காரைக்கால் அம்மையார்: Difference between revisions
(Added links to Disambiguation page) |
(Corrected the links to Disambiguation page) |
||
Line 1: | Line 1: | ||
{{OtherUses-ta|காரைக்கால்|[[காரைக்கால் (பெயர் பட்டியல்)]]}} | {{OtherUses-ta|TitleSection=காரைக்கால்|DisambPageTitle=[[காரைக்கால் (பெயர் பட்டியல்)]]}} | ||
{{Read English|Name of target article=Karaikal Ammaiyar|Title of target article=Karaikal Ammaiyar}} | {{Read English|Name of target article=Karaikal Ammaiyar|Title of target article=Karaikal Ammaiyar}} | ||
[[File:Karaiakal ammai.jpg|alt=காரைக்கால் அம்மையார் சிற்பம் - 11ம் நூற்றாண்டு|thumb|281x281px|காரைக்கால் அம்மையார் சிற்பம் - 11-ம் நூற்றாண்டு]] | [[File:Karaiakal ammai.jpg|alt=காரைக்கால் அம்மையார் சிற்பம் - 11ம் நூற்றாண்டு|thumb|281x281px|காரைக்கால் அம்மையார் சிற்பம் - 11-ம் நூற்றாண்டு]] |
Latest revision as of 18:17, 27 September 2024
- காரைக்கால் என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: காரைக்கால் (பெயர் பட்டியல்)
To read the article in English: Karaikal Ammaiyar.
காரைக்கால் அம்மையார் (புனிதவதி) 63 நாயன்மார்களில் ஒருவர். தமிழில் அந்தாதி, பதிகம் மற்றும் இரட்டைமணிமாலை வகைகளில் பாடல் இயற்றிய முன்னோடியாகவும், இறைவனைப் பற்றிய பாடல்களை இசைப்பண்ணில் அமைக்கும் மரபை முதன்முதலாக உருவாக்கியவராகவும் கருதப்படுகிறார். சைவத்திருமுறைகளில் பதினோராம் திருமுறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள பாடல்கள் காரைக்கால் அம்மையார் இயற்றியவை.
நாயன்மார்கள் நிரையில் உள்ள மூன்று பெண்களில் ஒருவர், காலத்தால் மூத்தவர்.
வாழ்க்கை
காரைக்கால் அம்மையார் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில் பாடப்பெற்ற அடியாருள் ஒருவர். காரைக்கால் அம்மையாரின் காலம் பொ.யு. 4-ம் நூற்றாண்டு அல்லது 5-ம் நூற்றாண்டு எனப்படுகிறது. திருஞான சம்பந்தர் திருவாலங்காட்டில் காலால் மிதித்து நடக்க அஞ்சி ஊருக்கு வெளியிலேயே தங்கினார் என்று சேக்கிழார் கூறுகிறார்[1]. பொ.யு. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் திருஞானசம்பந்தர். ஆகவே திருஞான சம்பந்தருக்கும் மூத்தவர். அம்மையாரின் பதிக அமைப்பும், சொல்லாட்சிச் சிறப்பும் அவரது காலம் தொன்மையானது என்று உரைக்கும். இவரது காலம் பொ.யு. 300-லிருந்து 500-ம் ஆண்டுக்கு இடையில் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது.
ஆவணி மாதம் கார்த்திகை நட்சத்திரம் இவர் பிறந்த நட்சத்திரமாகவும், பங்குனி மாத சுவாதி நட்சத்திரம் இவர் முக்தியடைந்த தினமாகவும் வழிபடப்படுகிறது[2].
புனிதவதி என்ற இயற்பெயர் கொண்ட அம்மையார், காரைக்கால் என்னும் ஊரில் சிவ வழிபாட்டில் ஈடுபாடு கொண்ட வணிகக் குடும்பத்தில் தனதத்தன், தர்மவதி தம்பதியருக்குப் பிறந்தார். சிறுவயதிலிருந்தே சிவபெருமான் மீது பக்தி கொண்டவராக இருந்தார். பரமதத்தன் என்னும் வணிகரை மணம் புரிந்தார். இல்லறத்தில் அவர் இருந்தபோது, சிவபெருமான் திருவிளையாடல் ஒன்றை நிகழ்த்தி அம்மையை சிவபக்தி வாழ்வில் முழுமையாய் ஆட்கொண்டார். அவரது தெய்வத்தன்மை உணர்ந்த கணவன் அவரைத் துறந்து பக்தியுடன் ஒழுக, இறைவனிடம் பேய்வடிவம் வேண்டிப் பெற்றவர். அவரே பாடல்களில் தன்னைக் காரைக்கால் பேய் என்கிறார்.
பன்னிரண்டு சருக்கங்கள் கொண்ட பெரியபுராணம் என வழங்கும் திருத்தொண்டர் புராணத்தில், இருபத்து நான்காவது புராணம் காரைக்கால் அம்மையார் புராணம். இவர் வாழ்க்கை குறித்த தகவல்களும் தொன்மங்களும் பெரியபுராணத்தில் இடம்பெறுகின்றன[3].
புராணம்
மாங்கனி தந்தது
ஒருசமயம் புனிதவதியின் கணவன் பரமதத்தன் தனது கடையிலிருந்தபோது ஒரு வியாபாரி இரண்டு மாங்கனிகளைக் கொண்டுவந்து அவரிடம் கொடுத்தார். கனிகளைப் பெற்ற பரமதத்தன், அதனைத் தன் வீட்டிற்குக் அனுப்பி வைத்தார். அவரது வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி வந்தார். சிவனடியாரை வரவேற்று அமரச் செய்தார் புனிதவதி அம்மையார். மதிய உணவு தயாராக இல்லாததால் தயிர்கலந்த அன்னம் படைத்து அத்துடன் தனது கணவன் கொடுத்து அனுப்பிய ஒரு மாங்கனியையும் தந்து உபசரித்தார். மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த பரமதத்தனுக்கு உணவு பரிமாறிய அம்மையார், சிவனடியாருக்குப் படைத்தது போக மீதமிருந்த ஒரு மாங்கனியை அவருக்கு வைத்தார்.
மாங்கனியின் சுவை நன்றாக இருக்கவே, மற்றொரு கனியையும் தனக்கு வைக்கும்படி கேட்டார் பரமதத்தன். அம்மையார் செய்வதறியாது திகைத்துச் சமையலறைக்குள் சென்று சிவபெருமானிடம் வேண்டினார். அவர் கையில் ஒரு மாம்பழம் தோன்றியது. மகிழ்ச்சி அடைந்த அம்மையார் அதனைக் கணவனுக்குப் படைத்தார். முதலில் வைத்த மாங்கனியைவிட இக்கனி அதிக சுவையுடன் இருக்கவே பரமதத்தன் அதன் காரணம் கேட்டார். அம்மையார் நடந்ததைக் கூறினார். அக்காரணத்தைப் பரமதத்தன் நம்பவில்லை. சிவபெருமான் கனி தந்தது உண்மையானால், மீண்டும் ஒரு கனியை வரவழைக்கும்படிக் கூறினார். அம்மையார் சிவபெருமானை வணங்க, மீண்டும் ஒரு மாங்கனி கிடைத்தது. இதைக்கண்டு வியந்த பரமதத்தன் அவரைத் தெய்வப்பெண் என்று கருதினார். அவருடன் இல்லற வாழ்வில் இருக்கமுடியாதென தான் அவரை விட்டு நீங்கிவிட வேண்டுமென முடிவெடுத்தார். வாணிபம் செய்ய விரும்பும் பண்டங்களை ஏற்றிக்கொண்டு கடற்பயணமாகச் சென்றார்.
பேயுரு பெற்றது
பின்னர் பரமதத்தன் பாண்டிய நாட்டின் மதுரை சென்று மற்றொரு பெண்ணை மணம் முடித்து அங்கேயே வாழ்ந்தார். சிலகாலம் கழித்து அவளுக்கு ஒரு பெண்குழந்தை பிறந்தது, அந்த குழந்தைக்கு அம்மையாரின் பெயரையே வைத்தார். பரமதத்தன் பாண்டிய நாட்டில் இருக்கும் செய்தி, அம்மையாருடைய உறவினர்களுக்கு, மற்ற வணிகர்கள் மூலம் தெரிய வந்தது. அவர்கள் அம்மையாரை அழைத்துக்கொண்டு பாண்டி நாட்டை நோக்கி புறப்பட்டு போனார்கள். அம்மையார் வந்திருக்கும் செய்தியை பரமதத்தனுக்கு ஒரு ஆள் மூலம் சொல்லி அனுப்பினர். தன்னைத் தேடிவந்த மனைவியைக் கண்ட பரமதத்தன் அவரைத் தெய்வமாக வணங்கித் தனது இரண்டாவது மனைவி, குழந்தையுடன் காலில் விழுந்து பணிந்தார். அதன் பிறகு புனிதவதி கணவருக்காக தாங்கிய அழகிய உடல் நீங்கி, இறைவனைப் போற்றுகின்ற பேய்வடிவத்தை அடையவேண்டுமென இறைவனிடம் வேண்டினார். தாம் வேண்டிய வண்ணமே அழகு நீங்கிப் பேயுருவம் பெற்றார்.
கயிலாயம் சென்றது
அம்மையார் சிவனைக் காண கயிலாயம் சென்றார். கயிலை இறைவன் உறையும் இடம் என்பதால், அங்கு தரையில் கால் ஊன்றாமல், தலைகீழாக நடந்து சென்றார். கயிலையில் இறைவனுடன் இடப்புறம் அமர்ந்திருந்த பார்வதி, தலையால் நடந்துவரும் அம்மையைக் கண்டு இவர் யாரெனக் கேட்க "நம்மைப் பேணும் அம்மை காண்" எனக் கூறி "அம்மையே வருக" என்றழைத்து "வேண்டுவன கேள்" என கூறினார். அதற்கு அம்மையார்
"பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்பு உண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க " என்றார். அவ்வாறே அருளிய இறைவன் அவருக்கு தன் திருத்தாண்டவம் காட்டி திருவாலங்காட்டிற்கு வரச்சொல்லி அங்கு தன் திருவடியின் கீழ் என்றும் இருக்க அருளினார்.
நூல்கள்
காரைக்கால் அம்மையார் பாடிய பாடல்கள் பதினோராம் திருமுறையில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ளன. நான்கு நூல்கள் இயற்றியுள்ளார்:
- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 1 - 11 படல்கள்[4] (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
- திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகங்கள் 2 - 11 படல்கள்[5] (10 பாடல்கள் + 1 திருக்கடைக்காப்பு பாடல்)
- திரு இரட்டைமணிமாலை - 20 பாடல்கள்[6]
- அற்புதத் திருவந்தாதி - 101 பாடல்கள்[7]
கோவில் விழாக்கள்
புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அம்மையாரை மூலவராக் கொண்ட கோயில்(காரைக்கால் அம்மையார் கோயில்) அமைந்துள்ளது[8]. அம்மையார் புனிதவதியின் தோற்றத்துடன் இளமையோடு உள்ளார். அவருடைய சன்னதியின் சுதைச் சிற்பங்களிலும், சுற்றுப் பிரகார ஓவியங்களிலும் காரைக்கால் அம்மையின் வாழ்க்கை வரலாறு சொல்லப்பட்டுள்ளது.
காரைக்கால் அம்மையாரின் சிறப்புகளை மக்களுக்குத் தெரிவிக்க காரைக்கால் சோமநாதர் கோயில் சார்பாக மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது[9][10]. காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனித் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாத பௌர்ணமி அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் போது சுவாமி தேர் வீதி உலா வருகையில், பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக, வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை வாரி இறைத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
காலம் கணித்த கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005
உசாத்துணை
- Karaikal Ammaiyar comes alive at museum- The New Indian Express
- திருவாலங்காட்டுப் பேயார்க்கும் அடியேன்! - நாஞ்சில் நாடன்
- காரைக்கால் அம்மையார் வரலாறு
காரைக்கால் அம்மையார் சிற்பம் - புகைப்படங்கள் நன்றி:
- பெரியபுராணமும் கற்சிற்பமும் (காரைக்கால் அம்மையார்) - கி.ஸ்ரீதரன்
- காரைக்கால் அம்மையார் - Kungumam Tamil Weekly Magazine
அடிக்குறிப்புகள்
- ↑ சைவ சமய இலக்கியங்கள் - தமிழ் இணைய பல்கலைக்கழகம்
- ↑ நாயன்மார்கள்
- ↑ தமிழ் இணையப் பல்கலைகழகம்
- ↑ கொங்கை திரங்கி நரம்பெழுந்து
- ↑ எட்டி இலவம் ஈகை
- ↑ திருவிரட்டைமணிமாலை
- ↑ அற்புதத் திருவந்தாதி பாடல்கள்
- ↑ Karaikal Ammayar Karaikal Ammayar Temple Details
- ↑ காரைக்காலில் மாங்கனி திருவிழா சுவாமி வீதியுலாவில் கோலாகலம்!
- ↑ காரைக்காலில் மாங்கனி திருவிழா தொடக்கம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
20-Feb-2023, 06:08:51 IST