீர்மானமும் உரையும் பெரிதும் கவனிக்கப்பட்டது. 1907-ல் சென்னை பல்கலைக்கழக நிர்வாகக்குழு உறுப்பினரானார். சென்னைப் பல்கலையின் பாடத்திட்டங்களை வடிவமைப்பதில் பங்களிப்பாற்றினார்.

சம்ஸ்கிருதக் கல்லூரி

1903-ல் செங்கல்பட்டில் ஒரு கூட்டத்தில் இந்திய மரபுச்செல்வங்கள் அழிவதைப் பற்றி பேசிய வி.கிருஷ்ணசாமி ஐயர் அவற்றை பயில்வதற்கான நவீன அமைப்புகளை உருவாக்குவதன் தேவை பற்றி வலியுறுத்தினார். அதன்பின் தொடர்ந்து அதை முன்வைத்துவந்தார். பலர் செய்த நிதியுதவியுடன் தன் சொந்தப்பணம் இருபதாயிரத்துடன் அறுபதாயிரம் ரூபாய் செலவில் ஜனவரி 1906-ல் சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரி இவரால் நிறுவப்பட்டது. அங்கே சம்ஸ்கிருத இலக்கணம், செய்யுளியல், மற்றும் இலக்கியங்கள் கற்பிக்கப்படுகின்றன

ஆயுர்வேதக் கல்லூரி

மரபுவழி மருத்துவம் பேணப்படவேண்டும் என்னும் நோக்கில் 1905-ல் வெங்கட்ரமணா வைத்தியசாலை என்னும் பெயரில் ஓர் இலவச மருத்துவநிலையத்தை நடத்தியிருந்தார். 1906-ல் அது இருபதாயிரம் ரூபாய் செலவில் ஆயுர்வேதக் கல்லூரியாக மாற்றப்பட்டது

இலக்கியப்பணி

இந்தியாவின் வைஸ்ராய் பதவியில் இருந்த கர்ஸன் பிரபு 1906-ல் கல்கத்தா பட்டமளிப்பு விழாவில் இந்தியப் பண்பாட்டைப் பற்றி கடுமையாக விமர்சனம் செய்து பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்தியப் பண்பாட்டில் உண்மை,நேர்மை ஆகியவை வலியுறுத்தப்படவில்லை என்று அவர் சொன்னதை கண்டித்து 1907-ல் வி.கிருஷ்ணசாமி ஐயர் முன்னெடுப்பில் வெவ்வேறு அறிஞர்களின் பங்களிப்புடன் ஆரிய சரித்திரம் என்னும் பெரிய நூலை 1907-ல் வாணிவிலாஸ் அச்சகம் அச்சிட்டு வெளியிட்டது. இந்தியாவின் முனிவர், அறவோர், மன்னர்கள் மற்றும் அறநூல்களைப் பற்றிய விரிவான அறிமுகம் இந்நூல் . கிருஷ்ணசாமி ஐயர் முன்னுரை எழுதியிருந்தார். இது ஒரு தொடக்கநூலாக அமைந்து பின்னர் இந்தியப் பண்பாடு பற்றிய ஏராளமான நூல்களை உருவாக்க வழிவகுத்தது.

1907-ல் சி.சுப்ரமணிய பாரதியாரை அவர் நண்பர் ஜி.ஏ.நடேசன் வி.கிருஷ்ணசாமி ஐயரிடம் அழைத்துவந்தார். சுப்ரமணிய பாரதியார் வி.கிருஷ்ணசாமி ஐயரை கடுமையாக தாக்கிவந்த காலம் அது. ஆயினும் சுப்ரமணிய பாரதியாரின் கவிதைகளை பாராட்டி அக்கவிதைகளை மலிவுவிலையில் அச்சிட்டு இலவசமாக மக்களிடம் கொண்டுசெல்ல பெருந்தொகையை அளித்தார். பாரதியின் "சுதேச கீதங்கள்" நூல் அவ்வாறாக அச்சானது.

ஆன்மீகப்பணி

வி.கிருஷ்ணசாமி ஐயர் 1893-ல் சுவாமி விவேகானந்தர் மேற்கொண்ட சிகாகோ பயணத்திற்கான பணம் திரட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தார். சுவாமி விவேகானந்தர் சிகாகோ செல்கையில் அவரை வழி அனுப்புவதற்கும், திரும்பி வரும்போது வரவேற்பு அளிப்பதற்கும் முன்னின்ற சென்னைவாசிகளுள் இவரும் ஒருவர். சென்னையில் தன் போதனைகள் நிலைபெறும் பொருட்டு ஓர் அமைப்பு உருவாகவேண்டுமென விவேகானந்தர் விரும்பியதை ஒட்டி சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ண மடம் உருவாக வி.கிருஷ்ணசாமி ஐயர் முன்முயற்சி எடுத்தார். ராமானுஜாச்சாரியார், ராமஸ்வாமி ஐயர் போன்றவர்கள் துணைநின்றனர்

லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கிருஷ்ணன் கோயில் கட்டுவதற்காக பெருமுயற்சி எடுத்த பாபா பிரேமானந்த பாரதிக்கு கிருஷ்ணசாமி ஐயர் பெரும் நிதி வசூலித்துக் கொடுத்தார்.

அரசியல் பதவிகள்

கிருஷ்ணசாமி ஐயர் எப்போதுமே சென்னை கவர்னருக்கு அணுக்கமானவராக இருந்தார். அவருடைய நண்பர் சிவசாமி ஐயர் 1907 வரை சென்னை சட்ட சபையில் உறுப்பினராக இருந்தார். அவர் அட்வகேட் ஜெனரல் ஆக நியமிக்கப்பட்டபோது அந்த இடத்துக்கு கிருஷ்ணசாமி ஐயர் தேர்தலில் நின்று வென்றார். பட்டதாரிகள் மட்டும் வாக்களிக்கும் தேர்தல் அது.

1909-ல் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதியரசரானார். இப் பதவியில் இவர் 15 மாதங்களே இருந்தார். அதன்பிறகு சென்னை மாகாண ஆளுனரின் செயற்குழு உறுப்பினராக பிரித்தானிய இந்திய அரசால் நியமிக்கப்பட்டார். ஜனவரி 7, 1911 அன்று கவர்னரின் நிர்வாகசபை உறுப்பினராக கவர்னர் சர் ஆர்தர் லாலியால் நியமிக்கப்பட்டார்.

அர்பத்நாட் வங்கி வழக்கு

1906-ல் சென்னையில் தொடர்ச்சியாக பொருளியல் வீழ்ச்சிகள் நிகழ்ந்தன. அதற்கு இருபதாண்டுகளுக்கு முன்னர்தான் தமிழகத்தில் பொது நிதிநிறுவனங்கள் தோன்றி மக்கள் நம்பிக்கையை பெற்று வந்தன. மூன்று நிதிநிறுவனங்கள் 1906-ல் திவாலாயின. அதில் மிகப்பெரியது ஜார்ஜ் அர்பத்நாட் நடத்திய தனியார் வங்கியான அர்பத்நாட் வங்கி.அந்த வங்கியில் முதலீடு செய்திருந்த வாடிக்கையாளர்கள் பெரும் நஷ்டத்துக்குள்ளானார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் செட்டிநாட்டு நகரத்தார் சமூகத்தினர். சர் அண்ணாமலைச் செட்டியாரின் தமையன் ராமசாமிச் செட்டியார் தலைமையில் ஒரு முதலீட்டாளர் குழு உருவாக்கப்பட்டது. அதை ஒருங்கிணைத்தவர் வி.கிருஷ்ணசாமி ஐயர். அர்பத்நாட் வங்கியை நடத்தியவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு வங்கியின் முக்கிய பங்குதாரர் ஜார்ஜ் அர்பத்நாட் சிறைப்பட்டார். முதலீட்டாளர்களுக்கு ஓரளவு பணம் கிடைத்தது.

இந்தியன் வங்கி நிறுவனர்

அர்பத்நாட் வங்கி வழக்கில் கிடைத்த நிதியையும் வேறு நிதியையும் இணைத்து இந்தியர்களுக்காக ஒரு தேசிய வங்கியை உருவாக்கினார். அது இந்தியன் வங்கி என்ற பெயரில் ஆகஸ்ட் 15, 1907-ல் நிறுவப்பட்டது. அந்த வங்கி வளர்ந்தபோது அதிலிருந்த பங்குகளின் மதிப்பு பெருகி வி.கிருஷ்ணசாமி ஐயரின் குடும்பம் மிகப்பெரிய செல்வந்தர்கள் குடும்பமாக ஆகியது.

விமர்சனங்கள்

வி.கிருஷ்ணசாமி ஐயர் மிதவாதியாக கடுமையான எதிர்ப்பை ஈட்டிக்கொண்டார். அவர் கவர்னரின் ஆலோசகர் பதவி இந்தியர்களுக்கு தேவை என வாதிட்டு இறுதியில் அவரே அதை அடைந்தார். அவருக்கும் கவர்னர் ஆர்தர் லாலிக்குமான உறவு விமர்சனத்திற்குள்ளாகியது. அவர் நீதிபதி பதவி ஏற்கையில் சி.சுப்ரமணிய பாரதி அதை சுதேசி இயக்கத்திற்குச் செய்த துரோகமாகவே பார்த்தார். மிகக்கடுமையான சொற்களால் கண்டித்தார். சி.சுப்ரமணிய பாரதியாரின் நடிப்புச் சுதேசிகள் என்னும் கவிதை வி.கிருஷ்ணசாமி ஐயரை கண்டித்து எழுதப்பட்டது என சில ஆய்வாளர் சொல்வதுண்டு.

வி.கிருஷ்ணசாமி ஐயர் உருவாக்கிய நிறுவனங்களும் பின்னர் அவர் குடும்ப உறுப்பினர்களான கி.பாலசுப்ரமணிய ஐயர், கி.சந்திரசேகரன் ஆகியோர் உருவாக்கிய சென்னை மியூசிக் அகாதெமி போன்ற அமைப்புக்களும் அவர்களின் சாதிநலனுக்கு மட்டுமே இடமளிப்பவை என குற்றம்சாட்டப்பட்டது.

பழமையான வாழ்க்கை நோக்கு கொண்டவர். மிகப்பெரிய செல்வந்தராக இருந்தும்கூட தன் மகள்களை முறையாக கல்வி கற்க அனுப்பவில்லை. பெண்கல்வி அன்று மிகவிரிவாகப் பேசப்பட்டதாக இருந்தபோதிலும் அதற்கு எதிரான பார்வை கொண்டிருந்தார். தன் மகள்களுக்கு குழந்தைமணம் செய்துவைத்தார். கி.சாவித்ரி அம்மாள் 10 வயதில் (1908) மணம் செய்துவைக்கப்பட்டார்.

இறப்பு

வி.கிருஷ்ணசாமி ஐயர் டிசம்பர் 28, 1911-ல் காலமானார்..

உசாத்துணை


✅Finalised Page