கர்ணன் (எழுத்தாளர்): Difference between revisions
(Corrected section header text) |
(Category:எழுத்தாளர்கள் சேர்க்கப்பட்டது) |
||
Line 79: | Line 79: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
{{Finalised}} | {{Finalised}} | ||
[[Category:எழுத்தாளர்கள்]] |
Revision as of 19:08, 23 December 2022
கர்ணன் (1938-2020) பொது வாசிப்புக்கும் இலக்கிய வாசிப்புக்கும் இடையிலான பல படைப்புகளைத் தந்தவர். சிறுகதை, நாவல், கட்டுரை, விமர்சனம் எனப் பல களங்களில் இயங்கியவர். மதுரையில் வாழ்ந்தார்.
(பார்க்க யோ. கர்ணன்)
பிறப்பு, கல்வி
கர்ணன், 1938-ல், மதுரை மாவட்டத்தில் உள்ள செல்லூரில், பரஞ்சோதி-செல்லம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். இவர் உடன் பிறந்தவர்கள் 9 பேர். வறுமையான குடும்பச் சூழலால் ஐந்தாம் வகுப்போடு கர்ணனின் கல்வி முற்றுப்பெற்றது.
தனி வாழ்க்கை
கர்ணன் மாற்றுத் திறனாளியாக இருந்ததால் சரியான வேலை வாய்ப்புகள் அமையவில்லை. இறுதியில் தையல் தொழிலைக் கற்றுக் கொண்டு, தையற் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். ரஞ்சிதத்துடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் பிறந்தனர்.
இலக்கிய வாழ்க்கை
சிறு வயது முதலே கல்கியின் எழுத்துக்களை விரும்பி வாசித்தவர் கர்ணன். மணிக்கொடி இதழின் தீவிர வாசகராக இருந்தார். புதுமைப்பித்தனின் எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டார். சிறுகதை முயற்சிகளில் ஈடுபட்டார். கர்ணனின் முதல் சிறுகதை 'நீறுபூத்த நெருப்பு’, 1958-ல், 'காவேரி’ இதழில் வெளியானது. தொடர்ந்து விகடன், கல்கியில் இவரது சிறுகதைகள் வெளியாகின.
எழுத்தாளர் சி.சு.செல்லப்பா கர்ணனுள் இருக்கும் இலக்கியவாதியை அடையாளம் கண்டு கொண்டார். கர்ணனின் ’சுமை’ என்ற சிறுகதையை தனது ’எழுத்து’ இதழில் வெளியிட்டு ஊக்குவித்தார். கர்ணனின் முதல் சிறுகதைத் தொகுப்பான 'கனவுப் பறவை’யை வெளியிட்டதும் சி.சு. செல்லப்பா தான். ந.பிச்சமூர்த்தி, அந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தார். அந்த நூலை புதுமைப்பித்தனுக்குக் காணிக்கையாக்கியிருந்தார் கர்ணன். தொடர்ந்து கலைமகள், தீபம், தினமணிக்கதிர், அமுதசுரபி, கணையாழி, கண்ணதாசன், தாமரை, உதயம், குறிஞ்சி, இளந்தமிழன், செம்மலர் எனப் பல இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகின.
சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள், கவிதைகள், வாழ்க்கை வரலாறு, ஆன்மிகம் எனப் பல நூல்களை எழுதினார் கர்ணன். இவரது நூல்களை நர்மதா பதிப்பகம், மணிவாசகர் பதிப்பகம், கவிதா பதிப்பகம், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ், வம்சி பதிப்பகம் போன்ற பதிப்பகங்கள் வெளியிட்டன. எழுத்தாளர் நா.பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்ட மதுரைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார் கர்ணன். இவரது படைப்புகள் சில கல்லூரிகளின் பாடத் திட்டத்தில் இடம்பெற்றன. இவரது நூல்கள் சில மாணவர்களால் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.
விருதுகள்/பரிசுகள்
- ’அவர்கள் எங்கே போனார்கள்' என்ற கர்ணனின் நூலுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது.
- 2008-ல், 'மத்தியத் தகவல் ஒளிபரப்பு அமைச்சகம்’ கர்ணனின் எழுத்தாற்றலைப் பாராட்டி ரூ.20 ஆயிரம் வழங்கிச் சிறப்பித்தது.
- 2012-ல், ஏர்வாடி ராதாகிருஷ்ணனைத் தலைவராகக் கொண்ட 'கவிதை உறவு’ அமைப்பு கர்ணனுக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கிச் சிறப்பித்துள்ளது.
மறைவு
வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நலக் குறைவால், கர்ணன், ஜூலை 20, 2020-ல் காலமானார்.
ஆவணம்
இவரது வாழ்க்கைக் குறிப்பு, "ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள்" என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.
இலக்கிய இடம்
"கர்ணனின் எழுத்து அக்காலகட்டத்தில் பெருவாரியாக வந்த பிரபல எழுத்தின் மொழியிலும் அமைப்பிலும் முற்போக்குக் கருத்துக்களைச் சொல்வது. இலக்கியத்திற்கும் வணிக எழுத்துக்கும் நடுவே அமைவது.[1]" என்கிறார் ஜெயமோகன்.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்புகள்
- கனவுப் பறவை
- கல்மனம்
- ஆத்ம நிவேதனம்
- வசந்த கால வைகறை
- முகமற்ற மனிதர்கள்
- மறுபடியும் விடியும்
- இந்த மண்ணின் உருவம்
- புலரும் முன் அழகிடும் பொழுது
- இசைக்க மறந்த பாடல்
- நெருப்பில் விளைந்த நிலவுப்பூ
- பொழுது புலர்ந்தது
- பட்டமரத்தில் வடிந்த பால்
- பொய் நின்ற ஞானம்
- வாழ்ந்ததின் மிச்சம்
நாவல்கள்
- உள்ளங்கள்
- காந்தத் துாண்டிலில் சிக்கிய கனவு மீன்
- ஊமை இரவு
- நகரும் பொழுதுகள்
- பாலைவனத்தைக் கடக்கும் பசுக்கள்
- மௌனத்தின் நிழல்
குறுநாவல்கள்
- மயங்காத மனசுகள்
- திவ்யதாரிணி
வாழ்க்கை வரலாறு மற்றும் கட்டுரை நூல்கள்
- விடிவை நோக்கி
- அவர்கள் எங்கே போனார்கள்?
- ரத்தம் தோய்ந்த அந்த நாட்கள்
- இன்று இவர்கள்
- சரித்திரம் உருவாக்கிய சந்திப்பு
- வாழ்விக்கும் மனிதர்கள்
- இந்தியாவின் எரிமலை
- வெளிச்சத்தின் பிம்பங்கள்
- கி. வா. ஜ. முதல் வண்ணதாசன் வரை
- மோகமுக்தி
- சிட்டகாங் புரட்சி வீரர்கள்
- ஆத்ம நிவேதனம்
- அகம் பொதிந்தவர்கள்
- மௌனத்தின் நிழல்
கவிதைத் தொகுப்பு
- நினைவின் திரைக்குள்ளே
உசாத்துணை
- கர்ணன் நேர்காணல் - தினமணி இதழ்
- எழுத்தாளர் கர்ணன்: உஷாதீபன் கட்டுரை
- எழுத்தாளர் கர்ணன் தென்றல் இதழ் கட்டுரை
- எழுத்தாளனின் சித்திரம்: எஸ். ராமகிருஷ்ணன்
- கர்ணன் அஞ்சலி :ஜெயமோகன் தளம்
- தீக்கதிர் இதழ் அஞ்சலி
அடிக்குறிப்புகள்
✅Finalised Page