பாரதி வசந்தன்: Difference between revisions
(Corrected typo errors;) |
(Added: Category:கவிஞர்) |
||
| Line 82: | Line 82: | ||
[[Category:Tamil Content]] | [[Category:Tamil Content]] | ||
[[Category:கவிஞர்]] | |||
Latest revision as of 00:34, 21 December 2025
பாரதி வசந்தன் (ப. அன்பழகன்) (அக்டோபர் 03, 1956 - டிசம்பர் 07, 2024) கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர். பிரபஞ்சனுடன் இணைந்து புதுவைக் கதைகளைத் தொகுத்தார். புதுச்சேரி அரசின் கலைமாமணி விருது பெற்றார்.
பிறப்பு, கல்வி
அன்பழகன் என்னும் இயற்பெயர் கொண்ட பாரதி வசந்தன், அக்டோபர் 03, 1956 அன்று, புதுச்சேரியில், பழனி - புட்லாய் இணையருக்குப் பிறந்தார். புதுச்சேரியில் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். தமிழில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
தனி வாழ்க்கை
பாரதி வசந்தன் சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். மணமானவர். மனைவி, அ.ஜோஸ்பின். மகன்: தமிழ் முதல்வன். மகள்: தமிழ்மகள்.
இலக்கிய வாழ்க்கை
பாரதி வசந்தன் தலித்துகளின் வாழ்க்கையை மையமாக வைத்துப் பல கவிதைகளை, கட்டுரைகளை எழுதினார். பாரதி மீது கொண்ட ஈர்ப்பால் 'பாரதி வசந்தன்' என்ற புனை பெயரில் எழுதினார். சிறார் இலக்கியத்திற்கும் பங்களித்தார். இவர் எழுதிய சிறார் கதைகளும், பாடல்களும் 'ராணி', 'கோகுலம்', 'தினமணி சிறுவர்மணி' போன்ற இதழ்களில் வெளியாகின. பொது வாசிப்புக்குரிய சிறுகதைகளையும், கவிதைகளையும், கட்டுரைகளையும் 'தினமணி கதிர்', 'தீபம்', 'அமுதசுரபி' , 'திசை எட்டும்' உள்ளிட்ட பல இதழ்களில் எழுதினார்.
பாரதியும், அவரது சீடரான கனகலிங்கமும் மலம் அள்ளும் தொழிலாளர்களின் தலைவரான தம்பலாவைச் சந்தித்து உரையாடியதைக் களமாக வைத்து பாரதி வசந்தன் எழுதிய 'தம்பலா' சிறுகதை குறிப்பிடத்தகுந்த ஒன்று. இச்சிறுகதை ஆங்கிலம், ஃப்ரெஞ்ச் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டது. பின்னர் விரிவாக்கம் செய்யப்பட்டு நாவலாக வெளியானது. பிரபஞ்சனும் இணைந்து பாரதி வசந்தன் தொகுத்திருக்கும் '20-ஆம் நூற்றாண்டு புதுவை கதைகள்" (இரண்டு பாகங்கள்) முக்கியமானதொரு தொகுப்பாக அறியப்படுகிறது.
பாரதி வசந்தன், முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தலித் பண்பாட்டுப் பேரவை எனப் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார். கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை நூல்கள் என 70-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்.
இதழியல்
பாரதி வசந்தன், 'வெளிச்சம்' என்ற பெயரில் 'இன்லேன்ட் லெட்டரி'ல் கவிதை சார்ந்த மாத இதழ் ஒன்றை நடத்தினார். 1990-ல் பாரதி வசந்தன் தொடங்கிய 'வெளிச்சம்' இதழ், சிறுசிறு இடைவெளிகளுடன் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்தது. அமுதபாரதி, அய்யப்ப மாதவன், தமிழ்மகன், பொன்.குமார், ஆங்கரை பைரவி, பாப்லோ அறிவுக் குயில், சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர், கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் இவ்விதழுக்குப் பங்களித்தனர்.
விருதுகள்/பரிசுகள்
- கவிஞர் செல்ல கணபதி மணிவிழாச் சிறார் பாடல் போட்டியில் பரிசு
- வள்ளியப்பா இலக்கிய வட்டத்தின் சிறார் இலக்கியச் சிறுகதைப் போட்டியில் பரிசு
- 'பெரியவாய்க்கால் தெரு' நாவலுக்கு தமிழக அரசின் விருது
- புதுவை அரசின் கலைமாமணி விருது
- புதுவை அரசின் கம்பன் கழக விருது
- புதுவை அரசின் பாரதி பட்டயம்
- புதுவை அரசின் பாவேந்தர் பட்டயம்
- புதுவை அரசின் காமராசர் நூற்றாண்டு நினைவுப் பரிசு
- புதுவைப் பல்கலைக்கழகத்தின் பாராட்டுச் சான்றிதழ்
- சிறுவர் இலக்கியச் சிகரம் பட்டம்
- இராஜபாளையம் மணிமேகலை தமிழ் மன்ற விருது
- திருப்பூர் தமிழ்ச் சங்க விருது
- கவிதை உறவு இதழ் விருது
- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது
ஆய்வு
பாரதி வசந்தன் படைப்புகள் பற்றி ஆய்வு செய்து, முனைவர் கி. அய்யப்பன், 'பாரதி வசந்தன் படைப்புலகம்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார். இதனை, கலைஞன் பதிப்பகம், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையுடனும், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையுடனும் இணைந்து 2018-ல் வெளியிட்டது.
மறைவு
பாரதி வசந்தன் டிசம்பர் 07, 2024 அன்று, தனது 66-ம் வயதில் காலமானார்.
மதிப்பீடு
பாரதி வசந்தன் சமூக மேம்பாட்டைத் தனது படைப்புகளில் வலியுறுத்தினார். தலித் சமூகத்தின் உயர்வு பற்றிச் சிந்தித்து அவற்றைத் தனது கட்டுரைகளில் வெளிப்படுத்தினார். புதுச்சேரி வாழ் தலித் எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தகுந்த ஒருவராக அறியப்படுகிறார்.
பாரதி வசந்தன் குறித்து திருப்பூர் கிருஷ்ணன், "அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளைப் பற்றியே தொடர்ந்து எழுதியவர். அவர்கள் வாழ்வின் உயர்வையே தம் எழுத்தின் லட்சியமாய்க் கொண்டவர். [1]" என்று மதிப்பிட்டார்.
நூல்கள்
- தம்பலா
- பெரிய வாய்க்காத் தெரு
- சுற்றுச் சூழலும் சாதிய புனிதமும்
- சங்கு புஷ்பங்கள் (சிறுகதைத் தொகுதி)
- என் பழைய வீடு
- ழான் தார்க் (புதுவைச் சிறுகதைகள்)
- மக்கள் சமூகத்தின் மனசாட்சி (கட்டுரைத் தொகுதி)
- ஆகாயத்தாமரை
- மக்கள் சமூகத்தின் மனசாட்சி
- சின்னப்பறவையின் வண்ணச்சிறகுகள்
- 20-ம் நூற்றாண்டு புதுவை கதைகள் பகுதி 1 & 2 (பிரபஞ்சனுடன் இணைந்து தொகுத்தது)
மற்றும் பல
உசாத்துணை
- பாரதி வசந்தன் படைப்புலகம், முனைவர் கி. அய்யப்பன், கலைஞன் பதிப்பக வெளியீடு. முதல் பதிப்பு: 2018
- பாரதி வசந்தன் நேர்காணல், ஆனந்த விகடன் இதழ்
- பாரதிவசந்தன் கட்டுரைகள், தினமணி இதழ்
- பாரதி வசந்தனின் 'வெளிச்சம்' இதழ்க் குறிப்பு, இந்து தமிழ் திசை
- பாரதி வசந்தன் அஞ்சலி, தினமணி இதழ்க் குறிப்பு
- பாரதி வசந்தன் நூல்கள் விமர்சனம், தினமலர் இதழ்
- பாரதி வசந்தன் நூல்கள், காமன்ஃபோல்க்ஸ் தளம்
- ழான் தார்க் நூல் விமர்சனம், அகநாழிகை தளம்
அடிக்குறிப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2025, 08:20:47 IST