சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்: Difference between revisions
(; Added info on Finalised date) |
(Added: Category:புலவர்) |
||
| Line 35: | Line 35: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:புலவர்]] | |||
Latest revision as of 00:55, 21 December 2025
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சோழ மன்னர்களில் ஒருவர். இவர் பாடிய பாடல் ஒன்று புறநானூறில் இடம்பெற்றுள்ளது.
வாழ்க்கை குறிப்பு
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் சங்க காலப் புலவர்களில் ஒருவர். சோழ மன்னர்களில் ஒருவன். ஆடுதுறை மாசாத்தனார், ஆலத்தூர் கிழார், ஐயூர் முடவனார், கோவூர் கிழார், ஆவூர் மூலங்கிழார், இடைக்காடனார், எருக்காட்டூர் தாயங்கண்ணனார், நல்லிறையனார், மாறோக்கத்து நப்பசலையார், வெள்ளைக்குடி நாகனார் ஆகிய புலவரால் பாடப்பெற்றுள்ளார்.
வெள்ளைக்குடி நாகனார் இவரது கொடைச்சிறப்பையும் ஆலத்தூர் கிழார், மாறோக்கத்து நப்பசலையார், கோவூர் கிழார், இடைக்காடனார் முதலானோர் இவரது அறமும் மறமும் அமைந்த வெற்றி சிறப்பையும் பாடியுள்ளனர். மாறோக்கத்து நப்பசலையார், ஐயூர் முடவனார், ஆடுதுறை மாசாத்தனார் ஆகிய மூவரும் இவர் இறந்த பிறகு கையறுநிலையில் அவரது கொடைத்தன்மையையும் வெற்றி சிறப்பையும் புகழ்ந்து பாடியுள்ளனர்.
இலக்கிய வாழ்க்கை
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் பாடிய பாடல் புறநானூறில் 173-வது பாடலாக இடம்பெற்றுள்ளது. பண்ணன் என்னும் சிறுகுடியில் பிறந்த வள்ளலின் கொடைத்தன்மையை பாராட்டி, தான் அவனை காண விரும்புவதாக பாடாண் திணையில் பண்ணன் என்னும் சிறுகுடியில் பிறந்த வள்ளலின் கொடைத்தன்மையை பாராட்டி, தான் அவனைக் காண விரும்புவதாக இயன்மொழி என்னும் துறையில் பாடப்பட்டது.
பாடல் வழி அறியவரும் செய்திகள்
- பண்ணன் பசித்து வரும் இரவலர் அனைவருக்கும் இல்லையென்று சொல்லாது வழங்கும் கொடை வன்மை கொண்டவன். இரவலரின் பசிப்பிணியை போக்கும் மருத்துவனாக சிறப்பிக்கப்பட்டுள்ளான்.
- உவமை: பண்ணனின் வள்ளல் தன்மை, தன்னை நோக்கி வரும் பறவை அனைத்திற்கும் உணவளிக்கும் பழங்கள் நிறைந்த மரத்திற்கும், மழை வரும் முன்னரே உணவை தன் கூட்டிற்கு கொண்டு செல்லும் எறும்பு போல தன்னிடம் இரந்து வரும் சிறுவர்களின் குடும்பத்திற்கும் சேர்த்தே உணவளிப்பவன் என்று சிறப்பித்து உவமை கூறப்பட்டுள்ளது.
பாடல் நடை
புறநானூறு - 173
- திணை: பாடாண் தினை
- துறை: இயன் மொழி
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்;
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,
முட்டை கொண்டு வன் புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே.
உசாத்துணை
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 23-Nov-2025, 10:05:59 IST